Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கடல் கடந்த நட்பு
(ஜூடி & லட்சுமி தமிழாக்கம்)
நயோமி மிச்சிஸன்
(தமிழாக்கம் : ம. பெரியசாமித்தூரன்)

Judy & Lakshmi by Naomi Mitchison
Tamil ranslation by periyacAmittUran
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
    The e-text has been generated using Google OCR and subsequently edited by K.Kalyanasundaram.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2020.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    https://www.projectmadurai.org/

கடல் கடந்த நட்பு (ஜூடி, லட்சுமி தமிழாக்கம்)
நயோமி மிச்சிஸன் *தமிழாக்கம் : ம. பெரியசாமித்தூரன்

Source:
கடல் கடந்த நட்பு (ஜூடி, லட்சுமி தமிழாக்கம்)
நயோமி மிச்சிஸன் *தமிழாக்கம் : ம. பெரியசாமித்தூரன்)
நேஷனல் புத்தக டிரஸ்ட் ஆதரவில்
தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் மூலமாகப் பதிப்பிக்கப்பெற்றது
வெளியிட்டோர் : கலைஞன் பதிப்பகம்
தியாகராயநகர், சென்னை-17

KADAL KADANTHA NATPU
Tamil Translation of "JUDY AND LAKSHMI"
by NAOMI MITCHISON
Published by Ms. David Higham Associates Ltd., London.
© NAOMI MITCHISON, 1959
Tamil Translation by M. PERIASAMI THOORAN
Price Rs. 1-65
Tamil First edition 5000 copies, November 1963
Sponsored by the National Book Trust India, New Delhi
through The Southern Languages Book Trust, Madras
Second Series: Tamil: Number Thirty Two
Publishers KALAIGNAN PATHIPPAGAM, MADRAS-17
Printed at MULLAI PRINTERS, MADRAS-6
---------------
படையல்

என்னுடைய பேரக் குழந்தைகளுக்கும் சென்னையில் அவர்களுடைய நண்பர்கள், அக்கம் பக்கத்தவர்கள், முக்கியமாக 'பாபு' (அலமேலு சஞ்சீவி)க்கு !
---------------
அணிந்துரை
சி. சுப்பிரமணியம்


மொழி, நாகரிகம், கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமையுடையவர்கள் தென்பகுதி மக்கள். சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இந்த ஒருமைப்பாடு வேரூன்றி இருந்தது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வொற்றுமை உணர்ச்சி குறைந்து விட்டது. காலம் செய்த இவ்விடையூற்றை நீக்கி, தென் பகுதி மக்களிடையே ஒரு பகுதியினரின் கருத்துக்கள் மற்ற பகுதியினருக்கும் பரவும் வகையில் தென் மொழிகள் புத்தக டிரஸ்ட் பாடுபட்டு வருவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

1955-ல் சென்னையில் நமது நாட்டின் தலைமை அமைச்சர் ஸ்ரீ ஜவகர்லால் நேரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட், நாள்தோறும் நல்ல முறையில் முன்னேறி வருவது மிகவும் பாராட்டுதற்குரியது. இந் நிறுவனம் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள்வரை எல்லோருக்கும் பயன்படும் வகையில் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றது. குறிப்பாகத் திருக்குறள் போன்ற நூலைக் கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பது மிகவும் போற்றுதற் குரியது.

கருத்துப் பரிமாற்றத்தில் தான் மனித இனத்தின் அறிவு வளர்ச்சியும் உலக அமைதியும் அடங்கியிருக்கின்றன. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு தென் பகுதியில் உள்ள சிறந்த நூல்களைக் குறைந்த விலையிலே மற்ற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையிலே ஆக்கப் பணி புரியும் டிரஸ்டின் சேவை மேலும் மேலும் வளர்ந்து பயன்படும் என நினைக்கிறேன். புத்தகங்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாது கருத்து அரங்கிற்கு ஏற்பாடு செய்வதிலும், ஆராய்ச்சி வேலைகளிலும் இப்புத்தக டிரஸ்ட் ஈடுபட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாகக் குழந்தைகளின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி நடத்தி யிருப்பது நாட்டுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றெண்ணுகிறேன். புதிதாக அவர்கள் தமிழில் வெளியிடவிருக்கும் நூல்கள் தமிழ்ப் பெருமக்களிடையே பெரும் ஆதரவோடு திகழும் என்று எண்ணுகிறேன்.

இத்துறையில் அவர்கள் மேலும் சிறந்த நூல்களை எளிய விலையில் வெளியிட்டுத் தென் பகுதி மக்களுக்கும் நாடு முழுமைக்கும் பயன்படும் வகையில் முன்னேற இறைவன் அருள்வானாக,

(சி. சுப்பிரமணியம்)
------

கடல் கடந்த நட்பு (ஜூடி, லட்சுமி தமிழாக்கம்)
நயோமி மிச்சிஸன் *தமிழாக்கம் : ம. பெரியசாமித்தூரன்)
பொருளடக்கம்

1. சென்னையில் ஜுடி 8. வெள்ளம்
2. வேலியிலே சந்து 9. தேசீய வளர்ச்சித் திட்டப் பிரதேசம்
3. ஆலமரத்தடியில் 10. பொன்னேரியில் லட்சுமி
4. சுதந்திர தினம் 11. ஜுடியும் லட்சுமியும்
5. காஞ்சீபுரம் 12. கிறிஸ்துமஸும் பொங்கலும்
6. தீபாவளி 13. வட இந்தியா
7. மழை 14. சென்று வருகிறேன்
--------------

1. சென்னையில் ஜூடி


சிறிய மணிகளைப் போலச் சுவர்க்கோழிகள் இரவு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தன. படுக்கையிலே குளிர்ந்திருக்கும் பகுதியில் புரண்டு படுக்க ஜூடி கண் விழிக்கும் பொழுது கொசுவலைக்கு வெளியே மங்கலாகத் தோன்றும் பெரிய ஜன்னலையும் கருஞ்சிவப்பான மலர்களைக் கொண்ட காகிதப் பூக்கொடியின் அசைவற்ற பூங்கொம்புகளையும் பார்த்தாள். சுவர்க்கோழிகளின் ஒலியும், சில வேளைகளில் ஒரு நாயின் குரலும் கேட்டன. வீடுகளைச் சுற்றி சுற்றிச் சென்று திருடர்களையும், பாம்புகளையும் பயமுறுத்தி ஓட்டும் கூர்க்கா காவல்காரன் தன்னுடைய கைத்தடியால் தரையில் தட்டி மனத்திற்கு திடமளிக்கும் அரவமும் கேட்டது. காலை ஒளி படருவதற்குச் சற்று முன்பாகக் காக்கைகள் எழுந்து வேறு மரங்களுக்குப் பறந்து சென்று கா கா என்று கரைந்தன. பிறகு மைனாக்கள் ஒன்றோடொன்று ஏதோ பிதற்றிக்கொண்டு தோன்றின. சிலவேளைகளில் வேறு அழகான பறவைகளும் வருவதுண்டு. அதன்பின் பளிச்சென்று வேகமாக ஒளி படர்ந்தது.

அழகிய காலை நேரம் என்று ஜூடி தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும்படியாக சுமார் ஒரு மணி நேரம் இருந்தது. இங்கிலாந்தில் இம்மாதிரி இருந்தால் அது அழகிய காலை நேரந்தான். ஆனால் இது இங்கிலாந்து அல்ல; இது சென்னை. இந்த நாள் இங்கே வெப்பமிகுந்த தாகத்தான் இருக்கும். பள்ளியிலெல்லாம் ஜூடிக்கு வியர்வை வழிந்து கொண்டிருக்கும். மேலெல்லாம் பிசுக் கொட்டிக்கொள்ளும். மாலை நேரத்திலேயே அவளுக்கு உறக்கம் தள்ளிக்கொண்டு வரும். பள்ளி முடிந்த பிறகு மாலையிலே அவளுக்கு ஒரே அலுப்பாக இருக்கும்; உடம்பெல்லாம் சூடேறிவிடும். அதனால் அவள் வீட்டிலே செய்ய வேண்டிய பள்ளி வேலைகளையெல்லாம் அதிகாலையிலேயே பெரும்பாலும் செய்தாள். ஆனால் பெஞ்சமின் இவள் வேலையிலே குறுக்கிடுவான். ஆயாவால் அவனைத் தடுத்து நிறுத்தவே முடியாது. அப்படி நிறுத்த அவள் விரும்புவ தில்லையென்றும் சொல்லவேண்டும். பெஞ்சமினுக்கு மூன்று வயதுதான் ஆகிறது; இருந்தாலும் அவன் தன்னுடைய ஆயாவான மேரியைத் தன் விருப்பம்போல ஆட்டிவைக்கக் கூடியவனாக இருந்தான். அடிக்கடி ஏதாவது துடுக்குத்தன மான காரியத்தைச் செய்வதிலே அவனுக்கு விருப்பம் அதிகம்.

அதிகாலையில் சில சமயங்களில் ஜூடி தன் அண்ணன் ஜானுக்குக் கடிதம் எழுதுவாள். அவன் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று அங்கே பள்ளியில் படித்து வந்தான். அவன் பதில் எழுதுவான். கடுமையான குளிர் காற்றிலே கால்பந்து விளையாடும் போது ஸ்வெட்டரையும் அதைப் போன்ற அங்கிகளையும் அணிந்துகொள்ள வேண்டியிருப்பதைப் பற்றி அவன் அதிலே குறிப்பிடுவான். அப்படி அணிந்து கொள்ள முடியுமா என்று ஜூடிக்குத் தோன்றும். ஜூடியின் தந்தை ஒரு டாக்டர்; அவள் தாய் சமூக நலத் தொண்டில் ஈடுபட்டிருந்தாள். இருவர் பணியும் உற்சாக மற்றதாகத் தோன்றின.

மருத்துவ நிலையத்துக்குத் தந்தை முன்னதாகவே சென்று விடுவார். தாய், தான் பணி செய்யும் நிலையத்திற்குச் செல்லும் வழியிலே ஜூடியைப் பள்ளியில் விட்டுப் போவது வழக்கம். நோய்களைப்பற்றி எத்தனையோ சொல்லக் கேட்டாள் ஜூடி; அதனால் சில வேளைகளில் அவளுக்கு மிகுந்த கவலையுண்டாகும். வேறு நேரங்களில் அவளுக் குப் பள்ளிக்கூடத்தைப் பற்றிய கவலை அதிகமாக இருக்கும்,

ஆனால் பள்ளி முடிந்த பிறகு அவர்கள் அடிக்கடி கிளப்புக்குச் சென்று நீந்துவார்கள். ஜூடிக்கு நன்றாக நீரில் முழுகிச் செல்லத் தெரியும் ; பெஞ்சமின் சிரித்துக் கொண்டே நீரில் விழுந்து மீனைப்போல நீந்துவான். ஜூடிக்கு மூன்று வயதாக இருக்கும் போது நீந்தத் தெரியாது, அந்த நாட்களில் அவள் இங்கிலாந்திலிருந்தாள். அங்கே ஒரு அழுக்குப் படிந்த நீச்சல் தொட்டிதான் வீட்டுக்குள்ளேயே இருந்தது; கோடை விடுமுறை நாட்களில் அலை குமுறும் கடல் தானுண்டு. இங்குள்ளது போல அழகான தடாகமும் அதற்குப் பின்னால் பெரிய மரங்களும், நீல வானத்தே எழுந்து பீரிடும் நீர்க்குழாய்களும் அங்கே யில்லை. நீந்தி ஓரளவிற்கு உடம்பு குளிர்ந்த பிறகு நீச்சல் உடைகளோடேயே அமர்ந்து அங்கே உருளைக்கிழக்கு வறுவலும் எலுமிச்சம்பழ ரசமும் அருந்தலாம்; அதிர்ஷ்ட மிருந்தால் ஐஸ் கிரீமும் கிடைக்கும்.

சில வேளைகளில் அவர்கள் எலியட் கடற்கரைக்குச் செல்வார்கள். அங்கே தென்னங்கீற்றால் வேய்ந்த குடிசை ஒன்று அவர்களுக்கு உண்டு. ஆனால் கோடைக் காலத்தில் மணல்மேல் நடக்க முடியாது; அவ்வளவு சூடாக இருக்கும். அங்கே ஐஸ் பண்டங்கள் கிடையாது, ஆனால் சுவையான இளநீர் கிடைக்கும். அதிலுள்ள தேங்காய், மென்மையான ஜெல்லியைப் போன்றது. அந்த இளநீர்த் தேங்காய்களின் வெளிப்பகுதி மழமழப் பாகவும், பொன் பசுமை நிறத்தோடும் இருக்கும் ; ஆங்கில நாட்டுத் தேங்காய் விளையாட்டுக்களில் கிடைக்கும் தேங் காய்களைப் போலக் கரடுமுரடாகவும் மாநிறமாகவும் இருப்ப தில்லை. இந்திய மக்களும் ஆங்கில மக்களும் வேறு பட்டிருப்பதைப்போல இவை வேறுபட்டிருக்கும் - அதாவது வெளித் தோற்றத்திலே.

அவர்கள் உண்மையிலேயே மிகவும் வேறுபட்டவர்கள் என்று ஜூடி சில வேளைகளில் எண்ணுவாள். பள்ளிக்கூட வகுப்பிலே இருந்தவர்கள் பெரும்பாலும் இந்தியச் சிறுமிகளே; அவர்களுடன் பேசுவது அவளுக்குச் சுலபமாக இருக்கவில்லை. அவர்களிற் சிலருக்குச் சினிமா நட்சத்திரங்களைப் பற்றித்தான் ஆர்வம். இல்லாவிட்டால் ஜடிக்குப் பிடித்தமில்லாத விஷயங்களிலே அவர்களுக்குப் பிடித்த மிருக்கும். சில வேளைகளில் அது குடும்பத்திலே நடைபெறும் கலியாண விஷயமாக இருக்கும். அதிலே பெரும் பகுதி ஜூடிக்கு மடமையாகத் தோன்றும். ஜாதகத்தைப் பற்றி எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்? ஜூடியின் அத்தை மார்கரட்டைப்போல் கலியாணம் செய்து கொள்வதைப் பற்றி இவர்கள் ஏன் தீர்மானம் செய்து கொள்ளக்கூடாது? வேறு யாரும் குறுக்கிடாதவாறு ஏன் இவர்கள் காரியத்தை முடித்துக் கொள்ளக்கூடாது? அடுத்த வீட்டிலே கலியாணம் நடைபெற்றபோது இரண்டு நாட்களுக்கு இரவெல்லாம் இரண்டு வாத்திய கோஷ்டிகள் முழங்கிக் கொண்டிருந்தன. அரையாண்டுப் பரீட்சைகள் நடக்கின்ற சமயத்திலே இப்படி!

பள்ளியிலே சில விஷயங்கள் ஜூடிக்கு மிகமிகத் தொல்லை கொடுத்தன. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டியது அவற்றிற்கு ஒரு எடுத்துக் காட்டு. அதைப்பற்றி ஆரம்பத்திலேயே ஆசிரியை ஒரு விரிவுரை நிகழ்த்தினாள். இந்தியா ஒரே நாடு; அதற்கு ஒரே ஒரு பொதுமொழி அவசியம். அந்தப் பொதுமொழி ஆங்கிலமாக இருக்க முடியாது; என்ன இருந்தாலும் ஆங்கிலம் ஒரு அந்நிய மொழிதான். அதை யாரும் ஒப்புக்-கொண்டுதானாக வேண் டும். தலைநகரத்தில் வழங்கும் மொழி ஹிந்தி, இந்து நாகரிகத்திற்கு அடிப்படையான பழைய நூல்களெல்லாம் எழுதப்பெற்றுள்ள பழைமையான மொழியான சமஸ்கிரு தத்திலிருந்து அது தோன்றியிருக்கிறது. இந்தியாவின் வரலாற்றையும், சிந்தனைகளையும் புரிந்து கொள்ள விரும் பினால் ஹிந்தி கற்றுக்கொண்டே ஆகவேண்டும். இவ்வாறு ஆசிரியை கூறினாள். ஆனால், சென்னை வீதிகளிலே யாரும் ஹிந்தி பேசவில்லை; அவர்கள் அனைவரும் தமிழிலேயே பேசினார்கள். பள்ளியிலே பெரும்பாலான சிறுமிகள், ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும்போதும் விளை யாடும்போதும் தமிழிலேயே பேசினார்கள். ஜூடிக்குக் கொஞ்சம் தமிழ் பேசவரும்; ஆனால் நன்றாக வராது. ஹிந்தியைவிடத் தமிழை அதிகமாகத் தெரிந்து கொள்ள அவளுக்கு விருப்பம். இருந்தாலும் ஹிந்தியை ஏன் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி அவள் ஏறக்குறைய உணர்ந்திருந்தாள்.

வேலைக்காரர்களோடு அவள் தமிழிலே சிறிது பேசுவாள். கறுப்பு மீசைக்காரனான ஜார்ஜ் சமையல் பணியாளாக இருந்தான். நல்ல ஆங்கிலத்திலே பேசமுடியு மென்று அவனுக்கு எண்ணம். ஆனால் சில வேளைகளில் அவனைப் புரிந்து கொள்வது மிகக் கஷ்டம், பிறர் சொல்வதைப் புரிந்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லாததால் அவனிடத்திலே பேசிக்கொண்டே இருப்பதில் பயனில்லை. வாசுகி என்பவள் துணி துவைக்கும் ஆயாவாக இருந்தாள். அவள் அழகானவள்; அவள் தன் தோற்றத்தை மேலும் அழகு படுத்துவதற்காகக் காதணிகளும், மூக்குத்திகளும் அணிந்திருந்தாள். தோட்டக்காரன் ஒருவனும் இருந்தான். உதிர்ந்த இலைகளையெல்லாம் பெருக்கித் தள்ளுவதும், தண்ணீர் ஊற்றுவதும், பூத்தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதும் அவன் வேலை. பெரிய பெரிய அழகான கூடாரப்பூக் களையும், கண்ணைக்கவரும் நிறங்களுள்ள காசித்தும்பை, துலுக்குச் செவ்வந்தி ஆகிய மலர்வகைகளையும் அவன் உண்டாக்கினான். கருஞ்சிவப்பும், ஆரஞ்சு நிறமுள்ள நீண்ட கல்வாழை மலர்களையும், பூக்கோசு, வெண்டை, பூசணி முதலியவற்றையும் அவன் பயிரிட்டான். தோட்டத்திற்கும் பின்புறமுள்ள வீட்டிற்கும் இடையேயுள்ள வேலியில் ஆழ்ந்த நீலமும் கருஞ்சிவப்பு நிறமும் உள்ள மலர்களைப் பூக்கும் காக்காப் பூக்கொடிகளை வளர்த்தான். அவைகளுக்கும் கலியாணம் நடந்த வீட்டிற்குமிடையே காரை பூசிய சுவர் ஒன்று இருந்தது. அடுத்த பக்கத்திலுள்ள வீட்டிற்கும் அவற்றிற்குமிடையே இளஞ்சிவப்புக் கலந்த மஞ்சள் நிறமும் இனிய நறுமணமும் கொண்ட மலர்களையுடைய உண்ணிச் செடி, வேலியாக அடர்ந்து வளர்ந்திருந்தது. தோட்டத்திலே அரளிப்புதர்களும், மாமரமும், பொன்னரளி, கப்பல் அலரிப் புதர்களும், மஞ்சள், வெள்ளை நிறங்களில் அழகிய மலர்களோடும் இருந்தன. ஆனால் தோட்டக்காரனுக்கு ஒரு சாதாரண சிறு சாமந்திவகைச் செடியை வளர்ப்பதில்தான் அதிகமான ஆசை. சென் னையில் அதை வளர்ப்பது எளிதல்ல. எல்லாத் தோட்டக்காரர்களும் இப்படித்தானிருக்கிறார்கள்.

தோட்டக்காரனுக்குச் சில சமயங்களில் ஜூடி உதவி செய்வாள். செடிக்குத் தண்ணீர் ஊற்றுவாள். மழைக் காலத்தில் தவிர மற்ற காலத்தில் ஒவ்வொரு நாளும் தோட்டக்காரன் ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் பாய்ச்சியாக வேண்டும். அப்படியிருந்தாலும் வெய்யிலின் கடுமையால் புல்லெல்லாம் கருகி வாடி அழகற்றுத் தோன்றும்; இங்கிலாந்திலுள்ள புல்தரைகளைப் போலக் கொஞ்சங் கூடத் தோற்றமளிக்காது. தோட்டத்திலே ஒரு மகிழ்ச்சி யென்னவென்றால் அங்கே எத்தனையோ பறவைகள் வரும்.

மைனாக்கள் அங்கே எப்பொழுதும் இருக்கும். பளபளப்பான அப்பறவைகள் பறக்கும் போது கருமையும் வெண்மையும் கலந்து தோன்றும். நீலச்சாம்பல் நிறமுள்ள கொண்டலாத்திகளும். கருஞ்சிவப்பு நிறத்தோடு விளங்கும் சிறிய தேன்சிட்டுகளும் அடிக்கடி வரும். தேன்சிட்டுக்களின் இறக்கைகள் வெகு வேகமாக விரிந்து மூடுவதால்
அவற்றைப் பார்க்கவே முடியாது. ஏதாவது கொத்தித் தின்னக் கிடைக்கும் என்று தோன்றும் போதெல்லாம் அழகற்ற கிழக்காக்கைகள் தாழ்வாரத்திற்கும், ஜன்னலுக்கும் கூட சிறகடித்துக்கொண்டு எந்த நேரத்திலும் வந்துவிடும்.

வெளியிலே மாட்டுவண்டிகள் கிரீச்சிட்டுக்கொண்டு சாலையிற் சென்றன. வேலியின் வழியாகப் பூச்செடிகளை எட்டிப் பிடித்துக் கடிக்க, வெள்ளாடுகள் முயலும். மோட் டார் கார்களும், லாரிகளும் சாலையின் வழியாகப் போவ துண்டு. சில சமயங்களில் ரிக்ஷாவும் செல்லும். மெலிந்த கால்களுடைய ஏழை மனிதன் ஒருவன் இழுத்துக்கொண்டு முன்னால் ஓடுகின்ற ரிக்ஷாவில் செல்லுவதை, ஜுடி என்றுமே விரும்பவில்லை. பள்ளியில் படித்த சில சிறுமிகள் ரிக்ஷாவில் அமர்ந்து வீட்டிற்குச் சென்றனர். சென்னையில் உள்ள பஸ்கள் லண்டனில் உள்ள பஸ்களைப் போல அழகாகவும், வசதியாகவும் இருக்கக்கூடாதா என்று ஜூடி எண்ணுவாள். ஆனால் அவை அப்படி இருக்கவில்லை.

மாரிக்காலம் இவ்வளவு மோசமில்லை. ஆனால் ஒரு சில வாரங்களுக்கே மாரிக்காலம் நீடித்தது. அப்பொழுதும் இங்கே இங்கிலாந்திலே கோடையில் மிகக் கடுமையான வெப்பமுடைய நாட்களைப் போல இருக்கும். அதுவே மிகக் குளிராகவும், குளிக்க இயலாதவாறும் உள்ளதென்று சிலபேர் நினைப்பார்கள். மோட்டார் காரின் வெளிப்பக்கத்தைத் தொட்டால், குளிரால் கை வெடித்துப் போவது போன்ற குளிர் இங்கு கிடையாது.

மாரிக்காலத்தில் வாரக்கடைசி நாட்களில் அவர்கள் எங்காவது பயணம் போவார்கள். மகாபலிபுரத்திற்கு அவர்கள் சென்றிருந்தனர். கல்லால் செதுக்கிய பெரிய நந்திகளும் யானைகளும் நூற்கண்டு நூற்றாண்டாக அங்கே நின்றது போலவே இப்பொழுதும் வெய்யிலிலே அமைதியாக நிற்கின்றன. அங்குள்ள பழமையான கோயிலுக்கு அருகிலே நீலக்கடலிலிருந்து அலைகள் எழுந்து வெண் நுரையோடு கரையிலே மோதுகின்றன. ஒரு பெரிய பாறையிலே துறவிகளையும், அவர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் வனதேவதைகளையும், குரங்குகளையும், தியானம் செய்யும் பூனையையும், சாதுவான யானைகளையும் புடைப்புச் சித்திரங்களாகச் செதுக்கியுள்ளார்கள். வேறொரு பாறையிலே கிருஷ்ணன் ஒரு மலையைத் தூக்கிப் பிடித்துக் கடுமையான இடி மழைக்குப் பயந்த இடையர்களையும், பயமறியாத பசுக்களையும் காப்பது போல உருவாக்கி-யுள்ளார்கள்.

பறவைகளின் புகலிடமான ஓரிடத்திற்கு அவர்கள் சென் றனர். அங்கே மரங்களிலே மடையான்கள் ஏராளமாகக் கூடுகள் கட்டியிருந்தன. இங்குமங்குமுள்ள கோயில்களுக்கும் அவர்கள் சென்றனர். ஆனால் வெப்பம் அதிகமாகும் பொழுது காரில் செல்வதே அலுப்பாக இருந்தது. பலரை ஒருங்கே எக்ஸ்-கதிர் போட்டோ பிடிக்கும் கருவிகளுடன் ஒரு சனிக்கிழமையன்று அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார்கள். பெயர்ப்பட்டியல்களில் குறியிட்டு டாக்டர்களுக்கு ஜூடி உதவி செய்தாள். எத்தனை பேருக்கு க்ஷயநோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்குத்தான் இப்படிச் செய்தார்கள். க்ஷயநோய் உள்ளவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் அவர்கள் குணமடைய வாய்ப்புண்டு. அங்கே பலபேர் மெலிந்து தோன்றினார்கள். அவர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. அரிசிச்சோறுதான் உண்டு. இன்னும் கொஞ்சம் அதிகமாக அவர்களுக்குப் பால் கிடைக்குமானால் அவர்கள் நிலைமை இவ்வளவு மோசமாக இராது என்று ஜூடியின் தாயார் கூறினாள். "ஒரு நாளைக்கு நாம் தேசிய விஸ்தரிப்புத் திட்டம் நடைமுறையிலுள்ள ஓர் இடத்திற்குப் போய் அங்கு நிலைமை எப்படி யிருக்கிறதென்று பார்ப்போம்” என்று அவள் தெரிவித்தாள்.

"தேசீய விஸ்தரிப்புத்திட்டம் என்றால் என்ன?" என்று ஜூடி கேட்டாள்.

"லட்சக்கணக்கான மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்கு உதவி செய்வது இந்தியாவில் மிக முக்கியமானது. அங்கே உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். இந்திய அரசாங்கம் இரண்டு காரியங்களைச் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறது. விவசாயத்தை அபிவிருத்தி செய்யவேண்டும், நல்ல விளைச்சல் உண்டாக்க வேண்டும்; வெவ்வேறு வகைத் தானியங்களை விளைவிக்க வேண்டும்; நல்ல கால்நடைகளை வளர்க்க வேண்டும். இப்படிப் பல பணிகள் செய்வதோடு, மிகுந்த பயனுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கு மக்களுக்கு உதவி செய்யவேண்டும். சிறு கைத்தொழில்களால் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் வழி செய்ய வேண்டும்" என்று அவள் தாயார் விளக்கிக் கூறினாள். ”கிராமங்களில் செய்த கம்பளங்களையும் திரைகளையும் துணிகளையும் நாம் வாங்குவது உனக்குத் தெரியுமல்லவா?" என்று அவள் கேட்டாள்.

"ஆமாம்" என்றாள் ஜூடி. சிலசமயங்களில் அப்படி வாங்காமலிருந்தால் நல்லதென்று அவள் நினைப்பதுண்டு. ஏனென்றால் இங்கிலாந்திலும், சுவிட்ஸர்லாந்திலுமிருந்து வரும் அழகிய துணிகள் கடைகளிலே கிடைக்கின்றன; அவற்றைத் தன்னுடைய உடைகளுக்காக வாங்க அவள் விரும்பினாள்.

"இந்தியாவில் வசிக்கும் நாம் அனைவரும் இந்திய அரசாங்கம் செய்ய முயலும் காரியங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான் கருதுகிறேன். ஏழை மக்களின் நிலையைக் கொஞ்சம் உயர்த்த அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்தைக் தொடங்கினார்கள். அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் மக்களின் நிலை இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்; இந்தியாவுக்குக் கிடைக்கும் வரும்படியில் சிறிது பாகந்தான் பணக்காரர்களுக்குப் போகும், ஏழைகளுக்கு அதிகம் கிடைக்கும். இதைத்தான் நேருவைப்போன்ற உண்மையான தேசத் தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எப்பொழுதும் சில பேர் சுயநலக்காரர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்."

தாய் என்ன நினைக்கிறாள் என்பது தனக்குத் தெரிந்த தாக ஜூடி கருதினாள். தாங்கள் சுகமாக இருக்கும் வரையில் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிக் கவலைப்படாத பெரிய மனிதர்களில் ஒன்றிரண்டு பேர்களுடன் அவள் தாயார் எப்பொழுதும் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாள். அவள் செய்வது ஒருவேளை முற்றிலும் சரியாக இருக்கும் என்று ஜூடி நினைத்தபோதிலும், அப்படி மாறுபாடில்லாம லிருக்க வேண்டுமென்று அவள் விரும்பினாள். பள்ளியி லிருந்த சிறுமி ஒருத்தியின் தகப்பனோடு ஒரு தடவை சச்சரவு. அவள் நல்லவள் அல்லதான்; இருந்தாலும் அவள் தகப்பனோடு எதற்கு........? தாயாருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அவ்வளவு தூரத்திற்கு அவசியமா?

பள்ளி விடுமுறை நாட்களில் அவர்கள் மலைவாசத்திற்குச் சென்றார்கள். ஆனால் ஜூடியின் தந்தையும் தாயும் அவ்வளவு நாட்களுக்கு அங்கு தங்க முடியாது. ஆகையால் ஒரு நண்பரோடு தங்கும்படி ஜூடியையும், பெஞ்சமினையும், ஆயாவையும் விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். அந்த நண்பருக்கு ஒரு பையன் உண்டு. அவனுக்குத் தபால் தலைகள் சேகரிப்பதில் தான் விருப்பம். அதனால் அங்கு வாழ்க்கை உற்சாகமற்றதாக இருந்தது. இருந்தாலும் மலையில் குளிர்ச்சியாக இருந்தது. மாலை வேளைகளில் ஜெர்சி அணிந்து கொள்ளவும் இரவிலே கம்பளியைப் போர்த்துக் கொள்ளவும் அங்கே முடியும். குளிர்ந்திருப்பதால் ஓடியாடி விளையாட வேண்டுமென்றே ஆசை உண்டாயிற்று. சென்னையிலே அப்படி உண்டாகாது.

ஜூடியின் பதினொன்றாவது பிறந்த நாளன்று அவளுக்கு விருப்பமான சில புத்தகங்கள் கிடைத்த தென்றாலும் பொதுவாக அந்த நாள் உற்சாகமின்றியே இருந்தது. இருப்பினும் அன்று அவள் ஒரு நல்ல காரியம் செய்தாள். அவளும், தபால் தலைகள் சேகரிக்கும் பையனும் வனவிலங்குகளின் ஒதுக்கிடமான ஒரு காட்டிற்குச் சென்று பல மணி நேரம் ஒரு யானையின் மீதேறிச் சுற்றினர். மகாபலிபுரத்து யானையைப் போல அது நல்ல யானை. வழியிலே குறுக்கிட்ட மரக்கிளைகளை அது சாமர்த்தியமாக ஒடித்தெறிந்து கொண்டு சென்றது. அப்படிச் செய்திராவிடில் அக்கிளைகள் அவர்கள் மீது மோதி, அவர்களைக் கீழே தள்ளியிருக்கும். மரஞ்செடிகளை வெட்டி ஒதுக்கியிருந்த ஒரு பகுதியிலே, வெகு தூரத்திலே காணப்பட்ட சில காட்டு யானைகளை அவர்கள் பார்த்தார்கள். கால்களை மறைக்கும் படியாக வளர்ந்திருந்த புல்லைக் கற்றையாகப் பிடுங்கித் தமது துதிக்கைகளை ஆட்டிக்கொண்டு அவை தின்று கொண்டிருந்தன. பார்ப்பதற்கு அவை பெரிய நிழல்களைப் போல மிக சாந்தமாகத் தோன்றின. ஆனால் அந்த இடத்தைவிட்டுப் புறப்படத் தீர்மானித்தபோது ஒரு யானை குதூகலத்தோடு ஒரு மரத்தைத் தடாலென்று ஒடித்துத் தள்ளிவிட்டது.

விளைச்சல் நிலங்களுக்கு யானைகள் வராமல் தடுப்பதற்காக அந்தப் பக்கத்தில் ஆழமான குழிகளைத் தோண்டி வைப்பார்கள். விலங்குக்காட்சி சாலைகளிலுள்ள யானைகள் இவ்வாறு எதேச்சையாகத் திரியவும் மேயவும் விளையாடவும் முடியாமலிருப்பதைப்பற்றி ஜூடி எண்ண மிட்டுக்கொண்டேயிருந்தாள். அதன் பிறகு அவர்கள் ஒரு காட்டெருமையைப் பார்த்தார்கள். பிறகு சிறு புதர்களுக்கும் மூங்கில் புதர்களுக்குமிடையே, கருமையான ஒரு பெரிய விலங்கைப் பார்த்தனர். அது கரடியென்று பின்னால் தெரிந்தது. தபால் தலைகள் சேகரிக்கும் பையனுக்கும் அப்பொழுது உற்சாகமுண்டாகி விட்டது. இன்னும் பல விலங்குகளைப் பார்க்க வேண்டுமென்று ஜூடிக்கு ஆசை. குரங்குகளும் சிறிய மர அணில்களும் எப்பொழுதும் கண்ணுக்குத் தென்பட்டன. பார்க்க வேண்டுமென்றே ஆவலைத் தூண்டும்படியான பிராணிகள் இந்தியாவிலே நிறைய இருக்கும். அவற்றைப் பார்க்காமலிருப்பது அவமானமாகத் தோன்றியது. ஒவ்வொரு இரவிலும் உறங்குவதற்கு முன்னால் அவள் அந்த யானைகளைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள்
-----------------

2. வேலியிலே சந்து

உண்ணிச்செடி வேலிக்குப் பின்புறமிருந்த அண்டை வீட்டார்களை பெஞ்சமினுக்குப் பிடிக்கும், ஆனால் ஜூடிக்கு அவர்களை அந்த அளவு பிடிக்கவில்லை. அவர்களுடைய தோட்டம் அழகற்றது. அதன் பெரும்பாகம் ஏழு வயது, எட்டு வயதான இரண்டு சிறுமிகளுக்கும், ஒரு குழந்தைப் பையனுக்கும், ஒரு மாட்டுக்குமாக இருந்தது. பையனுடைய பெயர் ராமகிருஷ்ணன். அத்தனை சிறிய குழந்தைக்கு அத்தனை பெரிய பெயரா? குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவனைப்பற்றிப் பெரிதாக நினைத்தார்களென்று தோன்றிற்று. தூக்கமுடியாதபடி கனமாக இருந்தாலும் அவனுடைய தமக்கைகள் அவனை அடிக்கடி தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்தச் சிறுமிகளில் இளையவளை ஜூடிக்குப் பிடிக்கும். அவள் பெயர் வசந்தி. பந்து விளையாட்டு, பம்பரம் ஆடுதல், கயிறு சுழற்றுதல் என்றால் அவளுக்கு விருப்பம். ஜூடி அவளுக்கு ஆங்கிலத்தில் சில விஷயங்கள் சொல்லிக் கொடுத்தாள். அவற்றை அவள் விரைவிலே கற்றுக்கொண்டாள். விளையாடும் போது பாடும் தமிழ்ப் பாட்டுக்களை அவள் ஜூடிக்குப் பாடிக் காண்பித்தாள். ஆனால் பாட்டு முடியுமுன்னாலேயே அவளுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். அவளுடைய தந்தை அரசாங்கத்திலே ஏதோ ஒரு உத்தியோகம் வகித்தார். எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது-போல அவர் காணப்பட்டார்.

கல்யாணம் நடைபெற்ற அண்டை வீட்டுக்காரர் அதிகமாக மற்றவருடன் பழகமாட்டார்கள். அவர்கள் ஒரு பெரிய கார் வைத்திருந்தனர். அந்த வீட்டுப் பையன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உண்டு. அதில் ஏறிக்கொண்டு அவன் எப்பொழுதும் வெகு வேகமாகப் போவான். அந்த வீட்டாருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்குத்தான் கலியாணம் நடைபெற்றது.

மற்ற பக்கங்களில் உள்ள அண்டை வீட்டார்களா?

காக்காப்பூக்கொடி படர்ந்திருக்கும் வேலிக்குப் பின்னால் இருக்கும் வீட்டைப்பற்றி எண்ணி ஜுடி அடிக்கடி ஆச்சரியப் படுவாள்; ஜூடி வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் அந்த வீட்டிலுள்ள தோட்டம் நன்றாகத் தெரியும். அந்தத் தோட்டம் அழகாக இருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் அம்மாள் தானாகவே தோட்ட வேலை செய்வாள். தாழ்வாரத்தைச் சுற்றிலும் பூந்தொட்டிகள் எப்பொழுதும் இருக்கும். அதிகாலையிலே அந்த அம்மாள் பூப்பறிக்க வருவாள். அவள் கட்டியிருக்கும் சேலை பலவகையான நிறங்களோடு இருக்கும் - ஆரஞ்சு, சிவப்பு, இளஞ்சிவப்பு - சிவப்பிலே எத்தனை வகை களுண்டோ அத்தனையும் - மெரினாவை அடுத்துள்ள கடலின் நீலப்பச்சை, அல்லது இரவு வானத்தின் கருநீலம் என்றிப்படி. பெரும்பாலும் தங்க ஜரிகை, சேலையின் கரைகளிலே மின்னும். சிலசமயங்களில் அந்தத் தோட்டத்திலே குழந்தைகள் காட்சியளிப்பார்கள்; ஆனால் அவர்கள் அந்த அம்மாளின் குழந்தைகளா என்பது ஜூடிக்கு நிச்சயமாகத் தெரியாது. இந்தியர்களின் வீட்டிலே எப்பொழுது பார்த்தாலும் பல நண்பர்களும் உறவினர்களும் இருப்பது போலத் தோன்றிற்று. ஜூடிக்கு இது குழப்பத்தை உண்டாக்கியது. தேநீர் அருந்துவதற்காகப் பள்ளித்தோழி ஒருத்தியின் வீட்டுக்கு ஜூடி சில வேளைகளில் செல்லுவாள். அங்குள்ள மற்ற குழந்தைகள் அவளுடன் பிறந்தவர்களா அல்லது பெரியப்பன், சிற்றப்பன் மக்களா என்று தெரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருத்தி ஆயாவின் மகளாகக் கூட இருக்கலாம். ஜூடியால் அவர்களை இன்னார் என்று திட்டமாக அறிந்துகொள்ள இயலவில்லை!

சென்னையின் மத்தியில் கூட மரங்கள் அடர்ந்த பெரிய தோட்டங்களும், அவற்றினிடையே நீண்டு கிடக்கும் பெரிய வீடுகளும் இருந்தன. அவளுடைய பள்ளித் தோழிகளில் சிலர் அங்கு வசித்தார்கள். இருளண்டிய கூடத்தைக் கடந்து மறுபக்கம் சென்றால் அங்கே ஓடு வேய்ந்த விசாலமான தாழ்வாரம் இருக்கும். அந்த இடம் ஒரு பெரிய பண்ணையின் முற்றம் போலத் தோன்றும். அங்கே பலவகையான மக்கள் சமைத்தல், துணி துவைத்தல், நாற்காலிகளைச் சரிப்படுத்துதல், குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு ஆட்டுதல், பூக்கட்டுதல் என்று இவ்வாறு எல்லாவிதமான வேலைகளும் செய்து கொண்டிருப்பார்கள். கோழிகளும், வெள்ளாடுகளும் இருக்கும். ஒன்றிரண்டு எருமைகள் படுத்துக் கிடக்கும். பசுமாடுகள் நிச்சயமாக உண்டு. வயது வந்தவர்களெல்லாம் சிற்றப்பன், சிற்றன்னையாகவோ, மாமன் அத்தையாகவோ, பெரியப்பன் பெரியன்னையாகவோ இருப்பார்கள். பெரும்பாலும் அங்கே வயதுவந்த கிழவி ஒருத்தியிருப்பாள். அவளைக் கண்டால் எல்லோருக்கும் பயம். இந்த வீடுகளெல்லாம் போய்ப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் பழங்காலத்தவை. ஜூடியின் தோழிகளில் பலபேர் தனித்தனியான சிறு இல்லங்களில் வசித்தனர்; அல்லது மாடிப்பகுதிகளில் வசித்தனர். வெய்யிற் காலத்தில் மாடிகள் மிகுந்த வெப்பமாக இருக்கும்.

கோடை விடுமுறையை மலைப்பகுதிகளில் கழித்து விட்டு ஜூடி பள்ளிக்குத் திரும்பி வந்தபோது அவளுடைய வகுப்பிலே ஆங்கிலப் பெண்கள் யாரும் இல்லை. இளஞ்சிறுமிகள் சிலர்மட்டும் பள்ளியில் இருந்தார்கள்.

இப்பொழுது ஜூடிக்கு வயது பதினொன்று. அதே வயதுடைய மற்ற ஆங்கிலப் பெண்கள் பெரு பாலும் மலைப்பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர். அல்லது அவர்களுடைய பெற்றோருடன் இந்தியாவைவிட்டு இங்கிலாந்து திரும்பிவிட்டனர். ஜூடியின் தாயும் தந்தையும் இன்னும் ஓராண்டு கழிந்த பிறகே இங்கிலாந்து திரும்புவார்கள். அப்பொழுதுதான் ஜூடி தன் அண்ணன் ஜானை மீண்டும் பார்க்க முடியும். இந்தியாவில் இருப்பது ஒருவகையில் வேடிக்கையாகத்தான் இருந்தது. இது இந்தியர்களின் நாடு. பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர், ஆப்பிரிக்கர்கள் போல ஆங்கிலேயரும் உண்மையில் அன்னியர்களே. ஆனால் இந்தியர்களுக்கு ஆங்கிலேயரிடத்தில் விருப்பம் அதிகம் என்று தோன்றிற்று. தெருமுனைகளிலும், கடை முகப்புகளிலும் ஆங்கிலத்திலே அறிக்கைகள் காணப்பட்டன. ஜூடியின் தந்தை 'ஹிந்து' என்ற தினசரிப் பத்திரிகை படித்து வந்தார். அது ஆங்கிலத்திலேயே வெளியாயிற்று. பல படங்களோடு ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாவதைத் தவிர மற்ற நாட்களில் அந்தப் பத்திரிகையிலே அத்தனை கவர்ச்சியில்லை என்பது ஜூடியின் எண்ணம். வயது வந்தவர்களுக்கு விருப்பமான பத்திரிகைகளெல்லாம் வழக்கமாகக் கவர்ச்சியற்றவை தானே?

எத்தனையோ விஷயங்கள் ஜூடிக்கு விளங்குவது சிரமமாக இருந்தன. பிராமணர்கள் அவற்றிற்கு ஒரு எடுத்துக் காட்டு. பழங்காலத்திலே அவர்கள் எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. அவர்கள் மிகுந்த தூய்மையும் சீலமும் கொண்டிருந்ததால் சாதாரணமான வேலைகளையெல்லாம் அவர்களால் செய்ய முடியவில்லை. அப்படி வேலை செய்யும் தாழ்ந்த சாதி மக்களை அவர்கள் தொடக்கூட மாட்டார்கள். அதனால் சமூகத்தின் அடி நிலையிலிருந்த ஹரிஜனங்கள் இப்பொழுது பிராமணர்களை விரும்பவில்லை. தங்கள் உரிமையைப் பெற அவர்கள் முயன்றனர்.

காக்காப்பூக்கொடி வேலிக்கு அப்புறத்தே உள்ள குடும்பத்தினரைப் பற்றி ஜூடி தன் தந்தையிடம் விசாரித்தாள். அவர்கள் பிராமணர்கள் என்று தந்தை தெரிவித்தார். கணவர் ஒரு சமஸ்கிருதப் பண்டிதர். இந்துக்கள் அல்லாத மற்றவர்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்களா என்பது குறித்து ஜூடியின் தந்தைக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

"அவர்கள் வைதிகமான பழக்கமுடையவர்களாக யிருந்ததால் அவர்கள் வீட்டிற்குள் நாம் செல்லுவதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு நாமெல்லாம் ஹரிஜனங்களைப் போலத்தான். நாம் உள்ளே நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று அவர்கள் நினைப்பார்கள்" என்றார் ஜூடியின் தந்தை.

”அது ரொம்ப முட்டாள் தனம்" என்றாள் ஜூடி.

"சில வகைகளிலே நாம் சுத்தம் குறைந்தவர்கள். வெளியிலே போட்டுச் செல்லுகிற பாதரட்சைகளை வீட்டிற்குள்ளும் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஜூடி, உன்னுடைய மிதியடியிலேயே, ஒட்டிக்கொண்டிருக்கும் புழுதியைப் பார்! உடம்பைத் தேய்த்து அழுக்கடைந்த தண்ணீரிலேயே படுத்துக்கொண்டு குளிக்கிறோம். நாம் இறைச்சியை உண்கிறோம். உண்மையிலே அது செத்த பிராணி" என் றிவ்வாறு விளக்கினார் தந்தை.

எனக்கு இறைச்சி வேண்டியதே இல்லை - காய்கறி கிடைத்தால் போதும்- கத்தரிக்காய்-தக்காளி- தயிர் - நிறையக் கொட்டைப் பருப்புகள் - பப்படம்-சில வேளைக்குக் கோழிக் குஞ்சு."

"கோழிக்குஞ்சும் இறைச்சிதான் - முட்டையும் அதுதான். உண்மையான பிராமணன் முட்டை சாப்பிட மாட்டான்" என்றார் தந்தை.

'ஒருவேளை அந்த வீட்டிற்குள் என்னை விடமாட்டார்கள்' என்று இவ்வாறு எண்ணமிட்டாள் ஜூடி. இவ்வாறு நினைக்க நினைக்க வேலிக்குப் பின்னாலிருக்கும் வீட்டிற்குள்ளே எப்படி இருக்குமோ என்று மேலும் மேலும் அவள் ஆச்சரியப்பட-லானாள். அவளுடைய தோழிகள் பலபேருடைய வீடுகள் உட்புறத்திலே ஆடம்பர மில்லாமல் சாதாரணமாகத் தானிருந்தன. நீல நிறத்திலோ, இளஞ்சிவப்பிலோ பூசப்பட்டிருக்கும். போட்டோப் படங்களும், காலண்டரும், அச்சிட்ட ஒன்றிரண்டு வண்ண ஓவியங்களும் காணப்படும். எல்லாவற்றையும்விட கிருஷ்ணனுடைய படங்கள் தான் வெகு அழகானவை. பாலகிருஷ்ணன் சிலவேளைகளில் தனது தாயோடும், சிலவேளைகளில் கோபிகைகளோடும் இருப்பான். நிஜமான சிறு பையனைப் போலவே வேடிக்கையும் விளையாட்டுமாக இருப்பான். மற்ற தெய்வங்கள், தேவதைகளின் படங்கள் கொஞ்சம் பயங்கரமாகத் தோன்றும். இந்தப் பெரிய வீட்டிலே இன்னும் பெரிய படங்கள் இருக்குமா? அங்கே ரேடியோ வைத்திருப்பார்களா? அந்த அம்மாள் ஆங்கிலம் பேசுவாளா?

வெய்யிற் காலத்திலே தோட்டக்காரன் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதிலேயே பெரும்பகுதியான காலத்தைக் கழித்தான். பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு ஜூடி அவனுக்கு உதவி செய்ய விரும்பவில்லை. குளித்துவிட்டு, மின்சார விசிறிக்கடியிலே அமர்ந்து எலுமிச்சம்பழ ரசங்கலந்த பானத்தைத் தம்ளர் தம்ளராகக் குடிக்கவே அவள் விரும்பினாள். தோட்டக்காரன் கருஞ்சிவப்பு ஷேரான் ரோஜாச் செடிகளை ஒரு கும்பலாக வளர்த்திருந்தான். அவற்றைப்பற்றி அவனுக்கு மிகவும் பெருமை. லண்டனில் வளர்வதைப்போலவே சென்னையிலும் ஷேரான் ரோஜா நன்றாக வளர்வது வேடிக்கையாக இருப்பதாக ஜூடி நினைத்தாள். ஷேரான் ரோஜா ரொம்ப அழகு. ஆனால் ஒரு வெள்ளாடு உள்ளே நுழைந்து அவற்றைக் கடிக்கத் தொடங்கிற்று. தோட்டக்காரனும் பணியாளும் உரக்கக் கத்திக் கொண்டு ஆட்டை நோக்கிப் பாய்ந்து அதை விரட்டியடித்தார்கள். பயந்துபோன ஆடு முட்டி மோதிக் காக்காப்பூக் கொடி படர்ந்திருந்த வேலியிலே ஒரு சந்து உண்டாக்கி விட்டது. "அந்த சந்தை அடைக்க எத்தனை நாளாகுமோ?" என்று ஜூடியின் தாய் சற்று வருத்தத்தோடு கூறினாள். வெய்யிற் காலத்திலே யாரும் அதிகமாக வேலை செய்ய விரும்புவதில்லை. அப்பொழுது ஆங்கிலேயர்களைப் போலவே இந்தியரும் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு மின்சார விசிறிகளோ, குளிரூட்டும் பெட்டிகளோ, அவைபோன்ற சாதனங்களோ மிக மிகக் குறைவாகத்தான் உண்டு.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. அதற்குமேல் இரண்டு நாட்களுக்குப் பள்ளிக்கூடம் கிடையாது; ஆனால் வீட்டில் செய்யவேண்டிய பள்ளி வேலைகள் எத்தனை! சரித்திர பாடத்தை ஜூடி முதலில் தொடங்கினாள்; ஆனால் எல்லாம் ஒரு காதில் புகுந்து மற்றொரு காதில் வெளிச் சென்றுவிட்டது. அப்பொழுது ஆயா வீரிட்டுச் சத்தம் போடுவது காதில் விழுந்தது. எதற்காக அப்படி சத்தம் போடுகிறாள்? பாம்பாக இருக்காது - இருக்குமா? துணி துவைக்கும் ஆயா வாசுகியும் வீரிட்டுக் கத்தினாள். ஜூடி துள்ளி எழுந்து என்ன விஷயமென்று அவர்களைக் கேட் டாள். பெஞ்சமினைக் காணோம் ! தோட்டத்திலே விளையாடிக் கொண்டிருந்தவன் திடீரென்று மறைந்துவிட்டான். கொதிக்கின்ற வீதி வழியாக ஜூடி ஓடிப்பார்த்தாள். அங்கே யாருமில்லை ; பெஞ்சமினும் இல்லை. திடீரென்று அவளுக்கு வேலியிலே உள்ள சந்தைப் பற்றிய நினைவு வந்தது. அங்கே பூக்கொடிகள் மிதிபட்டுக் கிடந்தன. ஜூடி ஒரு நாற்காலியின் மீதேறி வேலிக்கு மேலே எட்டிப் பார்த்தாள். அடுத்த பக்கத்திலிருக்கும் அழகிய தோட்டத்திலே அந்த வீட்டு அம்மாளின் கையோடு கை சேர்த்து, பெஞ்சமின் நின்று கொண்டிருந்தான். கப்பல் அலரிப்பூவைப்போல வெண்மை யானதும் நுணுக்கமான ஜரிகை வேலை செய்த கரையை யுடையதுமான அழகான சேலையொன்றை அந்த அம்மாள் உடுத்தியிருந்தாள். பெஞ்சமின் உயரத்திற்கு அவள் குனிந்து நிற்கவே அவளுடைய வைரத்தோடுகள் சூரிய ஒளியிலே ஜொலித்தன. மாமரங்களில் ஒன்றை அவள் சுட்டிக் காட்டினாள் ; பெஞ்சமின் வேகமாகத் தலையை அசைத்தான். குட்டையான ஒரு நீலநிறக் கால் சட்டையை அவன் அணிந்திருந்தான். வழக்கம்போல அவன் மிதியடி அணியவில்லை. மிதியடி யென்றால் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவனுடைய பாதங்களின் அடிப்பாகம் நன்றாகத் தடித்துவிட்டது, அதனால் அவனுக்குப் பொடிச் சுடாது.

அந்த அம்மாள் நிமிர்ந்து நின்று ஒரு மாம்பழத்தைப் பறித்தாள். வெண்கலம் கலந்த தங்க நிறத்திலே அத்தனை அழகான பழம். சேலையின் முன்தானையை அவிழ்த்து அதிலிருந்த ஒரு வெள்ளிப் பேனாக்கத்தியை அவள் எடுத்து மாம்பழத்தை அறுத்துக் கொடுத்தாள். பெஞ்சமின் அதிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு தின்றான்; தங்க நிறமான சாறு பெருகி அவன் வயிற்றிலெல்லாம் வழிந்தது. ஆயாவுக்குக் கவலையாகிவிட்டது. அதனால் அவனை அழைத்து வர ஜூடி எண்ணினாள். அவள் நுழைவதற்கு வேண்டிய அளவு வேலியிலே சந்திருந்தது. கைகளும் முதுகின் பெரும்பகுதியும் தெரியும் படியாகத் தைக்கப்பட்டிருந்த ஒருவகை அங்கியை அவள் அணிந்திருந்தாள். மாநிற மேனியில் படிந்த அவள் கூந்தல் வெளுத்துத் தோன்றிற்று.

வேலியின் கோடியிலே உள்ள வாழை மரங்களின் வழியாக ஜூடி மெதுவாக வந்தாள். ஜூடியின் வீட்டுப் பக்கத்திலிருந்து பார்த்தால் தெரியாதவாறு, அந்த முலையிலே சிவப்பும் கருஞ்சிவப்புமான புள்ளிகளுடைய இலை களடர்ந்த அழகான செடி இருந்தது. அந்த அம்மாள் அவளைப் பார்த்த போது ஜூடி மரியாதையாகத் தன் கைகளை நெஞ்சுக்கு நேராகக் கூப்பி, வணக்கம் செய்தாள். அந்த அம்மாளும் அவ்வாறே செய்தாள். அவள் விரல்களிலே மோதிரங்கள் அணிந்திருந்தாள். ஒன்றிலே தட் டையான அழகிய வைரக் கல்லிருந்தது. அந்த அம்மாள், "நீ வந்து என்னைப் பார்க்க வேணுமென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று தெளிவான மெல்லிய குரலிலே கூறினாள்.

"அப்படியா? எனக்குத்தெரியாது. நான் நினைத்தது..." ஜூடி என்ன நினைத்தாள் என்பது அவளுக்கு அப்பொழுது நிச்சயமாகத் தெரியவில்லை.

"உங்கள் வீட்டு மொட்டை மாடியிலே உன்னைப் பார்த்திருக்கிறேன். இங்கே குளிர்ச்சியாக இல்லையா?"

ஜூடி தன் கால்விரல்களைப் புல் தரையின் மேல் வைத்தாள். தண்ணீர் பாய்ந்து அது இன்னும் ஈரமாக இருந்தது. "இங்கு நன்றாயிருக்கிறது" என்றாள் ஜூடி.

எத்தனையோ பொருள்கள் ஜூடியின் வீட்டிலிருந்து தெரியாமல் மறைந்திருந்தன. குட்டைத் தென்னை மரங்கள் மறைத்துக்கொண்டிருந்தது அதற்கு ஒரு காரணம். அம் மரங்களின் அடிப்பகுதி சில அடி உயரத்திற்கு மேலில்லை. தங்க நிறமும் மாநிறமும் கலந்த காய்கள், குறித்த பருவ மென்றில்லாது ஆண்டு முழுவதும் முதிர்ச்சியடைந்து கொண்டிருந்தன. ஓரிடத்தில் சிறிய கூரைவீடு ஒன்று இருந்தது. அதன் மேலே முலாம்பழக் கொடி படர்ந் திருந்தது. தூய்மையான வேட்டி கட்டிக்கொண்டிருந்த ஒருவன், முன் பக்கத்தில் பால் கறந்து கொண்டிருந்தான். கீழே குந்தியமர்ந்து கால்களுக்கிடையே பளபளப்பான ஒரு உலோகப் பாத்திரத்தை வைத்து இடுக்கிக்கொண்டு அதிலே அவன் பாலைக் கறந்தான். பசுவுக்குப் பக்கத்திலே அதன் கன்று காத்திருந்தது. கடைசியில் அதற்குப் பால் ஊட்டக் கிடைக்கும். தாயும் கன்றும் வெள்ளை நிறத்திலே அழகாக இருந்தன. சென்னை நகரத்து வீதிகளிலே திரியும் பசுக்களைப் போல இவை அவ்வளவு மெலிந்திருக்கவில்லை. கோடைக்காலத்தின் மத்தியிலே பசுக்களுக்குப் பச்சைப் புல் கிடைக்காது. அவை பெரும்பாலும் வைக்கோலைத் தின்றே வாழ்ந்தன. ஆனால் அந்த அம்மாளின் பசுக்களுக்கு நல்ல உலர்ந்த புல்லும், தோட்டத்திலிருந்த காய்கறிச் செடிகளின் தழைகளும் கிடைத்தன. கன்றுக்கு நிறையப் பாலிருக்கும்படி விட்டுவிட்டுப் பால் கறப்பவன் தன் வேலையை முடித்தான். அந்த அம்மாள் பசுவினிடம் சென்று அதைத் தடவிக்கொடுத்தாள். பசு தன் கன்றை நக்குவதை நிறுத்திவிட்டு மலர்ந்த அமைதியான கண்களோடு அவளை நோக்கிற்று.

பெஞ்சமின் மாம்பழத்தைத் தின்று முடித்துவிட்டான். அவன் முகமெல்லாம் வடவடவென்றிருந்தது. உடம்பெல்லாங்கூட அப்படித்தான். ஒரு மூலையிலே தண்ணீர்க் குழாயிருந்தது. அதை உபயோகப்படுத்தலாமா?" என்று ஜூடி தயக்கத்தோடு கேட்டாள்.

"தாராளமாக உபயோகிக்கலாம். ஒரு நல்ல நாளிலே உன் தம்பி எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். வெள்ளிக் கிழமை நல்ல நாள் - அது உனக்குத் தெரியுமா?" என்றாள்
அந்த அம்மாள். ஜூடி தலையை அசைத்தாள். அவளுடைய பள்ளித் தோழிகளெல்லாம் அவ்வாறு தான் கருதினார்கள். ஜூடி பெஞ்சமினை ஒருவாறு கழுவித் தனது அங்கியின் ஓரத்தைக் கொண்டு துடைத்தாள்.

"கொஞ்சம் காப்பி சாப்பிடலாம்" என்று கூறினாள் அந்த அம்மாள்.

ஜூடி தயங்கினாள்; குனிந்து தன் உடையைக் கவனித்தாள். இன்னும் கொஞ்சம் நல்ல உடையை அணிந்திருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனால் அந்த அம்மாள் அதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் அவர்களைத் தாழ்வாரத்திற்கு அழைத்துச் சென்றாள். பெரும்பாலான தென்னிந்திய இந்துப் பெண்மணிகள் தம் வீட்டிற்கு வெளிப்புறத்தில் அரிசிமாவைக் கொண்டு போடுவது போன்ற சிக்கலான அமைப்புள்ள கோலம் இருந்தது. அதை மிதித்துக்கொண்டு அவர்கள் சென்றனர். அந்த அம்மாள் செருப்பைக் கழற்றி விடுவதை ஜூடி கவனித்தாள். பின்புறம் தோல் பட்டையிட்டுக் கட்டாத இந்தியச் செருப்புக்களைக் கழற்றி விடுவது மிகவும் எளிது. அவற்றில் கட்டை விரலுக்கு மட்டும் பட்டை யிருக்கும். அவளுடைய செருப்பின் தோல் பட்டைகள் பின்னல் வேலைகளுடன் அழகாக அணி செய்யப் பட்டிருந்தன.

தாழ்வாரத்திலே வசதியான பிரம்பு நாற்காலிகளும் சிறிய மேஜைகளும் நிறைய இருந்தன. அந்த அம்மாகர் அவர்களை உள் அறைக்கு அழைத்துச் சென்றாள். அது வெளிச்சம் குறைவாகவும் குளிர்ச்சியாகவுமிருந்தது. ஒரு நிமிஷத்திலே தட்டில் காப்பியை எடுத்துக்கொண்டு ஒரு வேலைக்காரன் அங்கு வந்தான். அந்தக் கோப்பைகளைக் கொண்டு தாங்கள் குடிப்பதில் அந்த அம்மாளுக்கு ஆட்சேபமில்லை என்று ஜூடி ஆறுதலோடு நினைத்தாள். அந்த அம்மாள் தலையில் வைத்திருந்த வெள்ளை மஞ்சள் நிறமான மலர்களின் நறுமணமும், காப்பியின் மணமும் கலந்து இனிமையாக வீசிற்று. தாழ்வாரத்தின் தளம் நன்கு பெருக்கி மெழுகப்பட்டிருந்தது. தொட்டிகளிலிருந்த செடிகளிலே ஓர் இலைகூட ஒழுங்கறிருக்கவில்லை. ஜூடி சுற்றிலும் பார்ப்பதை அந்த அம்மாள் கவனித்தாள். வெள்ளிக் கிழமை ரொம்ப நல்லகாள். எல்லாம் ஒரே சுத்தமாக இருக்கிறது. ”வெள்ளிக்கிழமையன்று நான் வெகு நேரத்திலேயே தூங்கி யெழுந்து விடுவேன். எல்லாம் சுத்தமாக இருப்பதை நினைத்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றாள் அவள்.

"அன்று நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று ஜூடி மெதுவாகக் கேட்டாள்.

"எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன். அது ரொம்ப ரொம்ப நல்லது. அதற்குப் பிறகு ஒரு புதிய உணர்ச்சி கை விரல்கள், தலை முடி எல்லா இடத்திலும் ஏற்படுகிறது. குளித்த பிறகு, பூஜை அறையில் எல்லாம் பளபளவென்றிருக்கும்படி சுத்தம் செய்வேன். ஒரு நாளைக்கு உன்னை என் பூஜை அறைக்கு அழைத்துக் கொண்டுபோய் கடவுளின் வடிவங்களை யெல்லாம் காட்டுகிறேன். அவைகளுக் கெல்லாம் நான் மலரிடுவேன்" என்றாள் அந்த அம்மாள்.

'நீங்கள் பூப்பறிப்பதை நான் பார்த்திருக்கிறேன். நல்ல பூவாகப் பார்த்து பறிக்கிறதைக் கண்டு நான் ஆச் சரியப்பட்டிருக்கிறேன்" என்று ஜூடி மொழிந்தாள்.

"ஆமாம் - பார்த்துத்தான் பறிப்பேன். ஒவ்வொரு பூவிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. குழந்தைகளே, இன்னும் ஒரு கோப்பை காப்பி குடிக்கிறீர்களா? உன்பெயர்...?"

"ஜூடி, இவன் பெஞ்சமின்; பென் என்று அவனைக் கூப்பிடுவோம்."

பெஞ்சமின் என்ற பெயரைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். அது அவளுக்கு வேடிக்கையான பெயராகத் தோன்றியிருக்கலாம். "பெஞ்சமின் என்ற பெயரை நான் கேட்டிருக்கிறேன். பெஞ்சமின் என்று ஒரு பெரிய இந்திய டாக்டர் இருக்கிறார்" என்றாள் அவள். நிறைய சர்க்கரை போட்டுக் காப்பியை ஊற்றினாள். வேலைக்காரன் மொறுக்கு மொறுக்கென்றுள்ள ஒரு வகைப் பலகாரம் கொண்டு வந்தான். ஜூடிக்கு அதன் சுவை என்னவென்றே தெரியவில்லை. பெஞ்சமின் நன்றாகச் சாப்பிடத் தொடங்கிவிட்டான்.

"வெள்ளிக்கிழமை யன்று ஒன்றுவிடாமல் எல்லாம் சுத்தமாக இருக்கவேண்டும். விளக்கிப் பளபளவென்று பூவைப்போலவே இருக்கவேண்டும்" என்று அந்த அம்மாள் மீண்டும் கூறினாள்.

திடீரென்று ஒரு சிறுமி வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்து ஜூடிக்கு முன்னால் சடக்கென்று நின்ருள். ஜூடியைவிட அவள் கொஞ்சம் பெரியவள். இளஞ் சிவப்பான புள்ளிகளை யுடைய ஒரு சேலையை அவள் உடுத்திக் கொண்டிருந்தாள். அவள் தலையிலே வாடாத புதிய மலர்கள் இருந்தன. "ஹலோ” என்று அவள் கூவினாள்.

“யார் நீயா!" என்று ஜூடி ஆச்சரியத்தோடு மொழித்தாள்.

இரண்டு பேரையும் அந்த அம்மாள் நோக்கினாள். ”லட்சுமிக்கும் உனக்கும் பழக்கமுண்டா ?" என்று அவள் கேட்டாள்.

"ஆமாம், தண்ணீரிலே மூழ்கிச் செல்வதில் அவள் ரொம்ப கெட்டிக்காரி. உயரத்திலிருந்து அப்படியே குதிப்பாள். ஆனால் அவள் இங்கிருக்கிறாளென்று எனக்குத் தெரியாது" என்றாள் ஜூடி.

அந்த அம்மாள் சிரித்தாள். "அம்மணிப் பாட்டியோடிருக்க நான் சில சமயம் இங்கே வருவேன். அம்மணிப் பாட்டி யென்றால் எங்கள் பாட்டி அம்மணி" என்று விளக்கினாள் லட்சுமி. அவள் கொஞ்ச நேரம் அந்த அம்மாளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றாள். "வேலிக்கு அந்தப் புறத்திலே யாரோ ஒரு சிறு பெண் இருக்கிறாளென்று எனக்குத் தெரியும். ஆனால் அது நீயென்று தெரியவே தெரியாது."

“வேலியிலே புகுந்து பெஞ்சமின் இந்தப் பக்கம் வந்து விட்டான்" என்று ஜூடி சொல்லத் தொடங்கினாள். பழக்கமில்லாத ஓரிடத்திலே இருப்பதை பெஞ்சமின் அப்பொழுது உணர்ந்தான். ஆயாவைப் பற்றிக் கேட்டான்.

அவனை உடனே திருப்பி அழைத்துக்கொண்டு போகாவிட்டால் கூச்சலிட்டு அழத் தொடங்கி விடுவான் என்று ஜூடிக்குத் தெரியும். போய் வருகிறேன் என்று சொல்லி அவள் எழுந்தாள். அவள் புறப்படும்போது தாழ்வாரத்திற்கு ஒருவர் வந்தார். அந்த அம்மாளுக்குக் கணவராகவும் லட்சுமிக்குப் பாட்டனாராகவும் இருக்கவேண்டும் என்று ஜூடி நினைத்தாள். அட்டை கிழிந்து போன இரண்டு பழைய புத்தகங்களை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அவர் தலையிலே முன்புறம் க்ஷவரம் செய்யப் பட்டிருந்தது. பின்னால் நீளமான மயிர்முடி. லட்சுமியைப் பார்த்துச் சிரித்துவிட்டு அவர் அன்போடு ஜூடியைப் பார்த்தார். அந்தப் புத்தகங்களிலிருந்து அவள் குதித்தது போல அவருக்குத் தோன்றினாள் போலும். ஜூடி வணக்கம் செய்தாள். ஆனால் அவள் அங்கியைப் பிடித்து பெஞ்சமின் இழுத்ததால் உடனே புறப்படுவது நல்லதென்று அவள் தீர்மானித்தாள்.

வேலி வரையிலும் அவர்கள் கூட லட்சுமி வந்தாள். லட்சுமியிடத்திலே ஜூடிக்கு உண்மையிலேயே ஒருவிதமான பயம். லட்சுமி மிக நன்றாகத் தண்ணீரில் முழுகி நீந்துவாள்; ஜூடியைவிட வயதான பல சிறுமிகளுக்கு மத்தியிலே அவள் எப்பொழுதும் இருப்பாள். அவர்களுக்கு ஒருவரை யொருவர் நன்றாகத் தெரியும். விளையாட்டிலே எல்லோரும் கெட்டிக்காரிகள். அவர்கள் யாரும் ஜூடியின் பள்ளிக்கு வருவதில்லை. "ஜூடி, வேலியிலிருக்கும் இந்த சந்தை அடைக்காதீர்கள்" என்றாள் லட்சுமி.
----------

3. ஆலமரத்தடியில்

லட்சுமி தன் பாட்டியுடன் சில நாட்கள் தான் தங்கினாள் ; என்றாலும் அது நல்ல வாய்ப்பளித்தது. பள்ளியைப் பற்றியோ மற்ற காரியங்களைப் பற்றியோ முன்பிருந்த கவலை திடீரென்று குறைந்து விட்டதாக ஜூடி உணர்ந்தாள்; காரியங்கள் செய்ய இப்பொழுது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது; ஜான் இல்லையே என்ற உணர்ச்சியும் அவ்வளவு அதிகமில்லை, இந்தியாவிலிருப்பதைப் பற்றி முன்பிருந்ததைவிட அதிகமான மகிழ்ச்சியும் கொண்டாள். லக்ஷ்மி சினிமா நட்சத்திரங்களை வெறுத்தாள் ; சும்மா பார்த்துக் கொண்டிருப்பதில் அவளுக்கு விருப்பமில்லை; ஏதாவது செய்யவே அவள் விரும்பினாள். நீரில் முழுகித் தவிப்பவர்களின் உயிரை அவளால் காப்பாற்ற முடியும். நீந்துவதில் அவளுக்கு மிகுந்த திறமை உண்டு. எலியட் கடற்கரையில் மோதுகின்ற அலைகளினிடையே அவள் பாய்ந்து வருவாள். இந்தியாவின் வரலாற்றிலே பள்ளிப் புத்தகங்களில் இல்லாத பல உணர்ச்சியூட்டும் விஷயங்கள் அவளுக்குத் தெரியும். மேலும், ஆஹா, அவள் ரொம்ப அழகு ! ஜூடி வழக்கமாக எல்லோரிடத்திலும் அளவு கடந்த பற்றுதல் கொள்ள மாட்டாள் ; ஆனால் லட்சுமி மற்றவர்களைப் போலல்ல, அவள் வேறானவள். வளையல்களை அவள் கையில் அணிந்து கொள்வதையோ அல்லது அவள் நாட்டியத்திலே ஒரு அடி எடுத்து வைப்பதையோ பார்த்தால், காட்டிலே மான்குட்டியைப் பார்ப்பது போலிருக்கும். சில வேளைகளில் அவள் ஜூடியின் தலையிலே மலர்களைச் சூடுவாள். இளஞ்சிவப்பான நல்ல அழகிய ரோஜாப் பூக்களையே பெரும்பாலும் அவள் வைத்தாள். உதிர்ந்து விடும் வரையில் ஜூடி அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பாள்.

வேலிக்குப் பின்புறத்திலே உள்ள குடும்பம் இப்படி அன்போடு இருப்பதைக் கண்டு ஜூடியின் தாய் சற்று ஆச்சரியமடைந்தாள். பெஞ்சமினும் ஜூடியும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதிருக்கும் வரையில் வேலியிலுள்ள சந்து அப்படியே இருக்கலாம் என்று அவள் சம்மதித்தாள். "என்ன இந்தாலும் நாம் வெள்ளை நிறத்தவர்கள். பெரும்பான்மையான இந்தியர்கள் நம்மிடத்திலே மிகவும் பிரியமாகவே இருக்கிறார்கள். நடந்துபோன சில சம்பவங்களை எண்ணிப் பார்த்தால் ஒரு வேளை நம் தகுதிக்கு மேலாகவே......" என்று ஜூடியின் தாய் கூறினாள்.

"நல்ல விஷயங்கள் பலவற்றை நாம் கொண்டு வந்திருக்கிறோம். விஞ்ஞானம், மருத்துவம், திருத்தமாகச் செய்தல், காலந்தவறாமை, நவீன வழியிலே விஷயங்களை நோக்கல்..." என்று அவள் தந்தை மொழிந்தார்.

ஜூடிக்கு இது மனப்பாடம். இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷாரைப் பற்றிச் சாதகமாகவும் பாதகமாகவும் அவளுடைய தாய் தந்தையர் எவ்வாறு பேசத் தொடங்குவார்களென்பதும் அவளுக்குத் தெரியும். பள்ளிக்கூடத்திலும் சில வேளைகளில் இந்த விஷயம் பேச்சுக்கு வரும். ஒன்றிரண்டு முறை ஜூடிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது ; மேல் நாடுகளிலிருந்து, முக்கியமாக இங்கிலாந்தி லிருந்தும், ஸ்காட்லாந்திலிருந்தும் வந்த நல்லன எல்லா வற்றையும் இந்தியச் சிறுமிகள் மறந்துவிட்டதை அவளால் தாங்க முடியவில்லை. எல்லாம் இந்தியாவிலேயே புத்தமைப்புச் செய்ததாக பாவிப்பதையும், மேல் போக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் பாட்டுக்களோடு நாட்டியங்களும் நிறைந்து, சம்பவங்களே இல்லாமல் மணிக்கணக்காக ஓடும் அவர்களுடைய மோசமான சினிமாப் படங்கள் அமெரிக்கப் படங்களைவிட நல்லவை என்று சொல்வதையும், அவளால் சகிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பழைய சம்பவங்களெல்லாம் சரித்திரத்தைச் சேர்ந்தவை. அந்த சரித்திரமும் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசுவதால் அது மாறப்போவதில்லை. அதைப்பற்றி நினைக்காமல் இருந்தால் நல்லது என்று ஜூடி தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

ஐரோப்பியர்கள் இந்தியர்களாக மாட்டார்கள். அதேபோல இந்தியர்கள் எங்களைப் போன்றவர்களாக மாட்டார்கள். இதைத் தவிர வேறு விதமாகப் பாசாங்கு செய்வதில் யாதொரு பயனுமில்லை. ஒரு இனத்தவர் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று நினைப்பதெல்லாம் முட்டாள்தனம். அதனால் இதைப் பற்றி ஏன் நாம் எப்பொழுதும் தொல்லைப்பட்டுக் கொள்ள வேண்டும்? லட்சுமியின் தந்தையான குமார், ஒரு எஞ்சினியர் என்று தந்தை சொன்னது ஜூடியின் காதில் விழுந்தது. "அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஒரு பிராமணன் அவ்வாறு செல்லுவது சுலபமல்ல. தற்செயலாக அவன் உண்ணத் தகாததை உண்டுவிடலாம். அதனால் அவனுடைய தூய்மை கெட்டுவிடலாம்" என்றார் அவள் தந்தை.

"அவர் எந்த வகையான எஞ்சினியர்?" என்று கேட்டாள் ஜூடி.

“பெரிய அணைக்கட்டுத் திட்டம் ஒன்றில் அவர் உதவியாளராக இருந்தார். அவரைப் பற்றிப் புகழ்ச்சியாகப் பேசுவார்கள். ஆர்வம் நிறைந்தவர். நேர்மையும் உடையவர்" என்று தந்தை சொன்னார்.

தந்தை சொல்வதின் பொருள் அவளுக்கு விளங்கிற்று. லட்சுமியின் தந்தை லஞ்சம் வாங்கவில்லை. அவர் சிரமப்பட்டு உழைத்தார். அவர் எப்பொழுதும் நியாயமில்லாமல் லீவ் எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாவற்றிற்கும் மேலே அவர் திருத்தமாக வேலை செய்தார். திருத்தமாகச் செய்தல் - இந்தச் சொற்றொடர் அவள் தந்தைக்கு மிகவும் பிடித்த மானவைகளில் ஒன்று. அளுடைய அண்ணன் ஜான்கூட இதைக் கற்றுக் கொண்டான். அவன் எழுதிய கடைசிக் கடிதத்தில் கிரிகெட்டைப் பற்றியே எழுதியிருந்தான். பந்தைச் சரியாகப் பார்த்து எப்படி அடிக்க வேண்டும் என்பதை விளக்கியிருந்தான். கிரிக்கெட் மட்டையை ஒவ்வொரு வகையாகப் பிடித்து அடிக்கும் பொழுது பந்து எவ்வாறு போகிறது என்பதைக் காட்ட அவன் சில படங்களும் வரைந்திருந்தான். எல்லாம் வடிவு கணிதத்தைப் போல ஒரே தலைவலியாக இருந்தது. மேலும் கிரிக்கெட்டை நினைத்தாலே ஒரே சூடாகத் தோன்றிற்று.

சென்னையிலே சிலசமயங்களில் மாலை நேரங்களிலே கிரிக்கெட் பந்தயம் நடந்தது. வெய்யிலிலே உருகிக் கொண்டு வெறிபிடித்தவர்களைப் போல ஓடுவார்கள். பார்க்கவே சகிக்காது. கோடை காலத்திலே நிழலுள்ள ஓர் இடத்திற்குச் சென்று அங்கே அமர்ந்தால் அதுவே போதும் - மாம்பழம் கிடைத்தால் நல்லது. அடையாற்றில் இருக்கும் பெரிய ஆலமரம் ஜூடிக்குப் பிடித்தமான இடங்களிலொன்று. அது மிகப் பழமையான மரம். பரந்து செல்லும் அதன் கிளைகளிலிருந்து சுற்றிலும் தரையிலே விழுதுகள் இறங்கிச் சில ஆண்டுகளுக்குள் சிறுசிறு அடி மரங்களாவதற்கு அங்கு வசதி செய்திருந்தார்கள். வீதியில் உள்ள ஆலமரங்களும் இவ்வாறே விழுதுகளை விட்டன. ஆனால் அந்த விழுதுகள் தரையில் இறங்குவதற்குமுன் மாடுகளும் ஆடுகளும் அவற்றைத் தின்று விட்டன. ஆனால் அடையாற்றில் உள்ள பெரிய ஆலமரம் ஆண்டாண்டாகப் பரவி வளர்ந்து ஓர் ஆலமரத் தோப்பாகவே ஆகிவிட்டது. அவற்றையெல்லாம் தூண்களாகவும் வளைவுகளாகவும் ஒன்றோடொன்று சேர்த்திருந்தார்கள். சில அடிமரங்களைத் தொற்றிக்கொண்டு கொடிகள் படர்ந்திருந்தன. எப் பொழுதும் நூற்றுக்கணக்கான பறவைகள் அங்கே தங்கி யிருந்தன. அழகான சிறிய அணில்கள் தலைகீழாகவும் வேறு நிலைகளிலும் சுலபமாகத் தழைகளுக்கிடையே துள்ளி ஓடின. வீட்டில் செய்யவேண்டிய பள்ளி வேலைகளை எடுத்துக்கொண்டு ஜூடி அங்கே போனால் அவளால் வேலை செய்யவே முடியாது.

தொந்தரவு என்னவென்றால் எத்தனையோ பேர் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்க விரும்பினார்கள். இத்தனை அதிகமான மக்கள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் இல்லாமலிருந்தால் நல்லது என்று அவள் சிந்தனை செய்வாள். வாடிய முகங்களையும், கைகளையும், மெலிந்த கால் ளையும் பார்த்துச் சலித்துப் போய்விட்டது. அந்தோ! அந்தப் பிச்சைக்காரர்கள்; மௌண்ட் ரோடிலுள்ள கடைகளில் எதற்குப் போனாலும் அதற்கு முன்னால் டஜன் கணக்கில் பிச்சைக்காரர்கள் காத்திருப்பார்கள். "தாயில்லை தகப்பனுமில்லை" என்று கூவி அழுவார்கள். அவர்கள் நிலைமையைப்பற்றி யாரும் தெரிந்துகொள்ள முடியாது. அவர்கள் சொல்லுவது உண்மையாகவே இருக்கலாம். அப்படியானால் அது எவ்வளவு பயங்கரமானது, அவர்களுக்கு ஒன்றும் கொடுக்கக் கூடாது என்று அவள் தாயார் சொல்லியிருக்கிறாள். "அப்படிக் கொடுப்பது தான் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது."

இவ்வாறு சொன்னாலும் அவள் சில வேளைகளில் கொடுக்கத்தான் செய்தாள். முக்கியமாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டுவரும் பெண்ணைக் கண்டாலும், அல்லது பெஞ்சமினை அழைத்துக்கொண்டு சென்றிருந்தாலும் அவள் கொடுத்தாள். "பெஞ்சமினுக்கு நான் பல பொருள்கள் வாங்கும் பொழுது அவர்கள் சாப்பிடுவதற்கு ஒன்றுமே யில்லாமலிருப்பது பயங்கரமானது" என்று அவள் ஜூடியிடம் சொல்வாள். ஒன்றுமேயில்லை என்பதை ஜூடியால் முற்றிலும் நம்ப முடியவில்லை. உண்பதற்கு அவர்கள் வீட்டில் ஏதாவது இருக்கத்தான் இருக்கும். ஒருநாள் துணி துவைக்கும் ஆயாவான வாசுகியின் வீட்டிற்குச் சென்றுவர ஜூடிக்கு அனுமதி கிடைத்தது. மண்ணாலும் தென்னங் கீற்றாலும் ஆன வீடுகள் உடைய சேரி அது. சென்னையில் எங்கெல்லாம் காலியிடம் இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படிச் சேரியிருக்கும். வாசுகியின் வீடு சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. தரையிலும் சுவர்களிலும் ஒரு கறையில்லை. ஆனால் தட்டுமுட்டு சாமான்களே யில்லை என்று சொல்லலாம். அவளுடைய தாயும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்தார்கள். குழந்தைகள் வெட்கப் பட்டுக்கொண்டு ஜூடியோடு பேசவில்லை. அவர்களுக்குள்ள நல்ல உடைகளை அவர்கள் அனிந்திருந்தார்கள். ஜூடி பெரியவளாகிவிட்டதால் அவளுக்குப் பற்றாது போன உடை ஒன்றை வாசுகியின் சின்னப்பெண் அணிந்திருங்தாள். சேரியிலே மக்கள் சமையல் செய்து கொண்டும், பாத்திரங்களைத் துலக்கிக்கொண்டும், குளித்துக்கொண்டும், துணிகளைத் துவைத்துக்கொண்டும் இருந்தார்கள். அங்கேயும் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். அங்குமிங்கும் சோற்றையோ பருப்புக் குழம்பையோ கைநிறைய வாங்கி அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சொந்தமான வீடில்லை என்பது மெய்தான் போலும்!

இருந்தாலும் ஜூடிக்குப் பிச்சைக்காரர்களைக் கண்டால் பிடிக்கவில்லை. ஆலமரத்தைப்பற்றி ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அங்கே பிச்சைக்காரர்கள் இல்லை. ஒரு நாள் அவள் அங்கே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்; மரத்தின் உச்சியிலே இலைகளுக் கிடையிலே ஓடியாடிக்-கொண்டிருந்த அழகான வண்ணப் பறவையைப் பார்க்க முயல்வதிலே தான் உண்மையில் அவள் நாட்டமிருந்தது. அதை மட்டும் நன்றாகப் பார்க்க முடிந்தால்! அந்தச் சமயத்தில் லட்சுமி தனது நாட்டிய உடைகளை அணிந்து கொண்டு அங்கே ஓடிவந்தாள். பச்சை நிறத்திலே பைஜாமர கணுக்காலுக்குப் பக்கத்திலே அது இறுக்கமாக இருக்கும். மேலே ஒரு இளஞ்சிவப்பான தாவணி. அவள் ஜூடியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ’நாட்டியத்தை வந்து பார்', என்று சொல்லி கலா க்ஷேத்திரத்தைச் சேர்ந்த பகுதிக்குள் இழுத்துக்கொண்டு சென்றாள். அங்கே லட்சுமியின் நாட்டிய வகுப்பு நடை பெற்றது. லட்சுமி பள்ளிக்குச் செல்வதைத் தவிர வேறு காரியங்களும் செய்வதை ஜூடி எப்பொழுதும் கண்டாள். அது அவளுக்குக் குழப்பத்தை உண்டாக்கிற்று. லட்சுமிக்குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தாலும் அவளுக்குப் பள்ளிப் படிப்பு பெரிதாக இருக்கவில்லை என்று சில சமயங்களில் தோன்றிற்று.

தென்னங்கீற்றாலான நாட்டியப் பயிற்சிக்கூடம் சுத்தமாகவும் அழகாகவுமிருந்தது. ஏற்றிவைத்த விளக்கோடும், மலர்களோடும் அது விளங்கிற்று. அதன் ஒரு மூலையில் லட்சுமி ஜூடியை உட்கார்ந்து பார்க்கச் செய்தாள். அங்கே பத்துப் பன்னிரண்டு சிறுமிகள் இருந் தனர். ஜூடிக்கு அவர்களில் இருவரைத் தெரியும். எல்லோரும் லட்சுமியைப் போலவே பைஜாமாவும் தாவணியும் அணிந்திருந்தார்கள். எல்லோருடைய தலையிலும் ஜடை ஆரம்பிக்கும் பகுதியிலே இனிய வாசனையுடைய மலர்கள் குவியலாகத் தோன்றின. கூரையிலிருந்து தொங்கும் நாடாக்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொருத்தி பிடித்துக் கொண்டு நாட்டியமாடினாள். வீணையும், மிருதங்கமும் இசை கூட்டின. புத்தகத்தைப் போலச் சிறிய வடிவமுள்ள சுருதிப் பெட்டி காற்றை உள்ளே புகுமாறு செய்யத் திறந்தும் மூடியும் வேடிக்கையாகத் தோன்றிற்று. "இது ஒரு கிராமிய நடனம்" என்று லட்சுமி கூறினாள். வர்ணந் தீட்டி மலரலால் அணி செய்யப்பெற்ற கம்பத்தைச் சுற்றி இங்கிலாந்திலே கிராம மைதானத்தில் ஆடும் ஒருவகை நடனத்தைக் குறிப்பிடும் பழைய படங்களையும், கதைப் புத்தகங்களையும் ஜூடிக்கு இது நினைவுக்குக் கொண்டு வந்தது.
"இப்பொழுது நான் பரத நாட்டியம் பயிலப் போகிறேன்" என்று லட்சுமி தன் தாவணியை இறுக்கிக் கட்டிக் கொண்டு கூறினாள். "பரத நாட்டியம் என்றால் இந்தியாவின் நடனம் என்று பொருள். கடவுளுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட பெண்களால் இது கோவில்களில் மட்டும் முன்பு ஆடப்பட்டது. இன்று இது எல்லோருக்கும் சொந்தம். இருந்தாலும் இது இப்பொழுதும் ஒருவகையான பிரார்த்தனை தான். இது ஆனந்தமோ, புகழ்ச்சியோ. எனக்கே நிச்சயமாகத் தெரியாது. நீயே பார்."

ஒரு சிறிய அறைக்குள்ளே அவர்கள் சென்றனர். மிதியடிகள் என்றுமே அங்கு மாசுபடுத்தாததால் தரை பிரகாசமாகவும் மிருதுவாகவுமிருந்தது. அங்கு வாத்தியங்கள் இல்லை; லட்சுமியின் ஆசிரியர் பாடிக் கொண்டே ஓரு கட்டையால் தாள ஜதிகளைத் திறமையோடு தட்டினார். முதல் நாட்டியம் உடம்பிலே மூட்டுக்களுக்கும் தசை நார்களுக்கும் நெகிழ்ச்சி யுண்டாக்குவதற்காக ஏற்பட்டது. தன் கண்களுக்கு முன்னாலேயே லட்சுமி மாறுதலடைவது போல ஜூடிக்குப்பட்டது. தன்னை யிழந்து அவள் நாட்டியத்தின் உருவாகவே ஆவதுபோலத் தோன்றிற்று. நிற்கும் நிலைகளும் அபிநயங்களிலும் பயிற்சி பெறுகின்ற இரண்டாவது நடனத்திலே இது முன்னும் அதிகமாகத் தென்பட்டது. லட்சுமியின் கண்களும், கழுத்தும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் சுழன்றன; பாம்புகளைப் போலக் கரங்கள் நெளிந்தன; முழங்கால்களும், இடுப்பும் ஒல்கி வளைந்தன. மலர்களாகவும், உயிருள்ள சீவன்களாகவும் விரல்கள் குவிந்து தோற்றமளித்தன. திகைக்கச் செய்யும் ஒவ்வொரு ஜதிக்கும் ஒரு பொருள் உண்டு - ஒரு மென்மை, அல்லது நடனத்திலே ஒரு கணத்திற்குப் புலி யொன்று வருவதுபோல உள்ளத்தைக் குலைக்கும் ஒரு உக்கிரம்.

தரையில் அமர்ந்திருந்த ஜூடி இவ்வாறெல்லாம் மாறக் கூடிய லட்சுமியை அவள் நன்கு புரிந்து கொண்டதுண்டா என்று ஆச்சரியமடைந்தாள். தாள ஜதிகள் ஓய்ந்தன. லட்சுமி தன் கூந்தலைப் பின்னுக்குத் தள்ளி ஒழுங்கு செய்து கொண்டாள். உடம்பெல்லாம் வேர்த்தது. அவள் பழையபடி லட்சுமி ஆனாள். "ஒரு நாளைக்கு நான் நன்றாக நாட்டியமாடுவேன் என்று நம்புகிறேன்" என்றாள் அவள்.

“அது ரொம்ப நன்றாக இருக்கும்" என்றாள் ஜூடி, சற்று அச்சத்தோடு.

"உனக்கு நாங்கள் கற்றுத் தருகிறோம்" என்றாள் லட்சுமி. நடனப் பயிற்சிகள் முடிந்ததும் அவளும் அவளுடைய தோழிகளும் ஜூடிக்குக் கற்றுக்கொடுக்க முயன்றார்கள். ஆனால் ஜூடியால் அது முடியவில்லை. தாள ஜதிகள் என்ன செய்யச் சொல்லுகின்றன என்று அவளால் சரியாகக் கேட்டு அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுடைய கால்களையும் கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவளுடைய கால் கைகள் அவ்வளவு நன்றாக வளைந்துகொடுக்கவில்லை இருந்தாலும் அவள் பல தடவை வந்து அந்த நாட்டியப் பயிற்சியைக் கவனித்தாள். கதக் நடனம் விளையாட்டுப் போன்றது. கால்களில் சதங்கை கட்டிக் கொண்டு மிக வேகமாக ஆடும் வடநாட்டு நடனம் அது. அடிக்கும் இடத்திற்குத் தக்கவாறு பலவகையான நாதங்களை எழுப்பும் தபலாவுக்கேற்ப கால்களை எடுத்துவைத்து ஆடவேண்டும். இளஞ்சிறுமிகள் கதக் நடனத்தை முதலில் கற்றுக்கொண்டனர். சிக்கலான உடற்பயிற்சி அப்பியாசங்களைப் போன்று அவர்கள் முதலில் கை அசைவுகளைக் கற்றனர்; சிறு குதிரைகளைப் போலக் கால்களைத் தரையில் தட்டினர்; கால் சதங்கைகள் ஒலித்தன. இது சுலபமாகத்-தானிருக்க வேண்டும் என்று நினைத்தாள் ஜூடி; ஆனால் எப்படியோ அவ்வாறு சுலபமாக இருக்கவில்லை!

ஒரு தடவை அவள் சிறுவர்கள் ஆடும் நடனத்தை வந்து பார்த்தாள். கதகளி நடனம் அது. தென்னிந்தியாவிற்குரிய அந்த நடனம் பாதி நடிப்பாகவே இருக்கும். நடன மாடுகின்றவர்கள் சிவப்பு, பச்சை, கறுப்பு ஆகிய வர்ணங்களை நிறையப் பூசிக்கொண்டு பலவகையான உடைகளை யணிந்து தோன்றுவார்கள். அந்தச் சிறுவர்கள் தொள தொள வென்றிருக்கும் பயிற்சிக் குரிய வெள்ளைக்கால் சட்டைகளை அணிந்திருந்தனர். சிறுமிகளைப்போலவே அவர்களும் மிதியடி அணியவில்லை. அவர்கள் ஆடும் நடனத்திற்குரிய கதையைப் பாட்டாக ஒருவன் பாடிக் கொண்டே-யிருந்தான். பாட்டுக்களைப் புரிந்துகொள்ள முடியா விட்டாலும் நடனத்தைப் புரிந்துகொள்ள முடியும். வானரங்களிற் சிறந்தவனும், தேவனுமான அனுமான் அதிலே இளைஞர்களான வன வீரர்களைக் கண்டு அவர் களோடு போர் செய்கின்றான்; பிறகு அவர்களை இன்னார் என்று தெரிந்து கொண்டு தன்னை அவர்கள் சிறைப் பிடிக்குமாறு விட்டு விடுகிறான். ஆச்சரியப்படும்படி மெதுவாகக் குதித்துப் பாய்ந்தும், நின்றும், விரல்களை அசைத்தும், கண்களால் சைகைகள் செய்தும் அச்சிறுவர்கள் வில்லை வளைப்பது போன்றும், வேலை வீசுவது போன்றும், ஒருவரை யொருவர் இடித்துரைப்பது போன்றும் நடித்தார்கள். உண்மையாகவே வில்லையும் வேலையும் பார்ப்பதுபோலவும், கால்களுக்கடியிலே தரை பிளப்பதுபோலவும் தோன்றும்படி அவர்கள் அவ்வளவு நன்றாகச் செய்தார்கள் தாவிக் குதித்து நின்று துடித்து நடுங்கி மார்பகமெல்லாம் வியர்வை வழியுமாறு அனுமானாகத் தோன்றும் இளநடிகனை மாறுவேடத்திலிருக்கும் கடவுளாகவே கருதும்படி இருந்தது. இவ்வாறு முழுவதும் மாறி முற்றிலும் வேறுபட்ட ஒருவனாகத் தோற்றமளிப்பது மிகவும் ஆச்சரியமானது என்று ஜூடி கருதினாள்.

வார இறுதி நாட்களில் சில வேளைகளில் அவர்கள் கோட்டைக்குச் செல்லுவார்கள். அங்கேதான் சென்னை சட்டசபை கூடுகின்ற குளிர்ச்சியான பெரிய கட்டடம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே யாருமிருக்க மாட்டார்கள். ஒரு மோட்டாரைக்கூடப் பார்ப்பது அரிது. பின்புறத்திலே நாற்புறமும் வீதிகளால் சூழ்ந்த பழமையான கட்டடங்கள் தான் அமைதியாகவும் இனிமையாகவும் தோன்றின. வெள்ளை வர்ணம் தீட்டம் பெற்ற கம்பீரமான சாளரங்களும் தூண்களும் தாழ்வாரங்களும் உடைய உயர்ந்த கட்டடங்களிலிருந்து நிழல் படிந்து அவை தோன்றின. அவைகளெல்லாம் இப்பொழுது இராணுவ வீரர்கள் தங்கும் விடுதிகளாகயிருந்தன. பித்தளைத் தாழ்ப்பாள் முதலியவைகளைப் பளபளப்பாகச் செய்து சென்னை இராணுவம் அவைகளைச் சுத்தமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வைத்திருந்தது. கற்களாலான பழைய பீரங்கிக் குண்டுகளுக்குக் கறுப்பு வர்ணம் தீட்டி அவற்றை வெள்ளை யடித்த வட்டமான தரைப்பகுதிகளில் அடுக்கி வைத்திருந்தனர். பனையினத்தைச் சேர்ந்த மரங்களின் அழகற்ற ஓலைகளைக் கத்தரித்தும் அழகுபடுத்தியிருந்தனர். செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே ஒரு நல்ல பொருட்காட்சி சாலை யுண்டு. அதற்கு வெளியே பழமையான இரும்பு பீரங்கி ஒன்றைக் கடலை நோக்கியிருக்கும் படியாக அணிசெய்து வைத்திருந்தனர். அந்தப் பழைய கோட்டைச் சுவர்கள் மீது ஏறிச் செல்வது ஜூடிக்குப் பிடிக்கும். ஆனால் இப்பொழுது அப்படிச் செல்ல விரும்பமாட்டாள். சுவரிலுள்ள கற்கள் கையைச் சுட்டன.

நகரத்திலுள்ள மற்றொரு பொருட்காட்சிசாலையில் கூட்டம் அதிகம். நன்கமைந்த ஊர்களுக்கு மாதிரியாக அங்கு வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருள்கள் பெஞ்ச மினுக்குப் பிடிக்கும். அவனுடைய ஆயாவுக்கு அங்குள்ள நிழல் படிந்த தோட்டமும் மற்ற ஆயாக்களின் கூட்டமும் பிடிக்கும். அவள் பெஞ்சமினுக்குக் கதைகள் சொல்லுவாள். "ஒரு பையன் வரும். ஒரு பையன் ஒரு எருமை இரண்டு எருமையைப் பார்க்கும்" என்று இப்படிக் கொச்சையாக ஆங்கிலத்தில் கதை தொடங்கும். பிறகு அது எப்பொழுதும் தமிழுக்கு மாறிவிடும். பெஞ்சமின் ஒரு மாதிரி அவற்றைப் புரிந்து கொண்டான். நல்ல ஆங்கிலத்தில் ஜூடி சொல்லுகின்ற ஹம்டி டம்டி அல்லது ஜாக் ஜில் கதைகளைப் போலவே இவற்றையும் அவன் விரும்பினான்.

கலாஷேத்திரத்து நாட்டியத்தைப் பார்த்த பிறகு ஜூடிக்கு நடனத்தின் நாயகனான சிவபெருமானைக் காண்பித்திருக்கும் பெரிய வெண்கலச் சிலைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. நடராஜனது கரங்களும் கால்களும் விரல்களும் அமைந்துள்ள நிலைகள் முன்பு வினோதமாகப் பட்டன. ஆனால் இப்பொழுது அவைதான் மிகச் சரியான நிலைகள் என்று தெளிவாகத் தோன்றிற்று. அந்தச்சிலைகள் வைக்கப் பட்டிருக்கும் பொருட்காட்சிப் பகுதியிலே ஒரு தடவை அவளும் லட்சுமியும் சந்தித்தார்கள். ஒருவரை யொருவர் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டனர். இருவருக்கும் அந்த மறைபொருள் விளங்கிற்று. லட்சுமி தனக்கே சொந்தமாக ஒரு சிறிய நடராஜ வடிவம் வைத்திருந்தாள். அவ்வடிவத்தைச் சுற்றியும் அதன் மேலும் சரியான முறைப்படி அவள் மலர்களைத் தூவுவாள்.

சென்னையின் மையப்பகுதிக்கு அருகிலே நவீனத் தோற்றத்துடன் அமைந்திருந்த அவளுடைய தந்தை வசிக்கும் மாடியிலே இது நடைபெறும். அங்கே மலர்கள் பூத்துக் குலுங்கும் பூத்தொட்டிகள் நிறைந்த விசாலமான அழகிய தாழ்வாரமிருந்ததால் தோட்டத்தை நன்றாகப் பார்க் கலாம். அறைகள் விசாலமானவை. ஊதா, ஆரஞ்சு, பொன் நிறங்களில் மலர்களைக் காட்டும் மரஉச்சிகளை அங்கிருந்து பார்க்கலாம். மின்சார விசிறிகள், குளிரூட்டும் பெட்டி முதலியவை எல்லாம் அங்கு சரிவர வேலை செய்வதாகத் தோன்றிற்று. அங்கு ஏராளமான புத்தகங்களிருந்தன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பொறியியலைப் பற்றியவையே தான். பறவையைப் பற்றிய சீன தேசத்துப் படம் ஒன்று அங்கே இருந்தது. ஒரு சில கோடுகளாலும், வர்ணப் புள்ளிகளாலும் ஆன அந்தப் படம் திருத்தமாக வரையப் பட்டிராவிடினும் அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. லட்சுமியின் தாய் நல்லவள் ; அழகானவள். அவளுக்கு ஆங்கிலம் அதிகமாக வராது. லட்சுமியின் தந்தை பெரும்பாலும் எப்பொழுதும் அவசரத்திலேயே இருப்பார். அவ்வாறு அவசரப்படாத சமயங்களில் அவர் மிகவும் தமாஷாகப் பேசுவார். லட்சுமியிடத்திலே அவருக்கு மிகமிகப் பிரியம் உண்டு.

அந்த மாடிக்கு ஜூடி அடிக்கடி போகமாட்டாள். வேலிக்குப் பின்புறமுள்ள வீட்டிற்கு லட்சுமி வரும்போது ஜூடி வேலிச்சந்தில் நுழைந்து அங்கு செல்லுவாள். அவள் அப்படி வருவதைக்கண்டு அவளை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையோடு அவள் போவாள். லட்சுமியின் பாட்டனாரைப் பற்றி அவளுக்கு என்றுமே நிச்சயமேற்படவில்லை. அவள் ஒரு உண்மையான மனிதப்பிறவி என்ற எண்ணமே அவருக்கு உண்டாகவில்லை போலும். லட்சுமியின் தங்கை சரசுவதி ஒன்றிரண்டு தடவை அங்கு வந்து தங்கினாள். அவள் சாதாரணமான ஒரு சிறு பெண். லட்சுமியின் தம்பியான கந்தன் அடிக்கடி அங்கு வருவான். அவன் போடுகிற சத்தத்திலிருந்து அவன் வந்திருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவன் எப்பொழும் சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டு கூச்சலிடுவான். லட்சுமியின் மற்றொரு தங்கையான குழந்தை பார்வதிதான் மிக அதிகமாக அங்கு வந்திருப்பாள், பெஞ்சமினைக் காட்டிலும் அவள் கொஞ்சம் இளையவள். சிறு சதங்கைகளோடு கூடிய பாதசரங்களை அவள் அணிந்திருந்தாள். அவற்றோடு அவள் மணிக்கணக்காக. விளையாடிக்கொண்டிருப்பாள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு முதலில் பெஞ்சமினும் பிறகு ஜூடியும் அந்த வீட்டு அம்மாளை அவளுடைய பேரப் பிள்ளைகளைப் போலவே அம் மணிப்பாட்டி என்று அழைக்கத் தொடங்கினர். அது அந்த அம்மாளுக்குப் பிடித்தமாக இருந்தது.

விரைவிலே அவள் ஜூடியோடு தாராளமாகப் பேசத் தொடங்கினாள். ஒரு நாள் தாழ்வாரத்தில் அமர்ந்துகொண்டு அவள் தனது வாழ்க்கையைப் பற்றியே தெரிவித்தாள். "என் தந்தையும் தாயும் ரொம்ப வைதிகமானவர்கள். நானும் அப்படியே வைதிக பிராமணப் பெண்ணாக இருக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பம். ஆனால் எனக்குப் படிப்பு வேண்டுமென்று ஆசை. நான் அழுதேன்; கூச்சல் போட்டேன். நான் ரொம்பப் பொல்லாத பெண்ணாக இருந்தேன்." இப்படிக் கூறிவிட்டு அவள் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். "நான் விரும்பியபடியே கல்வி கற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே ஆங்கில ஆசிரியை ஒருத்தி இருந்தாள் - அப்பா, அவள் எனக்கு எப்படியெல் லாம் உதவி செய்தாள் ! எனது தேசத்திற்காகப் பெரிய பெரிய காரியங்களெல்லாம் செய்ய வேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். அப்பொழுது ஆங்கிலேயர்களாகிய நீங்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். விடுதலை பெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம். அது சமயம் நான் ஆங்கிலத்திலுள்ள எத்தனையோ உயர்ந்த புத்தகங்களை யெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு வருஷம் நான் ஆசிரியையாக வேலை செய்தேன். ஆனால் எங்கள் குடும்பம் மிகவும் வைதிகமானதாகையால் நான் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நன்றாகப் படித்தவரையே கலியாணம் செய்து கொள்வேன் என்று நான் சொன்னேன். சரி படித்தவரையே பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்." மறுபடியும் அவள் சிறிது சிரித்தாள். "அப்படியெல்லாம் நடந்தது."

" அதற்கப்புறம் நீங்கள் கலியாணம் செய்து கொண்டீர்களா?"

“ ஆமாம்; இத்தனை போராட்டத்திற்குப் பிறகு அது முடிந்தது. என்னுடைய பெண்கள் படிப்பைப் பற்றி கவலைப்படவில்லை; பி.ஏ. பட்டம் பெறக்கூட விரும்ப வில்லை. அதனாலே அவர்களைக் கலியாணம் செய்து கொடுத்தோம். எனக்கு நிறையப் பேரப்பிள்ளைகளும் பெண்களும் இருக்கிறார்கள். என் மகன் குமாருக்குப் படிப்பிலே அக்கறை யிருந்தது. சமஸ்கிருதத்திலே பண்டிதனாவதற்கு அவன் விரும்பவில்லை. நான் எப்படி ஆசைப்பட்டேனோ அப்படி அவன் தேசத்திற்குப் பெரிய சேவை செய்ய ஆசைப்பட் டான். அதனால் அவன் எஞ்சினியர் ஆனான். ஐரோப்பாவிலே பயிற்சி பெற்றான். முதலில் எங்களுக்குக் கொஞ்சம் பயம். ஆனால் அவன் நல்ல பையன். இப்பொழுது லட்சுமிக் கும் அதே ஆசை."

" அம்மணிப்பாட்டி, லட்சுமி பெரியவளான பிறகு என்ன செய்வாள்? அவள் நாட்டியகாரி ஆவாளா?"

" அவள் நாட்டியம் ஆடுவாள் என்று நினைக்கிறேன். ஆனால் நாட்டியகாரி ஆகமாட்டாள். அவள் கல்லூரிக்குச் சென்று படிப்பாள். ஒருவேளை ஆசிரியை ஆகலாம்."

" அல்லது அவள் கவியாகலாம்" என்று ஜூடி கூறினாள். ஏனென்றால் லட்சுமி தானாகவே எழுதிய கவிதை வரிகள் சிலவற்றை அவளுக்குச் சொல்லியிருக்கிறாள். கேட்பதற்கு அவை நன்றாக இருப்பதாக ஜூடி கருதினாள்.

“ ஆமாம் அவள் கவியாகலாம். நீ என்ன ஆகப் போகிறாய்?"

" எனக்குத் தெரியாது; என்னால் கவிதை எழுதவோ நாட்டிய மாடவோ முடியாது. அம்மணிப்பாட்டி, உங்கள் வீட்டிலுள்ள பொருள்கள் சிறவற்றை எனக்குக் காண்பியுங்கள்" என்றாள் ஜூடி.

ரேடியோவும் கிராமபோனும் இல்லாவிட்டாலும் அந்த வீட்டின் உட்புறம் மிக நன்றாகயிருந்தது. அதைப்பார்ப்பதில் ஜூடிக்கு சலிப்பே ஏற்படவில்லை. படுக்கைகளைப் போல அகலமான ஆசனங்கள் அங்கேயிருந்தன. அவற்றின் மேல் பின்னல் வேலை செய்யப்பட்ட திண்டுகள் போடப்பட் டிருந்தன. ஓடுகள் பரப்பப்பட்ட தளத்தின்மேல் கம்பளங்கள் விரித்து, செதுக்கு வேலையுடன் கூடிய சிறு மேஜைகள் வைக்கப்பட்டிருந்தன. படங்களும் உண்டு. அவைகளிற் சில பெருமிதம் வாய்ந்த மக்களின் நிழற்படங்களாகும். சில சமயங்களிலே அவற்றிற்கு மாலையணிந்தார்கள். அங்கிருந்த இரண்டு படங்களில் ஜூடிக்குத் தனிப்பட்ட விருப்பம் ஏற்பட்டிருந்தது. நீண்ட மஸ்லின் அங்கிகளும் தங்கஜரிகைக் கரையுள்ள அங்கவஸ்த்திரங்களும் அணிந்த இந்திய இளவரசர்கள் சிறுசிறு விற்களைக் கொண்டு ஒரு குறியை நோக்கி அம்பெய்வதுபோலத் தீட்டப் பெற்றிருந்தது ஒருபடம்; அவர்களுக்குப் பின்புறத்தில் பாதைகள் அமைக்கப்பெற்ற தோட்டமொன்றிருந்தது; பூக்கும் மரங்களும், பாத்திகளில் பூச்செடிகளும், மயில்களும் காட்சி யளித்தன. ஒரே அங்குல உயரமுள்ள மாமரங்களும் இருந்தன. அவற்றிலுள்ள மாம்பழங்களை எண்ணிச்சொல்லி விடலாம்.

மற்றொரு படம் ஏரிக்கருகில் நின்ற ஒரு மங்கையைக் காட்டுவது. அவளுடைய சேலை பின் புறத்திலே காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அவள் கையில் ஒரு கண்ணாடியை வைத்திருந்தாள். அத்தக் கண்ணாடியிலே அவளுடைய உருவம் மிகச் சிறியதாகத் தோன்றிற்று. மெல்லிய கால்களும் பெரிய கண்களும் உடைய புள்ளி மான்கள் அவளுக்குப் பக்கத்திலே துணிச்சலோடு வந்தன. நீண்ட கால்களும் வளைந்த அலகுகளும் உடைய ஒரு சில பறவைகளும் காணப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நேரத்திலே பாடக்கூடிய ஒரு இராகத்தை இது காட்டுகிறது என்று அம்மணிப்பாட்டி தெரிவித்தாள்.

ஜூடிக்கு இந்தப் படங்கள் மிகவும் பிடித்திருக்கின்றனவென்று தெரிந்தவுடன் அம் மணிப்பாட்டி செதுக்கு வேலை செய்யப்பெற்ற ஒரு பெட்டியிலிருந்த வேறு மூன்று படங்களையும் அவளுக்குக் காண்பித்தாள். துதிக்கைகளை ஒன்றின் மேல் ஒன்று மோதிப் போரிடுகின்ற யானைகளின் படமொன்று. வேல் தாங்கிய சிறு மனிதர்கள் அவைகள் போரிடுவதை நோக்கிக் கொண்டிருந்தன. நிமிர்ந்து கம்பீரமாக அமர்ந்துள்ள ஒருவனைக் காட்டுவது இரண்டாவது படம். பாலேடு போன்ற நிறத்துடனும், மூர்க்கமான நோக்குடனும் உள்ள சதங்கை கட்டிய அழகிய இராசாளி ஒன்று அவன் மணிக்கட்டில் அமர்ந்திருந்தது. புயல் வெடிக்கும் வானத்தின் கீழ் அவன் குதிரையேறிச் சென்றான். சாம்பல் நிறமுடைய அக் குதிரையின் கால்கள் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டிருந்தன; முகமும் வாலும் கறுப்பாக இருந்தன. ஒவ்வொரு இறகையும் அழகாக வண்ணம் தீட்டிய கௌதாரியின் படம் மூன்றாவது. தன் தந்தைக்குக்கூட பிடிக்கும்படியாக அது அவ்வளவு திருத்தமானது என்று ஜூடி கருதினாள். அவை யெல்லாம் பழைய ஓவியங்கள் ; வெகுகாலமாக இந்தக் குடும்பத்திலேயே இருக்கின்றன, அவற்றை வைத்திருந்த பெட்டியும் அப்படித்தான் என்று அம்மணிப்பாட்டி தெரிவித்தாள்.

முன்பக்கம் கண்ணாடியாலான ஒரு பெட்டிக்குள் வீணை யொன்று இருந்தது; அதன் குடமும் தண்டியும் தந்தப் பூவேலை செய்யப்பெற்றிருந்தன. சிலசமயங்களில் அம்மணிப்பாட்டி அதை எடுத்து வாசித்துக்கொண்டு நடுங்குங் குரலிலே, பெரும்பாலும் திடீரென்று தாளம் மாறும்படியான சோக கீதங்களைப் பாடுவாள். பள்ளியிலே பெண்கள் பாடுகின்ற சினிமாப் பாடல்களிலிருந்து அவை முழுதும் மாறு பட்டவையாகத் தோன்றின.

அந்த வீட்டிலே நல்ல பெட்டிகள் நிறைய இருந்தன. பண்டசாலையிலே உள்ள அஞ்சறைப் பெட்டிகளும், அரிசி, பருப்பு முதலியவைகளுக்கான பூட்டுள்ள பெரிய பெட்டி களும் இவற்றுள் முக்கியமானவை. நறுமணப் பொருள் களிலிருந்தும், பழங்களிலிருந்தும் எப்பொழுதும் ஒரு நல்ல வாசனை வீசிற்று. ஒரு வகையில் பூஜை அறைதான் எல்லா அறைகளையும் விட அதிகமான உணர்ச்சியூட்டுவதாகும். அது ஓர் அமைதியான சிறிய அறை. காலுக்குக் குளிர்ச்சி யாக இருக்கும் அந்த அறையில் தளம் பளபளப்பானது. குத்து விளக்கும் மலர்களும் தெய்வங்களின் படங்களும் அங்கிருந்தன. அந்த அறைக்கு ஜூடியை அழைத்துச் செல்வதில் அம்மணிப்பாட்டிக்கு யாதொரு தடையும் தோன்றவில்லை. அவளும் அந்த தெய்வங்களும் ஒரே பொருளின் பாகங்களென்று தோன்றுமாறு அவள் தனது இஷ்ட தெய்வங்களைப் பற்றிக் குடும்ப விஷயம் பேசுவதைப் போலப் பேசுவதுண்டு.
--------------

4. சுதந்திர தினம்

பருவ காலத்துப் பெருமேகங்கள் திரளத் தொடங்கின. மழை பெய்யாதா என்று மக்கள் பேசத் தொடங்கினர். இடியுடன் கூடிய மழை வேறெங்கோ பெய்வதைப் பற்றிக் காதில் விழும்; காற்றிலே இடியின் உறுமல் கேட்கும். "மழை பெய்தால் ஜன்னல் கதவுகளையெல்லாம் மூட வேண்டும். இன்னும் அதை இதையெல்லாம் செய்ய வேண்டும்." என்று ஜூடியின் தந்தை சமையற்காரனான ஜார்ஜுக்குச் சொல்லுவார். 'ஆகட்டும், ஆகட்டும் " என்று கூறிவிட்டு ஜார்ஜ் முன்னைப் போலவே கவனத்துடன்
அல்லது கவனக்குறைவுடன் இருந்தான். ஜூலையிலும், பிறகு ஆகஸ்டிலும் கொடிய வெப்பம் கொளுத்துகின்ற வானத்திலே மேகங்கள் எப்பொழுதும் சிதறி மறைந்து போவதாகத் தோன்றின. "ஆஸ்பத்திரியில் நடக்கும் சுதந்திரதினக் கூட்டத்திற்கு நாமல்லோரும் போகவேண்டும்" என்று ஜூடியின் தந்தை தெரிவித்தார்.

"ஆமாம்" என்றாள் அவள் தாய். "தையற்காரன் வருவான்" என்று கூறிவிட்டு அவள் ஜூடியைப் பார்த்தாள். "யானை உருவங்கள் அச்சடித்த கதர்த்துணி இருக்கிறது."

" அம்மா, உடம்பெல்லாம் யானைகளாக இருக்க வேண்டுமா?" என்று கேட்டாள் ஜூடி.

அவள் கருத்து என்னவென்று அவளுடைய தந்தைக்குத் தெரியும். கிராமத்திலே கையால் நூற்று நெய்த கதரை அணிந்து கொள்ள அவள் விரும்பவில்லை. இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்காக இரக்கப்படுகின்றவர்கள் கதரை அணிகிறார்கள். மிகுந்த ஏழ்மையில் இருக்கும் கிராமங்களுக்கு அது ஓரளவு பணமும், உணவும் அளிக்கிறதென்று அவர்களுக்குத் தெரியும். இந்திய அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியிலிருப்பவர்கள் ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி கதரை அணிகிறார்கள். அது கரடு முரடாக இருக்கும். கதரைப் பற்றி ஒரு பழைய தமாஷ் உண்டு. கற்களை உடைப்பதற்கு வண்ணான் அதைப் பயன்படுத்துகிறானாம். வண்ணான் தான் துணியை வெளுக்கிறவன். தண்ணீருக்கருகில் கல்லைப் போட்டுக்கொண்டு அவன் எந்தத் துணியையும் அதன் மேல் ஓங்கி ஓங்கி அடிப்பான். அதனால் விரிப்புகளும், தலையணை உறைகளும் வெகுநாட்களுக்குத் தாங்கா. எப்பொழுதும் வீட்டிலேயே ஆடைகளைத் துவைத்துக் கொள்வது அவசியம். ஜூடிக்குக் கதர் பிடிக்காது என்பது அவள் தாய்க்கும் தெரியும். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கதரை அவசியம் அணிய வேண்டும் என்பது அவள் எண்ணம். "கைத்தறிமாளி கைக்குச் சென்று அங்கே என்ன இருக்கிறதென்று பாருங் களேன்? ஜூடிக்கு ஒரு புதிய உடைய வாங்கித்தர நான் தயார்" என்று அவள் தந்தை கூறினார்.

"ஓ, அது சரி" என்று கூறினாள் ஜூடி.

எல்லோரும் புறப்பட்டார்கள். 'கைத்தறி மாளிகை’ ஜூடிக்குப் பிடித்த கடைகளில் ஒன்று. அங்கே ஜூடி தன் தாயை நிறைய நிறையத் துணி வாங்கும்படி செய்து விடுவாள். அந்தத் துணியும் கையால் நெய்யப் பட்டதாயினும் கதரைவிட மிக மெல்லியதாக இருக்கும். ஏனென்றால் அந்தத் துணிக்கு வேண்டிய நூலை இயந்திரம் உண்டாக்குகிறது. கைவிரல்களைக் காட்டிலும் அது மிக நன்றாக அதைச் செய்கிறது. கடையிலே பளபளப்பான நிறங்களிலே கெட்டியான பட்டுத் துணிகளும் இருந்தன; ஆனால் அவை கோடை காலத்திற்கு ஏற்றவையல்ல. கறுப்பும், இளமஞ்சளுமான கரையுடையதும் இளஞ்சிவப்புக் கலந்த ஊதா நிறத்தையுடையதுமான ஒரு துணியிலே ஒரு சேலைக்கு வேண்டிய அளவு வாங்கும்படி ஜூடி தன் தாயைத் தூண்ட முயன்றாள். தையற்காரன் அதை எப்படித் தைப்பானோ என்பதைப் பொறுத்தே அதை வாங்க வேண்டும்; மேலும் சேலை அளவான ஆறு கஜம் துணி மிக அதிகம். கடைசியில் அவர்கள் சிவப்பு, இள மஞ்சள், இருவகை நீலம் ஆகிய நிறங்களில் கோடுகளிட்ட துணி யொன்றை வாங்கினார்கள். பாவாடையிலே அந்தக் கோடுகள் மேலும் கீழுமாகவும், கையில்லாத மேலங்கியிலே அவை சுற்றிச் சுற்றி வருவதுபோலு மிருக்கும்.
தையற்காரனைப் புரிந்து கொள்ளும்படி செய்வது எப்பொழுதும் எளிதல்ல. உருவத்திலே சிறுத்துத் தோன்றும் அவன் நல்லவன் தான். வீட்டிற்கு வந்து யாராவது தன்னைப் பார்க்கும் வரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கதவுக்கு முன்னால் சம்மணக்காலிட்டு உட்கார்ந்திருப்பது அவன் வழக்கம். துணிகளை அவன் சாளை போன்ற தன்னுடைய சிறிய கடைக்கு எடுத்துச் சென்று வேகமாக வேலை செய்வான். அதிக நாள் பிடிக்கும் என்று அவன் சொன்னால் நாளை நின்று அடுத்த நாள்வரை ஆகும் என்று தெரிந்து கொள்ளலாம். அதற்கு மேலாகாது. ஒன்றைப் பார்த்து அப்படியே தைப்பதில் அவன் கெட்டிக்காரன்; ஆனால் ஒரு மாறுதல் செய்ய விரும்பினால் அவனுக்கு அதிலே திறமை அத்தனையில்லை. சென்ற வேனிற் காலத்திலிருந்ததைவிட இப்பொழுது ஜூடி மூன் றங் குலம் உயரம் அதிகம்.

சுதந்திர தினம் விடுமுறை நாள். முந்திய நாள் மாலையிலேயே வாத்தியங்கள் முழங்கத் தொடங்கி இரவு முழுவதும் ஓயாமலிருப்பதிலிருந்து அதைத் தெரிந்து கொள்ளலாம். எங்கும் அலங்காரங்கள், பச்சை வெள்ளை சிவப்பு ஆகிய நிறங்களோடும், மத்தியில் ஒரு சக்கரத்தோடுமுள்ள இந்தியக் கொடிகள். இந்தச் சக்கரம் கையால் நூற்கும் ராட்டையின் சக்கரம் ; காந்தியடிகள் உபயோகித்த அதே ராட்டைச் சக்கரம். ஊர்வலங்களும், சொற்பொழிவுகளும் இருந்தன. ஒவ்வொருவரும் மற்ற வருக்கு மாலை அணிந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1947 இல் சுதந்திரம் பெற்ற நாளைக் கொண்டாடுவதால் ஜூடியின் தந்தைக்கோ தாய்க்கோ அதில் இடமில்லை யென்று யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை. சுதந்திரம் நல்லதென்பது தெளிவு. ஜூடியின் தந்தையும் தாயும் நல்லவர்கள். அதனால் அவர்கள் அதிற்கலந்து மகிழ்ச்சி யடைவார்கள் அல்லவா?

ஆஸ்பத்திரியிலே கொடிகளும், பலூன்களும், எழுத்துப் பொறித்த அட்டைகளும் விளங்கின. ஒவ்வொரு வருக்கும் பலமான தேநீர் விருந்து. வாயில் காவலாளிகள், வீடு பெருக்குவோர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்கும் இவ்விருந்து கிடைத்தது. அவர்களெல்லோரும் விலைமலிவான அழகிய ஆடைகளை எப்படியோ பெற்று அணிந்திருந்தனர். மெலிந்து சோகப் பார்வையோடு தோன்றும் பெண்கள் தங்கள் கரங்களிலே கண்ணாடி வளையல்களை அணிந்திருந்தார்கள். வெள்ளித் தாயத்து அல்லது காப்பை அவர்கள் சில சமயங்களில் அணிவதுண்டு. அப்படி அணிந்திருந்தால் குடும்பத்திலே சேமித்து வைத்த பணத்தை அவர்கள் உடம்பிலேயே சுமந்து கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள லாம். அந்தக் கீழ்ஜாதி மக்களெல்லோரையும் பற்றி டாக்டர்களில் ஒருவர் ஜூடியின் தாய்க்கு எடுத்துச் சொன்னார். ஆஸ்பத்திரியிலே ஜாதிமத பேதந்து கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். "அங்கே இருக்க முடியாதென்றுதான் நான் நம்புகிறேன்" என்று ஜூடியின் தாய் வெடுக்கென்று கூறினாள்.

நோயாளிகளைப் பேணும் தாதிகளிற் சிலர் அங்கே மிக நாகரிகமாகத் தோன்றினர். ஜூடிக்கு ஊசிபோட்ட போது உதவி செய்த அந்த நல்ல தாதி அவர்களிலே முக்கியமானவள். மற்ற தாதிகளெல்லாம் ஆஸ்பத்திரி அறைகளில் நோயாளிகளுக்கு நல்ல தேநீரைக் கொஞ்சம் அதிகமாகவே வழங்கிக் கொண்டிருந்தனர். நோயாளிகளுக்கும் சொற்பொழிவுகள் உண்டு. அவர்களுக்கு அவை ஒரு வேளை பிடிக்கலாம். ஆஸ்பத்திரி அறைகளிலே ரேடியோ கிடையாது; நோயாளிகளில் ஒரு சிலருக்கே படிக்கத் தெரியும்; ஆதலால் சொற்பொழிவுகூட அவர்களுக்கு வரவேற்கக்கூடிய தனிச் சிறப்புடையதுதான்.

ஜூடியின் தந்த ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டி யிருந்தது. அது அவளுக்கு சங்கடத்தை விளைவித்தது. ஆனால் மற்றவர்களெல்லாம் அதை விரும்பினார்கள். அவருக்கு அவர்கள் ஒரு பெரியமாலை அணிந்தார்கள். வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு நிறங்களையுடைய நறுமண மலர்களால் கட்டி ஜரிகைக் குஞ்சங்களோடு இருந்தது அந்த மாலை. இருந்தாலும் யாரும் அதை நீண்ட நேரத்திற்குக் கழுத்தில் போட்டிருக்கும் வழக்கமில்லை. மலர்களும். மலரிதழ்களும் எங்கும் கிடந்தன. இந்திய டாக்டர்களிற் சிலர் சங்கீத நாற்காலி, முட்டையும் கரண்டியும் போன்ற விளையாட்டுக்களை ஏற்பாடு செய்திருந்தனர். முட்டையும் கரண்டியும் என்ற விளையாட்டிற்கு யாரும் முட்டைகளைப் பயன்படுத்தி வீணாக்கவில்லை; அவற்றிற்குப் பதிலாக மஞ்சள் நிறமான சிறிய எலுமிச்சம்பழங்களை வைத்திருந்தனர். அவற்றையும் கரண்டிகளில் வைத்துச் செல்வது சிரமம் தான். ஜூடியின் தந்தையை எல்லோரும் உற்சாகப்படுத்தி அவர் வெற்றிபெறுமாறு செய்ய முயன்றார்கள். உடம் பெல்லாம் சூடேறி வியர்வை பொங்கத் தோன்றினார் அவர். பலூன் பந்தயத்தில் ஜூடி வெற்றியடைந்தாள். அவளுடைய உடை நன்கு அமைந்துவிட்டது. தையற் காரன் அதைப் போதுமான அளவு பெரிதாகத் தைப்பதில் கடைசியில் வெற்றியடைந்து விட்டான். லட்சுமி அங்கிருக்கவேண்டுமென்று அவள் பெரிதும் விரும்பினாள். இருந்தால் இரட்டிப்பு தமாஷாக எல்லாம் இருக்கும். அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்ட முக்கியமான மேடையிலே ஒரு வேளை லட்சுமி அமர்ந்து ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள்; அல்லது எங்கும் நடக்கின்ற கூட்டங்களுக்குள் ஏதாவது ஒன்றில் இருப்பாள்.

நல்ல நிழல் கொடுக்கும்படியான பெரிய புளிய மரங்களுக்குள் ஒன்றின் அடியில் அவர்கள் அமர்ந்து ஆரஞ்சு, எலுமிச்சம்பழ ரசத்தை அருந்தினர். மலர்கள் பூத்துக் குலுங்கி வரிசையாக நிற்கும் மயூர மரங்களோடும், பள பளப்பான நிறங்களையுடைய சேலைகளை யணிந்த மாதரோடும் வெண்மையான காலுடைகளை யணிந்த ஆடவர்களோடும் ஆஸ்பத்திரித் தோட்டங்கள் அழகாகத் தோன் றின. வேறு டாக்டர்களின் மனைவிகள் சிலரோடு ஜூடி யின் தாய் பேசிக்கொள் ருந்தாள். அவர்களுடைய பெண் குழந்தைகளில் ஒரு ஜூடி படிக்கும் அதே பள்ளியில் படித்தாள். அவளைப் பார்த்து ஜூடி முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தாள். எழுந்து போய் அவளுடன் பேசுவதற்கு முடியாதவாறு அவ்வளவு வெப்பமாக இருந்தது.

பிறகு டாக்டர்களில் வேறொருவர் வந்து தம் மனைவியை அறிமுகப் படுத்தினார். தோள்களுக்கிடையே அகன்று தோன்றும் அவள் மற்ற டாக்டர்களின் மனைவிகளை-விட உயரமாக இருந்தாள். அவள் தன் தலையை அதிகமாக நிமிர்த்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. ஆடைகளையும் அவள் சற்று வேறுவிதமாக அணிந்திருந்தாள். தோளிலே மிக அழகான ஒரு தங்க எனாமல் புரூச் விளங்கிற்று. அவள் பேச ஆரம்பித்து ஒரு நிமிஷங்கூட ஆகவில்லை. அதற்குள் அவள் தான் வட இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகவும் இந்தப் பகுதியிலிருந்து வரவில்லையென்றும் தெரிவித்துக் கொண்டாள். அவள் ஆங்கிலம் மிக நன்றாகப் பேசினாள். "இங்கே குடும்பம் நடத்துவது சிரமமாகத் தெரிகிறதா? தமிழ் கற்றுக்கொள்ள வேண்டி-யிருக்கிறதா?" என்று ஜூடியின் தாய் கேட்டாள்.

"தமிழா? ஒரு நாளுமில்லை!" என்று தனது தலையை ஆட்டிக்கொண்டு அவள் பதிலளித்தாள். அதன் பிறகு "நீங்கள் வடக்கே போயிராவிட்டால், உங்களுக்கு உண்மையான இந்தியா எப்படியிருக்குமென்றே தெரியாது, டெல்லி ! ஆக்ரா ! அவற்றிற்கு மேலே மலைப் பிரதேசங்கள்! அசுத்தமான இந்தத் தென் பகுதியைப் போலல்ல" என்று மேலும் சொன்னாள்.

யாராவது இதைக் கேட்டுக் கோபமடைவார்கள் என்று ஜூடி எண்ணிக் கொண்டிருந்தாள். அந்த டாக்டரின் மனைவி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை யென்றும், யாராவது கேட்கட்டும் என்பதே அவளுடைய விருப்பம் என்றும் ஜூடிக்கு திடீரென்று தெரிந்தது. வயது வந்தவர்களெல்லாம் எத்தனை மோசமானவர்கள் ! அப்பொழுது நல்ல தோற்றமுடைய பையன் ஒருவன் ஓடி வந்தான் ; சிலரைவிட அவன் சற்று வெளுப்பானவன். அவனுடைய தலைமயிர் சுருண்டு கறுப்பாக இருந்தது. "என் மகன் ஹரிதாஸ்" என்று அவள் சொன்னாள். அந்தப் பையன் கை குலுக்கி விட்டுச் சிரித்தான். அவர்கள் இருவருடைய தாய்மார் களும் மீண்டும் தமக்குள் உரையாடத் தொடங்கவே அந்தப் பையனும் ஜூடியோடு பேசத் தொடங்கினான். யாரோ ஒருவன் நேந்திரங்காய் வறுவலை ஓர் இலையில் வைத்து எடுத்துக்கொண்டு வந்தான். அது உருளைக்கிழங்கு வறு வலைப் போலவே இருந்தது, ஆனால் ருசி அதிகம். இருவரும் அதைக் கையில் எடுத்தார்கள்.

அப்பொழுது கயிறிழுக்கும் பந்தய விளையாட்டுத் தொடங்கிற்று. ஒவ்வொருவரையும் அதில் சேரும்படி வலிய அழைத்தனர். தனது வாழ்க்கையிலேயே அவ்வளவு பெரிய ஆரவாரத்தைக் கேட்டதில்லை என்று ஜூடிக்கு எண்ணம் உண்டாயிற்று. ஒவ்வொருவரும் ஆரவாரம் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபத்தோடிருப்பது போலத் தொனித்தது. ஆனால் உண்மையில் அவர்கள் குதூகலத்தோடிருந்தனர். அவருடைய தந்தையின் கட்சி வெற்றியடைந்த போது குதூகலம் இன்னும் அதிகரித்தது. பிறகு சிறுவர்களுக்குக் கயிறிழுக்கும் பந்தயம் வைத்தனர். சிறுமிகள் தங்கள் சேலைகளை வரிந்து கட்டினர். தாங்கள் மிகுந்த பலசாலிகள் என்று பையன்கள் பாவனை செய்தனர். ஜூடியும் ஹரிதாஸும் ஒரே பக்கத்திலிருந்தனர். அவர்கள் தங்கள் மிதியடிகளைத் தரையில் அழுத்தி ஊன்றிக்கொண்டு தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி இழுத்தார்கள். அவர்கள் கட்சி கோட்டைத் தாண்டி இழுக்கப்பட்டபோது, தாங்கள் இரண்டுபேர் மட்டும் இருந்து மற்ற கட்சியில் எந்த இரண்டுபேர் எதிர்த்து நின்றாலும் தாங்கள் வெற்றி யடைவது நிச்சயம் என்று அவர்கள் நம்பினார்கள். வியர்வை சொட்டச் சொட்ட அவர்கள் மரத்தடிக்குத் திரும்பிச் சென்று கோக்கா-கோலா போன்ற இந்திய பானம் ஒன்றை நிறைய நிறையக் குடித்தனர். கொஞ்ச நேரம் குளிர்ச்சியாகத் தோன்றிற்று. சூரியனை மறைத்துக்கொண்டு மேகம் கவிந்திருந்ததால்தான் அப்படியிருந்ததென்று ஜூடிக்கு திடீரென்று புலனாயிற்று. ஒவ்வொருவரும் விரைந்து சென்று அவருடைய சட்டையை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரித் தாழ்வாரத்திற்குச் சென்றார்கள். காதடைக்கும்படியாக ஒரு பெரிய இடி இடித்து மழை பொழியலாயிற்று.

பெஞ்சமினுக்கு அது பிடிக்கவேயில்லை. அவன் இதழ்கள் நடுங்கின. அவனை எடுத்துக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஜூடிக்கு அது வேடிக்கையாக இருந்தது. மேலும் விளையாட்டு முதலியவையெல்லாம் அநேகமாக முடிந்துவிட்டன. ஹரிதாஸுக்கும் அது பிடித்தது. அவன் குதித்தோடினான். அவனுடைய தூயவெள்ளைக் குறுங்கால் சட்டையெல்லாம் சிவப்பான சேறு தெறித்தது. ஆனால் நினைத்த மாதிரி எங்கும் குளிர்ச்சி ஏற்படவில்லை. அது தண்மை வாய்ந்த மழையல்ல; அது சற்று வெப்பமாகவே இருந்தது.

மழைத் தண்ணீரைச் சிதறியடித்துக்கொண்டு மோட்டார்க்கார் வீடு திரும்பிற்று. வழக்கம்போல ஜார்ஜ் ஜன்னல் கதவுகளில் சிலவற்றையே மூடியிருந்தான்,
ஜூஅடியின் படுக்கையில் ஒரு கோடி நனைந்துவிட்டது. மேலும் இடி இடித்தது. ஈக்கள், தத்துக்கிளிகள் போன்ற அருவருப்பான எத்தனையோ ஜந்துக்கள் வெளிப்பட்டன. பூச்சிகள் என்று பெஞ்சமின் அவற்றைச் சொல்லுவான். பூச்சியென்றால் தமிழில் அருவருப்பானது என்று பொருள். குளிர்ந்த தண்ணீரை நாடி ஜூடி குளிரூட்டும் பெட்டியை அணுகினாள். விளையாட்டுப் பந்தயங்களில் வியர்த்து வடிந்த உப்புக்கு ஈடு செய்யும் பொருட்டாக அவருடைய தந்தை தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கொடுத்தார்.

அதன் பிறகு ஜூடி ஹரிதாஸைப் பல தடவை சந்தித்தாள். அவன் நல்ல பையன், ஜானை ஓரளவு அவள் நினைவுக்குக் கொண்டுவந்தான். கிரிக்கெட் முதலியவைகளில் அவனுக்கு விருப்பம் உண்டு. இருவரும் ஒரேவிதமான விஷயங்களைக் குறித்துச் சிரித்து மகிழ்ந்தார்கள். அவ ளுடைய தந்தைக்கு அவனுடைய தந்தையைப் பிடித்திருந்தது என்பது அவளுக்குத் தெரியும். "தொழிலைப்பற்றி மிக உயர்ந்த மதிப்புடையவர்" என்று அவள் தந்தை கூறுவார். திருத்தமாக இருப்பதற்கு இது சமானம்! ஆனால் அவள் தாய் அவன் தாயைப் பற்றி ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள். அவன் தாய்க்குச் சென்னை பிடிக்காததால் வட இந்திய உணவு மிகவும் நல்லது என்று அவள் சொல்லிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்த வேண்டிய-தில்லை. அவள் உண்மையிலேயே மிக ருசியான இனிப்புப் பண்டங்கள் செய்தாள். ஜீரா ஒழுகிக்கொண்டும் உள்ளே மொறு மொறுப்பாகவும் அவை இருக்கும், அல்லது உருகும் சர்க்கரைப் பஞ்சுபோல இருக்கும். சென்னைக் கறிவகைகளைப் போல அவள் செய்யும் கறிவகைகள் அவ்வளவு காரமாக இரா; அவற்றின் - மணமும் வேறு விதமாக இருக்கும். ஆனால் தென்னிந்தியாவை அசுத்தமானதென்று அவள் சொல்லுவதானது - சரிசரி சென்னை மக்கள் வட இந்தியாவைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்.

ஹரிதாஸ் தங்கள் வீட்டிற்கு வந்திருந்த ஒருசமயம் ஜூடி அவனை வேலியிலுள்ள சந்து வழியாக அண்டை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நினைத்தாள். ஆனால் அதனால் பயனேற்படாது என்று பிறகு அவளுக்குத் தோன்றிற்று. எல்லோரும் நீந்திக் கொண்டிருக்கும் போது லட்சுமியுடனும் அவளுடைய தோழிகளுடனுமோ அல்லது ஹரிதாஸுடனோ நீரில் மூழ்கிச்செல்ல அவள் விரும்பினாள். வயதான இந்தியப் பெண்களுள் ஒரு சிலர்தான் குளத்தில் நீந்துவார்கள்; அவர்களுள் ஒருத்தி ஹரிதாஸின் தாய். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளோடு வருவார்கள். ஆனால் ஐஸ் பண்டங்களையோ தேநீரையோ அருந்திக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். "எனக்கு ஒரு டஜன் குழந்தைகளிருந்தாலும் நான் அப்படியிருக்க மாட்டேன்" என்று கூறினாள் லட்சுமி.

மழைக்காலம் உண்மையாகவே தொடங்கிவிட்டது. வானமெங்கும் இடியின் முழக்கம் கேட்டது. சாலைகளிலெல்லாம் வெள்ளம் பெருகிப் பெரிய குட்டையாக நின்றது. ஆனால் காய்ந்து கிடக்கும் தரைக்குள்ளே அது சீக்கிரத்தில் மறைந்து போயிற்று. எங்கும் நீராவி யெழுந்தது. மக்கள் சிடுசிடுத்தனர். ஒரு வாரம் பெஞ்சமினுக்கு உடம்பு சரியில்லை; எல்லோருக்கும் அது கவலையாக இருந்தது. அம்மணிப்பாட்டி மிக நல்ல பழங்கள் சிலவற்றை அனுப்பி வைத்தாள். அவற்றைக்கூட அவன் விரும்பவில்லை. பிறகு அவனுக்குக் கொஞ்சம் சுமாராயிற்று; ஆனால் முழுவதும் குணமேற்படவில்லை. ஜூடியின் பள்ளி மூடியதும் எல்லோரும் மலைக்குச் செல்வதென்று திட்டம் வகுக்கப்பட்டது;

இந்த வகையில் அவள் ஹரிதாஸையோ லட்சுமியையோ சில நாட்களுக்குப் பார்க்கவில்லை. லட்சுமியைப் பிறகு அவள் பார்த்தபோது ஏதோ ஒரு மாதிரியாக யிருந்தது. இனிமேல் சிநேகமாக இருப்பதற்கு லட்சுமி விரும்பவில்லை என்பது போலப் பட்டது. பெஞ்சமினைப்பற்றி ஜூடி கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் இதைப்பற்றி அவள் அதிகம் கவனிக்கவில்லை. ஏதாவது தவறு நேர்ந்து விட்டதா என்று லட்சுமியைக் கேட்கவுமில்லை.

மீண்டும் மலைப்பிரதேசத்திற்கு வந்தது எவ்வளவு நன்றாகயிருக்கிறது! படகுகளிலிருந்த ஓர் ஏரிக்குப் பக்கத்தில் அவர்கள் தங்கியிருந்தனர். படகு செலுத்த வேண்டும் என்று ஜூடிக்குத் திடீரென்று ஆசை உண்டாயிற்று. அதைப்போல எதையாவது செய்ய விரும்புவதோ, ஓடவும் குதிக்கவும் விரும்புவதோ வினோதமாகத் தோன்றிற்று. இரவிலே குளிர்ச்சியாக இருப்பதும், கம்பளத்திற்கு அடியிலே குறுகிப்படுத்திருப்பதும் மிக நன்றாக யிருந்தன. சமவெளிப் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் வெப்பத்தால் அவதிப்படுவதை நினைப்பது மனதுக்கு அவ்வளவு உகந்ததாயில்லை. "இந்தியர்கள் கோடை காலத்தைப் பற்றி நம்மைப்போல அவ்வளவு கவலைப் படுகிறார்களா?" என்று அவள் தன் தந்தையைக் கேட்டாள்.

"அநேகமாக நம்மைப்போலவே அவர்களும் கவலைப் படுகிறார்கள். இந்தியாவிற்கு நல்ல சீதோஷ்ண நிலைமையிருந் திருந்தால் எல்லாமே மாறுபட்டிருக்கும். வெப்பமாகயிருக்கும் பொழுது யாராலும் சரியாக வேலை செய்யமுடியாது" என்று அவர் பதில் சொன்னார்.

அவளுடைய இந்திய நண்பர்களில் சிலர் மலைக்கு வந்திருந்தனர். அவர்களில் ஹரிதாஸும் ஒருவன். படகு செலுத்துவதில் அவனுக்கு நல்ல திறமையிருந்தது. சிறிய படகுகளில் அவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு செல்லும்போது அவனே பெரும்பாலும் வெற்றி யடைந்தான். தபால் தலை சேகரிக்கும் பையன் வேறொரு மலைக்குச் சென்றிருந்தான். பெஞ்சமின் கொஞ்சம் இளைத் திருந்தாலும் முற்றிலும் குணமடைந்து விட்டான்.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் பூஜை நாள் வந்தது தியானம் செய்ய வேண்டிய நாள் அது. எல்லாவற்றிற்கும் அன்று ஆசீர்வாதம் கிடைக்கும். மோட்டார்க்காருக்கு மாலை அணிந்து அதன் முன்னால் பழங்களையும் மலர்களையும் படைப்பார்கள். பெஞ்சமினுடைய தள்ளுவண்டியும் ஆசீர்வாதம் பெற்றது. அவனுடைய ஆயாவான மேரி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளாயினும் அதைச் செய்விக்காமலிருக்க விரும்பமாட்டாள். நல்ல கிழப் புரோகிதன் ஒருவன் ஒரு சில ரூபாய்களைக் கேட்டு வாங்கிக் கொண்டு அதைச் செய்தான்.

ஆஸ்பத்திரியும், அதன் அறைகளும் அதேமாதிரி ஆசீர்வதிக்கப் பெற்றன. முக்கியமாக ரணசிகிச்சை செய்யும் அறை, எக்ஸ் - கதிர் நிழற்படம் எடுக்கும் பகுதியும் வாழ்த்துப் பெற்றன. அது ஒரு விடுமுறை நாள். இந்துப் பஞ்சாங்கத்தின்படி நிறைய விடுமுறைகள் உண்டு. அநேகமாக ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை உற்சாகமற்றதாக இருப்பதால் இவ்வாறு விடுமுறைகள் இருக்கின்றன என்று ஜூடி கருதினாள். சிரமப்பட்டு வேலை செய்தும் நிறையப் பணம் கிடைப்பதில்லை. வெகுபேர் ஞாயிறன்றுகூட ஓய்வு பெறுவதில்லை. அதனால் அவர்களுக்குக் கொஞ்சம் தமாஷாக இருக்க இத்தனை விடுமுறைகள் தேவைபோலும் என்று அவள் எண்ணிக்கொண்டாள். ஆனால் மனத்திற்குப் பிடித்தமான வேலையுள்ளவர்களுக்கு உண்மையில் இந்த விடுமுறைகள் அவசியமில்லை. ஆதலால் ஒவ்வொருவருக்கும் அவருக்குப் பிடித்தமான வேலை கிடைத்தால் ஒரு வேளை அவர்கள் இந்த விடுமுறைகளை விரும்பமாட்டார்கள். அதைத் தெரிந்து கொள்வதுதான் மிகவும் கஷ்டமான விஷயம்.
--------------

5. காஞ்சிபுரம்

அவர்கள் மலையிலிருந்து திரும்பிவந்த காலத்திலும் வெப்பமாகவே இருந்தது, ஆனால் அவ்வளவு ஈரம் இல்லை. முதல் மழைப்பருவம் முடிந்து விட்டது; இரண்டாவது மழைப்பருவம் இன்னும் வரவில்லை. அடுத்த விடுமுறையான தீபாவளியில் என்ன செய்வது என்பதுபற்றிப் பள்ளிக் கூடத்தில் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டனர். கடைகளில் - 'உங்கள் தீபாவளிப் பரிசு' என்று பொருள்களைக் காட்சியாக வைக்க ஆரம்பித்துவிட்டனர். கிறிஸ்துமஸுக்கு ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நடைபெறு வதுபோலவே இது இங்கு நடந்தது. கடைகளுக்குச் சென்று வாங்குவதற்கு இது ஒரு சாக்கு. மிகுந்த ஏழைகளுங்கூட ஏதாவது புதிய உடையைப் பெற முயற்சி செய்து பெற்று அணிந்து கொள்வார்கள். யாராவது பணக்காரர் கழித்துக் கொடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை. ஆயாவுக்கும், வாசுகிக்கும், ஜார்ஜின் மனைவிக்கும் புதிய சேலைகள் வாங்க ஜூடி தன் தாயுடன் சென்றாள். ஜார்ஜின் மனைவி சில சமயங்களில், பின்னால் இரண்டு குழந்தைகள் பற்றிக் கொண்டுவர இடுப்பில் மற்றொரு குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவாள்.

உண்ணிச்செடி வேலிக்கு அப்புறத்திலுள்ள அண்டை வீட்டார் எல்லா விதமான ஏற்பாடுகளும் செய்து கொண்டி ருந்தனர். ஒரு பெட்டி நிறையப் பட்டாசுகளை வசந்தி ஜுடிக்குக் காண்பித்தாள். ஒரு வேளை இந்த வருஷம் அவளுக்கு உண்மையான தங்க வளையலே கிடைக்கலாம். சுவருக்கு அப்புறத்திலுள்ள அண்டை வீட்டார் எல்லோருக்கும் காண்பித்துக்கொள்ளவே இன்னும் பெரிய பெட்டி நிறையப் பட்டாசுகள் நிச்சயம் வாங்குவார்கள்; இனிப்புப் பட்சணங்களும் அதிகமாகச் செய்வார்கள்.

அம்மணிப்பாட்டி காக்காப்பூக்கொடி வேலிக் கருகில் நின்று ஜூடியைக் கூப்பிட்டுப் புதிய சேலைகள் வாங்குவதற் காகக் காஞ்சிபுரம் போவதாகத் தெரிவித்தாள். "சேலைகள் அங்கே ரொம்ப நன்றாக இருக்கும். உன் தாயார் அனுப்பச் சம்மதித்தால் நான் உன்னை அழைத்துக்கொண்டு போகிறேன்" என்றாள் அவள்.

"ஓ, ரொம்ப நல்லது, லட்சுமி வருவாளா?" என்று கேட்டாள் ஜூடி.

அம்மணிப்பாட்டி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு, "நீ லட்சுமியோடு சண்டையிட்டுக் கொள்ள வில்லையே?” என்று வினாவினாள்.

"இல்லையே, அவளும் என்னோடு மனஸ்தாபம் கொள்ளவில்லை என்றுதான் நம்புகிறேன்" என்று ஜூடி பதிலளித்தாள்.

லட்சுமியை முன்னைப் போலக் காணவில்லை என்று அவள் எண்ணமிடலானாள். பள்ளிக்கூடத்திலே முதல் வாரம் எப்பொழுதும் அவசரந்தான், எதற்கும் நேரமிருக்காது; ஆனால் நீச்சல் குளத்திலே கூட லட்சுமி எப்பொழுதும் விலகி விலகிப் போகிறது போல என்னவோ மாதிரி இருந்தது. தான் சென்றுவந்த இடத்தைப் பற்றியும், ஏரியிலிருந்த படகுகளைப் பற்றியும் விவரமாக அவளுக்குச் சொல்ல ஜூடி எண்ணியிருந்தாள். எப்படியோ அது நடைபெறவில்லை. ஒருவேளை எல்லாம் சரியாகப் போய் விடும்.

அம்மணிப்பாட்டியுடன் போகலாம் என்று ஜூடியின் தாய் சொன்னாள். ஆனால் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னால் எப்பொழுதும் மிதியடிகளைக் கழற்றிவிட மறந்து போகக் கூடாது. 'காஞ்சீபுரத்திலே நூற்றியெட்டுக் கோயில்களிருக்கின்றன. அம்மணிப்பாட்டி அவற்றில் சிலவற்றிற்காவது போக விரும்புவாள்" என்றும் அவள் எடுத்துச் சொன்னாள்.

அதிகாலையிலேயே அவர்கள் புறப்பட்டு வெய்யில் மிகக் கடுமையாவதற்கு முன்னால் பரங்கிமலையைத் தாண்டி ஒரு நாட்டுப்புறச்சாலையில் போய்க்கொண்டிருந்தார்கள். கார் ஓட்டும் இளைஞன் ஏதோ ஒருவகையில் தம்பி முறையுள்ளவன். ஆடுமாடுகளுக்கு மிகப் பக்கத்திலேயே நோஞ்சிக்கொண்டு போகும்படியாக அவன் காரைச் செலுத்தியதால் ஜூடி ஓரளவு பதற்ற மடைந்தாள். அவன் அடிக்கடி மோட்டார் ஹார்னை அடித்தான். சில சமயங்களில் குரங்குகள் பாதையில் இருக்கும்; பழத்துக்காகவோ வேறு பொருளுக்காகவோ அவை சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அருகில் நெருங்கும் வரையிலும் அவை வழியை விட்டு விலகவில்லை.

கடைசியில் காஞ்சிபுரத்திலுள்ள கோபுரங்கள் அவர்களுக்கு முன்னால் தூரத்திலே தெரியலாயின. அவற்றைத் தூபி என்று சொல்ல முடியாது. அவை ஒரு பக்கத்தை விட மற்றொரு பக்கம் அகன்றும், மேலே போகப் போகத் கூம்பியும் இருக்கும்; ஆனால் மாதாகோயில்களில் உள்ளவை போல உச்சியில் அவை கூரான ஒரு முனையில் முடிய வில்லை. திரளாக மக்கள் கூடியிருக்கும் காஞ்சீபுரத்து வீதிகளின் வழியாக அவர்கள் சென்றபொழுது அக்கோபுரங்கள் அவ்வாறு தென்பட்டன. கோயில்களின் வாயில்களிலே அக்கோபுரங்கள் இருபது அடுக்கு மாடிபோல உயர்ந்து நின்றன. கல்லால் ஆன தெய்வ வடிவங்கள் கரங்களைத் தூக்கிக்கொண்டும், வாழ்த்துவது போலக் காட்டிக்கொண்டும், சமய சின்னங்களைத் தாங்கிக்கொண்டும் கோபுரம் முழுவதும் ஒரு சதுரடிகூட இடைவெளியின்றி நெருக்கமாகக் காட்சியளித்தன. இவற்றிற்கெல்லாம் மகுடம் போலச் செதுக்கப்பெற்ற பெரிய மயில் தோகைகள் அமைந்திருந்தன. ஒரு கணத்திலே அந்தச் சிலைகளெல்லாம் நாட்டியமாடத் தொடங்கிவிடுமோ என்று கூறும்படி அவற்றிலே ஒருவகை நெளிவு இருந்தது. எழிலோடு தூக்கிய பாதம், முழங்காலிலும் இடுப்பிலும் வளைவு, ஆகிய நடன நிலைகளை ஜூடி அவற்றிலே கண்டாள்.

வாயிலுக்கு வெளியே மிதியடிகளை விட்டுவிட்டு அவர்கள் உள்ளே சென்றார்கள். பிராகாரங்களில் கல் பரப்பப் பட்டிருப்பதால் காலைச் சுட்டது. விசாலமான மண்டபங்களுக்குச் செல்லப் படிக்கட்டுகள் இருந்தன. மண்டபங்களில் தூண்கள் சூழ்ந்திருந்தன. ஒவ்வொரு தூணும் ஒவ்வொருவகை ; ஒவ்வொன்றும் ஒரு கதையைக் குறிப்பிட்டது. விஷ்ணுவின் பல அவதாரங்களைப்பற்றி அம்மணிப்பாட்டி முன்பே அவளுக்குக் கூறியிருக்கிறாள். எல்லாவற்றையும் தன் முதுகில் சுமக்கும் ஆமை, வராகம், நரசிம்மம், எல்லாம் இங்கே காட்சி தந்தன. வளைந்த இறகுகளுடன் கூடிய அழகிய கருடாழ்வார், குழலூதும் கிருஷ்ணன், யானைத் தலையுடன் கூடிய கணேசர் இவர்களுடைய உருவங்களும் இருந்தன. பார்வதி, லட்சுமி ஆகிய பெண் தெய்வங்களும் இருந்தனர். அவர்களுடைய பெயர்களையே ஜூடியின் தோழிகளில் மிகப் பலருக்கு வைத்திருந்தனர். மண்டை யோடுகளை மாலையாக அணிந்து கொண்டும், நாக்கை வெளியே நீட்டிக்கொண்டும் காளி பயங்கரமாகத் தோற்ற மளித்தாள். சுற்றுப் பிராகாரத்திலே இவர்களின் வடிவங்களெல்லாம் செதுக்கப் பெற்றிருந்தன. இந்துக்களுக்கு இவர்களைப் பற்றி ஏராளமான கதைகள் தெரியும். முடிவின்றி அக்கதைகள் படத்திலும் பாட்டிலும் திரும்பத் திரும்ப வரும். கோயிலுக்குள்ளே கடவுளுக்காக ஒரு பீடம் உண்டு. இறைவன் அல்லது இறைவி அல்லது அவர்கள் இரண்டு பெருடைய சிறிய உருவங்கள் அங்கிருக்கும். சாமந்தி மலர் சாற்றிய அவை எண்ணெயும், புழுதியும் தூமப்புகையும் படிந்து கறுப்பாகத் தோன்றும். சில சமயங்களில் அவற்றிற்கு ஆடையும், துணிகளும் புனைந்திருப்பார்கள். ஜூடியைப் பார்த்துக்கொள்ளும்படி ஓர் அர்ச்சகரிடம் கூறிவிட்டு அம்மணிப்பாட்டி சில கோயில்களின் உட்பகுதிச் சென்றாள். நெற்றியிலே திருநீற்றை இட்டுக் கொண்டும், பூ அல்லது தேங்காய் மூடியுடனும் அவள் வெளியே வந்தாள். அவள் உள்ளே என்ன செய்தாளென்று கேட்க ஜூடி விரும்பவில்லை. அப்படிக் கேட்டிருந்தாலும் அம்மணிப்பாட்டி அதைப் பற்றிக் கவலைப் பட்டிருக்க மாட்டாள் என்ற உணர்ச்சி அவளுக்கேற் பட்டிருந்தது. தெய்வங்களின் பிரார்த்தனை யென்பது நடைமுறையிலுள்ள சாதாரணமான விஷயம் என்று அனைவரும் சிநேக பாவமான முறையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதிலே பய உணர்ச்சியே இல்லை. ஆனால் கடுமையான வெய்யில் - கோயிலைச் சுற்றி வருவது மிகவும் சிரமம்.

பெரும்பாலான கோயில்களில் குளம் இருந்தது. சதுரமாகச் சுற்றிலும் படிக்-கட்டுக்களுடன் அது அழகாகவும் குளிர்ச்சியாகவும் விளங்கிற்று. ஒரு குளத்தின் மறுபக்கத்திலே ஒரு சிலையைப் போல ஒரு கணம் ஏதோ ஒன்று ஜூடிக்கு தோன்றிற்று. அதுதான் அந்தக் கோயிலுக்குச் சேர்ந்த பெரிய யானையென்று அவள் தெரிந்து கொண்டாள். அதன் நெற்றியிலும் கன்னங்களிலும் சாம்பல் நிறத்திலும் கோலம் போல வரையப்பட்டிருந்தது. அது பழகிய பெரிய யானையென்றாலும் காட்டுப்புற்களுக் கிடையே திரியும் காட்டு யானைகளைப் போல அவ்வளவு அழகாக இல்லை.

பெரிய கோபுரங்களின் குளிர்ச்சியான வளைவுகளுக் கிடையே சிறுசிறு கடைகள் இருந்தன. சாதாரண விளையாட்டுச் சாமான்கள், தெய்வங்களின் வடிவங்களான செலுலாய்டு பொம்மைகள், தெய்வப்படங்கள், அரசியல் வாதிகளின் படங்கள் இப்படி எல்லாவற்றையும் கலந்து அங்கே வைத்திருந்தார்கள். வர்ணம் நிறைந்துள்ள அப்படங்கள் சில சமயங்களில் ஜிகினா வேலையுடனிருக்கும்; சில சமயங்களில் சினிமா நட்சத்திரங்களைப் போலக் காணப்படும். ஆனால் அவற்றைப் பற்றி மக்கள் கவலைப் படவில்லை. அங்கே எப்பொழுதும் பிச்சைக்காரர்கள் உண்டு. சில சமயங்களில் அவர்கள் அங்கே வந்து கேட்பார்கள்; சில சமயங்களில் உட்கார்ந்தே இருப்பார்கள்.

ஒரு கோவிலில் காலை உயரத் தூக்கிக்கொண்டிருக்கும் சிவனுடைய உருவம் ஒன்று இருந்தது. பார்வதி தன் கணவனான சிவனை நடனப்போட்டிக்கு அழைத்த கதையை அம்மணிப்பாட்டி ஜூடிக்குச் சொன்னாள். சிவன் தமது காதணியைக் கீழே விழச் செய்து பிறகு அதைக் கால்விரல் களாலேயே எடுத்துக் காதில் அணிந்து கொண்டார். இவ்வாறு செய்து அவர் வெற்றியடைந்தார். "பார்வதி பெண்ணாகையால் அவரைப் போலவே செய்ய முடியவில்லை. அதோ பார், பார்வதி சிவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் - உண்மையில் அவளுக்கு மகிழ்ச்சிதான், அவள் புன்சிரிப்போ-டிருக்கிறாள், பார்" என்று அம்மணிப்பாட்டி கூறினாள். விளையாட்டாக இவ்வாறு செய்யக் கூடியவையும், தெய்வங்களுக்கும் விளையாட்டு ஓரளவு முக்கியமென்று எண்ணு பவையுமான தெய்வங்கள் இருப்பது நல்லதென்று ஜூடி கருதினாள்.

அப்பா, ஒரே வெய்யில் ! மோட்டார்க் காரை நிழலில் நிறுத்தியிருந்தாலும் கதவைத் தொட்டால் சுட்டது. அம்மணிப்பாட்டி ஜூடியை வா என்று கூறி துணிக்கடைக்குள் அழைத்துக் கொண்டு போனாள். உடனே ஒரு ஆள் சேலைகளை எடுத்துக்கொண்டு வந்து மேஜையின் மேல் வீசி வீசிக் குவித்தான். நல்ல காப்பியும் கொண்டுவந்தான். தங்க ஜரிகை நிறைய உள்ள கல்யாணச் சேலைகளும், கட்டம் போட்டதும், பின்னல் வேலை செய்ததும், மீன் போலவும் யானைப்போலவும் கரை போட்டதுமான எல்லா நிறப் பட்டுத் துணிகளும் அங்கிருந்தன.

எல்லாம் அழகாக இருந்தன. மேகவர்ணப் பட்டுத் துணிகள் ஜூடிக்கு முக்கியமாகப் பிடித்தன. வேலைக்காரிகள் அனைவருக்கும் பருத்தி நூலால் நெய்த சேலைகளும், லட்சுமிக்கு இளவாழையிலை போன்ற பச்சை நிறத்தில் பட்டும், சரசுவதிக்கு வெண்ணெயின் இளமஞ்சள் நிறத்திலே பட்டும், இரண்டு வயதான பார்வதிக்குப் பாவாடை தைக்க அச்சிட்ட பட்டுத்துணியும் அம்மணிப்பாட்டி வாங்கினாள். பிறகு அவள் தன் கணவருக்குச் சிறிய தங்க ஜரிகைக் கரையுள்ள மென்மையான வேட்டிகள் வாங்கினாள். பல பேர் அங்கே சேலைகளைப் பார்த்துத் தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தனர். சேலைகள் குவிந்து கிடக்கும் அந்த நீண்ட மேஜை பகட்டான நிறங்களையுடைய பூப்பாத்தியைப் போலிருந்தது. திடீரென்று அம்மணிப்பாட்டி எழுந்தாள். "வா நாம் போய் நல்ல சேலைகள் சிலவற்றைப் பார்ப்போம்” என்றாள் அவள்.

" இவையெல்லாம் நல்லவையல்லவா?" என்று ஜூடி கேட்டாள்.

அம்மணிப்பாட்டி புன்முறுவல் பூத்தாள். “நீயே பார்ப் பாய்.”

அந்தச் சமயத்தில் மத்தளம், குழல் முதலிய வாத்தியங்கள் ஓலித்தன. மூலையை விட்டுத் திரும்பி உயரமான பெரிய மரத்தேர் ஒன்று வந்தது. வர்ணம் தீட்டியும், பொன் முலாம் பூசியும் சிம்மாசனம் போலத் தோன்றிய அதன் மேல் விதவிதமான செதுக்கு வேலைகள் நிறைந்த விதானத் தின் கீழ் ஒரு சிறிய ஊஞ்சலிருந்தது. இரண்டு தெய்வ வடிவங்களை அது தாங்கிற்று. பெரிய மரச்சக்கரங்கள் கிரீச்சிட்டுச் சென்றன. கயிற்றைக் கட்டித் தேரை நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இழுத்துச் சென்றனர். “தெய்வங்களை வைத்து இழுப்பதால் அவர்களுக்குப் புண்ணியம் கிடைக்கிறது" என்றாள் அம்மணிப்பாட்டி.

"அவர்களுக்கு இதிலே விருப்பமிருக்கிறதாகத் தெரிகிறது" என்று கூறினாள் ஜூடி. ஏனென்றால் அவர்கள் ஆரவாரம் செய்துகொண்டும், சிரித்துக் கொண்டும் குதூகலத்தோடிருந்தனர். வயதான இருவர் தேரின் மீது அமர்ந்து வாத்தியம் வாசித்தனர்.

"எல்லாம் நல்லதுக்குத்தான். கடவுளுக்குச் சேவை செய்வதை நாம் விரும்பவேண்டும் என்பது கடவுளின் எண்ணம் " என்றாள் அம்மணிப்பாட்டி.

வீதிகளிலே எல்லா நிறங்களையுமுடைய பலவிதமான பழங்களையும், மளிகைச் சாமான்களையும் விற்கும் கடைகளிருந்தன ; தாழ்வான தாழ்வாரங்களையும் செதுக்குவேலை செய்யப்பெற்ற பெரிய கதவுகளையுமுடைய வீடுகளும் இருந்தன. ஒரு பெரிய கதவு வழியாக அவர்கள் சென்றனர் அங்கே ஒரு முற்றம் இருந்தது. சுற்றிலும் தறிகளிலே அமர்ந்து மெல்லிய நூலைக் கொண்ட நெசவு நாடாக்களைக் குறுக்கே ஒட்டி நெய்து கொண்டிருந்தனர். சில சமயங்களில் ஒரே தறியில் இரண்டுபேர் வேலை செய்தனர் ஒருவன் சேலையின் கரையை நெய்தான்; மற்றொருவன் மற்ற பகுதியை நெய்தான். தறிகளெல்லாம் எளிமையாகத் தோன்றின. அவற்றிலிருந்து பாரக்கற்கள் குழிகளுக்குள் தொங்கின. நீண்டபாவு நூலை அசட்டையாக முடி போட்டு விட்டிருப்பது போலத் தோன்றிற்று. ஆனால் வேண்டிய அளவு இழுவிசையைக் கொடுப்பதிலும் உருவங்களை அமைப்பதிலுமே திறமை வெளிப்பட்டது. நெசவாளிகள் நல்ல தோற்றத்தோடிருந்தனர்; அவசரப்படாமல் வேலை செய்தனர். படித்த பாங்குக் குமாஸ்தாக்களைவிட இவர்கள் நல்ல ஊதியம் பெறுவதாக அம்மணிப்பாட்டி ஜூடிக்குச் சொன்னாள். தந்தையரோடு வேலை செய்யும் சிறு பையன்களுக்கும் நல்ல ஊதியம் கிடைத்தது. செய்யும் வேலை அவர்களுக்குப் பிடித்திருப்பதுபோல நிச்சயமாகத் தோன்றிற்று.

அங்கிருந்து அவர்கள் சலவைக்கல் பரப்பப்பட்ட ஒரு சிறிய அறைக்குச் சென்றார்கள். அங்கே அவர்களுக்குக் குளிர்ந்த இளநீரில் கொஞ்சம் எலுமிச்சம் பழரசம் விட்டுக் கொடுத்தனர். அவ்விடத்தில் தங்க ஜரிகை நூலைக் கால்களுக்கிடையே வைத்து நூற்புக்கழியில் சுற்றிக் கொண்டு மிருந்தனர். அது உண்மையில் ஒரு மெல்லிய பட்டு நூலே; அதன் மேல் வெள்ளிமுலாம் பூசிப் பிறகு மிக இலேசாகத் தங்கம் பூசப்படும். அம்மணிப்பாட்டி இரண்டு சிட்டங்களைக் கையிலெடுத்தாள். "ஜூடி, இது எப்படிப் பிரகாசிக்கிற தென்றும், கனமாக இருக்கிறதென்றும் பார்த்தாயா? இதில் தான் தங்கம் அதிகமாக இருக்கிறது." ஆனால் ஜூடி அதை உண்மையில் பார்க்கவில்லை. பொன்னிறக் கூந்தலை யுடைய இளவரசியின் தலைமுடி போல விளங்கும் பட்டுக் கழிவு நூல் அவளுக்குப் பிடித்திருந்தது. தலைமை நெசவாளி தங்க ஜரிகை நூலை எப்படி நிறுப்பதென்று ஜூடிக்குக் காண்பித்தான். தங்கத்தின் அளவுக்குத் தக்கவாறு சேலையின் விலை இருந்தது. "என்னுடைய பழைய சேலைகளெல்லாம் கிழிந்து போனால் அவற்றைக் குவியலாகப் போட்டுத் தீயில் பொசுக்குவேன். அப்போது அவற்றில் ஜரிகையாக நெய்துள்ள வெள்ளி அல்லது தங்கம் கிடைத்துவிடும்" என்று அம்மணிப்பாட்டி சொன்னாள்.

ஆழமற்ற நீரிலே சூரிய ஒளி படும்போது தோன்றும் நிறம்போல இளநீல வண்ணத்திலே, நட்சத்திரங்களையும், இலைகளையும் தங்க ஜரிகைக் கரையாகப் போட்ட ஒரு புடவையும், கறுப்பு என்று சொல்லும்படி அத்தனை ஆழ்ந்த நீலத்திலே ஒட்டகம் போலத் தோன்றும் சிறுசிறு நல்ல விலங்குகளை வெள்ளி ஜரிகையில் கரையாகப் போட்ட மற்றொரு புடவையும் அங்கிருந்தன. கடைசியில் அம்மணிப் பாட்டி அந்த இரண்டையும் எடுத்துக்கொண்டாள். கழிகளின் மேல் நன்றாக இழுத்து, சுருக்கமில்லாமற் செய்து இரண்டு பேர் அவற்றை மடித்துக் கொடுத்தார்கள். அம்மணிப்பாட்டியும் ஜூடியும் காரில் ஏறிக்கொண்டு புறப் பட்டார்கள். எல்லா ஜன்னல்களும் திறந்திருந்தும் உள்ளே புகுந்த காற்று குளிர்ச்சி தருவதாகயில்லை. வீதிகளையும், கடைகளையும், தெய்வ வடிவங்களைத் தாங்கிய கோபுரங்களை யுடைய கோயில்களின் வாயில்களையும் கடந்து சென்னைக் குச்செல்லும் சாலையை அடைந்தனர். கூடையிலிருந்த பழங்களை எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் தோல்களை வெளியே வீசினார்கள். ஆடுகளும், குரங்குகளும் வந்து அத்தோல் களைத் தின்றுவிடுமாதலால் சாலை அசுத்தமாவதில்லை.

மரங்களிலெல்லாம் சிவந்த புழுதி படிந்திருந்தது. அவர்கள் கடந்து சென்ற ஒவ்வொரு லாரியும் ஒரே புழுதிப் படலத்திலிருந்தது. மாட்டு வண்டிகள் கிரீச்சிட்டுக் கொண்டு மெதுவாகச் சென்றன. நிலம் வறண்டும் மாநிறத் தோடும் இருந்தது; மாதக்கணக்காக அது அப்படித் தானிருக்கும். பசுக்கள் எப்படி மெலிந்து பரிதாபமாக இருந்தன! அம்மணிப்பாட்டியின் இரண்டு பசுக்களுக்கும் இவற்றிற்கும் எத்தனை வேறுபாடு ! அந்தப் பசுக்களுக்கு காவேரி, கோதாவரி என்று இந்தியாவிலுள்ள இரண்டு புண்ணிய நதிகளின் பெயரை வைத்திருந்தனர். நிறைய அவை பால் தந்தன. அம்மணிப்பாட்டி அவைகளுக்கு உலர்ந்த புல்லும், வைக்கோலும் வாங்கிப்போட்டாள். இந்தப் பசுக்களெல்லாம் பாவம், தழைகளையும், முள்ளுள்ள சிறு குற்றுச்செடிகளையும் தேடி அலைய வேண்டும். சென்னை யைச் சுற்றியுள்ள எல்லாப் பிரதேசத்திலும் கோடை காலத் திற்கு முன்பு சென்ற பிப்ரவரியில் ஆழமில்லாத ஏரிகளைப் பார்த்ததாக ஜூடிக்கு ஞாபகம். ஆனால் இப்பொழுது எல்லாம் வறண்டு வெடித்துக் கிடந்தது. சில ஏரிகளின் அடிப்பரப்பில் மட்டும் சாம்பற் பசுமையான தழைகளையுடைய முலாம்பழக் கொடி படர்ந்திருந்தது. அதில் மஞ்சள் நிறமான பூக்களும், இளம் பொன்னிறமான பிஞ்சுகளும் இருந்தன. முதற் பருவ மழைக்குப் பின் கொஞ்சம் புல் வளர்ந்திருந்தது; சில காய் கறிச் செடிகளும் பயிராகியிருந்தன. ஆனால் வெப்பத்தால் அவற்றில் பெரும்பான்மை உலர்ந்து போய்விட்டன.

'எப்பொழுது மறுபடியும் மழை வருமோ!' என்றாள் ஜூடி.

"தீபாவளிக்கப்புறம் வரும். ஜூடி, வீட்டுக்கு வந்து விட்டோம். இதோ உனக்கு என்னுடைய தீபாவளிப்பரிசு - இதுதான் உனக்குப் பிடித்ததென்று நினைக்கிறேன்" என்று அம்மணிப்பாட்டி கூறிவிட்டு ஜூடியின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள். அது ஒரு மேகவர்ணப் பட்டுச் சேலை. நீலமும் பச்சையுமாக அது மீன்கொத்தி நிறத்திலிருந்தது.

"ஆஹா!” என்றாள் ஜூடி.

“இதை ஒரு அங்கியாகச் செய்து கொள்ளலாம்; ஆனால் தீபாவளியன்று காலை நேரத்திற்கு முன்னால் நீ போட்டுக் கொள்ளக்கூடாது. நினைவில் வைத்துக்கொள்" என்றாள் அம்மணிப்பாட்டி.
-------------

6. தீபாவளி

இனிப்புப் பட்சணங்கள் செய்துகொண்டு ஜார்ஜ் அதிக வேலையாக இருந்தான்; ஆனால் என்ன செய்தாலும் இந்தக் குடும்பத்திலே தீபாவளி இருப்பது போல அவர்கள் வீட்டில் இருக்கமுடியாது. தீபாவளி என்றால் வேடிக்கை; ஆனால் அவ்வளவு முக்கியமான பொருள் கொண்டதல்ல. வேலிச்சந்து வழியாக ஜூடி நுழைந்து சென்றபோது அம்மணிப்பாட்டி செய்து கொண்டிருந்த சுவையான பண்டங்களின் வாசனை தோட்டத்திலே மிதந்து வந்தது. "புது அரிசியிட்டுப் பொங்கல் செய்வேன். அது எங்களுக்கு மட்டுமல்ல. எங்களுடைய அருமைப் பசுக்களுக்கும் தீபாவளி உண்டு. நானே என் கையாலேயே அவைகளுக்குத் தீனி வைப்பேன். நாங்கள் சாப்பிடும் உணவையே அவைகளும் சாப்பிடும். அவைகள் ஒரு வேளை போன வருஷத்தை நினைவில் வைத்துக்கொண்டு அதை எதிர்பார்த் திருக்கலாம்" என்றாள் அம்மணிப்பாட்டி.

தீபாவளியன்று பள்ளிக்கூடம் கிடையாது. காலை நேரத்திலெல்லாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பார்க்கச் செல்லுவார்கள்; பரிசுகளும் பட்சணங்களும் கொடுப்பார்கள். பொழுது விடிவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே அவர்களிற் பெரும்பாலானவர்கள் கண் விழித்து எழுந்தவர்களாகையால் பிற்பகலிலே அவர்கள் உறங்குவார்கள். பிறகு படார் படார் படாரென்று வாணவெடிகள் இதில் தொல்லையென்னவென்றால் பட்டாசு வெடிக்கத் தொடங்கி விட்டால் பிறகு அது நிற்பதாகவே காணோம். உறங்கச் செல்ல யாருக்கும் விருப்பமில்லை. மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிறுவர்கள் அனைவருக்கும் பட்டாசு கிடைத்திருக்கிறது. அது எங்கும் வெடிக்கிறது. அந்த நாளோடுகூட அது முடிகிறதில்லை. பெரும்பாலான மக்களுக்கு ஓரளவு சலிப்பு ஏற்படும் வரையில் பட்டாசு வெடி நடந்து கொண்டேயிருப்பதாகத் தோன்றுகிறது.

சுவருக்கு அந்தப் புறத்திலுள்ள வீட்டிலே மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் பையன் ஏராளமான வாணவெடிகளுக்குள்ளே எரியும் தீக்குச்சியைப் போட்டுவிட்டான். அவைகள் எல்லாத் திசைகளிலும் சிதறியோடி வெடித்தன. விருந்தாளிகளில் சிலருக்குத் தீச்சுட்டுக் காயம் ஏற்பட்டு விட்டது. அதனால் அங்கே ஓரளவு பரபரப்பு உண்டாயிற்று. ஜூடியின் தந்தை அங்கு சென்று அவர்களுக்குக் கட்டுப் போட்டார். இருவரைத் தம் காரிலேயே ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். ஆனால் யாரும் அதிகம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பெஞ்சமினுக்குக் கொஞ்சம் பயம். ஜூடியின் தாயாருக்குக் கோபம். "குழந்தைகளுக்கு உணவளிக்கப்போதிய வசதியில்லாதவர்கள் கூட முட்டாள் தனமாகத் தங்கள் கையிலுள்ள காசெல்லாவற்றையும் இந்தப் பட்டாசிலே செலவழிக்கிறார்கள்" என்று குறை கூறினாள் அவள்.

அந்த நாளின் முற்பகல் ஜூடிக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்திலே ஒரு மிக முக்கியமான கூட்டத்திற்காகத் தயாரிக்கப்படும் அங்கியைப் போல அந்த மேகவர்ணப் பட்டுத்துணியில் தைத்திருந்தார்கள். அன்று காலையில் தான் வாசுகி அதைக் கொண்டு வந்தாள். காலை உணவருந்து முன் ஜூடி அதைத் தரித்துக்கொண்டாள். அவர்களைப் பார்க்க ஹரிதாஸும் அவன் தாயும் உட்படப் பலபேர் வந்திருந் தனர். ஹோலிப் பண்டிகை இன்னும் வேடிக்கையாக இருக்கும் என்று ஹரிதாஸின் தாய் கூறிக்கொண்டே யிருந்தாள். "இந்தத் தரித்திரம் பிடித்த தென்னாட்டுக்காரர்கள் ஹோலிப்பண்டிகையைக் கொண்டாடுவதில் - ஆஹா, அவர்கள் டெல்லிக்கு வந்து பார்க்க வேண்டும் - சரியான முறையிலே ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதை அங்கே பார்க்கலாம்". ஹரிதாஸ் 'யோயோ' என்ற விளையாட்டுச் சாமான் வைத்திருந்தான். ஜூடிக்கு அவன் ஒன்று கொடுத்தான். அவற்றைத் தாழ்வாரத்திற்குக் கொண்டு போய் யார் மிக நன்றாக விடுகிறார்கள் என்று அவர்கள் பார்க்கலானார்கள்.

தீபாவளிப் பண்டிகையிலே இரவு நேரத்திலே வைக்கும் விளக்குகள் தான் மிக நல்ல அம்சம். அமாவாசையாகிய முதல் நாள் மாலையில் வீட்டுக் கதவருகிலே பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு விளக்குகளை வைப்பதோடு தொடங்கினார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரும் பௌர்ணமி நாளாகிய கார்த்திகை வரையிலும் ஒவ்வொரு இரவிலும் விளக்குகளை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தனர். பெரும்பாலும் எல்லாம் சிறுசிறு மண் விளக்குகள் தான். நூற்றுக்கணக்கான வருஷங்களாக மக்கள் அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். எண்ணெயை விட்டு ஏற்றிய அவை அமைதியான சிறு சுடராக ஒளிர்ந்தன. அவை உடைந்து போனாலும் பரவாயில்லை; ஏனென்றால் அவை மிக மலிவு; குயவர்களால் செய்யப்பட்டவை. பின் பகுதிகளிலுள்ள தெருக்களில் குடிசைகளையமைத்துக்கொண்டு அவர்கள் விளக்குகள், பானைகள் பூத்தொட்டிகள் போன்ற பொருள்களைச் செய்தனர். நிற்கும் நிலைகளை மாற்றாமல் நாட்டிய மாடுவோர் பழைய முறையையே கடைப்பிடிப்பதுபோல இந்தக் குயவர்களும் தங்கள் மூதாதைகள் அழகென்று கருதி உண்டாக்கியவாறு உருவங்களமைத்துக் கட்டை விரல் அடையாளமிட்டும், களிமண்ணைத் திருகியமைத்தும் அணிசெய்தார்கள்.

அன்று மாலை ஜூடியின் தந்தை ஆஸ்பத்திரிக்குக் காரில் சென்றார். அடுத்த வீட்டு மக்களைப்போலவே விபத்துக் குள்ளாகி அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் இருப்பார்கள் என்று அவருக்குத் தெரியும். எந்த டாக்டர் வந்திருப்பாரென்றும் அவருக்கு நிச்சயமில்லை. ஜூடியை அவர் தம்முடன் அழைத்துச் சென்றார். விளக்குகள் ஒளிரும் வீதிகளின் வழியாகச் செல்வது இன்பமளித்தது. ஓலை வேய்ந்த சேரிகளிலும் சிறு மண் விளக்குகள் சுடர் விட்டன. அனைவரும் உற்சாகமாகத் தோன்றினர்.

லட்சுமியைப் பார்க்க முடியுமென்று ஜூடி நம்பிக் கொண்டிருந்தாள். அவள் தன் பாட்டி வீட்டிற்கு நிச்சயம் வந்திருப்பாள் ; புதிய சேலையைப் பெற்றுக்கொண்டிருப்பாள். அந்த சேலையைக் கட்டிக் கொண்டிருக்கும்போது அவளைப் பார்க்க ஜூடி பெரிதும் விரும்பினாள் - அதை அங்கேயே நிச்சயமாக உடுத்திப்பார்த்திருப்பாள். ஆனால் பெரியம்மாள் சின்னம்மாள் மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்பது ஜூடிக்குத் தெரியும். ஒருவேளை லட்சுமி அவர்களையெல்லாம் சென்றும் பார்த்துப் பரிசுகளும் பட்சணங்களும் கொடுத்துக் கொண்டும், அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டும் இருப்பாள். கொட்டைப் பருப்புக்களை விசேஷமாகக் கலந்து தன் தாயார் செய்த பண்டங்களை அடுத்த வீட்டு வசந்தி கொண்டு வந்தாள். அவள் அவற்றை ஒரு பெரிய இலையில் வைத்து, மஸ்லின் துணியால் மூடி, பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்காக அதற்குமேல் சில மலர்களை வைத்து எடுத்து வந்தாள். தீபாவளிப் பட்சணங்களைக் கடையிலிருந்து வாங்குவது முற்றிலும் தவறு என்று கலியாணமான இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் கருதியிருந்தனர். வழக்கமாக அவர்கள் பட்சணம் தயாரிக்கத் தனிப்பட்ட முறைகளைக் கையாண்டனர். அவற்றைப்பற்றி அவர்களுக்கு மிகுந்த பெருமை.

லட்சுமியை மறுபடியும் ஜூடி பார்ப்பதற்குள் அநேகமாகக் கார்த்திகையே வந்து விட்டது. அதற்குள் வீடுகளிலெல்லாம் கதவுகளுக்கு வெளியிலும், ஜன்னல் ஓரங்களிலும், தாழ்வாரங்களிலும் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைக்கத் தொடங்கி விட்டார்கள். சில இடங்களில் பலவகையான வர்ணங்களுள்ள மின்சார விளக்குகளைக் கோத்து வைத்துப் பெரிய அலங்காரங்கள் செய்திருந்தனர். ஆனால் இளங்காற்று சிறிதே வீசுகின்ற போதும் நீண்டு ஆடி ஒளிவிடும் சிறிய மண் விளக்குகளைப் போல அவை அவ்வளவு அழகாக இல்லை. விளக்கு மாலைகளால் அலங்கரிக்கப் பெற்றதால் அழகற்ற வீடுகளும் கொஞ்சம் அழகாகத் தோன்றின. ஆனால் கார்த்திகைக்குள் விடுமுறை உணர்ச்சி மெதுவாக மங்கிவிட்டது. ’படார், படீல்' என்று கடைசி முறையாகச் சத்தம் செய்துவிட்டு வாணவெடிகளும் முடிவடைந்தன ; பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறந்தன. வயது வந்தவர்கள் தங்கள் வேலையை கவனிக்கச் சென்றனர். இந்த வருஷத்திற்குத் தீபாவளி முடிந்தது.

நீந்துவதற்காக ஜூடி தன் தந்தையுடன் கிளப்புக்குச் சென்றாள். அவள் குளிக்கும் உடையை அணிவதற்குக் குளத்தைக் கடந்து சென்றபொழுது அங்கே லட்சுமி ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்த நிலையில் அவள் எழுந்து போய்விட முடியாது. ஆனால் அவள் புருவங்களை நெரித்துக்கொண்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "என்ன காரணம்?" என்று ஜூடி கேட்டாள்.

லட்சுமி மேஜையின் மேல் விரல்களால் தட்டிக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தாள். புதிய பச்சை நிறச் சேலை யைக் கட்டிக் கொண்டு அவள் பாலேடு போன்ற நிறமுள்ள ரவிக்கை ஒன்றை அணிந்திருந்தாள். "நாங்களெல்லாம் அசுத்தமானவர்கள் என்று உங்களுக்கு எண்ணமா? அழுக்குப் பிடித்த தமிழர்களாம் !" என்று திடீரென்று சொன்னாள். அவள் குரலில் கோபம் தொனித்தது.

"நீ சொல்வது எனக்குப் புரியவில்லை" என்று ஜூடி உண்மையான திகைப்போடு சொன்னாள்.

"நீயும் உனது சினேகிதர்களும் - வடக்கிலிருந்து வந்திருக்கும் உனது புதிய சினேகிதர்களும்!" என்றாள் லட்சுமி,

"ஹரிதாஸையா சொல்கிறாய்?" என்று கேட்டாள் ஜூடி. அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை; ஒரே கவலையாக இருந்தது.

"அவன் பேர் என்னவாக இருந்தாலும் எனக் கென்ன?" என்றாள் லட்சுமி.

"நீ அவனைத்தான் குறிப்பிடுகிறாய் -லட்சுமி, அவனொரு சின்னப்பையன் தானே?"

"சின்னபையன் ! அவன் தாயார் என்ன, அவள் ஒரு பெண்தானே என்று சொல்லுவாயென்று நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு லட்சுமி தன் தோளை ஜூடியின் பக்கம் திரும்பினாள்.

"ஓ, அவள் தான் காரணம்! லட்சுமி, அவள் ஒரு மூடக் கழுதை. இதைவிட வடக்கு அழகானதென்று நம்பவில்லை. அப்படிச் சொல்வது ஹரிதாஸின் கும்றமல்ல; என் குற்றமுமல்ல..." என்றாள் ஜூடி.

ஆனால் லட்சுமி அதற்குச் செவி சாய்க்கவில்லை; அவள் முன்பே தீர்மானம் செய்து கொண்டுவிட்டாள். டெல்லியிலிருந்து எங்களை ஆள முயற்சி செய்து கொண்டுள்ள இவர்கள் தான் எங்களை இழிவாகக் கருதுகிறார்கள்; ஆனால் அப்படி ஆள நாங்கள் விடப்போவதில்லை; பிரிட்டிஷ் காரராகிய நீங்கள் ஆண்டதே மோசம் - ரொம்ப மோசம். இவர்கள் ஆள முடியுமென்று நினைத்தால் - பிறகு தெரிந்து கொள்வார்கள். நாங்கள் இந்த ஹிந்தியைப் பேசவேண்டு மென்று சொல்லுகிறார்கள்: உங்களைவிட இவர்கள் மகா மோசம்!’

அம்மம்மா, இது பயங்கரமான அரசியல் - அவள் மிகைப்படுத்திக் கூறுகிறாள் - அவளை எப்படிப் பேசாமலிருக்கக் செய்வதென்று தெரியவில்லை என்று இவ்வாறு ஜூடி எண்ணமிடலானாள். ஐஸ்கிரீமைச் சாப்பிட்டு முடிக்காமல் கூட லட்சுமி மேஜையைலிட்டு எழுந்து வாயை இறுக மூடிக்கொண்டு போய் விட்டாள். பரதநாட்டி யத்திலே புலியைப் போன்ற மூர்க்கமான பகுதியை அவள் எப்படி அபிநயம் பிடித்தாள் என்பதைத் திடீரென்று ஜூடி சிந்தித்தாள். அவளிடத்திலே லட்சுமி இப்படிப் புலியாக இருப்பதென்றால்! ஜூடியின் கண்களிலிருந்து சூடான இரண்டு பெரிய கண்ணீர்த்-துளிகள் பிதுங்கித் தளஓடு களின் மீது தெறித்து விழுந்தன. குளிப்பதற்கான உடை யணிந்து நீந்துவதற்குத் தயாராக வந்த ஜூடியின் தந்தை அவளை அந்த நிலையிலேதான் கண்டார். என்ன நடந்த தென்று அவருக்கு அவள் தெரிவித்தாள். அவருக்கு ஒரே கலக்கம் ஏற்பட்டுவிட்டது.

"இந்தமாதிரி விஷயந்தான் இந்தியாவை துண்டு போட்டு விடும். அப்படியானால் அது பெரிதும் வருந்தத் தக்கது. இந்த வறுமைமையெல்லாம் துடைத்தெறிந்தவுடனே இது ஒரு வலிமைவாய்ந்த நிலையான நாடாக இருக்க முடியும். இது ஒரே நாடுதான். மொழியைப்பற்றி ஏதோ பிதற்று வதை வைத்துக்கொண்டு ராஜ்யங்களெல்லாம் தனித்தனி யாகப் பிரிந்துபோக வேண்டுமென்று சொல்லுகிறவர்களுக்கு அவர்கள் செய்யும் தீங்கு தெரியவில்லை! ஹரிதாஸின் தாயைப்போன்ற மடத்தனமுள்ள பெண்களும் நிச்சயமாக அவர்களைப்போலவே தீங்கு செய்கிறார்கள் " என்று அவர் பேசலானார்.

"பாம்புப்புற்று" என்றாள் ஜூடி. பள்ளிக்கூடத்தில் அப்படிச் சொல்வதை அவள் கேட்டிருக்கிறாள். அதை அவளே பயன் படுத்துவதற்கு இதுவரையிலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. "ஆனால் ஹிந்தி ஒரு தொல்லை” என்று அவள் மேலும் சொன்னாள்.

"இந்தியாவுக்கு ஒரு அரசாங்க மொழி இல்லாமல் எப்படித் தவிர்க்க முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹிந்தி பேசும் மக்கள் மற்ற மக்களின் நாட்டு மொழியை இழிவாகக் கருதுவது நியாயமில்லை. நேரு அப்படிச் செய்வதில்லை. ஜுடி, இந்தியாவிலே டஜன் கணக்கான தேசிய மொழிகள் இருக்கின்றன. என்றுமே மறக்கத் தகாத நூல்களும், கவிதைகளும், பாட்டுக்களும் அவைகள் சிலவற்றிலே இருக்கின்றன. தமிழிலும் அப்படித் தான். நாம்மட்டும் சற்று சிரமம் எடுத்துக்கொண்டால் வெவ்வேறான எத்தனையோ மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும்" என்று அவள் தந்தை மொழிந்தார்.

"என்னால் முடியாது" என்று சொல்லிவிட்டு ஜூடி மேலும், "அப்பா, லட்சுமியைப் பற்றி என்ன செய்யலாம்? எனக்கு ரொம்பக் கவலையாக இருக்கிறது" என்றாள்.

"நாம் அதிகமாக ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒருவேளை எல்லாம் தானே சரியாகிவிடும். திடீரென்று அப்படியாவதுண்டு. இதற்கெல்லாம் இந்த வெய்யிலும் ஓரளவு காரணமாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் கோபம் வந்துவிடுகிறது. ஜூடி, வா நீந்தலாம். நீந்திக் குளித்த பிறகு உடம்பை உலர்த்திக் கொள்ளும் பொழுதே சாக்லெட் ஐஸ் சாப்பிடலாம். எப்படி?" என்றார் அவள் தந்தை.

நீர் வெதுவெதுப்பாக இருந்தாலும் அதில் நீர்துவதும், சாக்லேட் ஐஸ் சாப்பிடுவதும் ஆறுதலாக இருந்தன. ஆனால் ஜூடியால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. "வட இந்தியா உன்மையில் எப்படி இருக்கும்?" என்று அவள் கேட்டாள்.

"இதைவிடக் கொஞ்சம் வளம் மிகுந்தது. மக்கள் அதிகமான துணியை உபயோகிக்கிறார்கள். நாம் இங்கிலாந்து திரும்புவதற்கு முன்னால் உன்னை அங்கே அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறேன்" என்று அவள் தந்தை பதிலளித்தார்.

"ஓ, நாம் அங்கே போகலாமா?" என்று சொல்லிவிட்டு ஜூடி அதைப் பற்றிக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தாள். பிறகு அவள், "லட்சுமி புதிய சேலை உடுத்தியிருந்தாள். அவளுக்குத் தீபாவளிக்காக வாங்கிய சேலை அது. அதை வாங்கும்படி நான் தான் சொன்னேன்" என்றாள்.

ஜூடியின் தந்தை பரிவோடு 'உம்' கொட்டினார். அவர் சுற்றிலும் பார்த்துவிட்டுப் பிறகு சற்று இரகசியமாக, "லட்சுமியின் நெஞ்சைத் துளைக்கக் கூடிய வேறொரு விஷயம் இருக்கிறது. அவளுடைய தந்தையான குமாருக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. நடக்கின்ற திட்டங்கள் ஒன்றில் மேல் ஸ்தானம் வகிக்கும்படியானவர்களில் ஒருவர் சரிவர நடக்கவில்லை யென்பதை அவர் கண்டுபிடித்தார். அதாவது தமக்கு மேலே உத்தியோகம் பார்க்கும் அந்த மனிதர் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தார். அதைக்கண்டு குமாருக்குக் கோபம் பொங்கிற்று. ஆனால் அந்த மனிதருக்குச் செல்வாக்கு அதிகம். அதனால் குமாரை வேலையி லிருந்து நீக்கும்படி செய்துவிட்டார்கள். அவருக்கு வேறு வேலை இதுவரை கிடைத்ததோ என்னவோ எனக்குத் தெரியாது. கிடைத்தாலும் இதைப் போன்ற அவ்வளவு, நல்லதாக இருக்காது. குமார் பிராம்மணராகப் பிறந்ததால் தான் வேலை போயிற்று என்றும் பிராம்மணர் மேல் அப்படி வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றும் சில பேர் சொல்கிறார் கள். எப்படி இருந்தாலும் மேல் உத்தியோகம் வகித்தவரும் பிராம்மணர்தான்! இவ்வாறெல்லாம் துன்பத்திற்கு உள்ளாக் குகிறார்கள் என்று அது லட்சுமியை நினைக்கும்படி செய்திருக்கலாம். ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியாது" என்று சொன்னார்.

"ஓ, அது நியாயமில்லை! அப்பா, நீங்கள் ஒன்றும் செய்ய முடியாதா?" என்றாள் ஜூடி.

“என்னால் முடியாது. நியாயம் தலை தூக்கி மேலே வரும் என்று நாம் நம்பிக் கொண்டிருப்போம். வாழ்க்கையிலுங்கூட அப்படிப் பல தடவை நடக்கிறது. ஜூடி, இங்கிலாந்து போவதென்றால் உனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குமா?" என்றார் தந்தை.

"ஜானைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது" என்று ஜூடி சொன்னாள். அப்படிச் சொன்ன அதே மூச்சிலேயே அவள் ஹிரிதாஸைப்பற்றி நினைத்தாள். அவன் ஜானை நினைவூட்டினான். இனிமேல் அவனைப் பார்க்காமல் இருந்து விடவேண்டுமோ? அவன் அல்லது லட்சுமி இரண்டு பேரில் யாரோ ஒருவர்தான் என்றால் - ஆனால் அப்படியா? "இங்கிலாந்தில் இத்தனை அனாவசியமான சிக்கல்கள் இல்லை. ஜாதிகள்- சில பேர் மிகவும் வறுமையிலே இருப்பது. அப்புறம் இத்தனை தெய்வங்கள்..." என்று மேலும் சொல்லிவிட்டு அவள் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று வேறு எதையோ நினைத்துக்கொண்டு தன் தந்னதயின் பக்கத்தில் மேலே வந்தாள். "வீட்டுக்குள்ளேயே இருக்கும் அந்தப் பழைய நீச்சல் குளத்தில் நீந்துவதென்றால் இப்பொழுது எனக்கு வெறுப்பாகத் தோன்றுகிறது. அதோடு மாம்பழம் கிடைக்காது."

"நீ இன்னும் இடது முழங்காலை வளைத்துக்கொள்கிறாய். அப்படிச் செய்யாம-லிருந்தால் நீ மூழ்கிச் செல்வது நன்றாக இருக்கும். இங்கிலாந்திற்குச் செல்வதற்கு முன்னால் இதை நீ திருத்திக்கொள்ள வேண்டும். அதோ பார், பெஞ்சமின்னைக் கூட்டிக்கொண்டு அம்மா வருகிறாள்" என்று அவள் தந்தை மொழிந்தார்.

தண்ணீரிலே நிழல் படிந்திருக்கும் ஒரு பகுதிக்கு மெதுவாக நீந்திக்கொண்டே ஜூடி, "லட்சுமி என்னைவிட மிக நன்றாக மூழ்கி நீந்துகிறாள். நாட்டியமாடுவதைப்போல. என்னுடைய கால்கள் சரியானபடி செல்லுமாறு என்னால் எப்படியோ செய்ய முடியவில்லை. அப்பா, நாம் இங்கிலாந்திற்குப் போன பிறகும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்க முடியாதா?" என்றாள்.
-------------

7. மழை

அக்டோபர் கடைசி நாட்களிலே மழைப் பருவங்களில் முக்கியமான இரண்டாம் பருவத்து மேகங்கள் குவியத் தொடங்கின. இரவு முழுவதும் இடி உருமிற்று. "ஒரு சமயம் மறுபடியும் வெள்ளம் வந்தால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் நடந்திருக்குமென்று நம்புகிறேன்" என்று ஜூடியின் தாய் சற்று அச்சத்தோடு கூறினாள். அவளுடைய பொதுநல சேவையெல்லாம் ஏழை மக்களுக்காக ஏற்பட்டதே; அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் வீடின்றியும் பசியோடும் இருந்தனர். கூலி வேலை செய்வது, எப்பொழுதும் மிகுந்த சிரமத்தோடும் அவசரத் தோடும் பாரவண்டிகளைத் தள்ளுவது, மூட்டைகளைச் சுமப்பது இப்படி ஏதாவது வேலை கிடைக்குமென்று நம்பி ஆண்கள் தங்கள் கிராமங்களை விட்டுச் சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு அந்த வேலை கூடக் கிடைக்கவில்லை போலும். அவர்களுடைய மனைவிமாரும், குழந்தைகளும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டனர். அவர்களுக்கு இருக்க எங்குமே இடமில்லை. அதிர்ஷ்டமிருந்தால் ஏதாவது ஒரு வீதியிலே சுவரின் நிழலிலோ மரத்தின் அடியிலோ தங்க இடம் கிடைக்கலாம். மழை பொழியத் தொடர்கினால் கழனியிலே திரியும் விலங்குகளைப்போல அவர்கள் நனைந்தனர். பிறகு ஆடுமாடுகளைப் போலவே சூரியன் தங்களையும் தங்கள் துணிமணிகளையும் உலர்த்தவும், மழைத் தண்ணீர் ஆவியாகி மீண்டும் காற்றில் சேரவும் காத்திருந்தார்கள்.

பொதுநலத்திற்கு உழைக்கும் மக்களில் பெரும்பான் மையோர் இந்தியப் பெண்களாவர். அவர்கள் இந்த ஏழை மக்களுக்குக் கொஞ்சம் உதவி புரிந்தார்கள். ஆனால் மேலும் மேலும் ஏழை மக்கள் வந்து கொண்டேயிருந்தனர். அதனால் சாமான்கள் வேண்டுமென்று ராஜ்ய இலாக்காக்களுக்கு ஏராளமான கடிதங்கள் எழுதவேண்டியதாயிற்று. சாமான்கள் பயன்படாமல் கிடப்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு அனுமதி தர யாருக்கும் பொறுப்பில்லை. எத்தனையோ தடவை டெலி போனில் பேசவேண்டியிருப்பதைப் பற்றியும், யாருக்கும் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டியிருப்பதைப் பற்றியும் ஜூடியின் தாயார் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. அவ்வாறு நடந்தால் தான் காரியம் நடக்கத் தொடங்கும். இப்போது அவள் உணவுப் பொருள்கள், துணிகள், பால் பொடி முதலானவற்றை அவசரத் தேவைக்கெனச் சேகரிப் பதில் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

பொதுநல வேலை செய்கிறவர்கள் அவர்கள் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலும் ராமகிஷ்ண மிஷன் பொதுநல சேவை செய்து வந்தது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தும், இலவச மருத்துவ உதவி செய்தும், பள்ளிக்கூடம் நடத்தியும் அது பணி செய்கிறது என்று ஜூடியின் தாய் தெரிவித்தாள். "ஆனால் இந்துக்களல்லாத மற்றவர்கள் தங்களோடு சேர்ந்து வேலை செய்ய அவர்கள் விரும்புவதில்லை. வேறு மிஷன்களில் பெரும்பான்மையானவை மக்களை இந்துக்களாக இருப்பதைவிட்டு மதமாற்றம் செய்ய விரும்புகின்றன. அது இந்தியாவில் நியாயம் என்று நான் கருதவில்லை. அதனால் அவற்றோடு சேர்ந்து வேலை செய்ய நான் விரும்பவில்லை" என்றாள் அவள்.

“முட்டாள் தனமான மிஷன்கள்!” என்றாள் ஜூடி.

ஒரு நாள் காலையில் பெஞ்சமின் குதூகலத்தோடு கூச்சலிடுவதைக் கேட்டுக்கொண்டே ஜூடி உறக்கத்தி லிருந்து எழுந்தாள். உள்ளே மடித்துவிடப்பட்டிருந்த கொசுவலையை விலக்கிக் கொண்டு அவன் எழுந்து மேல் மாடியிலிருந்து கீழே இறங்கிப் போயிருக்கிறான். தோட்டத்திலே அழகான குட்டைகளாகத் தண்ணீர் தேங்கியிருப்பதை அவன் கண்டான். தோட்டக்காரனை ஏமாற்றிக் கொண்டு உடம்பிலே துணியேயில்லாமல் அவன் அந்தக் குட்டைகளில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான். சென்ற இரவு இடித்த இடியானது மழையைக் கொண்டு வந்திருக்கிறது. தழைகளும் மலர்களும் மழையால் கழுவப்பட்டுத் தோட்டம் எவ்வளவு அழகாக இருந்தது! ஆனால் கதிரவன் மறுபடியும் தோன்றியதும் எத்தனை பூச்சிகள் ! உடனே வெப்பமும் ஆரம்பித்து விட்டது. சிவப்பு நிறமான சேற்றுத் தண்ணீரைத் தெறித் துக்கொண்டிருப்பது முதலில் பெஞ்சமினுக்கு வேடிக்கை யாக இருந்தது. ஜூடிக்கும் ஓரளவு வேடிக்கைதான். ஆனால் சீக்கிரத்தில் அவர்கள் வியர்த்துப் போனார்கள். உடம்பெல்லாம் பிசுபிசுப்பை உண்டாக்கும் வெயில் அது. பிற்பகலுக்குள் தண்ணீரெல்லாம் வற்றி மண்தான் இருந்தது. ஏதாவது ஒருவகையிலே வீட்டிற்குள்ளே நிறைய மண் சேர்ந்துவிட்டது. பெஞ்சமினுடைய கால் தாரையாகவே பெரும்பாலான மண் உள்ளே வந்திருந்தது.

அடுத்த இரவிலே மேலும் மழை பெய்தது. மிக அதிகமாக இல்லாவிட்டாலும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குப் பெய்தது. ஒவ்வொரு இரவிலும் இவ்வாறு மழை. சிலவேளைகளில் தோட்டம் முழுவதும் சிறுசிறு தவளைகள் காணப்பட்டது. அவைகளை மிதிக்காமல் செல்வது மிகவும் கஷ்டம்.

எல்லாம் மெதுவாக மழையில் ஊறி நனையத் தொடங்கின. சாலைகளின் குறுக்கே தண்ணீர் ஓடிற்று. கயிறு இழுப்புப் பந்தயம் நடந்த ஆஸ்பத்திரி மைதானத்தில் நீர் தேங்கிக் கிடந்தது. சென்னையில் உள்ள பெரிய மாளி கைக்கிடையில் தோன்றியுள்ள ஏழ்மையான சேரிகள் பலவற்றில் குடிசைகளிலும் சமையல் செய்யும் இடங்களிலும் தண்ணீர் நின்றது. ஓலையால் வேய்ந்த வீடுகளும், ஓலைத் தட்டிகளும் பருவ மழையைத் தடுப்பதில்லை. மக்கள் அழுக்குப் படிந்து அசுத்தமாகத் தோன்றினர். ஆறுகளிளெல்லாம் வெள்ளம் பெருகி. வழக்கமாக எருமைகள், குற்றுச் செடிகளை மொட்டையாகக் கடித்து கொண்டும் ஆழமற்ற குட்டைகளில் தலையை மட்டும் மேலே காட்டிய வாறு படுத்துகொண்டும் இருக்கும்படியான தாழ்ந்த நிலப் பகுதிகளில் புகுந்தது.

பருவ மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பினர். ஏனென்றால் அந்த மழை இல்லாவிட்டால் விளைச்சல் குறைந்து போய்விடும். ஒவ்வொருவருக்கும் தேவையான நெல் விளைச்சல் முக்கியமாகக் குறைந்து போய்விடும். ஆனால் வேர்வைகூட நன்றாக வெளிப்படாதவாறு காற்றிலே ஆவிநிறைந்திருந்த இப்பருவம் யாருக்கும் இன்பமளிக்கவில்லை. ஓரளவு நன்றாகக் கட்டப்பட்ட வீடுகளும் இந்தப் பருவத்தைத் தாங்க முடிவ தில்லை. வறட்சியான பருவத்திலே கல்போலக் கெட்டியாக இறுகித் தோன்றும் தரையின் மீது இந்த வீடுகளில் பெரும் பாலும் தளம் போடப்பட்டிருக்கும். ஆனால் சில நாட்கள் மழை பெய்ததும் அந்தத் தரை இளகத் தொடங்கிற்று. ஒரு நாள் மோட்டார் கார் விட்டிருக்கும் சாளையின் தளம் இவ்வாறு ஆகிவிட்டது. சக்கரங்களுக்கு அடியிலே செங்கற்களை வரிசையாக அடுக்கி வைத்துத்தான் காரை வெளியில் கொண்டு வர முடிந்தது. பெஞ்சமினுக்கு இது பெரிய வேடிக்கை. ஜார் ஜூக்கும் தோட்டக்காரனுக்கும் அப்படித் தானிருந்தது. ஏதாவது இப்படி நடப்பதை அவர்கள் விரும்பினர்.

நண்பர்களைப் பார்க்கச் செல்வது என்பது அநேகமாக முடியாது. "நல்ல வேளை, தேனீர் விருந்துகள் நடைபெறா!" என்று ஜூடியின் தாய் சொன்னாள். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்திருந்த டாக்டர் ஒருவரை ஒருநாள் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அவரைச் சந்திப்பதற் கென ஒன்றிரண்டு பேரையும் அழைத்தனர். விருந்துக்கு முன்னால் ஜூடி தனது தீபாவளி உடையை அணிந்து கொண்டு அப்பளம், எலுமிச்சம்பழ ரசம், ஆரஞ்சு ரசம் முதலியவற்றை வழங்கினாள். அந்த டாக்டரை அவளுக்குப் பிடித்தது. அவர் வங்காளத்திலிருந்து வந்திருந்தார். அவர் முகத்திலே இனிய புன்சிரிப்பு மலர்ந்திருந்தது. அவர் பல கவிதைகளை எடுத்துச் சொன்னார். அவளுக்கு அவற்றின் பொருள் விளங்காவிட்டாலும் கேட்பதற்கு அவை நன்றாக இருந்தன; கதர் அணிபவர்களில் அவரும் ஒருவர் என்பதை அவள் கவனித்தாள்.

அவர்கள் விருந்து அருந்த அமர்ந்தவுடனே மழை கொட்டத் தொடங்கியது. குறுகலான வெளிமுற்றத்தைத் தாண்டி ஜார்ஜ் சில அடி தூரந்தான் நடந்து வரவேண்டியிருந்தது. இருந்தாலும் அதற்குள் அவன் தெப்பமாக நனைந்துவிட்டான். அவன் சிரமப்பட்டுத் தயார் செய்த கறியிலே ஒருவாளி நிறையத் தண்ணீரை யாரோ கொட் டியது போல் அது நனைந்து விட்டது.

இன்னும் ஒரு பெரிய தொல்லை என்னவென்றால், இவ்வளவு வெய்யில் இருந்தும் துவைத்துப் போட்ட ஆடைகள் சரியாகக் காய்வதேயில்லை. மேஜை விரிப்புக் கள், படுக்கை விரிப்புக்கள், தலையணைகள் எல்லாம் உலர்ந்ததாகவே தோன்றா. ஜூடி தனது மிதியடிகளை ஒன்றிரண்டு நாட்களுக்கு விட்டுவைக்கவே அவற்றின் மேல் பசுமையாகப் பூசணம் பிடித்துக்கொண்டது. ஊசிகளும் குண்டூசிகளும் துரு ஏறின. பசை பூசிய உறைகள் ஒட்டிக் கொண்டன. விளையாட்டுச் சாமான்களின் மேல் உள்ள வர்ணம் விட்டுப் போயிற்று. சில வேளைகளில் ஜூடிக்கு நீராவியற்ற குளிர்ச்சியான காற்றைச் சுவாசிக்க வேண்டும் போலிருந்தது.

எக்ஸ் கதிர் நிழற்படம் எடுக்கும் மோட்டார் வண்டி ஒரு கிராமத்திலிருந்து திரும்பி வரும்போது வழியில் நிற்க வேண்டியதாயிற்று. முன்னாலிருந்த சாலையை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது. நான் அந்த வண்டியில் போயிருந்தால்....' என்று இவ்வாறு ஜூடி எண்ணமிட லானாள். பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த இள டாக்டர் எவ்வாறு தாங்கள் இரவு முழுவதையும் மோட்டார் வண்டி யிலேயே கழிக்க வேண்டியதாயிற்று என்பதை எடுத்துச் சொன்னார். எத்தனை எத்தனையோ வகையாக ஊளையிடு வதையும் குரைப்பதையும் அவர்கள் கேட்டார்கள். அப்படி குரைத்தவை கிராமத்து நாய்களாகவும் இருக்கலாம் - நரிகளாகவும் இருக்கலாம் அல்லது கழுதைப் புலிகளாகவோ, ஓநாய்களாகவோ கூட இருந்திருக்கலாம், அல்லது யானைகளாக இருந்திருக்கலாமென்று ஜூடி நினைத்தாள், காட்டிலிருந்து மெதுவாக வந்து மோட்டார் வண்டியைச் சுற்றிலும் யானைகள் இரவு முழுவதும் நடமாடிக் கொண்டிருந்திருக்கலாம். யாரும் அவற்றைக் கண்டு கொண்டிருக்க முடியாது. துதிக்கைகளை மட்டும் அவை மெதுவாக வீசும். ஒருவேளை யானைகளை மோப்பம் பிடிக்க முடியுமா?

மழை தொடங்கியவுடன் பள்ளி விளையாட்டுக்கள் அறவே நின்றுபோய் விட்டன. கூடைப்பந்து விளையாடும் மைதானம் நீரில் மூழ்கிக் கிடந்தது. கருமையான பருத்த அடி மரங்களோடும் அடுக்கடுக்காகப் பெரிதும் செறிந்துள்ள தழைகளோடும் நல்ல நிழல் கொடுத்துக் கொண்டிருந்த பெரிய புளிய மரங்கள் கூட மழையைச் சொட்டிக் கொண்டிருந்தன. ஹிந்திப்பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நல்லவேளையாக வகுப்பு அறை ஒன்றின் கூரை திடீரென்று ஒழுகத் தொடங்கிற்று. ஹிந்திப் பாடத்தில் ஜூடி வகுப்பிலேயே கடைசி. ஹிந்தி ஆசிரியை தன்னுடைய மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் அதை எடுத்துவிட்டும் கூரையை நோக்கினாள். அவள் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பது வெறும் தோரணைக்காக என்று ஒவ்வொருவரும் சொன்னார். அப்படிக் கூரையைப் பார்த்த பிறகு அவள் ஒரே பரபரப் படைந்தாள். வகுப்பிலுள்ள பெண்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். பிறகு அவள் தன் சேலை முனையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு விரைந்து வெளியே சென்றாள். அவர்களுக்குக் கொடுத்த அப்பியாசத்தை முடிக்க வேண்டிய தேவையில்லாமற் போய்விட்டது.

சிறுமிகளில் ஒருத்தியான தாராவின் பிறந்த நாள் விருந்துக்கு ஜூடி சென்றாள். இளஞ்சிவப்பு, பச்சை நிறங்களில் பட்சணங்கள் செய்திருந்தனா. அவற்றின் மேல் சிறுசிறு வெள்ளி ரேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சாப்பிடலாம். டப்பிகளில் அடைத்துவரும் பாலேடுகளோடு கூடிய பழக்கலவைகளும் இருந்தன. அகலமான தாழ்வாரங்களை உடைய பெரிய வீடுகளில் அது ஒன்று. ஒரு பகுதிக்குக் கூரை போடப்பட்ட முற்றம் ஒன்று உள்ளேயிருந்தது. உண்மையான மலர்களாலும், காகிதப் பூக்களாலும் அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. செப்பிடுவித்தைக்காரன் ஒருவனை அந்த முற்றத்திற்கு வரவழைத்திருந்தார்கள். திண்ணையில் அவர்கள் அமர்ந்து கொண்டனர்; அல்லது தூண்களில் சாய்ந்து கொண்டு நின்றனர். முற்றத்தைச் சுற்றியுள்ள மற்றத் தாழ்வாரங் களுக்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பெரியப்பன் சிற்றப்பன்மார்களாகவும், பெரியம்மா, சின்னம்மா, அத்தைகளாகவும், அவர்கள் மக்களாகவும் தோன்றினர். செப்பிடு வித்தைக்காரன் சில பெண்களின் கூந்தலிலிருந்து கோழிக் குஞ்சுகளை எடுத்தான் ; ஒரு பாம்பையும் எடுத்தான். ஆனால் அந்தப் பாம்பிற்கு நச்சுப்பற்கள் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். ஒரு அழகான சிறிய மரம் வளரும்படி அவன் செய்து காண்பித்தான். ஜூடியின் சட்டைப்பையிலிருந்து அவன் ஒரு தங்கக் கடிகாரத்தை எடுத்தான். அது தங்கம் போலவே தோன்றிற்று. பிறகு அது மறையும் படியும் செய்தான். அவளுடைய அங்கிக்குள்ளே ஒரே பிசுபிசுப்பாக இருந்ததால் அவளால் நகரக்கூட முடிய வில்லை. அவ்வாறில்லாமல் இருந்திருந்தால் அது இன்னும் நல்ல விருந்தாக அமைந்திருக்கும். யாருக்கும் விளையாடலாம் என்று தோன்றவில்லை. மலர்களாலும் நீண்ட கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் ஒன்று தாழ் வாரத்தின் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது, ஊஞ்சலில் ஆடுவது குளிர்ச்சியாகவும் நன்றாகவும்
இருந்தது. மாறிமாறி அவர்கள் ஆடினர்.

சில சமயங்களில் ஜூடி, ஹரிதாஸைப் பார்த்தாள். அவன் தந்தை ஒரு சிறந்த டாக்டர். அவரோடு விஷயங்களைப் பேசுவதில் அவள் தந்தைக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியுண்டு. ஆனால் அவன் தாயைச் சந்திக்கும் போதெல்லாம் அவளுக்கு இப்பொழுது எப்படியோ இருந்தது. என்ன நடந்தது என்று அவளுக்கு முற்றிலும் தெரியவில்லை. இருந்தாலும் கிளப்பில் சில சமயங்களில் அவன் தாய் பேசுவதுதான் லட்சுமியையும் அவளுடைய தோழிகளையும் கோப மூட்டியிருக்க வேண்டும். வயது வந்த ஒருவரை அவ்வாறு பேசாமலிருக்குமாறு செய்வது அவளால் முடியக்கூடிய காரியமல்ல. அப்படிச் செய்ய முயன்றாலும் ஹரிதாஸின் தாய் சிடுசிடுப்போடு காரமாக ஏதாவது பேசக்கூடும். அதை ஜூடி வெறுத்தாள். அவளுடைய வீட்டுக்கு அவள் சென்றபொழுது வட இந்திய முறைப்படி தயார் செய்த உணவை எல் லோரும் உண்டார்கள். உள்ளே கறிவைத்த ஷிங்கராவும், சர்க்கரைப்பாகு ஒழுகும் இனிப்புப் பட்சணங்களும், பருப்புக் கள் தூவிய மங்கலான நிறமுள்ள ஹல்வாவும் இருந்தன. மிட்டாய்களைவிட இவை நன்றாக இருந்தன. ஆனால் ஏராளமான தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது.

லட்சுமியைக் காண முடியவில்லை என்ற உணர்ச்சி எப்பொழுதும் அவளுக்கிருந்தது. அம்மணிப்பாட்டி அதைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியாது. பிறகு துன்பந்தரும் காரியம் ஒன்று நடந்தது, வேலியில் உள்ள சந்தை அதன் வழியாகப் பார்க்கக்கூட முடியாதபடி நன்றாக அடைத்துவிட்டி ருப்பதை அவள் ஒருநாள் கண்டாள். அவர்களுடைய தோட்டக்காரன் செய்த வேலையல்ல அது. தான் செய்யவில்லை என்பதைக் காட்ட அவன் தலையை ஆட்டிக கொண்டு மறுபக்கத்தைச் சுட்டிக் காண்பித்தான் : அம்மணிப் பாட்டிதான் செய்திருக்கிறாள் - ஏன், எதற்காக? ஜூடி என்ன செய்வதென்று தெரியாமல் அதைப் பற்றியே நினைத்து உறங்கும் வரையிலும் அழுது கொண்டிருந் தாள். நாட்கணக்காக இந்தத் துன்ப உணர்ச்சி நீங்கா மலிருந்தது. அதற்குமேல் அதைத் தாங்க முடியாது என்று அவளுக்குத் தோன்றிற்று. வெப்பம் மிகுந்த வர நாள் பிற்பகலில் அவள் சாலை வழியாகச் சுற்றிச் சென்று முன்வாயிலின் வழியாகத் தோட்டத்திற்குள் நுழைந்தாள். அம்மணிப்பாட்டி அங்கிருந்தாள். ஜூடி கலக்கத்தோடு வணக்கம் செய்தாள். பசுக்கள் இரண்டிலும் மிகவும் நல்லதான காவேரி அப்பொழுது தான் கன்று ஈனியிருந்தது. பாலேடு போன்ற நிறத்தோடும் கரிய முகத்தோடும் கன்றுக் குட்டி அழகாகத் தோன்றிற்று. ஒவ்வொருவரும் அதைத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். காவேரி பக்கத்தில் நின்று பொஸ் பொஸ் என்று மூச்சுவிட்டுக்கொண் டிருந்தது. "லட்சுமியைப்பற்றி பேசவந்தேன்" என்று மூச்சுத் தடுமாறக் கஷ்டத்தோடு சொன்னாள் ஜூடி.

அம்மணிப்பாட்டி அதைக் காதில் வாங்கிக் கொண்ட தாகத் தெரியவில்லை. விசனம் தோய்ந்த கண்களோடு அவள் ஜூடியை நோக்கினாள். பிறகு அவள் பாலில் சமைத்த சோற்றை ஒரு பாத்திரத்தில் இருந்து எடுத்து காவேரிக்கு வைக்கத் தொடங்கினாள்.
ஜூடி அவளுடைய சேலை முனையைப் பற்றிக் கொண்டாள். "அம்மணிப்பாட்டி, தயவு செய்து கேளுங்கள். யுகக் கணக்காக நான் லட்சுமியைப் பார்க்கவில்லை. என்னால் இதைப் பொறுக்க முடியாது. அவள் என்னோடு கோபமாயிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். வடக்கத்திய மக்கள் தான் மிக நல்லவர்கள் என்று நான் சொல்லவேயில்லை. ஹரிதாஸின் தாயாரோடு எனக்கு நட்புக் கிடையாது - டெல்லிக்குப் போகவும் நான் விரும்ப வில்லை."

திடீரென்று அம்மணிப்பாட்டியின் உறுதியான சிறிய கரம் தன்னுடைய கரத்தைப் பற்றுவதை அவள் உணர்ந்தாள், என்ன சொல்லுகிறாய்! என் லட்சுமி நினைத்த தெல்லாம் சரியல்ல. எல்லாம் தப்பு என்றா சொல்லுகிறாய்?" என்று அம்மணிப்பாட்டி மெதுவாகக் கேட்டாள். அவளுக்கு அழுகையே வந்து விட்டதை ஜூடி கண்டாள்.

"அவள் என்ன நினைத்தாள் என்பதை நான் சொல்ல வில்லை- ஆனால் விளக்கிச் சொல்வதற்கு எனக்கு அவள் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை - அம்மணிப்பாட்டி, நீங்கள் அவளுக்குச் சொல்ல முடியாதா?"

அம்மணிப்பாட்டி தன் சேலை முனையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். "ஜூடி. லட்சுமிக்கு நீ கடிதம் எழுது. அப்பொழுது ஒருவேளை அவளுக்கு நம்பிக்கை ஏற்படும்" என்றாள் அவள்.

"கடிதம் எழுதவா? அவளை நான் பார்க்க முடியாதா? அவள் சென்னையில் இல்லையா?" என்று கேட்டாள் ஜூடி.

"இல்லை. அப்படித்தான் ஆகிவிட்டது" என்று சொல்லிவிட்டு அம்மணிப்பாட்டி கொஞ்ச நேரம் நிறுத்தினாள். பிறகு மேலும் சொன்னாள். "லட்சுமியின் தந்தையான என் மகன் குமார் மிக நல்ல பையன். அவன் ஒரு எஞ்சினியர்". ஜூடி தலையை அசைத்து அது தனக்குத் தெரியும் என்று தெரிவித்தாள். அவள் தந்தை சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. "அவன் இந்தப் பெரிய எஞ்சினியர் ஸ்தாபனத்தில் வேலை செய்தான். நல்ல சம்பளம் கிடைத்தது; கார் எல்லாம் இருந்தது. பெரிய வேலைகளெல்லாம் அவர்கள் செய்தார்கள். அவன் சந்தோஷ மாக இருந்தான். ஆனால் இந்த ஸ்தாபனத்தில் கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். எல்லாப் பணத்தையும் தாங்களே எடுத்துக்கொள்ள முயலும் மனிதர்கள் அவர்கள். ஒப்பந்தமாக வேலை செய்வதில் ஏமாற்றுகிற மனிதர்கள், என் குமாருக்கு இது தெரிந்தது. அவர்களைத் தடுக்க அவன் முயன்றான். அவனைப் பேசாமலிருக்கச் செய்யப் பணங் கொடுக்க வந்தார்கள். அவன் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டான்.

இம்மாதிரி கெட்ட காரியத்தை நிறுத்துவேன் என்றான் அவன். அரசாங்கத்திற்குச் சொல்லுவேன் என்றான். பிறகு அவர்களுக்குக் கோபம் வந்து விடுகிறது. நல்ல பையனான என் குமாருக்கு எப்படிக் கெடுதல் செய்யலாம் என்று அவர்கள் யோசனை செய்தார்கள். அப்படித்தான் நடக்கிறது. அவனைப் பற்றிக் கெட்ட பொய்யெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால் அது அரசியல் விஷயம். அவன் பிராமணனாகப் பிறந்து விட்டான். அதனாலே இக்கெட்ட ஸ்தாபனத்திலிருந்து என் மகனுக்கு வேலை போய் விட்டது. ஆனால் அவனுக்கு ஒரு சின்ன வேலை கிடைத்திருக்கிறது. மத்திய அரசாங்க வேலை. இங்கிருந்து ரொம்ப ரொம்ப தூரத்திலுள்ள ஒரு கிராமத்திலே பாசன வசதிக்காகக் கால்வாய் வெட்டும் வேலை. அவன் மனைவி, லட்சுமி, கந்தன், சரஸ்வதி, சின்னக் குழந்தை பார்வதி எல்லோரும் அவனோடு போய்விட்டார் கள். அந்தக் கிராமத்திலே ஒரு சின்ன வீட்டிலே அவர்கள் வசிக்கிறார்கள்" அவள் மீண்டும் தன் கண்களைத் துடைத் துக்கொண்டாள்.

"அப்படியா, என்னவோ கெட்டது நடந்துவிட்டது என்று எனக்குத் தோன்றிற்று. ஆனால், அம்மணிப்பாட்டி, இது எப்பொழுதும் இப்படியே இருக்காது. கடைசியிலே நல்லதிற்குத்தான் எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று அப்பா சொல்லுகிறார்..." என்றாள் ஜூடி.

'நானும் அப்படித்தான் நம்புகிறேன். ஆனால் அது ரொம்ப நாளாகும். என் மகனும் அவன் குழந்தைகளும் ரொம்ப தூரத்தில் இருக்கிறார்கள். ஜூடி, நீ லட்சுமிக்கு கடிதம் எழுது" என்று அம்மணிப்பாட்டி சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போய் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து வந்தாள். மற்றவற்றைப் போலவே பென்சிலையும் அவள் தன் சேலையில் முடிந்து வைத்திருந்தாள். காகிதத்தில் அவள் விலாசம் எழுதிக் கொடுத்தாள். "இங்குதான் அவள் இப்பொழுது வசிக்கிறாள். இதற்குப் பொன்னேரி என்று பெயர். இது ஒரு சின்ன கிராமமாக இருப்பதால் எல்லா எழுத்துக்களையும் எண்களையும் விடாமல் எழுதவேண்டும்".

'உங்களுக்கு நன்றி. நான் எழுதுகிறேன். இன்று இரவே எழுதுகிறேன். கொஞ்சம் தயவுசெய்து..."

"சரி, மறுபடியும் வேலியைத் திறந்துவிடச் சொல்லு கிறேன்" என்றாள் அம்மணிப்பாட்டி.
--------------

8. வெள்ளம்

பிசுபிசுப்பான ஒரு நாளுக்குப்பிறகு இரவிலே பெரிய புயல் அடித்தது. மாடிப்படியின் அடிப்பாகத்தில் உள்ள வழியிலே தரை அமிழ்ந்து சிமெண்டிலே வெடிப்பு ஏற்பட்டு விட்டதால் அங்கு ஒரே ஈரம். பெஞ்சமினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. அவன் கூச்சலிட்டான். ஜூடிக்குக்கூட அவள் தாய் வந்து எல்லாம் சரியாகயிருக்கிறதா என்று பார்த்த பொழுதுதான் மகிழ்ச்சி ஏற்பட்டது. தீங்கு செய்யுமோ என்று நினைக்கும்-படியாக மழை பெய்யும் போது அத்தனை பெரிய சப்தம் கேட்டது. இரவு முழுவதும் இப்ப டியே இருந்தது. காலையிலே தோட்டத்திலே முன்பெல்லாம் இரு ததைவிட அதிகமான வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வானம் வெளுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் ஜூடி மொட்டைமா டிக்குச் சென்றதும் அம்மணிப்பாட்டியின் தோட்டத்தில் ஒரு பெரிய குளமாகத் தண்ணீர் நிற்பதைத்தான் முதலில் பார்த்தாள். பசுக்கள் அக்குளத்தில் தண்ணீர்குடித்துக்கொண்டிருந் தன. உண்ணிப்புதர் வேலிக்கு அப்புறத்திலுள்ள வீட்டிலே குழந்தைகள் இலைகளைப் படகுகளாக விட்டுக் கொண்டிருந்தனர். தண்ணீர் தெறித்து ஓடும்படி சின்னப்பையன் ராமகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தான். தூரத்திலே மரங் களுக்கிடையிலும், சாலைக்குக் குறுக்கேயும் எங்கு பார்த் தாலும் புதிய குளங்கள் மின்னிக்கொண்டிருந்தன. சென்னை யிலிருந்து அயலூர் செல்லும் முக்கியமான சாலையில் தடை ஏற்பட்டுவிட்டது. பள்ளிக்கூடத்திற்கும் அவள் போக முடியாது.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு டெலிபோன் மணி அடித் தது. அவள் அன்னை டெலிபோனில் பதில் சொன்னாள்: "ஆமாம்... ஆமாம்... வெள்ளம் இன்னும் அதிகமாகிறது!..... அவர்களை எல்லாம் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு வந்து விட்டீர்களா? நல்லது!... ஆமாம், கம்பளங்களையெல்லாம் கொண்டு வாருங்கள். போதுமான அளவு இருக்கும் என்று நம்புகிறேன். ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தைகள் அவசரத் தேவை நிதியிலிருந்து வழங்கியுள்ள பால் பொடி ஸ்ரீமதி ஞானம்மாளிடம் இருக்கிறது. அவள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டிருக்கிறாளா? ரொம்ப நல்லது. அதைக் கலக்குவதற்கு யாராவது வேண்டும்..." அவள் கண்கள் சுற்றிலும் பார்த்தன. "'ஜூடியை நான் அழைத்து வருகி றேன்... ஆமாம் அவள் நிச்சயம் வரலாம். அவள் உபயோக மாக இருப்பாள். பார்க்கப் பிடிக்காத காட்சிகள் - அதற் கென்ன, அவளுக்குப் பதினாறு வயது ஆகிறதே."

லட்சுமிக்குக் கடிதம் எழுதி முடிக்க ஜூடி முயன்று கொண்டிருந்தாள். அந்தக் கடிதம் எழுதுவது அவள் எண்ணியதைவிட மிகமிக சிரமமாக இருந்தது. பெரியவ ளாகி விட்ட உணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இப்பொழுது அவள் துள்ளி எழுந்தாள். "ஏம்மா, ஆற்றிற்குப் பக்கத்திலுள்ள மக்களைப் பற்றி எனக்குச் சொன்னாயே, அவர்களா?"

"ஆமாம், பாவம், அவர்களுடையு குடிசைகளையெல் லாம் வெள்ளம் அடித்துக்கொண்டுபோய் விட்டது. அவர் களில் சிலர் வெள்ளத்தில் மூழ்கிப் போயிருக்கலாமென்று நான் பயப்படுகிறேன். நகர எல்லைக்கு வெளியே அவர்கள் வசிக்கிறார்கள். அதனால் அவர்களைப் பாதுகாப்பது யாரு டைய பொறுப்பும் இல்லை என்று தோன்றுகிறது. வேறு பக்கங்களில் உள்ள சில மக்களுக்கு ராமகிருஷ்ண மிஷன் உதவி செய்கிறது என்று நம்புகிறேன்; ஆனால் இவர் களுக்கு இல்லை. வெள்ளம் வரப்போவதை அவர்கள் நிச்ச யம் உணர்ந்திருக்க வேண்டும். உணர்ந்து தாங்களே கரைக்கு மேலே வந்திருக்க வேண்டும். ஆனால் எது சரியா னதோ அதை மக்கள் செய்வதில்லை. அவ்வளவு தான் அதைப்பற்றிச் சொல்லலாம். நமக்குக் கொஞ்சம் ரொட்டித் துண்டு பலகாரம் செய்யும்படி ஜார்ஜிடம் சொல்."

"சாலையெல்லாம் வெள்ளமாயிருந்தால் நாம் அங்கே எப்படிப் போய்ச் சேரமுடியும்?"

"அவர்கள் நமக்கு மோட்டார் வண்டியை அந்தப் பக்கமாகச் சுற்றி அனுப்புவார்கள்: கொஞ்சம் தண்ணீர் இருந்தாலும் அது வந்து விடும். ஏராளமாகப் பால் பொடியை கலக்கிக் கொடுக்க வேண்டியிருக்கும். செய்வ தற்கு உற்சாகமாக இராது. இருந்தாலும் இப்படி உதவி செய்ய உனக்கு விருப்பமிருக்குமென்று நம்புகிறேன்."

"அது உற்சாகமற்றதாக இராது. எனக்கு அப்படி இருக்காது. ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனத்தைச் சேர்ந்த நாடுகளிலிருந்து இந்தப் பால்பொடி வருகிறதா?” என்றாள் ஜூடி.

"ஆமாம். தண்ணீர் கொண்டுபோகப் பெரிய தர்மாஸ் குடுவை வேண்டுமென்று ஜார்ஜிடம் சொல். வேறு எந்தத் தண்ணீரையும் குடிக்கக்கூடாது. வெள்ளத்தினாலே முன்னை விட எல்லாம் மோசமாக இருக்கும்" என்று அவள் தாய் மொழிந்தாள்.

சாலையிலே தண்ணீரைச் சிதறி அடித்துக்கொண்டு அரைமணி நேரத்தில் மோட்டார் வண்டி வந்து வாயிலுக்கு முன் நின்று ஹாரன் அடித்தது. அது உள்ளே வந்திருந் தால் ஒரு குளத்திற்குள்ளே மூழ்கியிருக்கும் ! ஜூடியும் அவள் தாயும் ஓரமாகவே சென்று குளத்தைக் கடந்து மோட்டார் வண்டிக்குள் ஏறினர். ஸ்ரீமதி ஞானம்மாள் வண்டிக்குள் அமர்ந்திருந்தாள். நீலப்புடவை அணிந்திருந்த அவள் உற்சாகமான ஒரு பெண்மணி. அவளுடைய பற்களில் பல தங்கத்தால் கட்டப்பட்டிருந்தன. ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தைகள் அவசரத்தேவை நிதி வழங்கியுள்ள பால்பொடி வைத்த பெட்டிகளுக்கிடையே அவள் அமர்ந்திருந்தாள். சில திண்டுகளும் உள்ளே இருந்தன. அவர்கள் அனைவரும் நெருக்கி உட்கார்ந்து கொண்டனர். மோட்டார் வண்டி புறப்பட்டது. மழை நின்று 3 அல்லது 4 மணி நேரம் ஆகிவிட்டபடியால் வெள் ளம் குறைந்து விட்டது. ஆனால் தரையெங்கும் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் ஆறுகளுக்குள்ளே சேர்ந்து கொண்டிருந்தது. அதனால் அவைகள் இன்னும் பெருக் கெடுத்தன. குருமார்களின் தலைப்பாகைகளைப் போன்ற உயரமான தொப்பிகளை அணியும் சென்னைப் போலீஸ் காரர்களில் ஒருவன் ஓரிடத்திலே அவர்கள் வண்டியை நிறுத்தி ஒரு பாலத்திற்கருகே வெள்ளம் பெருகியிருப்பதால் வேறொரு சாலை வழியாகப் போகும்படி சொன்னான்.

கடைசியில் வெள்ளம் மிக மோசமாக இருந்த ஒரு பகுதிக்கருகில் அவர்கள் சென்றடைந்தார்கள். மக்கள் கூட்டங்கூட்டமாகப் பாதைக்கருகிலே நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் பரிதாபமான தோற்றத்துடன் இருப்பதை அவர்கள் கண்டனர். முன் பக்கத்தில் மரங் களுக்கும் புதர்களுக்குமிடையே சிவப்பு நிறமான தண்ணீர் புகுந்து சுழிந்து செல்வதையும் பார்த்தார்கள். ஒரு சிலர் வந்து பால்பொடிப் பெட்டிகளை வண்டியிலிருந்து இறக்கினார் கள். "ஜூடி, வா" என்று அவள் தாய் அழைத்தாள். வெள்ளம் புகுந்திராத மாமரங்களுக்கிடையே உள்ள ஒரு பாதை வழியாக அவர்கள் புறப்பட்டார்கள். ஓரிடத்தில் ஒரு குழி இருந்தது. அதில் தண்ணீ ர் ஆழமாக நின்றது. மிகவும் அசுத்தமான அந்தத் தண்ணீரில் என்னென்னவோ கிடந்தன. தண்ணீரில் மூழ்கி இறந்த ஒரு வெள்ளாட்டை ஜூடி கண்டாள். சேறு படிந்து செத்துக் கிடந்த சில கோழிகளும் கொஞ்ச நேரத்தில் தென்பட்டன.

"ஜூடி, அதோ பார், அந்தப் பள்ளிக்கூடத்தில் தான் எல்லோரையும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்" என்று அவள் தாய் சொன்னாள்.

செங்கற் சுவர்களோடும் தாழ்வான கூரையோடும் கூடிய நீண்ட கட்டடம் அது. அவர்களில் ஒரு சிலருக் காவது தங்க ஒரு கூரை கிடைத்தது. டஜன் கணக்கான குடும்பங்கள் அங்கிருந்தன. சில குடும்பத்தினர் சிறுசிறு மூட்டை முடிச்சுக்களை வெளியே வைத்துவிட்டு மரக் கொம்புகளைக் கொண்டும் தழைகளைக் கொண்டும் குடிசை அமைக்க முயன்று கொண்டிருந்தனர்.

பாதைக்கருகிலே கண்களை மூடியவாறு ஒரு பெண் கிடந்ததை ஜூடி கண்டாள். அவளுடைய கறுப்புப்புடவை நனைந்திருந்தது. "பாவம், அவள் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்க வேண்டும். அவளுடைய சொந்தக்காரர்கள் யார் என்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்" என்றாள் அவள் தாய். எதனாலோ ஜூடி அதைப் பற்றிக் கவலையடையவில்லை. நனைந்து செத்துக் கிடைக்கும் அந்த பெண் விசனப்படுவதாகவோ, தொல்லைப்படுவதாகவே தெரியவில்லை. அவள் அங்கில்லை- அவ்வளவு தான்.

மேடான ஓரிடத்தில் தீ எரிந்து கொண்டிருந்தது. கம்புகளைக் கொண்டு ஒரு பெரிய பானையை அதன்மேல் தொங்கவிட்டிருந்தார்கள். தகர டப்பாக்களையும், மண் சட்டிகளையும். பாலை ஊற்றக்கூடிய வேறு எந்தச் சாமான் களையும் கொண்டு வரும்படி ஸ்ரீமதி ஞானம்மாள் ஒருவனை அவசரமாக அனுப்பினாள். "ஜூடி, நீயும் நானுமாக வேலை செய்வோம். கம்பளங்களின் விஷயத்தை உன் அம்மாள் கவனித்துக்கொள்வாள். நான் வெந்நீரை ஊற்றுகிறேன். நீ நன்றாகக் கலக்கிவிட வேண்டும்" என்றாள் அவள். அவளுக்குக் கிடைத்த பல்வேறு பாத்திரங்களில் பால் பொடியைப் போடத் தொடங்கினாள். ஜூடிக்கு அவள் ஒரு மர அகப்பையைக் கொடுத்தாள். "ஒரு பாத்திரத்தில் பால் தயாரானதும் எனக்குச் சொல். பிறகு அடுத்த பாத்திரத்தை கவனிக்கலாம்."

பால்பொடியில் வெந்நீரைக் கொண்டு ஒரு சட்டி அல்லது தகர டப்பாவிலிருந்து மற்றொன்றுக்குச் சென்றாள் ஜூடி. ஸ்ரீமதி ஞானம்மாள் தன் சேலையைத் தூக்கிக்கட்டி முந்தானையை இடுப்பைச் சுற்றிலும் இறுகக் கட்டிக்கொண்டாள். லட்சுமி நாட்டியம் ஆடுவதற்கு முன் கட்டிக்கொள்வதைப் போலக் கட்டியிருக்கிறாள் என்று ஜூடிக்கு திடீரென்று தோன்றிற்று. கிராமத்துப் பெண்களில் ஒருத்தியைப்போல, ஆனால் அவர்களைவிட உற்சாகமாகவும், காரியத்தில் கண்ணாகவும் ஞானம்மாள் வேலையில் ஈடுபட்டிருந்தாள். பச்சைக் குழந்தைகளோடிருந்த தாய்மார்களை ஒரு வரிசையாக உட்கார வைத்து அவள் பாலை வழங்கிக் கொண்டிருந்தாள். பாலுக்காகக் காத்திருந்தவர்கள் அவளையும், ஜூடியையும் கவனித்துக்கொண்டு மண்தரையில் அமைதியாக வீற்றிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களில் யாராவது சிலர் வந்து தனக்கு உதவி செய்யவேண்டும் என்று ஜூடி விரும்பினாள்; ஆனால் யாரும் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் எப்பொழுதும் செய்த வேலையைத் தவிர வேறு வேலை செய்யமாட்டார்கள். பால் பொடியைக் கலக்கி விடுவது அவர்கள் செய்துள்ள வேலை யில் ஒரு பகுதியல்ல. அதனால் தான் அவர்கள் உதவி செய்ய வரவில்லை போலும் என்று அவள் எண்ணமிட லானாள். ஆனால் அவள் உடம்பெல்லாம் சூடேறிப் பிசு பிசுக்கத் தொடங்கிற்று. அவள் மிகவும் களைத்துப் போனாள். பால்பொடி கெட்ட நாற்றம் அடிப்பதாகத் தோன் றிற்று. அவள் முகத்திலும் தலைமயிரிலும் பால் பொடி மேலும் மேலும் படியலாயிற்று. குழிகளிலும், புதர்களிலும் பரவிக்கொண்டு வெள்ளம் வருவதை அவள் கடைக்கண்ணால் நோக்கினாள். வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து கொண்டிருந்தது.

கடைசியில் அவர்கள் வேலையை நிறுத்தினார்கள். ஜூடி கொஞ்சம் ரொட்டித்துண்டுப் பலகாரம் சாப்பிட்டுவிட்டு, தர்மாஸ் குடுவையிலிருந்த குளிர்ந்த தண்ணீரை நன்றாகக் குடித்தாள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருந்ததால் அவ்வாறு சாப்பிட்டது அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அதை அவர் களுக்குக் கொடுத்து விடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றிற்று. ஸ்ரீமதி ஞானம்மாள் ரொட்டித் துண்டு களுக்குப் பதிலாக இரட்டை பித்தளைத்தூக்குப் பாத்தி ரத்தில் சோறும் குழம்பும் கொண்டுவந்திருந்தாள். பார்ப்பதற்கு அது நன்றாக இருந்தது. ஓரத்திலே படிந்து தூக்கிக் கொண்டிருக்கும் ரொட்டித்துண்டுகளாலான அந்தப் பல காரத்திற்குப் பதிலாக அதைப்போல ஏதாவது தன் தாய் கொண்டு வரவேண்டும் என்று ஜூடி விரும்பினாள். ஸ்ரீமதி ஞானம்மாள் தன் கைவிரல்களால் அதைச் சுத்தமாக எடுத்துச் சாப்பிட்டாள். மீதி இருந்ததை அவள் ஒரு இலை யில் வழித்துப்போட்டாள். கூட்டத்திலிருந்து மெலிந்த கரமொன்று அதற்காக ஏந்தி நின்றது.

வெள்ளத்தால் அடித்துக்கொண்டு போகப்பட்ட சேரி யானது கோடை காலத்திலெல்லாம் தண்ணீர் இருந்த இடத்திற்கு மிகவும் தள்ளி உயரத்திலிருந்தது. ஆனால் மெதுவாக அச்சேரிமக்கள் தண்ணீருக்குப் பக்கம் வரையில் குடிசைகளைக் கட்டிக்கொண்டனர். இரவு நேரத்தில் சில மணி நேரத்திற்குள் ஆற்றில் வெள்ளம் பெருகி அவர்கள் குடிசைகளையும், அவர்கள் கோழிக்கூடுகளையும், கட்டி வைத்திருந்த அவர்கள் ஆடுகளையும், அவர்கள் மீன் வலை களையும், கருவிகளையும் அடித்துக்கொண்டு போய்விட்டது. மூழ்கி இறந்த அந்தப் பெண்ணைப் போலக் குடிசைகளில் வெள்ளம் புகுந்த போது அவர்களிற் சிலர் உறங்கிக் கொண் டிருந்தார்கள். மழையின் சத்தத்தைவிட வெள்ளத்தின் சத்தம் குறைவாக இருந்திருக்கிறது. சிலரால் படுக்கை, ஒரு சில பானைகள் ஆகியவற்றைக் காப்பாற்றி எடுத்துவர முடிந்தது. மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. பெரும்பாலோர் சிறுசிறு இடங்களிலே பயிர் செய்திருந்தார்கள். செழிப்பான ஆற்று வண்டல் படிந்த நிலமாகையால் அங்கு பயிர் செழிப்பாக வளர்ந்தது. ஆனால் அந்த இடமெல்லாம் இப்பொழுது தண்ணீக்குள் மூழ்கியிருந்தது. பயிர் செய்ததெல்லாம் தொலைந்து போயிற்று. சென்னைக்கு வந்து கூலிகளாக வேலை செய்து கொண்டிருந்தவர்களின் நிலைமை அவ்வளவு மோசமில்லை போலும். ஆனால் அவர்களில் ஒரு சிலரால்கூட உணவுப் பொருள்களைக் காப்பாற்றி எடுத்துக்கொண்டுவர முடிய வில்லை. இந்தியாவின் நீண்ட வரலாற்றிலே அடிக்கடி மக்கள் பட்டினியாகவும் நம்பிக்கையற்றும் இருந்ததைப் போலவே மனைவிமார்களும் அவர்கள் குழந்தைகளும் பட்டி னியாகவும் நம்பிக்கை யற்றும் தரையில் அமர்ந்திருந்தார்கள்.

ஜூடி மிகவும் களைத்துப்போய்விட்டாள். வெப்பம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. முச்சுவிடக்கூட முடிய வில்லை. கெட்ட நாற்றம் வீசியது. கூட்டமாக இருந்த மக்களிடத்திலிருந்து அவர்கள் துன்பத்தோடு கலந்து வரும் நாற்றத்தையும், வெள்ளத்தாலும் அது அடித்துக் கொண்டு வரும் பொருள்களாலும் உண்டாகும் நாற்றத்தை யும், அவற்றிற்கு மேலாக உலர்ந்த பால்பொடியின் நாற்றத் தையும் எப்படியோ அவளால் சகிக்கவே முடியவில்லை. ஆனால் காரியம் நடந்தாக வேண்டும். ஸ்ரீமதி ஞானம்மாள் ஓடி ஓடி வேலை செய்து கொண்டும், காரியம் நடப்பதற்கு உதவ முயலும் ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்ததும், தனது சிறு தம்பியைக் கவனித்துக்கொள்ளும் ஏதாவது ஒரு குழந்தையைப் பார்த்ததும் புன்முறுவல் பூத்துத் தன் தங்கப் பற்களைக் காட்டிக் கொண்டு மிருந்தாள்.

அந்தச் சமயத்திலே சாலையிலே மற்றொரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? ஹரிதாஸும் அவன் தாயும் ! ஹரிதாஸ் ஓடி வந்தான். இந்த வெய்யிலிலே அவனால் ஓட முடிந்தது. "ஜூடி, என்ன செய்கிறாய்? நான் உனக்கு உதவி செய்கிறேன்" என்றான் அவன்.

ஜூடி களைப்பைச் சமாளித்துக்கொண்டு பால் பொடியை மிக நன்றாகக் கலக்கிவிடத் தொடங்கினாள்.

"உன்னால் இது முடியும் என்று தோன்றவில்லை" என்றாள் அவள்.

"என்னால் முடியும். எங்கே அந்த அகப்பையைக் கொடு!" என்றான் அவன்.

"சரி, நீ முயற்சி செய்து பார். பொடி சரியானபடி பாலாக வேண்டும். கட்டி கட்டியாய் இருக்கக்கூடாது. ஒரு தகர டப்பாவில் பாலைச் செய்து முடித்ததும் ஸ்ரீமதி ஞானம்மாளிடம் அதை எடுத்துகொண்டு போ. செய், பார்க்கிறேன்" என மொழிந்தாள் அவள்.

ஜூடி பின்னால் அமர்ந்து ஹரிதாஸைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் கொஞ்சம் தடபுடல் செய் வதுபோல் பாசாங்கு செய்தான். ஆனால் அவன் சரியான படி செய்து கொண்டிருந்தான். அவளைப்போலவே வேக மாகவும் செய்தான். வேலை செய்யாமல் சும்மா இருப்பது மிகவும் சுகமாகயிருந்தது. ஹரிதாஸின் தாய் ஜூடியின் தாய்க்கு உதவி செய்யச் சென்றிருந்தாள். அதிகமாகப் பேசினாலும் அவள் நன்றாகக் காரியம் செய்கின்றாள் என்று ஜூடியின் தாய் பின்னால் தெரிவித்தாள். ஹரிதாஸைக் கவனிப்பதை விட்டுவிட்டு ஜூடி வெள்ளத்தண்ணீரின் விளிம்பைக் கவனிக்கத் தொடங்கினாள். வெள்ளம் அதற்கு மேல் முன்னேறி வரவில்லை. அது மெதுவாகப் பின் வாங் கிற்று, அப்படிக் குறையும்போது குச்சிகளையும், பழத் தோல்களையும், செத்த குரங்கையும் - அது குரங்குதானே? கந்தைகளையும் இப்படிப் பலவற்றைத் தாறுமாறாகப் பின் னால் விட்டுச் சென்றது. ஏதாவது மதிப்புள்ள பொருள் கிடைக்குமாவென்று இரண்டு கிராமப் பெண்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீமதி ஞானம்மாள் ஜூடியிடம் வந்து தன்னுடைய சேலை மடிப்பிலிருந்த தூய்மையான ஒரு பெரிய கைக்குட்டையை எடுத்தாள். "ஜூடி, இதன்மேல் தலையை வைத்துக் கொஞ்சநேரம் படுத்துக்கொள். நீ தூங்கா விட்டாலும் பரவாயில்லை..."

நாற்றமடிக்கும் மண்ணையும் எலும்புகளையும் விலக்கி ஒரு தூய்மையான கைக்குட்டையை வைத்துக்கொண்டு படுத்திருப்பது சுகமாயிருந்தது. கொஞ்ச நேரம் இப்படிக் கண்ணை மூடிக்கொள்ளலாம்.

"இன்னும் ஒரு பெட்டி பால்பொடி வேண்டியிருக்கும். நான் அதைத் திறக்கிறேன்" என்று ஹரிதாஸ் சொல்லு வது திடீரென்று அவள் காதில் ஒலித்தது. நிழலெல்லாம் இடம் பெயர்ந்து போய்விட்டது. ஆகா, தண்ணீரும் கீழே வெகு தூரத்திற்கு போய்விட்டது. அவள் ஆண்டுக் கணக் காகத் தூங்கியிருக்க வேண்டும் !
இதற்குள் சேரி மக்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கொடுத்தாயிற்று. வெளியிலே நின்றிருந்தவர்கள் மரக்கொம்புகளைக் கொண்டும், கம்பளங்களைக் கொண்டும், ஒரு மாதிரி தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டனர். அன்றிரவும் மறுபடியும் மழை வரலாம். ஆற்றிலே வெள் ளம் முன்னால் வந்த உயரத்தைவிட அதிகமாக வந்தாலும் அவர்கள் பள்ளிக்-கூடத்திற்குள் ஆபத்தில்லாமல் தங்கிக் கொள்ளலாம். பள்ளிக்கட்டடம் உயரமான நிலப்பகுதியில் அமைந்திருந்தது.

தனக்கு இருந்தது போலவே ஹரிதாஸின் தலையிலும் சொக்காய் எங்கும் பால் பொடி பட்டிருப்பதை ஜூடி கவனித் தாள். அவனுக்குக் கொஞ்சம் களைப்பு ஏற்படலாயிற்று பாலைக் கலக்குவதில் ஜூடி முறைபோட்டுக் கொண்டு பங்கெடுத் துக்கொள்ள வந்ததைக் கண்டு அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி யுண்டாயிற்று. ஆனால் அன்று மாலையில் மற்றொரு டப்பாவுக்கு மேல் அவர்கள் பயன்படுத்தவில்லை. அவர்கள் கொண்டுவந்த அரிசி பருப்பு எல்லாவற்றையும் அந்த மக்கள் அனைவருக்கும் கொஞ்சமாவது சாப்பிடக் கிடைக்கு மாறு வழங்கினார்கள். பிறகு அவர்கள் மோட்டார் வண்டி யில் ஏறிக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பினார்கள். மேலும் மழை பெய்ய மேகங்கள் வடகிழக்கு வானிலே குவியத் தொடங்கின. தங்கக் கூரையில்லாத மக்களைப் பற்றி நினைப்பதே பயங்கரமாக இருந்தது. அதே சமயத் தில் அவர்களுக்குச் சேவை செய்ய முடிந்ததை எண்ணிப் பார்ப்பது மகிழ்ச்சியளித்தது. வெள்ளம் பரவிய சாலைகளி ளெல்லாம் சேறு படிந்திருந்தது.

"எனக்கு இன்று பள்ளிக்கூடம் போக முடியவில்லை. நீ போக முடிந்ததா?” என்று கேட்டான் ஹரிதாஸ்.

"இல்லை, சாலையிலே அந்தப் பகுதியில் நாளைக்கு வெள் ளம் இருக்காது என்று நம்புகிறேன்!" என்றாள் ஜூடி,
-------------

9. தேசீய வளர்ச்சித் திட்டப்பிரதேசம்

லட்சுமிக்கு ஜூடி கடிதம் எழுதினாள். நிறைய அடித் தும் கையால் துடைத்து அழித்தும், ஈரமாகியும் இருந்தது அந்தக் கடிதம். அதனால் அவள் தாய் அதை மறுபடியும் திருப்பி எழுதும்படி சொன்னாள். ஆனால் அதிக வெப்பமாக இருந்தது. ஜூடிக்குத் திருப்பி எழுத முடிய வில்லை. அவ்வாறு எழுதியிருப்பதை லட்சுமி பொருட்படுத்த மாட்டாள். கடைசியில் அதே கடிதத்தை உறைக்குள் போட்டாள். ஸ்பென்சருக்கு அவர்கள் போனபோது அங் குள்ள தபால் நிலையத்திற்கு அதை அவள் எடுத்துச் சென்று தபாலில் சேரும்படி செய்தாள். பிறகு அவள் தாய் வெண்ணெயும், பிஸ்கோத்துக்களும், ஆஸ்பிரின் மாத்திரைகளும், மற்றப் பொருள்களும் வாங்கிக்கொண்டி ருக்கும்போது ஜூடி ஸ்பென்சர் சிற்றுண்டிப் பகுதியில் ஆரஞ்சுப் பானம் அருந்தினாள். அதன்பின் அவர்கள் எவர்சில்வர் பாத்திரங்களும், பித்தளை செப்புப் பாத்திரங் களும் விற்கும் ஒரு கடையிலிருந்து தண்ணீர் கொதிக்க கொதிக்க வைக்கும் கொதிகலம் ஒன்றை வாங்கினார்கள். தட்டுத்தட்டாக அமைந்த நிலைப்பெட்டியிலே பிரகாசமான பாத்திரங்களை அடுக்கி வைத்திருந்த அந்தக்கடை ஒரு குறுகலான குகை போன்றிருந்தது. பித்தளைப் பாத்திரங் களும், செப்புப்பாத்திரங்களும் மிக அழகாக இருந்தன. தண்ணீர்க் குடங்கள் தான் முக்கியமாக அழகு மிக்கவை. எந்த அளவில் வேண்டுமானாலும் அவற்றை வாங்கலாம். ஆனால் அவை இந்தியாவிலேயே இப்பொழுது செய்யப்படும் எவர் சில்வர் பாத்திரங்களைப் போல அவ்வளவு பயன்படுவ தில்லை. கொதிகலத்தின் கைப்பிடியில் தன்னுடைய பெயரின் முதல் எழுத்துக்களைப் பொறிக்கும்படி அவள் தாய் சொன்னாள். ஒரு சிறிய மின்சாரத் துறப்பணத்தை எடுத்து ஒலியெழுப்பிக்கொண்டு ஒருவன் வேலை செய்தான். எழுத்துக்கள் பொறித்தாகிவிட்டன.

"லண்டனிலே இதைச் செய்யச் சொன்னால் வாரக் கணக்காக ஆகியிருக்கும்" என்றாள் அவள் தாய். எந்தச் சிறு காரியம் செய்ய வேண்டுமானாலும் இவ்வாறுதான் விரைவில் முடிந்தது. அவள் தந்தை தன் மூக்குக் கண்ணாடியின் பக்கச் சட்டத்தை ஒரு கணத்திலே சரி செய்து கொண்டுவிட்டார். அதைச் சரிப்படுத்தியவன் அவ்வேலை யிலேயே மகிழ்ச்சியடைவதாகத் தோன்றிற்று. பிறகு அவர்கள் மோட்டார் வண்டி பழுது பார்க்குமிடத்திற்குச் சென்று புதிய டயர் கிடைக்க எத்தனை நாளாகும் என்று கேட்டார்கள். இங்கிலாந்தைவிட இங்கே இதற்கு அதிக நாள் பிடித்தது. பிறகு அவர்கள் இந்தியா காப்பி மாளி கைக்குச் சென்று ஒரு பவுண்டு காப்பித்தூள் வாங்கினார் கள்; ஒவ்வொரு கோப்பை காப்பியும் குடித்தார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் ஜூடி தன் கடிதம் பொன்னேரிக்குச் சென்று லட்சுமிக்குக் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் பற்றியும் லட்சுமி எப்பொழுது பதில் எழுதுவாள் என்பதைப் பற்றியுமே எண்ணிக்கொண்டிருந்தாள்.

வெள்ளம் மிகவும் குறைந்துவிட்டது. அவள் தாய் ஸ்ரீமதி ஞானம்மாளுடன் சேரி மக்கள் தங்கியிருந்த இடத் திற்குச் சென்றாள். நிலைமையைச் சமாளிக்க மக்கள் முயன்று கொண்டிருந்தனர். நீரில் மூழ்கி இறந்தவளை அவளுடைய மக்கள் முறைப்படி தகனம் செய்துவிட் டார்கள். ஆனால் சேரி மக்களில் வெகுபேர் பள்ளிக்கூடத் திலேயே தங்கியிருக்க விரும்பினார்கள். குடிசைகளுக்கு இருந்ததைவிட பள்ளிக் கட்டடத்திற்கு நல்ல கூரை இருந் தது. ஆனால் அங்கு தங்குவதென்பது முடியாது. அந்தப் பள்ளிக்கு வந்த குழந்தைகளை எங்காவது வைத்துப்பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆதலால் சேரிமக்கள் கூடிய சீக்கிரத்தில் புதுக்குடிசைகள் அமைத்துக்கொள்ள ஏற்பாடு செய்வதுதான் முக்கியமான காரியம். அதற்கு அரசாங்க உதவியைப் பெற ஜூடியின் தாய் முயன்று கொண்டிருந்தாள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஜுடி தனக்குப் பதில் கிடைக்குமென்று எண்ணமிடத் தொடங்கினாள். மாதக் கணக்காக யாருக்கும் கடிதமே வராத சிறு கிராமத்திற்குத் தபால் போய்ச் சேர ஒருவேளை அதிக நாட்கள் ஆகலாம். ஆனால் ஒரு வாரம் கழிந்தது; மற்றொரு வாரமும் கழிந்தது. அப்பொழுதும் கடிதம் வரவில்லை. "தபால் நிலையம் இல் லாத ஒரு சிறு கிராமத்தில் லட்சுமிக்குத் தபால் தலை வாங்குவது கஷ்டமாக இருக்கலாம்" என்றாள் அவள் தாய் ஆனால் லட்சுமிக்குப் பதில் எழுதவேண்டுமென்ற விருப்பம் இருந்தால் எப்படியாவது சமாளித்திருப்பாள் என்று ஜூடி கருதினாள். ஒரு வேளை பதில் எழுத லட்சுமிக்கு விருப்ப மில்லை போலும்.

அவள் அம்மணிப்பாட்டியிடம் சென்று அதைப்பற்றி அவளுடைய கருத்தைக் கேட்டாள். அம்மணிப்பாட்டி சும்மா தலையை அசைத்தாள்; அவள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. குமாரிடமிருந்து கடிதம் வருவதற்குச் சில சமயங்களில் வெகுநாள் ஆயிற்று. ஜூடி பொறுத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்கப் பழகுவது நல்லது.

மழை மெதுவாக நின்றுவிட்டது. வெப்பம் குறைந் திருப்பதையும் பிசுபிசுப்பு மட்டமாக இருப்பதையும் ஜூடி திடீரென்று உணர்ந்தாள். ஆரஞ்சுப் பழம் கிடைக்கும் பருவம் தொடங்கிவிட்டது. மாம்பழம் இல்லாததற்கு அது பெரும்பாலும் ஈடு செய்தது. பலவகையான ஆரஞ்சுகள் கிடைத்தன. தோல் கெட்டியானதும், சுவை மிக்கது மான ஆரஞ்சுப் பழங்களும், தோல் கெட்டியற்றதும், ரசம் நிறைந்ததும், இனிப்பு மிகுந்ததுமான பழங்களும், வேறு புளிப்பு வகையான பழங்களும் இருந்தன. சாலைகளிலே வெள்ளம் உண்டாக்கிய குழிகளைச் செப்பனிடத் தொடங்கி னார்கள். தோட்டத்தில் இருந்த புல்லின் அடிக்கட்டைகள் செம்மண்ணை மறைத்து உயர்ந்து வளர்ந்தன. நீளமான ஒரு கத்தியைக் கொண்டு வீசி அவற்றைத் தோட்டக்காரன் செதுக்கிக் கொண்டேயிருந்தான். அனைவருக்கும் உற் சாகம் மிகுந்தது. கோடைகாலம் முடிவடைந்தது.

நீச்சல் குளம் கலங்கலாகவும் தழைகள் நிறைந்து மிருந்தது. அதைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் கொஞ்ச நாள் அதில் நீந்த முடியாமற்போயிற்று. சுறாமீன்களிருப்பதால் கடலில் குளிக்கக்கூடாது என்று ஜூடியின் தாய் ஒரே கண்டிப்பாகக் கூறிவிட்டாள். ஆனால் சுறாமீன் யாரையும் விழுங்கியதாகவோ, கடித்ததாகவோ காணோம். மீன் பிடிப்பவர்கள் சிறுசிறு கட்டுமரங்களில் போய்க் கொண்டுதானிருந்தார்கள். எதற்காக அந்தக் கண்டிப்பு என்று ஜூடிக்கு விளங்கவில்லை. கரையில் மோதும் அலைகளுக்கு அப்பால் சென்று ஹரிதாஸ் நீந்தி னான். அவன் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு சென்றான் அவன் தந்தையும் சுறாமீன்களைப் பற்றிக் கேள்விப்பட்டார். அதனால் கடலில் நீந்தக்கூடாதென்று அவனைத் தடை செய்துவிட்டார். இன்னும் கடிதமே வரவில்லை.

"ஏதாவது ஓரிடத்திற்குப் போய்ப் பார்த்து வரலாமென்று தோன்றுகிறது. இப்பொழுது வெய்யிலும் அதிகமில்லை. சாலைகளும் சரியாக இருக்கும்" என்று ஜூடியின் தாய் சொன்னாள். "சரி, தேசீய வளர்ச்சித் திட்டம் நடைபெறும் ஏதாவதொரு கிராமத்திற்குப் போய் அங்கு என்ன நடக் கிறது என்று பார்த்து வந்தால் என்ன?" என்று அவள் தந்தை கேட்டார்.

ஜூடி திகைப்போடு நோக்கினாள். “தேசீய வளர்ச்சித் திட்டத்தைப் பற்றி நான் சொன்னது உனக்கு நினை வில்லையா? இந்தியா வளம் பெறுவதற்கு, கிராமத்தில் வசிக்கும் மக்கள், அவர்களுக்குத் தேவையானவற்றில் எவற்றை யெல்லாம் செய்து கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்ய உதவும் திட்டந்தான் அது. அந்தத் திட்டம் நடக்கும் பிரதேசம் ஒன்றிற்குப் போய், பஞ்சைக்கொண்டு செய்யும் தொழில்களையும், பள்ளிக் கூடங்களையும், புதுப்பயிர் வகைகளையும், மற்றவற்றையும் பார்த்து வரலாம். பார்க்க நன்றாகவே இருக்கும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சும்மாயிருந்த ஏழைமக்கள் திடீரென்று தாங்களே சொந்தமாகக் காரியங்கள் செய்யத் தொடங்கி யிருப்பதைப் பார்ப்பது உண்மையில் உற்சாக மாகவேயிருக்கும். நாம் உணவைக் கையோடு எடுத்துக் கொண்டுபோய் திறந்த வெளியில் சாப்பிடலாம். தங்கும் விடுதியொன்றிலே போய்த் தங்கலாம்...” என்று அவன் தாய் சொன்னாள்.

" அங்கே யானையிருக்குமா?" என்று கேட்டாள் ஜூடி. மலையிலே அப்படியொரு தங்கும் விடுதியிலிருந்து தான் ஒரு யானையின் மீதேறிக்கொண்டு காட்டு விலங்குகளை அவள் பார்த்தாள்.

<இங்கிருக்குமென்று தோன்றவில்லை. ஆனால் இந்தியா விலே என்னவெல்லாம் இருக்குமென்று யாரும் சொல்ல முடியாது" என்றாள் அவள் தாய்.

வார இறுதியில் வரும் விடுமுறை நாட்களில் வெகு தொலைவில் உள்ள இடங்களில் ஒன்றுக்குப் போவதென்று அவர்கள் கடைசியாகத் தீர்மானித்தார்கள். யாராவது நண்பர்கள் வீட்டுக்கு ஆயா பெஞ்சமினை அழைத்துக் கொண்டு போய்த் தங்கியிருக்கவேண்டுமென்றும் தீர்மான மாயிற்று. ரொட்டித் துண்டுகளைக் கொண்டு ஜார்ஜ் பல காரம் செய்தான். தர்மாஸ் குடுவைகளிலெல்லாம் தண்ணீர் நிறைத்துக் கொண்டனர். ஆரஞ்சுப்பழங்களும், முந்திரி முதலிய பருப்பு வகைளும் எடுத்துக்கொண்டனர். வழியிலே இளநீர் கிடைக்கும் என்பது நிச்சயம். இரவு நேரத்திற்குத் தேவையானவற்றை ஜூடி ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டாள். படுக்கை விரிப்புக்களை எடுத்துக் கொண்டனர். தங்கும் விடுதியில் இந்திய வகைப் படுக்கை கள் இருக்கும். அவற்றிற்கு மேல் பஞ்சடைத்த மெத்தைகளை விரித்துக்கொண்டால் மிக சௌகரியமாக இருக்கும்.

முதல் நாள் இரவே அவர்கள் ஆயாவையும் பெஞ்ச மினையும் விட்டுவிட்டு வந்தனர். அதிகாலையில் வெளிச்சம் தோன்றும் போதே அவர்கள் புறப்பட்டார்கள், பறவை களெல்லாம் பாடிக் கொண்டு நன்றாக இருந்தது; குளிர்ச்சியாகவும் இருந்தது. அப்பொழுதுதான் திறக்கும் சிறு கடைகளையும், மாட்டு வண்டிகளையும், வேலைக்காக நடந்து வரும் மக்களையும் கடந்து சென்னையை விட்டு அவர்கள் சென்றார்கள். பட்டணத்தை அவர்கள் கடந்துவிட்டார்கள். இருபக்கங்களிலும் வயல்கள் தோன்றின. நீண்ட கோடை மாதங்களிலெல்லாம் வரண்டு, பசையற்றும் கிடந்த வயல்கள் இப்பொழுது மழையின் உதவியால் கிடைத்த வண்டல் மண்ணிலும் தேங்கிய தண்ணீரிலும் நட்ட நெற் பயிரின் அழகான பசுமை ஒளி போர்த்து விளங்கின.

வரப்புகளால் பிரிக்கப்பட்ட அந்த வயல்கள் சிலவற்றில் ஆண்களும், பெண்களும் தண்ணீருக்குள் நடந்து சென்று சிறு கட்டுக்களாக உள்ள நெல் நாற்றுக்களை நடவு நட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சில வயல்களில் அப்பொழுதே நெற்பயிர் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. இங்கிலாந்திலே வசந்த காலத்தில் இருப்பதைவிட இங்கு மைல் கணக்காக ஒரே பசுமையாக இருந்தது. சில சமங்களில் அவர்கள் மழையால் உண்டான ஆழமற்ற ஆனால் அகன்ற குளங் களைக் கடந்து சென்றார்கள். சிவந்த தண்ணீரிலே அமைதி யான நீல வானம் பிரதிபலிப்பதால் ஆச்சரியமான ஒரு புது நீல வர்ணம் தோன்றிற்று. கருவேல மரங்களின் அடி மரத்தைச் சுற்றிலும் அந்தக் குளங்களிலுள்ள தண்ணீர் மோதிக் கொண்டிருந்தது. பயிர்களுக்குப் பாய்ச்சுவதற் காகக் குளங்களில் அணை கட்டியிருந்தனர். அவற்றின் கரையோரங்களில் சிறு சிறு பூச்செடிகள் வளர்ந்திருந்தன. அங்குமிங்கும் கரும்பு வயல்கள் தென்பட்டன. மக்களே வேலை செய்து கரும்புச் சாற்றைப் பிழியக் கூடிய எளிய உருளை இயந்திரங்களைச் சில கிராமங்களில் ஜூடி கண்டாள். ஆனால் தொலைவில் உள்ள ஓரிடத்தில் கரும்புத் தொழிற் சாலை ஒன்று இருந்தது. கரும்பை ஏற்றிக்கொண்டு சில வண்டிகள் அதை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. பருத்தி, கடுகு முதலிய பயிர்கள் கோடையிலேயே அறுவ டையாகிவிட்டன ; இப்பொழுது அவற்றை மீண்டும் விதைத்திருந்தார்கள் அல்லது நட்டிருந்தார்கள்.

ஆட்டு மந்தைகளை ஓட்டிக்கொண்டு செல்லும் சிறுவர் களையும், கிராமச் சந்தைகளையும், கிணற்றடியே காத் திருக்கும் பெண்களையும், அடுப்பெரிக்க உபயோகிக்கும் வரட்டிகளை உலருவதற்காக சுவர்களில் தட்டிவைக்கும் பெண்களையும் அவர்கள் கடந்து சென்றார்கள். நோயுற்ற மக்கள் அல்லது ஏதாவது காயமடைந்த மக்களே ஜூடியின் தந்தையின் கண்ணில் பட்டார்கள். அவர்களைப் பற்றி அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் ஏராளமாகத் தென்பட்டனர். அவர்கள் துன்பமும் பெரி தாகக் காணப்பட்டது. இலவச மருத்துவசாலைக்குப் போகாவிட்டால் ஒரு மாத்திரை ஆஸ்ப்பிரின் வாங்கு வதற்கும், முழுமையாக ஓரணா செலவாகும். கிராமக் கடைக்காரன் ஒரு புட்டி வாங்கி வைத்துக்கொண்டு அப்படி அவர்களுக்கு விற்று ஏராளமாக லாபம் அடித்துக் கொள்வான். ஆல் ஏழை ஒருவனுக்கு முழுமையாக ஒரு புட்டி வாங்குவதென்பது முடியாத காரியம்.

சில இடங்களில் சாலையைச் செப்பனிட்டுக் கொண் டிருந்தார்கள். சேலை கட்டிய பெண்களும், அநேகமாக ஒன்றுமே அணிந்து கொள்ளாத ஆண்களுமாக டஜன் கணக்கான மக்கள் அங்குத் திரளாக இருந்தனர். கூடைகளில் மண்ணையும் கல்லையும் சுமந்துகொண்டும், சலித்துக்கொண்டும், மிதித்துக்கொண்டும், செல்வம் மிகுந்த நாடுகளில் இயந்திரங்கள் செய்யும் வேலைகளை யெல்லாம் அவர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு சிறிய பட்டணத்தின் வழியாகச் சென்றனர். வாடகைக் கார் அங்கு கிடையாது. அதற்குப் பதிலாக இரட்டைச் சக்கரமுள்ள குதிரைவண்டிகள் இருந்தன. அந்த வண்டியில் உட்காருமிடத்திற்கு மேலே வட்டமான பெட்டியைப் போல ஒரு கூடு இருந்தது. சில வண்டிகளின் பின்னால் திரைகள் தொங்கின. அவற்றிலே தெய்வங்கள், கோட்டைகள், குளங்கள் ஆகிய வற்றின் அழகான சிறு படங்கள் தீட்டப்பட்டிருந்தன. தலையிலே இறகுகளை வைத்து அணிசெய்யப்பட்ட குதிரைகள் வண்டியை இழுத்துக்கொண்டு சலங்கைகள் ஒலிக்க உற்சாகமாக ஓடின.

பெருஞ்சாலையிலிருந்து திரும்பி ஒரு சிறிய சாலையின் வழியாக அவர்கள் சென்றார்கள். அந்தச் சாலை பல இடங்களில் வெள்ளத்தால் அரிக்கப்பட்டிருந்தது. செப் பனிட்டுக் கொண்டிருந்த அப்பகுதிகளில் அவர்கள் எச்சரிக்கையோடு செல்லவேண்டியிருந்தது. மத்தியான உணவை முடித்துக்கொள்வதற்காக அவர்கள் ஒரிடத்தில் தங்கினார்கள். உண்டபின் மீதியிருந்த ரொட்டித்துண்டு களைச் சில குரங்குகள் வந்து தின்றன. ஜானுக்கு அனுப்பு வதற்காக ஜூடி அவற்றைப் போட்டோ பிடித்தாள். கறிக்குழம்பாக இருந்திருந்தால் நன்றாக இருக்குமென்று அவள் நினைத்தான். ஜூடி என்ன சொன்னாலும் அவளுக்கு ரொட்டித் துண்டுப் பலகாரங்கள் தான் மிகவும் பிடிக்கிறது என்று அவள் தாய் நினைத்ததாகத் தோன்றிற்று. அதன் பிறகு வழியிலே அவர்கள் தேசீய வளர்ச்சித் திட்டப் பிரதேசம் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பலகையைக் கண்ணுற்றார்கள். அதற்கு அடுத்தாற்போல் மேலும் பல பெயர்ப் பலகைகள் தென்பட்டன. ஒரு கட்டடம் வேலை யாகிக் கொண்டிருப்பதைப் போலவும் தோன்றிற்று. சமூக நிலையம் என்று ஒரு பெரிய கீற்றுக் குடில் இருந்தது.

அடர்த்தியாகத் தோன்றும் கரும்போ அல்லது வேறு பயிர்களோ பயிரிடப்பட்டிருந்த நிலங்களிலும் பெயர்க் குறிப்புச் சீட்டுக்கள் இருந்தன. தங்கும் விடுதிக்கும் போகும் வழியைக் குறித்துக்காட்ட ஒரு பெயர்ப் பலகையும் இருந்தது. அவர்கள் அங்கு போய்த் தங்கள் சாமான்களை வைத்தார்கள். அங்கு ஓர் இளைஞன் அவர்கள் வருகைக் காக காத்திருந்தான். மிகுந்த உற்சாகம் உள்ளவன் அவன். அவன் தான் செய்துகொண்டிருக்கிற காரியங்களை விளக்கிக் சொல்வதில் மிகுந்த ஆவல் கொண்டிருந்தான். அந்த ஆவலின் வேகத்தில் சில சமயங்களில் அவனுக்குச் சரியான ஆங்கில வார்த்தைகள் மறந்துபோய்விட்டன, அப்பொழுதெல்லாம் பொறுமையிழந்து அவன் தன் கைகள் ஒன்றின் மேல் ஒன்றை அடித்துக்கொண்டான். அவன் வசம் ஒரு ஜீப் இருந்தது. அவர்களை அதில் ஏற்றிக்கொண்டு வேகமாக எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்தான். அரசாங்கத்திடமிருந்து கடன் பெற்று, கிராமப் பெண்கள் தையல் இயந்திரங்கள் வாங்கியிருந் தார்கள். அவர்கள் சிரமப்பட்டு வேலை செய்தால் சில ஆண்டுகளிலே அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட முடியும். 'பிறகு அவர்களுக்குச் சொந்த மாகவே தையல் இயந்திரம் இருக்கும்" என்றான் அவன். மற்றோரிடத்தில் நெசவுத்தறிகள் அமைக்கப்பட்ட இரண்டு அறைகள் இருந்தன. சில பெண்கள் துணி நெய்து கொண்டிருந்தார்கள். மரக்கட்டையில் சித்திரங்களைச் செதுக்கி அதைச் சாயத்தில் தோய்த்துச் சிலர் துணியில் பதித்துக்கொண்டிருந்தனர். அங்கோரிடத்தில் மூங்கிலிலிருந்து பென்சில் செய்துகொண்டிருந்தனர். "களி மண்ணையும் கரியத்தையும் கொண்டு பெண்கள் பென் சிலின் உட்பகுதியை சமையல் செய்வதைப்போல வெகு சீக்கிரத்தில் செய்கிறார்கள். பென்சிலின் வெளிப்பகுதியை ஆண்கள் செய்கிறார்கள். காட்டாராய்ச்சி நிலையத்திலே இதை எங்களுக்குக் காண்பித்துக் கொடுத்தார்கள். வெகு தூரத்திலுள்ள டேராடூனிலிருந்து அவர்கள் இங்கிருக்கும் ஏழை மக்களைப்பற்றி நினைக்கிறார்கள்!" என்று அந்த இளைஞன் சொன்னான்.

பஞ்சாயத்துக் கட்டடமாக ஒரு பெரிய குடில் இருக் தது. "இங்கே கிராம சபை கூடுகிறது. பொறுப்பு அவர் களுடையது. நாங்கள் உதவியும் முன்னேறிச் செல்ல ஆலோசனையும் கொடுக்கிறோம். நிலத்தை அவர்கள் கவனித்துக் கொள்ளுகிறார்கள். நிலங்களுக்காக நாங்கள் கொண்டுவரும் உரங்களை அவர்கள் விநியோகம் செய்கிறார் கள். அவர்களே வரி வசூலிக்கிறார்கள். எல்லாம் சுத்த மாக இருக்கவும் பார்த்துக் கொள்ளுகிறார்கள்" என்று அவன் தொடர்ந்து கூறினான். கிராமக்கோழிகளின் இனத்தை அபிவிருத்தி செய்ய அவை இன்னும் பெரிய முட்டைகள் இடும்படி செய்ய சீமைக்கோழிகள் அடங்கிய கோழிப்பண்ணை ஒன்றிருந்தது. 'ஐக்கிய ஆரோக்கிய நிலை யம்' ஜூடியின் தந்தையின் கவனத்தைப் பெரிதும் கவர்ந் தது. அது பதினைந்து கிராமங்களைக் கவனித்துக் கொள்ளு கிறது. அக்கிராம மக்கள் நோயுற்றிருந்தால் அவர்களுக்கு இலவச சிகிச்சை செய்வதோடு ஆரோக்கியத்தோடிருப் பதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவர்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறது. ஜூடியின் தந்தை அங்கே நிறையக் கேள்விகள் கேட்டார். கிராமக் கூட்டுறவு சங்கத் தின் பகுதியாக ஒரு குடும்பத்தினர் பனை ஓலைகளைக்கொண்டு பாய் நெய்து கொண்டிருந்தார்கள். அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் அவை ஒரு சில அணாக்களுக்கு விற்கும்; இலாபமும் கிடைக்கும். "பாருங்கள், மின்சாரக் கம்பிகள் பக்கத்திலேயே செல்கின்றன. இருந்தாலும் இன்றைக்கு அவர்களால் ஒரு மின்சாரவிளக்குக்கூடப் போட்டுக்கொள்ள முடியாது. ஆனால் விரைவில் அவர்கள் பணம் சம்பாதித்து விடுவார்கள். சமூக நிலையத்திலே நாங்கள் முதலில் மின் சார விளக்குப் போடப் போகிறோம். கிராமங்களிலே இந்த நிலையங்கள் நிறைய இருக்கின்றன. நாங்கள் வகுப்பு நடத்துகிறோம்; படிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். ஒரு நாள் மாலையிலே வயது வந்த ஆண்களுக்கு, அடுத்த நாள் மாலை யிலே அல்லது பகல் நேரத்திலே பெண்களுக்கும் குழந்தை களுக்கும் பள்ளிக்கூடம் உண்டு!" என்று அவன்
சொன்னான்.

யாரோ வந்து அவனிடம் தமிழில் பேசினார்கள். அவன் வேகத்தோடு பதில் சொன்னான். "அதைப் பற்றியும் இதைப் பற்றியும் சதா என்னிடத்திலே கேட்கிறார்கள். உதவி செய்கிறவர்கள் இங்கே போதிய அளவில் இல்லை. ஆனால் அதிகம் பேர் வருகிறார்கள். ஆமாம், மரம் நடுகின்ற எங்களுடைய திட்டம் அது - அந்தச் சின்ன மரங்களைப் பாருங்கள்."

மென்மயிர் போர்த்தது போலத் தோன்றும் சவுக்கு மரங்கள் ஓரிடத்திலிருந்தன. மிகுந்த வெப்பமும் வறட்சியும் உள்ள இடங்களில் வரக்கூடிய ஆஸ்திரேலிய நாட்டு மரங் கள் அவை. அவற்றை வளர்த்து மக்கள் வரட்டிக்கு பதிலாக அடுப்பெரிக்கப் பயன்படுத்தலாம். மாட்டுச் சாணத்தை வரட்டியாக்காமல் நிலத்திற்கு உரமாகப் போடலாம்.

அவர்களைக் கூட்டிக் கொண்டுபோய்ச் சுற்றிக் காண் பிப்பதை இருட்டாகும் வரை அவன் நிறுத்தவில்லை. வெள் ளத்தடுப்பு வேலைகளைக் காண்பிப்பதற்கு அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கே வந்து விடுவதாகவும் சொன்னான்.

"எட்டு மணிக்கு வரலாம்" என்று ஜூடியின் தாய் சொன்னாள். அவன் ஏமாற்ற மடைந்தவன் போல் காணப் படவே, "சரி, ஏழரை மணிக்கு!" என்றாள் அவள்.

தங்கும் விடுதியிலே இருப்பது வேடிக்கையாக இருங் தது. இரவிலே எத்தனையே வகையான ஒலிகள் கேட்டன. ஜூடி காலையில் விழித்துக் கொண்டபோது ஜன்னலுக்குப் பக்கத்திலே வெளியில் கிளிகள் பறந்துகொண்டும், கிளை களின் மீது நடந்துகொண்டும் பச்சைக் காய்களை அலகில் வைத்துக்கொண்டும், சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. அவளை அவைகள் கவனிக்கவேயில்லை. கொசுவலைக்குள்ளே அவள் படுத்திருந்தது ஒருவேளை காரணமாயிருக்கலாம். அவள் ஒரு கூண்டுக்குள்-ளிருப்பதாக அவை நினைத்தன போலும்.

அவர்கள் காலை உணவை முடிப்பதற்குள் அந்த இளை ஞன் ஜீப்புடன் வந்துவிட்டான். நொடியான ஒரு சாலையின் வழியாக அவர்கள் விரைந்து சென்றனர். பெயர்ப்பலகை ஒன்றைத் திரும்பிப் பார்த்துக்கொண்டு அவன் "இங்கே தான்!" என்றான். பொன்னேரி என்று பெயர்ப்பலகை காட்டிற்று.

"ஓகோ, இதுதான் லட்சுமி இருக்கும் கிராமம். இதுவே தான்!" என்று ஜூடி கூவினாள்.

"பொன்னேரி என்று எத்தனையோ கிராமங்கள் இருக் கலாம்” என்றாள் அவள் அன்னை.

"ஆனால் இது தான் லட்சுமியிருக்கும் கிராமம். எனக்குத் தெரியும்!" என்று ஜூடி உரக்கக் கூறினாள் அவளுக்கு ஒரே குதூகலம். "இதுவாகத்தான் இருந்தாக வேண்டும்!" நன்றாகப் பார்ப்பதற்காக அவள் துள்ளி எழுந் தாள். ஒரு கல்லின் மேல் ஏறிக் குலுங்கிய ஜீப்பின் மீது அவள் தலை மோதிற்று. ஜூடிக்கு உண்மையாகவே அழுகை வந்துவிட்டது.

அவள் தாய்க்குக் கொஞ்சம் கோபம். "ஜூடி, இடத் திலே உட்கார். முட்டாள் தனமாக நடந்து கொள்ளாதே" என்றாள் அவள். இருந்தாலும் ஜூடி முன்னால் குனிந்து அந்த இளைஞனைப் பார்த்து, 'நீர்ப்பாசன வேலையைப் பார்த்துக்கொள்ள இங்கே எஞ்சினியர்கள் இருக்கிறார் களா?" என்று கேட்டாள்.

“ஆமாம். நல்ல எஞ்சினியர்கள் இருக்கிறார்கள். அதோ பார், அதுதான் புதிய கால்வாய். வெள்ளத்தை அது தடுக்கும்..." என்று அந்த இளைஞன் பதில் சொன்னான். கால்வாயைப் பற்றி எத்தனையோ புள்ளிக்கணக்குகளை யெல்லாம் அவன் எடுத்துக் கொட்டினான். ஆனால் எஞ் சினியர் பெயரை அவன் சொல்லவேயில்லை.

புதிய கால்வாயில் தண்ணீர் கலங்கி இருந்தது. இருந் தாலும் பெண்களும் சிறுமிகளும் முழங்கால் அளவு தண்ணீருக்குள் நின்று கொண்டு துணிகளைத் துவைத்துக் கொண்டும், பித்தளைப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டு மிருந்தார்கள். ஜூடி தன் தாயை இறுகப் பிடித்துக் கொண்டு "அதோ பார், அதோ, சரஸ்வதி அங்கிருக்கிறாள்!"

"நிச்சயமாகத் தெரியுமா ? ஜூடி, என்னைக் கிள்ளிப் பிடிக்காதே" என்றாள் அவள் தாய். அழுக்குப்படிந்த பழைய பாவாடைகளையும், ரவிக்கைகளையும் அணிந்து கொண்டு கால்வாய் ஓரத்தில் பாடிக்கொண்டே மணலை எடுத்து உற் சாகமாகப் பாத்திரங்களைத் தேய்ந்துக்கொண்டிருந்த சிறுமி களெல்லோரும் ஏறக்குறைய ஒரேமாதிரியாக இருந்ததால் அவர்களுக்குள்ளே சரஸ்வதியை அவளால் கண்டு கொள்ள முடியவில்லை.

"எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஜீப்பை நிறுத்து!" என்று ஜூடி கத்தினாள். ஜூடியின் தந்தை ஜீப்பை ஓட்டும் இளைஞனிடம் சொல்லி நிறுத்துவதற்குள் அவர்கள் கால் மைல் தூரம் சென்றுவிட்டார்கள். "நான் திரும்பிப் போகி றேன்" என்றாள் ஜூடி. லட்சுமியைப் பற்றி அவள் தெரிந்து கொள்ளப்போவதால் அவள் குரலில் சற்றே பதற்றம் ஏற்பட்டது.

எங்கு அவர்கள் ஜீப்பை நிறுத்தினார்களோ அந்த இடத்தில் சில குடிசைகளும், நிழல் தரும் மரங்களும் இருங் தன. திருகலான பெரிய அடிமரத்துடன் கூடிய அரச மரம் ஒன்றும் அங்கிருந்தது. மரங்களின் மத்தியில் ஒரு சிறிய கோயில், பெரிய மரக்கிளை ஒன்றின் அடியில் புதிதாகத் தோன்றும் ஒரு கீற்றுக் குடிலும் இருந்தது. "பொன்னேரிப் பகுதிக்கு இதுதான் சமூக நிலையம். பெண்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்பொன்று நடக்கிறது பாருங்கள் -" என்றான் அந்த இளைஞன்.

“உள்ளே எட்டிப் பார்த்துவிட்டுப் பிறகு திரும்பிப் போகலாம்" என்று ஜூடியின் தாய் சொன்னாள்.

ஜூடிக்கு ஒரே குதூகலம். அவள் கொஞ்ச தூரம் ஓடினாள். தான் செய்வது இன்னதென்றே தெரியாமல் பிறகு நின்றாள். பிறகு சமூக நிலையத்தின் திறந்த கதவை நோக்கி மறுபடியும் ஓடினாள். மெதுவாகப்பேசும் குரல்களின் ஒலி உள்ளிருந்து வெளியே வந்தது. அவள் திடீரென்று நின்று தந்தையையும், தாயையும் பார்த்துக்கொண்டு இதழ்களின் மேல் தன் விரலை வைத்தாள். அவள் தந்தை அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு நின்றார். மெதுவாக ஜூடி கதவருகிலே செல்லலானாள்.
---------------

10. பொன்னேரியில் லட்சுமி

குடிலின் மழமழப்பான மண்சுவர்களிலேகண்ணுக்குக் குளிர்ச்சியாகச் சித்திரங்களுடனும், எழுத்துக்களுடனும் சில சுவரொட்டி விளம்பரங்களிருந்தன. உள்ளே பெஞ்சு ஒன்றும் இல்லை; வெறும் தளம் தான். கரடுமுரடாகச் செய்த கரும்பலகை ஒன்றுமட்டும் இருந்தது. எல்லோரும் பார்க் கும்படியாக வெள்ளைச் சீமைச் சுண்ணாம்பைக் கொண்டு லட்சுமி மெதுவாக எழுத்துக்களை மீண்டும் எழுதிக் காண் பித்தாள். அவள் களைத்துப் போயிருந்தாள். சிலவேளை களில் அவள் உள்ளம் எங்கோ அலைந்தது. அறுந்துபோன அவளுடைய மிதியடியின் தோல்பட்டை தாறுமாறாகத் தைக்கப்பட்டிருந்தது. அது அவள் கால் விரலைக் கடித்துத் தொல்லை கொடுத்தது. அவள் ஆசிரியை ஆதலால் மிதியடி அணிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தாள்; வயது அதிகமானவளைப்போல மிதியடிகள் அவளுக்குத் தோற்றமளித்தன. வகுப்பில் இருந்த மற்றவர்கள் எல்லோரும் வெறுங்காலோ-டிருந்தனர். வயதான பெண்களில் சிலர் அவள் எழுதிய எழுத்துக்களைத் தங்கள் இதழ்களை அசைத்து அவள் முன் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் மூளையில் ஒன்றும் நிற்கவில்லை. எல்லாம் கொஞ்சமும் பழக்கப்படாத விஷயங்கள். கற்பதில் முன்னேறக்கூடிய சிறு வயதின ருக்கு இது சிரமமாக இருந்தது. படிப்பது, எழுதுவது ஆகிய புதிய வித்தையைத் தெரிந்து கொள்ள அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். வயது வந்தவர்களுக்கும் விருப்பம்தான். ஆனால் அவர்களுடைய விருப்பம் கடவுளிடத்திலிருந்து ஏதாவது வரம் கேட்பது போலத் தெளிவற்றதாக இருந்தது; வரம் கிடைக்காவிட்டால் அது யாருடைய தப்புமில்லை. அதற்காக எதுவும் செய்யவும் முடியாது. சரியான முயற்சி என்பது அவர்களுக்கு அப்பாற்பட்டது.

தனித்தனி இரண்டு வகுப்புகள் வைத்துக்கொள்ள லாமா என்று லட்சுமி சிந்தித்துப் பார்த்தாள். முன் வரிசை யிலே அவளைவிட வயதாகாத வள்ளி அமர்ந்திருந்தாள்; அவள் கிராமக் கொற்றனுடைய மகள் - அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், பத்திரிகைகளில் உள்ள தலைப்புக் களையெல்லாம் இப்பொழுதே அவள் வாசிக்க முடியும். எளிமையான புத்தகங்களையெல்லாம் இப்பொழுதே அவள் விரைந்து படித்தாள். அவள் மட்டும் சரியானபடி பள்ளிக் கும், கல்லூரிக்கும் கூட போக முடியுமானால்.... ஆனால் வகுப்பை இரண்டாகப் பிரித்தால் வயதான பெண்களுக்கு வருத்தம் உண்டாகும். அவர்களில் சிலரைப் பள்ளிக்கு வரும்படி செய்ததே மிகுந்த கஷ்டமாக இருந்தது. லட்சுமி தனக்கு வயது அதிகம் என்பது போலக் காட்டிக்கொண் டாள்; ஆனால் அவளுடைய உண்மையான வயதை சரஸ் வதி வெளியே சொல்லிவிட்டாள். அதனால் இப்பொழுது எல்லாம் சரியானபடி நடக்காதபோது, கலியாணமான பெண்களில் சிலர் அவளைப் போன்ற சிறுமியிடம் தாங்கள் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.

எல்லாவற்றையும் விட்டுத் தொலைத்துவிடலாமென்று அவள் நினைத்தாள். வீட்டுக்குப் போனால் அங்கே மின்சார விசிறி கிடையாது; குளிர்ந்த தண்ணீரும் கிடையாது; அழலாம் என்றால் கூட தனியாக இருக்க இடம் கிடையாது. அவள் தந்தை சில திரைகளைக் கொண்டு ஒருமாதிரி ஏற் பாடு செய்திருந்தார்; அவ்வளவுதான். அவள் தந்தைக்காக அல்லாமற்போனால் அவளால் தொடர்ந்து அந்த வேலை யைச் செய்திருக்க முடியாது. தகரத்தால் கூரை யமைத்த அந்த எளிய சிறு காரியாலயத்தை விட்டுத் திரும்பிய போதும், அல்லது நீர்ப்பாசன வேலையிலிருந்து பெரும் பாலும் புழுதிபடிந்து வரும்போதும் அது ஒன்றுதான் அவருக்கு உற்சாகமளித்தது. அப்பொழுது வகுப்பு எப்படி நடந்ததென்று அவர் அவளைக் கேட்பார். லட்சுமி சொல்வதைக் கேட்டுவிட்டு அவள் மேலும் என்ன செய்யலாம் என்று யோசனை சொல்லுவார். அவளுடைய தாயிடம் பெண்கள் வந்து தங்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க முடியுமாவென்று முதலில் கேட்டார்கள். ஆனால் அவள் தாய் மிகவும் சோர்வுற்றிருந்தாள். வயதான வேலைக் காரி யொருத்தி இருந்தும் குடும்பக் காரியங்களை கவனிக்க அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இங்கு எல்லாமே மாறிவிட்டது. அவள் தாய் முன்பெல்லாம் வேலை செய்ததே கிடையாது; அவளுக்கு வேலை யாராகிலும் செய்யக்காத் துக்கொண்டிருந்தனர். இந்த மாறுதலை அவளால் தாங்க முடியவில்லை. கிராமப் பெண்களுடன் சேர்ந்து கொண்டு செல்வதை சரஸ்வதி விரும்பினாள்; ஆனால் அவள் தாய்க்குத் தோழிகள் யாருமில்லை. லட்சுமிக்கோ? அவளுக்குத் தோழிகள் இருப்பதாக அவள் எண்ணிக்கொண்டாள். படிப்பிலும், நாட்டியத்திலும் திறமை காட்டிய வள்ளியிருந் தாள். பொன்னேரிக்கு மேற்கேயுள்ள ஒரு சிறு கிராமத்து மணியக்காரரின் மகளான மோகினி என்ற வேறொரு இளம் பெண்ணுமிருந்தாள். சமூகப் பணி செய்பவர்களில் சிலருக்கு, முக்கியமாகக் கல்லூரிப் படிப்புடையவர்களுக்கு ஒழிவே அதிகம் கிடைப்பதில்லை. ஆனால் ஜூடியைப்போல யாருமே இருக்க முடியாது.

அவள் திடுக்கிட்டாள் ; வகுப்பைப் பற்றி அவள் சரியாகக் கவனம் செலுத்தவில்லை. ஒரு முழு வார்த்தையை அவள் மெதுவாக எழுதினாள். வகுப்பில் உள்ளவர்கள் அவள் எழுதுவதையே கவனித்துப் பார்த்தார்கள்; பிறகு ஒருத்திக்குப் பின் ஒருத்தியாக அந்த வார்த்தையை உச் சரித்தார்கள். விரைவில் சொன்னவர்களை அவள் புகழ்ந் தாள். பிறகு வேறொரு வார்த்தையை எழுதினாள் அதன் பின் மீண்டும் ஜூடியைப் பற்றி எண்ணமிடத் தொடங்கி விட்டாள். இப்பொழுது நேரம் அதிகமாய்விட்டது. அவளு டைய தோழிகளிற் பலரோடு சேர்ந்து காரியம் செய்வதை விட ஜூடியோடு சேர்ந்து செய்வது மிக நன்றாக இருந்தது. அவள் மெதுவாகச் செய்வாள்; ஆனால் ஆழ்ந்த கருத்து டையவள். அவளை நான் தள்ளி விட்டுவிட்டேன் என்று இவ்வாறு லட்சுமி எண்ணமிடலானாள்.

கிளப்பிலே அன்றைக்கு நான் எப்படித் துன்பப்பட்டுக் கொண்டிருந்தேன் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கு மானால்.... அந்தச் சமயத்தில் தான் என் தந்தை முதல் அடி பட்டிருந்தார். மனைவி மக்களுக்கு அவர் விஷயத்தைச் சொல்லித் தேறுதல் கூற முயற்சி செய்துகொண்டிருந் தார். இப்பொழுது இருப்பதைப் போல நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று அப்பொழுது அவர்களுக்குத் தெரி யாது. எல்லாவற்றிற்கும் மேலாக எந்த மாதுடன் ஜூடி இருந்தாளோ அந்த மாது பேசுவதைக் கேட்டாள் - ஜூடி யின் பெற்றோர்களிடம் தனக்குச் சினேகம் என்றும், தான் நினைப்பதைப் போலவே அவர்களையும் நினைக்கச் செய்ய முடியும் என்றும் அவள் பெருமையடித்துக் கொண்டாள். வட இந்தியாவிலிருந்து வந்த அந்த மாது அவர்களையெல்லாம் தாழ்வாக மதிக்கிறதும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுவதும், தானே ஒரு அர சாங்க இலாகா மாதிரி நடந்துகொள்வவதும், இந்த மாதிரி மனப்பான்மையை ஜூடியிடமிருந்து நான் அகற்ற வேண்டியிருந்தது என்று லட்சுமி எண்ணமிட்டாள். அவள் துடித்துப் போகும்படியும், மனம் நோகும்படியும் நான் செய்ய வேண்டியிருந்தது. ஜூடி இளகிய உன்ளம் வாய்ந்தவள். என் பாட்டியையும் அவளிடம் வெறுப்புக் கொள்ளும்படி செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய துன்பம் தான் இதைச் செய்தது. என்னுடைய கௌரவத் திற்கு ஏற்பட்ட இழிவுதான் அதைச் செய்தது.

இப்பொழுது அவள் இந்தியாவின் எல்லைக் கோட்டுப் படம் ஒன்றைக் கவனத்தோடு வரைந்தாள். அவள் அதைப் பல தடவை வரைந்திருக்கிறாள். ஆனால் வெண் மையான சீமைச் சுண்ணாம்பிலிருந்து அப்படத்தின் கோடு விழுவதைப் பார்ப்பதில் அந்த வகுப்பிற்கு வருபவர்களுக்கு விருப்பம் உண்டு. ஆறுகளை அவள் போடும் போது கங்கை... காவேரி.... கோதாவரி.... என்று அவர்கள் முணுமுணுப்பது அவள் செவியில் விழுந்தது. பாட்டியிடம் இன்னும் அந்தப் பசுக்கள் இருக்கின்றனவா?

அதன் பிறகு அந்தக் கடிதம், பாட்டிதான் ஜூடிக்கு விலாசம் கொடுத்திருப்பாள். வேறு யார் கொடுக்க முடியும்? ஆனால் அவர்கள் எவ்வவவு மோசமான வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று பாட்டிக்குத் தெரியாது. அவள் தந்தை தம் பெற்றோருக்குத் தெரிவிக்க விரும்பவில்லை ; குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தெரிவிக்கக்கூடாது என்று தடை விதித்திருந்தார். நல்ல விஷயங்களை மட்டும் தெரிவித்து அவர் உற்சாகமாகக் கடிதங்கள் எழுதினார். நான் சொல்லவே மாட்டேனென்று கொஞ்சம் பெருமை யோடு லட்சுமி எண்ணமிட்டாள். அதைவிட இறந்து போவது நல்லது; ஆனால் ஜூடிக்கு பதில் எழுதினால் விஷயங்களை மறைப்பது கடினம். பிறகு அவள் இங்கே வரலாம். அவளை வரும்படி நான் வேண்டிக்கொண்டது போலத் தோன்றும். அன்று கொடுமை செய்த அந்த ஆங் கில இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடத்திலே ; வேண்டவே வேண்டாம். இருண்ட கிணற்றுக்குள்ளே போட்ட கல்லைப்போல அவள் வாழ்க்கையிலிருந்து நான் விலகிவிடுகிறேன்.

பட்டணங்களையெல்லாம் அவள் படத்தில் குறித்தாள். எல்லாவற்றிற்கும் முதலாகப் பொன்னேரி. அது முதலில் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். அதன் பெயரைச் சொன்னார்கள். பிறகு சென்னை. பிறகு வேறு நகரங்கள். அவர்களில் சிலருடைய சிற்றப்பனோ அல்லது சிற்றப்பன் மகனோ பொருள் தேடி ஒருவேளை பெங்களூருக்கோ அல் லது நாகபுரிக்கோ அல்லது அதற்கும் தொலைவில் பம்பாய் அல்லது கல்கத்தாவிற்கோ போயிருந்திருக்கலாம். அந்த இடங்களின் பெயர்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்; பிறகு அவள் அவர்களை எளிமையான கேள்விகள் கேட் டாள். வயது வந்த பெண்களில் ஒருத்திக்குப் படிக்கவே வரவில்லை. அவளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியிருந்தது. அவளைப் பார்த்து காந்திஜியைப் பற்றிச் சொல்லும்படி அவள் கேட்டாள். பிறகு மற்றவர்களெல்லாம் காந்திஜி யைப் பற்றிச் சொல்வதில் சேர்ந்துகொண்டனர். அவளும் தான் படித்த சில விஷயங்களையோ அல்லது தந்தையிட மிருந்து கேட்ட விஷயங்களையோ எடுத்துரைத்தாள். அவர்களுக்கு ஹிந்தி சொல்லிக் கொடுக்க அவள் முயற்சி செய்யவில்லை. மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்காவது ஏதாவது ஒரு சமயத்தில் அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் ஹிந்தியைப் பற்றி அவளுக்கு அத்தனை நிச்சயம் இருந்ததா? ஹிந்தியும், வட இந்தியாவும்? அவள் கற்றுக்கொடுப்பதெல்லாம் தமிழில்தான். இப்பொழுது யாருக்கு அதிகமாகக் கற்றுக்கொடுக்கவேண்டிய தேவை இருக்கிறதோ அப்படிப்பட்ட திறமை குறைந்தவர்களிடம் அவள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டிய வகுப்புக்கு இன்னும் கொஞ்சம் சங்கீதக் காரர்களின் உதவி மட்டும் கிடைத்தால்! அந்தக் குருடன் மிருதங்கம் வாசிப்பதற்குப் போதும். ஆனால் அவனை எப்பொழுதும் பக்குவமாக வைத்திருக்கவேண்டும். அவள் விரும்பியதை அவன் சில சமயங்களில் வாசிக்கமாட்டான். தான் தான் முக்கியமானவன் என்ற உணர்ச்சி அவனுக்கு. எல்லோரும் நாட்டிய வகுப்பைப் பெரிதும் விரும்பினார்கள். முக்கியமாக இளஞ்சிறுமிகளுக்கு அது மிகவும் பிடித்தது. அவர்களுடைய தாய்மார்கள் வந்து தரையின் மேல் அமைதியாக அமர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். மழைக்காலத்திற்குப் பிறகு வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்ட பிறகுதான் நாட்டிய வகுப்புத் தொடங்கிற்று. “பின்னணியிசை இல்லாவிட்டாலும் அவள் தனது நாட் டியப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யவேண்டும், அது பின்னால் ஒரு நாளுக்கு வேண்டியிருக்கும்" என்று அவள் தந்தை கூறியிராவிட்டால் அவள் நாட்டிய வகுப்பையே தொடங்கியிருக்கமாட்டாள் - என்று இவ்வாறு லட்சுமி எண்ணமிட்டாள். தானே நாட்டியம் ஆடுவதைவிடக் குழந்தைகளுக்கு நாட்டியம் சொல்லிக்கொடுக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு உதயமாயிற்று. அவள் தந்தையும் அதற்கு ஊக்கமளித்தார். சமூகப்பணி செய்யும் ஒருவரி டமும் அவர் அதைப் பற்றிச் சொன்னார். அந்தச் சமூகப் பணியாளர் மிருதங்கம் வாசிக்கும் அக்குருடனைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்தார்; கதக் நாட்டியமாடக் குழந்தை களுக்குக் காலில் கட்டிக்கொள்ளுவதற்குச் சதங்கைகளும் வாங்கி வந்தார்.

இப்பொழுது கரும்பலகையில் அவர்களையே எழுதும் படி அவள் அழைக்கத் தொடங்கினாள். வயது வந்த பெண் களில் சிலரால் அது முடியாது என்று அவளுக்குத் தெரி யும். ஒருவேளை அவர்களால் என்றுமே அது முடியாமற் போகலாம். வயதில் குறைந்தவர்களை எழுதுமாறு அவள் அழைத்தாள். அவர்கள் சிறுசிறு வாக்கியங்களை எழுதி னார்கள். மற்றவர்கள் அவற்றை உரத்து வாசித்தார்கள். தங்களுக்குள் ஒருத்தியே இப்படிச் செய்ய முடிந்ததை நினைத்து அவர்கள் சிலசமயங்களில் சிரித்துக் கொண்டார்கள். "நல்லது, வள்ளி; முன்னால் இதுவரையில் நீ எழுதாத வாக்கியமாக ஒரு புது வாக்கியம் எழுது" என்றாள் அவள்.

ஆனால் வள்ளி முகத்தைத் திருப்பிக்கொண்டு கதவு வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆச்சரியத்தால் அவள் வாய் திறந்தபடியே இருந்தது. என்ன அது? கொஞ்சம் வெறுப்போடு லட்சுமி திரும்பிப் பார்த்தாள். அங்கே ஜூடி தன் கைகளை முன்னால் நீட்டிக்கொண்டு ஒரு காலில் நின்று கொண்டிருந்தாள். ஜூடி!
------------

11. ஜூடியும் லட்சுமியும்

“ஜூடி, ஜூடி, நீ வந்துவிட்டாய்!" என்று கூவினாள் லட்சுமி. எல்லாம் சரியாகிவிட்டது. லட்சுமி தன் கௌர வத்திற்குப் பங்கம் வராமல் நடந்துகொண்டாள். அவள் கடிதம் எழுதவில்லை; இருந்தாலும், வெள்ளை நிறத்து ஆங்கிலச் சிறுமியான ஜூடி, அருமை ஜூடி - அவள் வந்துவிட்டாள்!

“ஆமாம், லட்சுமி; நான் வந்துவிட்டேன்..." என்றாள் ஜூடி. கன்னத்தோடு கன்னம் சேர்ந்தன. கைகள் ஒன்றை யொன்று இறுக்கிப் பிடித்துக்கொண்டன.

திடீரென்று லட்சுமி பேசத் தொடங்கினாள்; "ஜூடி, வா ஜூடி! என் வகுப்பை நீ பார்க்கவேண்டும்; தந்தையை யும் தாயையும் அழைத்துக் கொண்டு வா!" சமூக நிலை யத்துக்குள் எல்லோரும் வந்தார்கள்; அந்த இளைஞனும் பின் தொடர்ந்தான்; ஆச்சரியத்தால் அவனால் அந்த க்ஷணத்தில் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. ஒரு எஞ்சி னியர் மகள் கல்வி வகுப்பு நடத்துகிறாள் என்று அவனுக்குத் தெரியும், ஆனால் அதைப்பற்றி அவன் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.

வகுப்பில் உள்ளவர்கள் எழுந்து நின்றார்கள்; தங்களுக் குள்ளேயே குசுகுசுவென்று பேசிக்கொண்டு சிரித்தார்கள். அவர்களை உட்காரும்படி சொல்லிவிட்டு லட்சுமி தன்னைப் பார்க்க வந்திருக்கும் அந்த இங்கிலாந்து மக்களைப் பற்றி எடுத்துரைத்தாள். உலகத்தின் படம் ஒன்று மட்டும் அவ ளிடம் இருந்திருந்தால்; அப்பொழுதும் அவள் ஜூடியின் கரங்களைப் பற்றிக்கொண்டிருந்தாள். பிறகு அவள் வகுப்பில் உள்ளவர்கள் தங்கள் அறிவைக் காட்டுமாறு அவர்களை இந்தியாவிலுள்ள இடங்களின் பெயர்களைச் சொல்லும்படி யும், எழுதும்படியும் சொன்னாள். ஆனால் புதிதாக வந்திருப் பவர்களின் முன்னால் அவர்கள் மிகவும் வெட்கப்பட் டார்கள். முக்கியமாக மோகினிக்கு ஒரே வெட்கம். அவள் ஐரோப்பியர் யாரையும் பார்த்ததில்லை. வள்ளி கொஞ்சம் பரவாயில்லை. கரும்பலகையில் அவள் எழுதிய போதிலும் அவள் கைகள் சற்று நடுங்கின ; முணுமுணுப்பதற்குமேல் அவளால் உரத்துப் பேச முடியவில்லை. வயது வந்த பெண்களில் ஒருத்தி பின்னால் இருந்து கொண்டு ஏதோ சொன்னாள் : லட்சுமி வெடுக்கென்று அவளிடம் பேசினாள். வகுப்பில் ஒழுங்கை நிலைநாட்டுவது அவசியமல்லவா?

"இப்பொழுது நான் வகுப்பை இத்துடன் முடித்து விடுகிறேன் ; ஜூடி, உன்னிடம் என்னன்னவோ சொல்ல வேண்டும். எப்படி நீ வந்தாய்?" என்றாள் அவள்.

தற்செயலாக நடந்த ஆச்சரியம் இது. உனக்கு என் கடிதம் கிடைத்ததா?" என்றாள் ஜூடி.

லட்சுமி அவள் கையை இறுக்கிப் பிடித்தாள்; ஒரு கணம் அவள் பதில் சொல்லவில்லை; சுலபமாக ஒரு பொய் சொல்லலாமென்று நினைத்தாள்; ஆனால் அது தப்பு என்று அவளுக்குத் தோன்றிற்று. அன்புக்குரியவரிடத்திலே யாரும் பொய் சொல்வதில்லை. "கடிதம் கிடைத்தது; ஆனால் பதில் எழுதுவது என் கௌரவத்திற்கு..." என்று இவ்வாறு கடைசியில் சொன்னாள்.

ஜூடி அதைக் கவனிக்கவில்லை. "என் மேல் உனக்குக் கோபம் இல்லையே?" என்று கேட்டாள் அவள்.

"இல்லவே இல்லை! ஆனால் இந்தக் கிராமம் - இந்த வாழ்க்கை யெல்லாம் உனக்குத் தெரியக்கூடாது என்று நான் விரும்பினேன் -" என்று கூறினாள் லட்சுமி.

"ஏன், வயது வந்தவர்களுக்கே நீ பாடம் சொல்லிக் கொடுக்கிறாய்! இது மிகவும் சிரமமான காரியம்" என்றாள் ஜூடி.

அந்தச் சமயத்தில் அவள் தாய் குறுக்கே பேசத் தொடங் கினாள். "லட்சுமி, இந்த இளைஞர் எங்களுக்கு இன்னும் பலவற்றைக் காண்பிக்க ஆசைப்படுகிறார். நீயும் வரு கிறாயா? என்ன இருந்தாலும் இது உங்களுடைய கிராமம்! நீ திரும்பி எங்களுடனேயே தங்கும் விடுதிக்கு வந்து மத்தியான உணவு சாப்பிடக் கூடாதா, உங்கள் வீட்டில் சொல்லி விட்டுப் போகலாமா?"

லட்சுமி கையால் சைகை செய்து வள்ளியை அழைத் தாள் - அந்தச் சமயத்தில் அவள் அவர்களுக்கு வீட்டைக் காண்பிக்க விரும்பவில்லை. வள்ளி சேதி சொல்லிவிடுவாள் -
அல்லது அவள் திரும்பிப் போய் நல்ல சேலையாக ஒன்றை, தீபாவளிக்கு வாங்கிய அந்தச் சேலையை உடுத்துக் கொண்டு வந்துவிடலாமா? தலையிலே பூவாவது வைத்துக் கொள்ளலாம் - இதுவரையிலும் அதைப்பற்றி அவள் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை; ஆனால் இப்பொழுது அவையெல்லாம் அவசியம் வேண்டும் போலத் தோன்றிற்று. ஆனால் இப்பொழுது அவர் ஜூடியை விட்டுப் பிரியப் போவதில்லை.

பெண்களுக்காக ஏற்பட்ட கூட்டுறவுச் சங்கத்தை முதலில் அவர்கள் பார்வையிட்டனர். லட்சுமியோடு அதைப் பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது. வேலை செய்து கொண்டிருந்த சிறுமிகள், பெண்கள் எல்லோரையும் லட்சுமிக்குத் தெரியும். அவள் அவர்களைப் பற்றிப் பலவகை யான விஷயங்களைத் தெரிவித்தாள். அங்கிருந்த ஒரு மாதின் மூன்று குழந்தைகளும் வைசூரியால் இறந்து விட்டன. ஆனால் இப்பொழுது எல்லோரும் அம்மை குத்திக்கொள்ளு கிறார்கள். அதோ அந்தச் சிறுமியை வயதான ஒருவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. ஆனால் அதோ அந்த புள்ளிவைத்த சேலைக் கட்டிக் கொண்டிருக்கும் பெண்னை பலசாலியான ஓர் இளைஞனுக்கு மணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்
அவனிடத்தில் ஒரு ஜோடி எருதுகளும் மூன்று பசுக்களும் இருந்தன. அவனுக்கு முற்போக்கான எண்ணமுண்டு கிராம சபையான பஞ்சாயத்திலே அவனை இருக்கும்படி மற்ற இளைஞர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள் இயந்திரத்தின் கைப்பிடியைச் சுற்றும் போதே வெகுவாகச் சிரிக்கிறாளே அந்த அம்மாள் ஒரு பாட்டி. அவள் சம்பாதிக் கும் பணமெல்லாம் அவளுடைய பேரக் குழந்தைகளுக்குப் பரிசாகக் கிடைக்குமென்று நான் நம்புகிறேன்.

அப்பொழுது வேலை செய்து கொண்டிராத சில பகுதி களையும் அவள் அவர்களுக்குக் காண்பித்தாள். "அதிக வறட்சியாக இல்லாத மழைக் காலத்திலே இங்குதான் பஞ்சை உடைப்பார்கள். இதை இப்படி வேலை செய்வது சுலபம். பிறகு நாங்கள் நூல் நூற்கிறோம். ஜூடி, நான் அதைக் கற்றுக்கொண்டேன். ஆனால் ஒரு நாளைக்கு, இந்தியாவில் பணம் பெருகும்போது இயந்திரங்களைக் கொண்டு நாங்கள் பஞ்சுடைத்து நெய்வோம் என்று என் தந்தை சொல்லுகிறார். முடிச்சும், திண்டு திண்டாகவும் இல்லாமல் கையால் செய்வதைவிட நன்றாக இயந்திரம் செய்கிறது. நெய்வதை மட்டும் கிராமங்களிலே அப்பொழுது செய் வோம், ஆனால் இப்பொழுது முடியாது."

"உன்னால் நூல் நூற்கமுடியுமா?" என்று கேட்டாள் ஜூடி.

" அதைச் செய்யக்கூடிய எத்தனையோ இந்தியப் பெண்களில் நான் ஒருத்தி!" என்று பாதி சிரித்துக் கொண்டும், பாதி முகத்தைச் சுளித்துக் கொண்டும் லட்சுமி பதில் சொன்னாள்.

கிராமத்து வீடுகளின் உட்பக்கம் எப்படியிருக்குமோ என்று ஜூடியின் தாய் ஆச்சரியத்துடன் கேட்டபொழுது, லட்சுமி அவர்களை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். முன்னால் தாழ்வாரம், அதற்குப் பின்னால் ஓர் அறை - ஒரே அறை; அதிலே மேஜையைப்போல அகலமான ஒரு கட்டில் சில ஜாடிகள் களிமண்ணால் செய்து சுட்ட சட்டி பானைகள், கந்தலான ஆனால் நன்றாக மடித்துவைத்து அடுக்கியுள்ள துணிகள் எல்லாம் இருந்தன. இவ்வளவுதான் அந்தக் குடும்பத்திற்குச் சொந்தம். அவர்களுக்குச் சாப்பிட என்ன இருக்கிறது?" என்று ஜூடி கேட்டாள்.

"மாலையிலே சுடுசோறும் காய்கறிகளும்; மீதியாக உள்ள சாதத்தைப் பழைய சாதமாக ஊறுகாயோடு அடுத்த நாள் காலையில் சாப்பிடுவார்கள். சில சமயங்களில் பருப்புண்டு. ஆனால் விற்கக்கூடியதையெல்லாம் விற்று விடுவார்கள்" என்று பதில் சொன்னாள் லட்சுமி.

வீடுகளும் கிராமத்தின் சிறிய தெருக்களும் சுத்தமாக இருந்தன ; எதையும் அசிங்கமாகப் போட்டு வைக்கவில்லை. சாலை ஓரத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு சிறிய தேனீர்க்கடை இருந்தது. எல்லாம் நன்றாக நடக்கும் பொழுது ஆடவர்கள் மாலை நேரத்தில் அங்கு வந்து தேனீர் அருந்துவார்கள்; அல்லது வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் எதிர்காலத்தை ஓரளவு நம்பியே வாழ்ந்தார்கள்.

காட்டியல் ஆராய்ச்சி நிலையம் வகுத்த மற்றொரு கைத் தொழில் மூன்று அறைகளுள்ள ஒரு மண் குடிலிலே நடந்து கொண்டிருந்தது. பழைய தீப்பெட்டிகளுக்குச் சாயங் கொடுத்து அவற்றை ஒன்றாக வைத்து ஒரே கட்டையைப் போல் ஆகுமாறு அழுத்தினார்கள். பிறகு அதில் இலேசான துண்டுகள் வெட்டி அவற்றின் மேலே பல நிறங்களில் பளபளப்பாகப் பூசினர். அவற்றைக் கொண்டு சிறு தட்டுக் களும் பெட்டிகளும் செய்தார்கள். மிகவும் சாமர்த்தியமாகச் செய்தாலும் அவை அவ்வளவு அழகாக இல்லை என்று ஜூடி கருதினாள். இருந்தாலும் அவள் தாய் அவற்றில் ஒன்றை வாங்கிக் கொண்டாள்.

"வட்டிக்குக் கடன் கொடுப்பவனுடைய வீடு இதுதான். கதவிலே பெரிய பித்தளைப் பூட்டுகளைப் பாருங்கள் ! பணம் கடன் கொடுப்பதையெல்லாம் அரசாங்கம் நடத்தினால் மக்களுக்கு இத்தனை கஷ்டம் இருக்காது" என்றாள் லட்சுமி.

"இவன் எவ்வளவு வட்டி வாங்குகிறான்?" என்று ஜூடியின் தந்தை கேட்டார்.

"அதுவா, சிலசமயங்களில் வருஷத்துக்கு 100 சதவீதம் இருக்கும் ! அதற்கு மேலேயும் போகும். அது நியாயமில்லை. கூட இருபத்தைந்து சதவிகிதம் வட்டி வாங்கினால் கூட இவ்வளவு மோசமாக இராது. யாராவது இதைப் பற்றி அரசாங்கத் திற்குச் சொல்ல முடியாதா?"

" கடன் கொடுப்பதைப்பற்றி சில திட்டங்கள் இருக்கின்றன -"

“ஆமாம், ஆமாம். ஆனால் அவை போதா - ஆனால் அந்த அளவு செய்வதற்கும் நாங்கள் நன்றியோடு-தானிருக்கிறோம்."

இதைப்பற்றியே இப்பொழுது அவர்கள் இவ்வளவு மகிழ்ச்சியோ டிருப்பார்களானால் முன்பெல்லாம் நிலைமை மிக மோசமாக இருந்திருக்க வேண்டும் என்று ஜூடி எண்ணி னாள். அந்த இளைஞன் அவள் தந்தைக்குச் சில புள்ளி விவரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தான் - அத்தனை மக்கள் இருந்தனர். அத்தனை பேருக்கும் எப்படி உதவி செய்வது?

தங்கள் விடுதியிலே ஜூடி லட்சுமியைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அதிலிருந்து செல்லக்கூடியதாகக் குளிக்கும் அறை ஒன்று இருந்தது. அதை லசுட்மி ஆவலோடு நோக்குவதை ஜூடி கவனித்தாள். "லட்சுமி, உள்ளே போய்க் குளித்துக்கொள். அதோ பார், என்னுடைய சோப்புக்கட்டியும், துண்டும்........"

லட்சுமி ஒரு கணம் தயங்கினாள். பிறகு அவளால் மறுக்கமுடியவில்லை. அவர்கள் வீட்டில் ஓட்டை விழுந்த வாளியில் தண்ணீர் எடுத்துக் குளிப்பதுபோலல்லாமல், உடம்பிற்கு ஆறுதலாக நன்றாகக் குளிப்பதை அவள் விரும்பினாள். ஜூடியின் சோப்புக்கட்டியில் ஜூடியின் மணம் கமழ்ந்தது. துடைப்பதற்கும் அவளுடைய துண்டே. "டி, கூந்தலை மட்டும் சுத்தம் செய்துகொண்டால் கூடப் போதும்!"

"நிறைய நேரம் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு ஜூடி தன் தாயிடம் ஓடி, மத்தியான உணவைக் கொஞ்ச நேரம் பொறுத்துச் சாப்பிடலாம் என்று சொன்னாள். பிறகு அவள் திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு தங்கும் விடுதித் தோட்டத்திற்குள் நுழைந்து சில மலர்களைப் பறித்து வந்தாள். லட்சுமியின் தலையில் வைத்துக்கொள்ளக் கொஞ்சம் ; மீதியுள்ள மலர்களை லட்சுமி சென்னை யிலிருக்கும் போது செய்தது போலத் தன் தலையில் வைப் பாள் என்று அவள் நம்பினாள்.

ஈரமாக இருக்கும் சுருள் சுருளான தனது நீண்ட கூந்தலை முதுகின் மேல் அவிழ்த்துவிட்டுக்கொண்டு லட்சுமி அவர்களோடு மத்தியான்ன உணவைச் சாப்பிடத் தொடங்குவதற்குள் லசுட்மியும், ஜூடியும் தங்களுக்குள் என்னன் வோ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டனர். லட்சுமியின் தோழிகளில் தனக்குத் தெரிந்தவர்களைப் பற்றி ஜூடி எடுத்துச் சொன்னாள். அம்மணிப் பாட்டியைப் பற்றி சமீபத்தில் தெரிந்த விவரங்களையும் தெரிவித்தாள். பெஞ்சமின் இப்பொழுது தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்து கொண்டிருந்தான்.

கடைசியாக அவர்கள் சுவையதிகமில்லாத ஒருவகை இனிப்புப் பண்டத்தை அருந்திக் கொண்டிருந்தனர். அது அதிகம் சூடாகவும் இல்லை, அதிகம் ஆறிப் போயும் இருக்க வில்லை. ஆனால் லட்சுமி அதை விரும்பித் தின்றுகொண் டிருந்தாள். அந்தச் சமயத்தில் ஷர்ட்டும், அரைக்கால் சட்டையும் அணிந்து கொண்டு அவள் தந்தை குமார் உள்ளே நுழைந்தார். மெலிந்தும், அதிகம் வயதானவரைப் போலவும் எப்படியோ அவர் தோன்றினார். அவர் அவசர மாகக் கொஞ்சம் சாப்பிட்டார். பிறகு அவரும், ஜூடியின் தந்தையும் கால்வாயை நோக்கி உலாவச் சென்றார்கள்.

சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் திரும்பியபோது இருவரும் ஒருவர் மேல் ஒருவர் படும்படி நெருங்கி நடந்து வந்தனர். குமாரின் முகத்திலே கொஞ்சம் கறை படிந்திருந்தது. ஜூடியின் தந்தை தம் மூக்குக்கண்ணாடியைத் துடைத்துக் கொள்வதை ஜூடி கண்டாள்.

"அவர்கள் அழுது கொண்டிருந்திருக்கிறார்கள்” என்று ஜூடி பச்சையாகக் சொன்னாள்.

"அப்படியிருந்தால், அதை நாம் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் " என்றாள் அவள் தாய்.

"கொஞ்சம் காப்பி சாப்பிடலாம். குமார், உங்களை யெல்லாம் கண்டது எங்களுக்குப் பெரிய சந்தோஷம், லட்சுமியைக் காணாமல் ஜூடி மிகவும் வருந்தினாள்."

ஜூடியும் லட்சுமியும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். அப்படிச் சொல்லுவது எப்படியோ இருந்தது. ஆனால் அது உண்மை. கொஞ்ச நேரம் கழித்து லட்சுமி, "ஜூடி, என்னுடைய நாட்டிய வகுப்புக்கு நீ வருகிறாயா?" என்று கேட்டாள்.

"பிறகு எல்லோரும் எங்கள் வீட்டிற்குப் போகலாம் அங்கே சென்று தேநீர் அருந்தலாம்" என்றார் குமார்.

'அது நல்லது. அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். என் தாயும், சரஸ்வதியும் எல்லாம் ஒழுங்கு செய்துவிடுவார்கள். ஒன்றும் மோசமாகத் தோன்றாது. திடீரென்று எங்கள் வீட்டை ஜூடி பார்ப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அவள் தந்தையும், தாயும் அப்படிப் பார்க்கக்கூடாது. அவர்கள் நல்லவர்கள்... இருந்தாலும்....' என்று இவ்வாறு லட்சுமி எண்ணமிடலானாள். அவள் தன் தந்தையை மெதுவாகப் பார்த்தாள் ; அவர் நகைத்தார். "லட்சுமி, உனக்கு வேறொரு சேலை கொண்டு வந்திருக்கிறேன். நாட்டிய வகுப்புக்கு அது வேண்டியிருக்கு மென்று நினைத்தேன்" என்றார் அவர். பழைய செய்தித்தாளில் மடித்துக் கட்டியிருந்த அதை அவர் லட்சுமியிடம் கொடுத்தார். அவளுடைய தீபாவளிச் சேலையையும், அதற்குப் பொருத்தமான ரவிக்கையையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். அவள் தாய்தான் அதைக் கொடுத்து அனுப்பியிருப்பாள். லட்சுமி இனி நிம்மதியாக இருக்க முடியும். "ஜூடி, உன்னுடைய அறைக்குப் போய்விட்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்" என்றாள் அவள். நல்ல வசதியான குளிக்கும் அறையும் இருக்கிறது. குழாய்த் தண்ணீரிலே மீண்டும் ஒரு முறை சோப்புப் போட்டு சுத்தம் செய்து கொள்ளலாம்!

வகுப்புக்கு வருகின்ற எல்லோரும் அங்கு வந்து காத்துக்கொண்டிருந்தனர். சமூக நிலையத்திற்குத் திரும்பிய போது வகுப்பைச் சுற்றிலும் வேறு பல சிறுமிகள் நின்று உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். வகுப்பைச் சுத்தம் செய்திருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை முக்கியமானதாகத் தோன்றச் செய்ய கோக்கா - கோலா விளம்பரம் ஒன்றைத் தேடி எடுத்து யாரோ உள்ளே தொங்க விட்டிருந்தார்கள். ஜூடியின் தந்தை குமாருடனும், தேசீய வளர்ப்புத் திட்டத்தைச் சேர்ந்த இளைஞருடனும் சென்று விட்டார். அவருக்கு முன்னால் நாட்டியமாடுவதென்றால் சிறுமிகள் வெட்கப்-பட்டிருப்பார்கள். அந்தக் குருடன் தன் வாத்தியங்களுடன் அங்கு வந்திருந்தான். லட்சுமிக்காக வள்ளி ஒரு பாயை விரித்து அதன் பக்கத்தில் மரக்கட்டையையும், தட்டுக்கோலையும் தயாராக வைத்திருந்தாள். வயதிற் குறைந்த சிறுமிகளை ஒவ்வொருத்தியாக முதலில் லட்சுமி ஆட வைத்தாள். கதக் நடன ஜதிகளை அவள் தட்டிக் காண்பித்தாள். அவர்கள் தவறு செய்யும்போது அவள் திருத்தினாள். இரண்டு, மூன்று தாய்மார்கள் மௌனமாக ஒரு மூலையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எல்லோரும் சேர்ந்து உணர்ச்சி யோடும், சிரத்தையோடும் ஆடும்படி செய்தாள். அதன்பின் பெரிய பெண்களின் முறை வந்தது. ஆனால் மோகினி முதலில் லட்சுமியிடம் திடீரென்று ஓடிவந்து அவளுடைய பட்டுச் சேலையை ஏதோ ஒரு மிக மெல்லிய பொருளைத் தொடுவதைப்போலத் தொட்டுக் கொண்டு, " எங்களை விட்டுப்போய்விட மாட்டீர்களே?" என்று மெதுவாகக் கேட்டாள். “இல்லை, இல்லை" என்றாள் லட்சுமி. அதிர்ஷ்டம் மாறும் ; ஒரு நாளைக்கு இந்த வாழ்வு முடிந்துவிடும் -
அவர்களை விட்டு அவள் பிரிந்து போய்விடுவாள் என்ற இந்த எண்ணம் முதல் தடவையாக அவள் மனத்திலே உதித்தது.

ஆனால் இப்பொழுது அவள் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். முன்பு நாட்டியம் பயின்றபோது எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டாளோ அதைப்போல இப்பொழுது நாட்டியப் பயிற்சி அளிப்பதில் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டியமாடும் ஒவ்வொருத்தியோடும் அவள் தன் கண்களாலும், கட்டை யில் தட்டும் ஜதி ஒலியாலும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாள். ஜதிகள் ஒருபொழுது மகிழ்ச்சியோடும், ஒருபொழுது சோர்வோடும், ஒருபொழுது துள்ளியும், ஒரு பொழுது ஆடி அசைந்தும் ஒலித்தன. அந்தப் பெண்கள் அதை எப்படி விரும்பினார்கள், நாட்டியத்திலே அவர்கள் எப்படி ஒரு புதிய வாழ்வைக் கண்டார்கள்; அவர்களுக்கு இதையாவது அவள் உதவ முடிந்தது.

"கிராமத்திலே நாட்டியமாடுகிறார்களா?" என்று ஜூடியின் தாய் முடிவில் கேட்டாள்.

“அதிகம் இல்லை. வட்டமாக உட்கார்ந்துகொண்டு பாட்டுக்கு இசைந்தவாறு அவர்கள் அசைவார்கள். நீண்ட கதைப்பாட்டுக்களை அவர்களே உண்டாக்குவார்கள். ஆண்கள் அதிகமாக ஆடுவதுண்டு; ஆனால் அது அவர்களுக் குள்ளேயே இருக்கும். மற்ற மாதர்களோடு சேர்ந்து கொண்டு தூரத்திலுள்ள குடிசைகளிலிருந்துதான் நான் அந்த ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். பொங்கலின் போது ஒருவேளை அவர்கள் அதிகமாக ஆடலாம். அந்தச் சமயத்திலே விளைச்சல் அதிகமாக இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியோடிருப்பார்கள்." லட்சுமி எழுந்தாள். பாயையும் மரக்கட்டையும் ஒரு பக்கத்தில் எடுத்து வைத்தார்கள். குருடன் தனக்கு தானே பேசிக்கொண்டு வெளியே நடந்தான். வீட்டில் எல்லாம் தயாராக இருக்குமா? ஆமாம், சரஸ்வதி நல்ல சேலை யொன்று உடுத்தித் தலையில் பூ வைத்துக்கொண்டு கைகாட்டி அவர்களை வரும்படி தெரிவித்துக்கொண்டு அங்கே நின்றாள்.

அழுக்கடைந்த பழைய பாவாடையொன்றை அணிந்து கொண்டு சரஸ்வதி பாத்திரங்களைத் துலக்கியதைத் தான் பார்த்ததாக அவளிடம் சொல்லுவது நல்லதல்ல என்று ஜூடி சட்டென்று நினைத்தாள். எஞ்சினியர் வீட்டிற்கு அவர்கள் சென்றனர். அந்த வீட்டைச் சுற்றியாவது ஒருமாதிரியான வேலியும், உள்ளே தோட்டம் போடும் முயற்சியும் இருந்தன. சென்னையிலே மாடி வீட்டிலிருந்த அந்தப் பழைய நாற்காலிகளில் சிலவற்றையே தாழ்வாரத்தில் போட்டிருந்தார்கள். தேனீர்க் கலங்களும் கோப்பைகளும் அங்கிருந்தவைகளேதான். அவர்களை வீட்டிற்குள் வரும்படி லட்சுமி அழைக்கவில்லை; அவள் தாயும் அழைக்கவில்லை. உள்ளே மூன்று அறைகள் இருக்கலாம் என்று ஜூடி கருதினாள்; ஆனால் அவற்றில் ஒன்று சமயலறையாக இருக்கலாம். யாரோ - ஸ்ரீமதி ஞானம்மாளா? - தன் தாயிடம் அவர்கள் வீட்டிலே பல சாமான்களை விற்றதாகச் சொன்னார்கள். ரேடியோவையும், நல்ல மரச் சாமான்களையும் அவர்கள் விற்க வேண்டி நேர்ந்திருக்கலாம். ஐயோ பாவம், முன்பெல்லாம் நிறைய நகைகள் அணிந்துகொண்டிருந்த லட்சுமியின் தாய் இப்பொழுது ஒரே ஒரு சிறிய கழுத்துச் சங்கிலி மட்டும், அணிந்திருப்பதை ஜூடி திடீரென்று உணர்ந்தாள். ஆனால் இவற்றையெல்லாம் ஒருவரும் கவனிக்கக்கூடாது - எல்லாவற்றையும் கண்டு கொண்டதாக ஒருவரும் காட்டிக் கொள்ளக்கூடாது.

கந்தனுக்கு ஏதோ சிரங்குபோல வந்திருந்தது; அதனால் ஜூடியின் தந்தை அவனைக் கவனித்துப் பார்த்தார். அதைப் போக்க ஒரு களிம்பு அனுப்புவதாகச் சொன்னார். அதை அனுப்புவதில் அவருக்கு ஒரு சிரமமும் இல்லையென்றும் தெரிவித்துக்கொண்டார். பாதசரங்களை இன்னும் அணிந்து கொண்டிருந்த குழந்தைதான் யாதொரு வகையான மாறுதலும் இல்லாமல் தோற்றம் அளித்தது.

லட்சுமியும், சரஸ்வதியும், குமாரும் இரவு உண்டி அருந்துவதற்காகத் தங்கள் விடுதிக்கு வந்தனர். நல்ல தேனீர் விருந்து அளிக்காததற்காக அவர்கள் மன்னிப்புக் கோரினார்கள் - முன்னாலேயே அவர்களுக்குத் தெரிந்திருந்தால்............" ஜூடி, என் நாட்டிய வகுப்பு, உனக்குப் பிடித்ததா?" என்று லட்சுமி கேட்டாள்.

"ஓ நன்றாகப் பிடித்தது! என்னால் எப்பொழுதாவது அப்படிச் சொல்லிக் கொடுக்க முடியுமென்று தோன் ற வில்லை. ஆரம்பத்திலே மிகவும் கஷ்டமாக இருக்க வில்லையா?" என்றாள் ஜூடி.

“மிகவும்‌ கஷ்டமாகத்தான்‌ இருந்தது. நான் மிகவும்‌ சிறியவள்‌ என்று அவர்கள்‌ கருதினார்கள்‌” என்றாள்‌ லட்சுமி, ஒரு உண்மையான ஆசிரியர்‌ வரும்வரையில்தான்‌ திரும்பி வரப்போவதில்லை என்று கூறிக்‌ கல்வி வகுப்பை உதறித்‌ தள்ளிவிட்டுப்‌ போன ஒரு மாதைப்பற்றி அவள்‌ கினைத்துக்‌ கொண்டாள்‌. ஆனால்‌ வேறு பலர்‌ வந்தனர்‌. அவர்கள்‌ வந்துகொண்டே இருந்தனர்‌.

"நீ கடிதம்‌ எழுதுவாய்‌ அல்லவா?”?” என்று கேட்டாள்‌ ஜூடி.

"எழுதுவதற்கு என்ன இருக்கிறது? பார்க்க வேண்டியதை யெல்லாம்‌ நீ பார்த்து விட்டாய்‌.”

”லட்சுமிக்குத்‌ திடீரென்று மிகுந்த சோகம்‌ உண்டாயிற்று, ஜூடி திரும்பிப்‌ போய்விடுவாள்‌--பழைய வாழ்க்கைக்கு அவள்‌ சென்று விடுவாள்‌. அவள்‌ மட்டும்‌ அங்கேயே இருக்கவேண்டும்‌.

“வகுப்பு எப்படி கடக்கிறது என்று தெரிந்து கொள்ள நான்‌ ஆசைப்படுவேன்‌. அதைப்பற்றி யெல்லாம்‌ நான் அம்மணிப்பாட்டிக்குச்‌ சொல்லுவேன்‌.”'

“பாட்டிக்குச்‌ சொல்லவேண்டாம்‌......?” என்‌ று ஆரம்பித்‌தாள்‌ லட்சுமி, பிறகு, “ஜூடி, ஒரு பழயை கந்தலான சேலையை நான் கட்டிக்கொண்டிருந்ததாகப்‌ பாட்டியிடம்‌ தயவு செய்து சொல்லாதே. குளிக்கச்‌ சரியான வசதியில்‌லாதைப்‌ பற்றியும்‌ என்தந்தையின்‌ தோற்றத்தைப்‌ பற்றியும்‌ சொல்லாதே...”

“எனக்கு எல்லாம்‌ புரிகின்றது. நம்‌ தோழிகளில்‌ ஒருவருக்குக்கூட நான் சொல்ல மாட்டேன்‌. ஆனால்‌ என்ன இருந்தாலும்‌, நீ பாடம்‌ சொல்லிக்‌ கொடுப்பதிலிருந்து உனக்கு மிகுந்த திறமை இருக்கிறதென்று நான் கருதுகிறேன்‌” என்றாள்‌ ஜூடி,

தங்கும்‌ விடுதியிலிருந்த மேஜையின்‌ மேல்‌ அவன்‌ தாயின்‌ சாமான்கள்‌ சில கிடந்தன. அவளுடைய கறுப்பு மூக்குக்‌ கண்ணாடியும்‌ கிடந்தது. அதை அவள்‌ எப்பொழுதும்‌ கொண்டு வருவாள்‌; ஆனால்‌ போட்டுக்கொள்ள ஒரு பொழுதும்‌ நினைக்கமாட்டாள்‌. உறையிலிருந்த அதை ஜூடி எடுத்து மூக்கில்‌ வைத்துக்கொண்டு அதற்கு மேலாக கண்‌களை உயர்த்திக்கொண்டு லட்சுமியைப்‌ பார்த்தாள்‌. பிறகு லட்சுமி அதைப்‌ போட்டுப்‌ பார்த்தாள்‌. திடீரென்று அவள்‌, இந்த மூக்குக்‌ கண்ணாடியைப்‌ போட்டுக்‌ கொண்டால்‌ வயதானவளைபோலத்‌ தோன்றுகிறதா???” என்று கேட்டாள்‌.

”ஆமாம்‌, மிகஷம்‌ வயதானதைப்போலத்‌ தோன்றுகிறது. லட்சுமி, உனக்கு அது வேண்டுமானால்‌ நீயே வைத்‌துக்கொள்‌. நான் அதை உபயோகிப்பதேயில்லை”? என்று
ஜுடியின்‌ தாய்‌ கூறினாள்‌.

“வந்து கண்ணாடியில்‌ உன்னைப்பார்‌!'' என்றாள்‌ ஜூடி, அவர்களுக்குப்‌ பின்னாலேயே ஜுடியின்‌ அறைக்குள்‌ சரஸ்வதியும்‌ ஓடினாள்‌. எல்லோரும்‌ சிரிக்கத்‌ தொடங்கினார்‌கள.

குமார்‌ உன்‌ மகள்‌ மிகவும்‌ சாமர்த்தியசாலி. அவளைப்‌ போல இன்னும்‌ பலபேர்‌ இருந்தால்‌ இந்தியா இன்னும்‌ நல்ல நாடாக இருக்கும்‌'” என்று ஜூடியின்‌ தந்‌தை மொழிந்தார்‌.

குமாருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி; ஆனால்‌ அவர்‌ “ஆமாம்‌ அது மெய்தான்‌. கிராமங்களுக்கு நாம்‌ உதவி செய்யவேண்டும்‌”? என்று தடுமாற்றத்தோடு சொன்னார்‌,
பிறகு, “உங்களைப்‌ பார்த்தது நல்லதாயிற்று. எல்லோரும் எங்களை மறந்தே போனார்கள்‌ என்று நான் நினைத்தேன்” என்றார் அவர்.

“உங்களைக்‌ கொஞ்சமும்‌ மறக்கவில்லை” என்று சொல்லிவிட்டு ஜூடியின்‌ தந்தை தம்‌ கரத்தைக்‌ குமாரின்‌ கரத்தின்‌ மேல்‌ ஒரு கணம்‌ வைத்தார்‌.

அப்பொழுது சிறுமிகள்‌ வந்தனர்‌. “மூக்குக்கண்ணாடியை நான் வைத்துக்‌ கொள்கிறேன்‌. பெரிய அறிவாளி போல நான் தோற்றமளிப்பதாக ஜூடி சொல்கிறுள்‌. அவளு டைய ஹிந்தி ஆசிரியைப்போலத்‌ தோன்றுகிறேனாம்‌, இனிமேல்‌ என்‌ வகுப்புக்கு வருகிறவர்கள்‌ இன்னும்‌ மரியாதையாக நடந்துகொள்வார்கள்‌ என்று நினைக்கிறேன்‌!?? என்றாள்‌ லட்சுமி,
----------

12. கிறிஸ்துமஸமாம்‌ பொங்கலும்

பென்சிலால்‌ வரைந்த படங்களுடன்‌ கூடிய காகிதத்தைக்‌ குமார்‌ தள்ளிவிட்டார்‌; அந்த வேலை முடிந்தது. பிறகு திடீரென்று மேஜையின்‌ மேல்‌ இரண்டு முழங்கைகளையும்‌ ஊன்றி வைத்துக்கொண்டு அவற்றில்‌ தம்‌ தலையைத்‌ தொங்கவிட்டார்‌. எல்லாம்‌ இருண்டு தோன்‌ றிற்று. லட்சுமி தன்‌ தந்தையின்‌ தோளின்‌ மேல்‌ தட்டிவிட்டு ஒரு கையால்‌ அவர்‌ கழுத்தைச்‌ சுற்றி வளைத்துக் கொண்டாள்‌. “அப்பா, என்னப்பா இது 2”

தலையைத்‌ தம்‌ கரங்களால்‌ தடவிக்கொண்டே அவர்‌ நிமிர்ந்து பார்த்தார்‌. பிறகு அவர்‌ அந்தக்‌ காகிதத்தின்‌ மேல்‌ விரலால்‌ தட்டிக்கொண்டே மெதுவாகச்‌ சொன்னார்‌; “இதெல்லாம்‌ மிக எளிதான காரியம்‌. இதைச்‌ செய்யும்‌ போது என்‌ மனம்‌ வேறு விஷயங்களைப்பற்றி நினைத்துக்‌ கொண்டிருக்கிறது.” தாம்‌ சொல்லுவதைத்‌ தம்‌ மனைவி கேட்டு மேலும்‌ கவலை யடையாமலிருப்பதற்காக அவர்‌ ஆங்கிலத்தில்‌ பேசத்‌ தொடங்கினார்‌. “லட்சுமி, இதைப்‌ பார்க்கின்ற போதும்‌, எனக்குள்ள பயிற்சியையும்‌, அனுபவத்தையும்‌ வைத்துக்கொண்டு நான்‌ இப்பொழுது ஒரு குமாஸ்தா செய்கின்ற வேலையையும்‌, கூலிக்காரன்‌ செய்‌கின்ற வேலையும்‌ செய்துகொண்டு அவர்களுக்குக்‌ கிடைக்கும்‌ சம்பளத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறதை நினைக்கிறபோதும்‌, இது மாற்றல்‌ இப்படியே நடந்து கொண்டிருக்கும்‌ என்பதை உணர்கின்ற போதும்‌ முன்னாலே அந்தக்‌ காரியாலயத்தில்‌ கடந்த தவறுகளுக்காக நான்‌ குறுக்கிட்டிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது, அந்த லஞ்சப்‌ பணத்தைகூட நான்‌ வாங்கிக் கொண்டிருந்திருக்கலாம்‌, அப்படிச்‌ செய்திரந்தாலாவது என்னுடைய மூளையைச்‌ சரியாகப்‌ பபன்‌ படுத்திக் கொண்டிருந்திருப்‌பார்கள்‌”?

”அப்பா, இது உங்களுடைய உண்மையான நினைப்‌பல்ல. இந்த நிலைமை என்றுமே இப்படிமே இருக்காது? என்று கூறினாள்‌ லட்சுமி.

”கொஞ்ச நாட்கள்‌ நானும்‌ அப்படித்தான்‌ நினைத்துக்‌ கொண்டிருந்தேன்‌. ஜூடியும்‌, அவள்‌ பெற்றோர்களும்‌ போன மாதம்‌ வந்ததிலிருந்து அப்படி நினைத்தேன்‌, மீண்டும்‌ பழைய உசர்ச்சியைப்‌ பெறுவது வியப்பான காரியம்‌ தான்‌. ஆனல்‌ இப்பொழுது அவர்கள்‌ என்னை மறந்திரப்பார்கள்‌.””

”அவர்கள்‌ மறந்திருக்கமாட்டார்கள்‌. மேலும்‌ உங்கள்‌ அப்பாவும்‌, அம்மாவும்‌ மறந்திருக்க மாட்டார்கள்‌?” என்றாள்‌ லட்சுமி.

”நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது அவர்களுக்குத்‌ தெரியாமலீருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்‌. நான் யாருக்குக்‌ கீழே வேலை செய்கிறனோ அந்தத்‌ தலைமை எஞ்சினியர்‌ இன்று காலையில்‌ என்னிடம்‌ ஒன்று சொன்னார்‌... .. கால்வாயைப்‌ பற்றிய விஷயம்‌ அது அவர்‌ சொன்ன மாதிரி செய்வது சரியான வழியல்ல என்று எனக்கு நன்றாகத்‌ தெரியும்‌. அப்படிச்‌ செய்தால்‌ நீண்ட நாளைக்கு நன்றாக நிற்காது. வரிகளிலிருந்து வரும்‌ பணத்தைத்தான்‌ அது வீணாக்கும்‌. ஆனால்‌ நான் என்ன சொல்லமுடியும்‌? அவர்‌ உத்திரவின்படி நான் நடக்க வேண்டியதுதான்‌. அவருக்கு விஷயம்‌ ஒன்றும்‌ தெரியா து. லட்சுமி, நம்மிடம்‌ இருக்கும்படியான கருவிகளை வைத்துக்‌ கொண்டு நாம்‌ என்ன செய்யலாம்‌ என்பதைப்பற்றி நான்‌ எண்ணிக்‌ கொண்டிருக்கிறேன்‌. ஒவ்வொரு கிராமத்திலும்‌ குழாய்க்‌ கிணறுகள்‌ நாம்‌ போட்டுக்கொண்டிருக்க வேண்டும்‌. அதுவும்‌ நமது திட்டத்திலே இருக்கிறது என்று நம்புகிறேன்‌. ஆனால்‌ அதைப்‌ பார்ப்பதற்குக்கூட எனக்கு அனுமதி கிடையாது.” அவர்‌ எங்கோ உற்று கோக்கினார்‌.

“அப்பா, நீங்கள்‌ ஏன்‌ அதைப்‌ பார்க்கக்கூடாது? எதனால்‌ அந்தக்‌ கிணறுகளை அமைக்கவில்லை? அப்படிச்‌ செய்தால்‌ மிக நன்றாக இருக்கும்‌.”

“சிலருக்கு அதிலே நிறைய லாபம்‌ கிடைக்காது. மலேரியாவைப்‌ போக்க மருந்து தெளிப்பதிலும்‌ இதே மாதிரிதான்‌. சுகாதார இலாக்காக்களைச்‌ சேர்ந்தவர்கள்‌ நல்லவர்கள்‌. ஆனால்‌ அவர்களுக்கு வேலை மிக மிக அதிகம்‌. அவர்களோடு நாம்‌ ஒத்‌துழைக்கவேண்டும்‌. ஆனால்‌ அப்படி நாம்‌ செய்வதில்லை. அதனுல்‌ ஒரு சில பகுதிகளில்தான்‌ மருந்து தெளித்திருக்கிறுர்கள்‌. மறுபடியும்‌ கொசுக்கள்‌ பரவி விடுகின்றன. நான்‌ சொல்வ து புரிந்ததா?”

“ புரிந்தது ” என்றாள்‌ லட்சுமி, பிறகு அவள்‌, “வள்ளியின்‌ சகோதரனுக்கு மலேரியா”? என்றாள்‌.

”அவனுக்கு வராமல்‌ தடுத்திருக்கலாம்‌?” என்று உரத்துக்‌ கூவினார்‌ குமார்‌,

“ஆனால்‌ விஷயம்‌ இப்படித்தான்‌. மருந்து தெளிப்பதில்‌ லஞ்ச ஊழல்‌ இல்லாமலிருக்கலாம்‌. அது வெறும்‌ சோம்‌பேறித்தனம்‌, அது அவ்வளவு மோசமில்லை அல்லவா???

”அப்பா அதுவும்‌ மோசம்தான்‌. நீங்கள்‌ எவ்வளவோ செய்யமுடியும்‌!”

“நான்‌ நினைக்கிற அளவுக்கு ஒருவேளை செய்ய முடியாதிருக்கலாம்‌; இருந்தாலும்‌ கொஞ்சம்‌ செய்யலாம்‌. ஆனால்‌, லட்சுமி, இதையெல்லாம்‌ நீ திருப்பிப்‌ பேசக்கூடாது.”

”அப்பா, பழங்கதைகளில்‌ சொல்லுவதைப்போல இது சோதனைக்காலம்‌. கானகத்திலே விடப்பட்ட வீரன்‌ புலிகளோடு சண்டையிட்டுத்தான்‌ தீரவேண்டும்‌. ஆனால்‌ இங்கே புலியில்லை, தலைமை எஞ்சினியர்தான்‌ இருக்கிறார்‌”? என்று லட்சுமி அவர்‌ தலையைத்‌ தடவிக்கொண்டே கூறினாள்‌.

“அவரோடு சண்டையிட என்னை விடுவதில்லை!” என்றார்‌ அவள்‌ தந்தை. இருந்தாலும்‌ அவருக்குக்‌ கொஞ்சம்‌ ஆறுதல்‌ ஏற்பட்டிருப்பதாகத்‌ தோன்றிற்று.

அப்பொழுது கிராமத்தார்களில்‌ ஒருவன்‌ அவர்களை நோக்கிக்‌ கூவினான்‌. குமார்‌ அவனை நோக்கிச்‌ சென்று ஒரு கடிதத்தோடும்‌, நீளமான காகிதக் கட்டோடும்‌ திரும்பினார்‌. “லட்சுமி இவை உனக்கு” என்றார்‌ அவர்‌.

லட்சுமி கடிதத்தை முதலில்‌ பிரித்தாள்‌. அது ஜூடியிடம்‌ இருந்து வந்த கிறிஸ்துமஸ்‌ வாழ்த்து. தாடியுடன்‌ கூடிய வயதான மனிதர்‌ ஒருவர்‌ சிவப்புக்‌ கம்பளம்‌ போர்த்து உறைபனியிலே நிற்பதுபோல அந்த ஆங்கில வாழ்த்துக்‌ கடிதத்திலே படம்‌ இருந்தது. *கிறிஸ்துமஸ்‌ தந்தை: என்று அவரை அவர்கள்‌ அழைப்பது அவளுக்கு நினைவு வந்தது. ஜூடி தன்‌ அன்பைத்‌ தெரிவித்திருந்ததோடு தன்‌ தந்தையும்‌, தாயும்‌ அவளுடைய வதுப்பிற்காகப்‌ பரிசுகள்‌ அனுப்பியிருந்ததையும்‌ கூறியிருந்தாள்‌. “அதுதான்‌ அந்தக்‌கட்டு!” என்று உற்சாகத்தோடு லட்சுமி கூவிக்கொண்டு, கட்டுக்கயிற்றை ஜாக்கிரதையாக அவிழ்த்து, காகிதத்தையும்‌, அட்டையையும்‌ பிரித்தெடுத்தாள்‌. “பாருங்கள்‌, இதோ ஒரு தேசப்படம்‌--இரண்டு படங்கள்‌ -- இந்தியாவின்‌ படம்‌ ஒன்று, உலகத்தின்‌ படம்‌ ஒன்று!” என்று அவள்‌ சொன்னாள்‌.

“ திருப்பி அவர்களுக்கு என்ன அனுப்பமுடியும்‌? லட்சுமி, அவர்கள்‌ நல்லவர்கள்‌. ஆனல்‌ அவர்களுடைய பரிசுகளை நாம்‌ ஏற்றுக்கொள்ள முடியாது!” என்று அவள்‌ தந்தை சோர்வோடு சொன்னார்‌.

லட்சுமி படங்களைக்‌ கையில்‌ எடுத்துக்கொண்டாள்‌. “என்‌ வகுப்புக்காக நான்‌ எதை வேண்டுமென்றாலும்‌ ஏற்றுக்‌ கொள்வேன்‌ !*? என்றாள்‌ அவள்‌.

சரஸ்வதிக்கும்‌, கந்தனுக்கும்‌, பார்வதிக்கும்கூட ஜூடி பிடமிருந்து கிறிஸ்த்மஸ்‌. வாழ்த்துக்கள்‌ கிடைத்தன, ஸ்பென்சரிலிருக்து கிறிஸ்‌தமஸ்‌ வாழ்த்துக்களை வாங்குவது விளையாட்டாக இருந்தது: அங்கே ஒரு பெரிய பெட்டியில்‌ கிறிஸ்துமஸ்‌ வாழ்த்துக்‌ கடிதங்கள்‌ இருந்தன. ராபின்‌ ப நவைகளுடனும்‌, உறைபனியுடனும்‌, மினுமினுப்புடனும்‌ இருந்த அலைதான்‌ உண்மையான கிறிஸ்‌துமஸ்‌ வாழ்த்துக்‌ கடிதங்கள்‌ என்று ஜூடி சொன்னாள்‌. ஐரோப்பியரும்‌ சென்னைக்‌ கிறிஸ்தவர்களுமாகிய ஒரு சில மக்களே கிறிஸ்துமஸைக்‌ கொண்டாடினார்கள்‌. ஆனால்‌ கிளப்பில்‌ விருந்திருந்தது. செப்படி வித்தைக்காரன்‌ ஒருவனையும்‌ அழைத்திருந்தார்கள்‌. வேறு பல விருந்துகளும்‌ இருந்தன. இங்கிலாந்திலிரந்து பரிசுக்‌ கட்டுகள்‌ வந்தன. ஜுடியின்‌ ஆங்கிலப்‌ பாட்டிகளில்‌ ஒருத்தியிடமிருந்து சாக்கலெட்‌ பெட்டி ஒன்று வந்திருந்தது. அந்தப்‌ பெட்டி இங்கு தபாலில்‌ வந்து மிகவும்‌ சூடேறியதால்‌ சாக்லெட்டுக்களெல்லாம்‌, முக்கியமாக பெஞ்சமினால்‌ சாப்பிடக்-கூடியவையாக இருந்‌தாலும்‌, நசுங்கிப்‌ போய்விட்டன.

ஜானிடமிரு௩து அவளுக்கு ஒரு கடிதம்‌ வந்தது. அவன்‌ தான்‌ பணம்‌ மீதம்‌ பிடித்து வைப்பதாகவும்‌, அவச ஈஸ்டர்‌ விடுமுறையில்‌ திரும்பி வரும்போது அவளுக்கு ஒரு நல்ல பரிசு அளிக்கப்போவதாகவும்‌ எழுதியிருந்தான்‌. பாலி சினிமாக்‌ கொட்டகையில்‌ நல்ல படங்கள்‌ வந்தால்‌ அவனே பணம்‌ கொடுத்து அவளை மூன்று தடவை அழைத்‌துப்‌ போவதாக எழுதியிருந்தான்‌. அப்பா, இங்கிலாந்தி லுள்ள சினிமாக்‌ கொட்டகையை அவள்‌ நினைத்து நீண்ட காலமாகி விட்‌டது! இங்கிலாந்தா? ஆமாம்‌. அங்கு நிறைய பரீட்சைகள்‌ இருக்கும்‌. ஆனால்‌ ஹிந்தி இருக்காது. அதற்கு மேல்‌ இந்தியாவும்‌ இல்லை. இன்னும்‌ கொஞ்சம்‌ ஹிந்தி கற்றுக்‌ கொள்ளவில்லையே என்று அவளுக்குத்‌ திடீரென்று தோன்றிற்று, ஏனென்றால்‌ அப்பொழுது -- என்ன? இந்தியாவை மீண்டும்‌ பார்க்காமலிருப்பதென்பது எவ்வளவு அசாதாரணமான காரியம்‌. ஆனால்‌ பார்ப்பதென்பது எவ்வளவு முடியாத காரியம்‌. யாரும்‌ நட்பைத்‌ திடீரென்று விட்டுவிடமுடியாது, லட்சுமியைப்‌ பார்க்காமல்‌ இருக்க முடியுமா?

அலங்காரங்க ளெல்லாம்‌ செய்வது அவர்களுக்கே மிகுந்த உற்சாகமாக இருந்தது. வர்ணக்‌ காகிதத்தில்‌ கத்தரித்த நட்சத்திரங்களையும்‌, பிறவற்றையும்‌ வெண்மை யான சுவர்களிலே ஒட்டி வைத்தார்கள்‌; சவுக்கு மரத்தின்‌ பெரிய கிளை ஒன்றைக்‌ கொண்டு வந்தனர்‌ நல்ல கிறிஸ்‌ துமஸ்‌ மரத்தைப்‌ போலவே அது தோன்றிற்று. தோட்டத்தில்‌ ஒரு மூலையில்‌ அதை நட்டுவைத்தனர்‌. சென்னையில்‌ நடக்கும்‌ கிறிஸ்துமஸ்‌ கூட்டங்கள்‌ வீட்டிற்குள்‌ வெப்பமான அறைக்‌குள்ளே நடைபெரும் வெப்பம்‌ குறைந்த மாலை நேரத்திலே வீட்டுக்கு வெளியே அவை நடைபெறும்‌. குழந்தைகள்‌ யார்‌ யாரைக கூப்பிடுவதென்று அவர்கள்‌ ஒரு பட்டி தயாரித்தார்‌கள்‌. அவர்களிற்‌ சிலர்‌ பெஞ்சமினைப்போல மூன்று நான்கு வயதுடையவர்கள்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ தரையின்மீது வளைக்துசெல்வதும்‌,ஓடுவதுமான விளையாட்டுச்‌ சாமான்களை விரும்புவார்கள்‌. ஜீப்‌, வாடகைக்கார்‌ போன்ற விளையாட்டுக்‌ கருவிகளும்‌, எருமையை அடித்துத்‌ தின்னும்‌ புலி, எலியைத்‌ தின்னும்‌ நாகப்பாம்பு போன்ற பயங்கரமான விளையாட்டுச்‌ சாமான்களும்‌ இருந்தன. பெஞ்சமினுக்கு அவைதான்‌ அதிக மாகப்‌ பிடித்ததாகத்‌ தோன்றிற்று. பலூன்களும்‌ வாங்கி யிருந்தார்கள்‌. ஆங்கில நாட்டுப்‌ பலூன்களைவிட இந்த இந்திய காட்டுப்‌ பலூன்கள்‌ மிகவும்‌ வேடிக்கையாக இருந்தன. ஏனென்றால்‌ அவை தேனீர்க்‌ குவளைகளைப்‌ போலவும்‌, பூக்களைப்போலவும்‌, விளக்குகளைப்‌ போலவும்‌, விலங்குகளைப்போலவும்‌ புதுமையான பலவித வடிவங்களில்‌ அமைந்திருந்தன. விரல்களால்‌ அவற்றின்‌ மேல்‌ தடவினால்‌ அவை கீச்சுக்கீச்‌ சென்று ஒலி உண்டாக்கும்‌. அப்படிச்‌ செய்வது பெஞ்சமினுக்குப்‌ பிடிக்கும்‌.

பள்ளித்‌ தோழிகளில்‌ சிலரை ஜூடி பட்டியில்‌ சேர்த்‌ திருந்தாள்‌. மிகவும்‌ வேடிக்கையான பிறந்த நாள்‌ விருந்தளித்த தாராவும்‌ அதில்‌ உண்டு. ஆனால்‌-லட்சுமி சென்னையில்‌ இருந்திருந்தால்‌ எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்‌! இந்தப்‌ பெரிய பெண்களுக்கு விளையாட்டுச்‌ சாமான்களும்‌ குழந்தைப்‌ புத்தகங்களும்‌ அளிக்கலாமென்று அவள்‌ தாய்‌ நினைத்தாள்‌! ஆனால்‌ அவையெல்லாம்‌ அவர்களுக்குப்‌ பிடிக்‌காதென்று ஜூடிக்குத்‌ தெரியும்‌. அவள்‌ அதனால்‌ அவர்களுக்காகப்‌ பணப்‌ பைகளும்‌, கைக்குட்டைகளும்‌, கோட்டுப்‌ புத்தகங்களும்‌, சிறிய வாசனைத்திரவப்‌ புட்டிகளும்‌ வாங்கினாள்‌. தபால்‌ தலை சேகரிப்பதில்‌ விருப்பமுள்ள அந்தப்‌ பையனும்‌ பட்டியில்‌ சேர்க்கப்பட்டிருந்தான்‌. இப்பொழுது அவன்‌ தீப்பெட்டிகளைச்‌ சேகரிப்பதில்‌ ஈடுபட்டிருந்தான்‌. வெவ்வேறு வகையான சித்திர முகப்புகளுடன்‌ இந்தியாவில நூற்றுக்கணக்கான தீப்பெட்டிகள்‌ இருந்தன. பட்டிகள்‌ தயாரிக்கப்‌ பயன்படும்படியாக ஜூடி அவனுக்கென்று ஒருதிருகு பென்சிலைத்‌ தேர்ந்தெடுத்தாள்‌. ஹரிதாஸுக்கும்‌ அதிலேயொன்று வாங்கினாள்‌. மலைப்‌ பிரதேசத்தில்‌ உள்ள பள்ளிகளில்‌ படித்த ஆங்கிலச்‌ சிறுமிகள்‌ இருவரும்‌, சிவிட்ஸர்லாந்துச்‌ சிறுமி யொருத்தியும்‌ இருந்தனர்‌. அவர்களுக்கென்று இந்தியக்‌ கைத்தொழில்‌ பொருள்‌ விற்கும்‌ கடையிலிருந்து பரிசுகள்‌ வாங்கி வந்தாள்‌.

எல்லாம்‌ வேடிக்கையாக இருந்தது. கிறிஸ்துமஸ்‌ மரத்தை அலங்காரம்‌ செய்த பிறகு அம்மணிப்பாட்டியை வந்து பார்க்கும்படி ஜூடி கேட்டுக்கொண்டாள்‌. எதற்காக உச்சியிலே ஒரு நட்சத்தாம்‌ இருக்கிறது என்பதைப்போன்‌ ற பல கேள்விகளை அம்மணிப்பாட்டி கேட்கத்‌ தொடங்கினாள்‌. “அதுதான்‌ ஆட்டிடையனுடைய நட்சத்திரம்‌”” என்று கூறினாள்‌ ஜூடி. ஆட்டிடையர்களும்‌ மூன்று அரசர்களும்‌-- அவர்களில்‌ ஒருவர்‌ கீழைகாட்டிலிருந்து வந்தவர்‌--பெத்லகம்‌ வந்து மாட்டுக்‌ கொட்டிலிலிருந்த குழந்தையைக்‌ கண்ட கிறிஸ்துமஸ்‌ கதை முழுவதையும்‌ அவள்‌ அம்மணிப்‌ பாட்டிக்குச்‌ சொன்னாள்‌. அம்மணிப்பாட்டிக்குக்‌ கதை முழுவதும்‌ பிடித்தது. பசுக்களும்‌, கழுதையும்‌ உற்றுப்‌ பார்த்துக்கொண்டிருந்த விஷயம்‌ முக்கியமாக அவளுக்குப்‌ பிடித்தது. “அந்தக்‌ குழந்தை மனிதனாகி பலியாகின்‌ற் மற்றப்‌ பகுதி கிறிஸ்துமஸ்‌ கதையைவிட இது மிக நன்றாக இருக்கிறது”? என்று அவள்‌ சொன்னாள்‌. அந்தக்‌ கதையைப்‌ பற்றி விளக்கிக்‌ கூற ஜூடி எத்தனித்தாள்‌; அந்தச்‌ சமயத்‌தில்‌ ஒரு கிறிஸ்துமஸ்‌ பாடலைக்‌ பலங்கொண்ட மட்டும்‌ உரத்துக்கூவிப்‌ பாடிக்கொண்டு பெஞ்சமின்‌ தோட்டத்‌திற்குள்‌ ஓடிவந்தான்‌. அவன்‌ மிக நன்றாகப்‌ பாடவில்லை, மேலும்‌ அவனுக்கு ஒரே ஒரு செய்யுள்தான்‌ தெரியும்‌. இருந்தாலும்‌ ஜூடி அவனுடன்‌ சேர்ந்து பாடினாள்‌. அம்மணிப்பாட்டி அது தனக்குப்‌ பிடித்ததென்று தெரிவித்‌தாள்‌. பிறகு அவள்‌, “சீக்கிரத்திலே பொன்னேரியில்‌ பொங்கல்‌ பண்டிகை கொண்டாடுவார்கள்‌. லட்சுமி மிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான கடிதம்‌ வந்திருக்கிறது. அவளுக்குப்‌ பொங்கல்‌ உற்சாகமாக இருக்கும்‌! கிராமத்தில்‌ வாழ்வது நல்லதென்று நான்‌ சில வேளைகளில்‌ நினைக்‌கிறேன்‌” என்று அவள்‌ சொன்னாள்‌.

”ஆமாம்‌, பொங்கல்‌ வேடிக்கையாக இருக்குமென்று தான்‌ நினைக்கிறேன்‌” என்றாள்‌ ஜூடி.

கிராமத்தைப்பற்றி அம்மணிப்பாட்டிக்கு என்ன கருத்து ஏற்பட்டுக்‌ கொண்டிருக்கிறது என்பதைப்பற்றி அவள்‌ ஆச்சரியத்தோடு நினைத்தாள்‌. அவள்‌ அதைப்பற்றி அதிகம்‌
சொல்லாமல்‌ எச்சரிக்கையோடிருந்தாள்‌. வகுப்பைப்‌ பற்றி மட்டும்‌ அவள்‌ தெரிவித்திருந்தாள்‌.

அம்மணிப்பாட்டியின்‌ வீட்டுக்கு இப்பொழுது மற்றொரு பேரப்பையன்‌ வந்திருந்தான்‌. இரண்டாவது மகளின்‌ மூத்த பையனான அவன்‌ எப்பொழுதும்‌ ஏதாவது வேண்டுமென்று அழுதுகொண்டே இருப்பான்‌. கிறிஸ்துமஸ்‌ விழாவிற்கு அவனையும்‌ கூப்பிட்டிருந்தார்கள்‌. வேறு யாராவது ஒருவருக்குக்‌ கொடுத்த பரிசைத்‌ தனக்கு வேண்டு என்று கேட்கும்‌ குழந்தைகளில்‌ அவனும்‌ ஒருவன்‌. பக்கத்து வீட்டுச்‌ சிறுமி வசம்ஜி நல்லவள்‌, அவள்‌ தனக்குக்‌ கிடைத்த பரிசை அவனுக்குக்‌ கொடுத்தாள்‌. ஆனால்‌ இது உண்மையில்‌ சரியல்ல.

பெரும்பான்‌மையான கிறிஸ்துமஸ்‌ விழாக்‌ கூட்டங்‌களெல்லாம்‌ வேடிக்கையாக இருந்தன. இப்பொழுது குளிர்ச்சியாக இருந்தது ஒரு காரணம்‌. பூக்கள்‌ நிறைய இருந்தாலும்‌ இது மாரிக்காலம்‌. மரங்களில்‌ இலைகள்‌ உதிராமலே இருப்பது பார்ப்பதற்குக்‌ கொஞ்சம்‌ அலுத்துப்‌ போயிற்று. ஆனால்‌ சில சமயங்களில்‌ ஏதாவது ஒரு மரம்‌ திடீரென்று இலைகளை உதிர்த்தது ஆனால்‌ அது கொஞ்ச நாளைக்குத்தான்‌; ஏனெல்‌ நல்‌இலை யுதிர்ந்ததும்‌ அநேகமாக உடனே புதிய பச்சைத்‌ தளிர்கள்‌ வெளியிலே தோன்றத்‌ தொடங்கிவிடும்‌. விசிறியைப்‌ பயன்படுத்துவதை முற்றிலும்‌ நிறுத்திவிடலாம்‌. ஒன்றிரண்டு தடவை இரவிலே மிகவும்‌ குளிராக இரந்ததால்‌ கம்பளி வேண்டுமென்று ஜுடி கேட்பாள்‌. ஆணால்‌ போதுமான அளவு குளிர்‌ எப்‌பொழுதும்‌ இருந்ததில்லை.

கிறிஸ்துமஸ்‌ நாளன்று வேலைக்காரர்கள்‌ அவர்களுக்கு மாலைகள்‌ வாங்கிவந்தார்கள்‌. ஒவ்வொருவரும்‌ மற்றவரைப்‌ போட்டோ எடுத்தார்கள்‌. அன்று வந்த ஜார்ஜின்‌ குழந்‌தைகள்‌ மூன்றையும்‌, வாசுகியின்‌ குழந்தைகள்‌ இரண்டையும்‌ முக்கியமாகப்‌ போட்டோ எடுத்தார்கள்‌. ஜுடியின்‌ தந்தை அன்று ஆஸ்பத்திரிக்குப்‌ போகவில்லை. அன்று தின்பண்டம்‌ செய்ய ௩ஈல்ல ஐஸ்‌ வாங்கிவந்தனர்‌.

ஜிம்கானா கிளப்பில்‌ ஸ்காட்லாந்து மக்கள்‌ சிலர்‌ புத்‌தாண்டு விழாக்‌ கொண்டாடினர்‌. அவர்கள்‌ எப்பொழுதும்‌ விஸ்கியை நிறையக்‌ குடித்ததால்‌ ஜூடியின்‌ தாய்க்குச்‌ சற்று கோபம்‌ வந்துவிட்டது. அப்படிச்‌ செய்வது மற்றவர்‌களுக்கு நல்ல எடுத்துக் காட்டல் என்று அவள்‌ கருதினாள். சென்னை ராச்சியத்தில்‌ மதுவிலக்கு அமுவில்‌ இருக்‌கிறது; விஸ்கி போன்ற பானங்களுக்கு அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும்‌. இருந்தாலும்‌ அப்படிக்‌ குடிப்பது வருடத்‌தில்‌ ஒரு நாள்தான்‌.

பொங்கல்‌ விழாத்தொடங்கும்‌ காலம்‌ வந்தது. சென்னை போன் ற நகரங்களில்‌ பையன்கள்‌ அங்குமிங்கும்‌ ஓடி மற்றவருடைய சாமான்களை உடைப்பதற்கு இது ஒரு சாக்காகப்‌ பெரும்பாலும்‌ அமைகிறது. இது அறுவடையைக்‌ கொண்டாடும்‌ விழாவாகையால்‌ காட்டுப்புறத்திற்கே உரியதாகும்‌. வயல்களிலிருந்து முக்கியமான அறுவடையாகிய Greed லெல்லாம்‌ வீடு வந்து சேர்ந்தது. மாரிக்காலத்தில்‌ நடுப்‌ பகுதிக்குப்‌ பின்‌ கதிரவன்‌ மீண்டும்‌ நன்கு ஒளி கொடுக்க வரப்போகிறான்‌ என்பதை மக்கள்‌ நிச்சயம்‌ செய்துகொள்ள விரும்பினர்‌. அதற்காக அவர்கள்‌ சொக்கப்பனைக்‌ கொளுத்தினார்கள்‌. உலகத்தில்‌ எந்தப்‌ பகுதியிலும்‌ காட்டுப்புறத்து மக்கள்‌ இப்படித்தான்‌ எப்பொழுதும்‌ செய்தார்கள்‌. வகுப்புக்களுக்கு லட்சுமி விடுமுறை அளித்தாள்‌? இல்லா விட்டால்‌ யாரும்‌ வந்திருக்கவும்‌ மாட்டார்கள்‌. அந்த சமயம்‌ பார்த்து அரசாங்க அதிகாரிகளில்‌ ஒருவர்‌ தேசிய வளர்ச்சித்‌ திட்டப்‌ பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தார்‌. வழக்‌கம்போலக்‌ கல்வி வகுப்பு ஒன்றைப்‌ பார்வையிடவேண்டு மென்று அவர்‌ தெரிவித்தார்‌. அவர்‌ உத்திரப்‌ பிரதேசத்திலிருந்து வந்த மனிதர்‌. அங்கே பொங்கல்‌ விழாக்‌ கொண்டாடுவதில்லை. அதற்கு பதிலாக வேறு ஏதோ விழாக்‌ கொண்டாடு-கிறரார்கள்‌. தேசிய வளர்ச்சி இயக்கத்தைப்‌ பற்றி நிறையப்‌ பேசிக்கொண்டு கிராமங்களைப்‌ பற்றி என்றுமே நினைக்காத நகரத்து மக்களின்‌ அறியாமையைக்‌ கண்டு லட்‌௬மி பெரிதும்‌ சீற்றமடைந்தாள்‌. அவள்‌ தந்தை சற்றே புன்முறுவல்‌ பூத்துக்கொண்டு அவள்‌ கருதுவது சரியென்று ஒரளவு ஒப்புக்கொண்டார்‌. நகரத்திலிருக்து மக்கள்‌ அடிக்கடி வந்தனர்‌. அவர்களிற்‌ சிலர்‌ எல்லா வற்றிலும்‌ தனித்திறமை வாய்ந்தவர்கள்‌ என்று கருதப்‌ பட்டவர்கள்‌. எல்லாவிஷயங்களிலும்‌ திறமை வாய்ந்திருப்பதென்பது இயலாத காரியம்‌. அவர்கள்‌ முட்டாள்தனமான யோசனைகளைக்‌ கூறினார்கள்‌. கிராமத்து மக்கள்‌ அவற்றைப்‌ பின்பற்றவில்லை. எது நல்லதென்று அவர்களுக்கே தெரிந்திருந்தது.

“கிராமங்களுக்கு வந்து நாம்‌ வாழ்க்கை நடத்த வேண்டுமென்று காந்தி அடிகள்‌ விரும்பினார்‌. அப்படிச்‌ செய்வது அவசியமாக இருக்கலாம்‌. ஆனால்‌ ஒவ்வொருவரும்‌ அவருக்கேற்ற வேலையைச்‌ செய்ய வேண்டும்‌, அதையும்‌ நண்பர்களோடு சேர்ந்து செய்யவேண்டும்‌, திறமையை வீணாக்கக்கூடாது!'” என்று குமார்‌ சொன்னார்‌.

லட்சுமியின்‌ நிலையைவிட அவர்‌ நிலைமைதான்‌ ஒரு வகையில்‌ மிக மோசமாக இருந்தது. கிராம மக்களுக்கும்‌, தலைமை எஞ்சினியருக்கும்‌ மத்தியிலே அவர்‌ இருந்தார்‌. தலைமை எஞ்சினியர்‌ தாம்‌ மிகவும்‌ பெரிய மனிதர்‌ என்று பாவனை செய்துகொண்டு தமது மோட்டாரில்‌ ஏறிக்‌ கொண்டு பக்கத்திலுள்ள பட்டணத்திற்கோ அல்லது சென்னைக்கோ எப்பொழுதும்‌ சென்று கொண்டிருந்தார்‌, அதனால்‌ குமாருக்கு உண்மையில்‌ நண்பர்களே இல்லை. லட்சுமிக்கு அவளுடைய வகுப்பிலேயே தோழிகள்‌ கிடைத்‌தனர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ பொங்கல்‌ விழாக்கொண்டாடினர்‌. ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ பழைய மண்பானைகளையும்‌, தட்டுக்களையும்‌ உடைத்தெறிந்துவிட்டுப்‌ புதிதாக வாங்கினர்‌. மண்பாத்திரம்‌ மிகவும்‌ மலிவானது. இவ்வாறு செய்‌வதால்‌ குயவர்களுக்கும்‌ உன்மை ஏற்பட்டது. வீடுகளையெல்லாம்‌ மெழுகிப்‌ பெருக்கிச்‌ சுத்தம்‌ செய்தனர்‌. கந்தல்‌களையெல்லாம்‌ வீட்டுக்கு முன்னால்‌ குவித்து சூரியனுக்கு ஊக்கம்‌ அளிக்கும்‌ முறையிலே சொக்கப்பனைக்‌ கொளுத்தினர்‌. பொங்கல்‌ பாட்டுக்களையும்‌ பாடினர்‌.

இரண்டாம்‌ நாளில்‌ புத்தரிசியிட்டுப்‌ பால்‌ பொங்கலும்‌, சர்க்கரைப்‌ பொங்கலும்‌ வைத்து உண்டனர்‌. இட்டலியை விட இது சுவை மிகுந்திருந்தது. மூன்றும்‌ நாளன்று அதேமாதிரி பொங்கலைப்‌ பசுக்களுக்கும்‌, எருதுகளுக்கும்‌ வைத்தனர்‌. அவற்றை நன்றாகத்‌ தேய்த்துக்‌ கழுவிக்‌ கொம்புகளுக்குச்‌ சாயம்‌ அடித்தனர். நுகத்தடிகளையும்‌, தலைக்கயிறுகளையும்‌ அலங்காரம்‌ செய்தனர்‌. எருமைகளையும்‌ அலங்காரம்‌ செய்தனர்‌. குமாரிடம்‌ ஒரு மெலிந்த பசு இருந்தது. அவரும்‌ லட்சுமியும்‌ மற்ற குழந்தைகளும்‌ சேர்ந்து அதைத்‌ தேய்த்துக்‌ குளிப்பாட்டிப்‌ பிடித்துக்‌ கொண்டு அதன்‌ கொம்புகளுக்குச்‌ சாயம்‌ அடிக்கது தொடங்கினர்‌. அவர்‌ மனைவி நீண்டகாலமாக ஒரு மாடியில்‌ வசித்து வந்ததால்‌ அவள்‌ பசுவின்‌ கொம்புகளுக்குச்‌ சாயம்‌ அடித்து வருடக்கணக்காக ஆயிற்று, அவர்கள்‌ எல்லோரும்‌ சேர்ந்து தாறுமாறாகச்‌ சாயத்தை பூசிக்கொண்டிருந்தார்கள்‌; ஆனால்‌ அந்தச்‌ சமயத்தில்‌ வள்ளியின்‌ தந்தையாகிய கொற்றன்‌ அங்கு வந்து உதவி செய்தான்‌. ஒரு கொம்பில்‌ சிவப்புச்சாயம்‌; மற்‌றொன்றில்‌ பச்சைச்‌ சாயம்‌; அவற்றின்‌ மேலே சிறுசிறு பூச்சித்திரங்கள்‌. கடைசியில்‌ இவ்வாறு பொன்னைரியில்‌ அந்தப்‌ பசுதான்‌ மிக நன்றாகக்‌ காட்சியளித்தது.

அங்கே ஒருவகையான ஆடலும்‌ இருந்தது. ஆனால்‌ அது லட்சுமி பார்த்திருந்த எல்லா ஆட்டங்களையும்‌ விடத்‌ தரம்‌ குறைந்திருந்தது. ஆடும்பொழுதே வெறும்‌ கூச்சல்‌ போட்டார்கள்‌. எல்லாக்‌ கிராமங்களிலும்‌ இவ்வாறுதான்‌ நடந்தது. சொக்கனைக்‌ கொளுத்தும்‌ நாளன்று இரவிலே இந்தியாவின்‌ பெரிய கிழக்கு சமவெளிப்‌ பிரதேசமெங்கும்‌ நெடுந்தூரத்திற்குத்‌ தீக்கொழுந்துகள்‌ மினுக்கிடுவதை அவர்கள்‌ கண்டனர்‌.

”அம்மணிப்பாட்டியின்‌ பசுக்களைப்‌ பார்க்கவேண்டும்‌ போலத்‌ தோன்றுகிறது”? என்றாள்‌ சரஸ்வதி, சென்ற ஆண்டுகளிலெல்லாம்‌ அவர்கள்‌ அவற்றைப்‌ பார்க்கச்‌ சென்றிருந்தனர்‌. அவர்களுக்குப்‌ பட்‌சணங்களும்‌, காப்பியும்‌, சில வேளைகளில்‌ பரிசுகளும்‌ கிடைத்தன.

”ஜூடி அவற்றைப்‌ போய்ப்‌ பார்ப்பாள்‌, ஒரு வேளை கடிதமும்‌ எழுதுவாள்‌” என்றாள்‌ லட்சுமி, ஜுடி அவ்வாறு தான்‌ செய்தாள்‌, ஜுடியும்‌ பெஞ்சமினும்‌ வேலிச்சந்து வழியாக வந்து காவேரியையும்‌, கோதாவரியையும்‌, சிறு கொம்புகள்‌ வெளியே நீட்டிக் கொண்டிருந்த மூத்த கன்றையும்‌ தேய்த்துக்‌ கழுவி அலங்காரம்‌ செய்வதைக்‌ கவனித்‌துக் கொண்டிருந்தனர்‌. சென்னை நகரத்து வீதிகளில்‌ எங்கும்‌ இவ்வாறுதான்‌ நடந்தது. வண்டிகளில்‌ பூட்டப்பட்ட எருதுகளும்‌, எருமைகளும்‌ கொம்புகளுக்குச்‌ சாயம்‌ தீட்‌டப் பட்டிருந்தன. ஒரு கொம்புக்கு ஒரு நிறமும்‌, மற்றொரு கொம்புக்கு வேறொரு நிறமும்‌ சாதாரணமாக அடித்திருந்தனர்‌. ஆனால்‌ பெரும்பாலானவற்றிற்குச்‌ சாயத்தோடு, கொம்பு முனையிலே தங்கப்பூச்சுப்‌ பூசிப்‌ பூக்களையும்‌, இறகு காயும்‌ அவற்றில்‌ சூடியிருந்தனர்‌. சென்னையில்‌ விழா என்றால்‌ நல்ல பூக்களைத்‌ தேடுவதற்கு அது ஒரு சந்தர்ப்‌பம்‌. அவர்களே அவற்றைப்‌ பறித்துக்‌ கட்டினர்‌. அல்லது இழைகளில்‌ கட்டிவிற்கும்‌ பூக்கடைகளுக்குச்‌ சென்று அவற்றை வாங்கி வந்தனர்‌: அல்லது ஓவ்வொரு மாலை நேரத்திலும்‌ பூக்காரன்‌ வீட்டிற்கு வந்தான்‌. சென்னை யிலே பூக்கள்‌ மலிவாகக்‌ கிடைத்தன. இங்கிலாந்திற்குத்‌ திரும்பியபின்‌ ஜூடி இந்தப்‌ பூக்களையும்‌, நிறங்களையும்‌ காண இயலாது.
---------

13. வட இந்தியா

இரு மாநாட்டிற்காக ஜூடியின்‌ தந்தை டெல்லிக்குப்‌ போவது பற்றியும்‌, சென்னைக்குத்‌ திரும்பிவந்து இங்கிலாந்து செல்லச்‌ சாமான்களையெல்லாம்‌ கட்டிவைக்க ஏற்பாடு செய்யு முன்பு டெல்லியிலேயே சில நண்பர்களுடன்‌ தங்குவது பற்றியும்‌, இன்னும்‌ கொஞ்சம்‌ வடக்கே மலைப்பிரதேசத்தை நோக்கிச்‌ சென்று அங்கே வேறு சில நண்பர்‌களுடன்‌ தங்குவது பற்றியும்‌ அவர்‌ கூறிக்கொண்டிருக்தார்‌. ஆனால்‌ ஜூடி அதில்‌ அதிகமாகக்‌ கவனம்‌ செலுத்தவில்லை. மீண்டும்‌ பொன்னேரிக்குப்போக அவள்‌ விரும்பினாள்‌. ஆனால்‌ அது ஒரு நீண்ட பிரயாணமாகும்‌. அம்மணிப்பாட்டி அங்கு செல்லத்‌ தனக்கு விருப்பம்‌ இருப்பதாகச்‌ சொல்லிக்‌ கொண்டிருந்தாள்‌; ஆனால்‌ முதலில்‌ அவளுடைய பெண்‌களில்‌ ஒருத்தி அவளோடு தங்கியிருக்க வந்திருந்தாள்‌. பிறகு கார்‌ வைத்திருந்த சிற்றப்பன்‌ மகன்‌ அதை ஒரு மரத்‌தில்‌ மோதி விட்டான்‌.

”லட்சுமியின்‌ தந்தையின்‌ விஷயமாக யாராவது ஏதாவது செய்ய முடியாதா?” என்று ஜூடி கேட்டாள்‌. அவர்கள்‌ ஜிம்கானா கிளப்பிற்குச்‌ சென்றிருந்தார்கள்‌. லட்சுமியின்‌ தோழிகளான வயதுவந்த பெண்களில்‌ சிலர்‌ தாரத்திலே ஒரு மேஜையைச்‌ சுற்றி அமர்ந்து வறுவல்‌ தின்று கொண்டும்‌, கலர்‌ பானங்களைக்‌ கூடித்துக்கொண்டும்‌ இருந்தனர்‌. மாரிக்காலத்தில்‌ நீந்துவதற்கு மிகவும்‌ குளிராக இருக்கும்‌ என்று அலர்களிற்‌ பெரும்பாலானவர்கள்‌ தெரிவித்தார்கள்‌. மேலும்‌ அவர்கள்‌ விளையாட்டுக்களோடு வேறு விஷயங்களையும்‌ நினைக்கும்படியாக வளர்ந்து இள மங்கைகளாக மாறிக்‌ கொண்டிழுந்தார்கள்‌.

”எனக்குத்‌ தெரியவில்ல. நான் பல பேரிடம்‌ இதைப்‌ பற்றிப்‌ பேசினேன்‌. ஆனால்‌ அதற்கு எங்கோ ஓரிடத்தில்‌ சூட்சமக் கயிறு இருக்கிறது, அதை நான் இன்னும்‌ கண்டு பிடிக்கவில்லை. ஒருவேளை இது சென்னையில்‌ முடியாது போலிருக்கிறது” என்று ஜூடியின்‌ தந்தை புருவங்களை நெரித்துக்கொண்டு சொன்னார்‌.

அந்தச்‌ சமயத்தில்‌ ஹரிதாஸ்‌ தன்‌ துண்டை எடுத்துக்‌ கொண்டு உள்ளே ஓடிவந்தான்‌. அவனுக்குப்‌ பின்னால்‌ அவன்‌ தாய்‌ வந்தான்‌. “அப்போ நீங்கள்‌ டெல்லிக்குப்‌ போகிறீர்கள்‌. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, உடலுக்கு வலிமை தருவதும்‌, பசுமை வாய்ந்ததும்‌, சுத்தமான துமான உண்மையான இந்தியாவை நீங்கள்‌ பார்ப்பீர்கள்‌. வலிமை வாய்ந்த அழகிய ஆடவர்களையும்‌, அழகிய பெண்களையும்‌, கடைகளைபும்‌, எல்லாம்‌ பார்ப்பீர்கள்‌......”” என்று அவள்‌ கூறிக்‌ கொண்டே அவர்கள்‌ witty மேஜையருகில்‌ விரைந்து வந்தாள்‌. *சென்னையிலே கடைகளில்‌ சாமான்கள்‌ வாங்க முடியவில்லையா?” என்று ஜூடியின்‌ தந்தை எங்கே மனதைச்‌ செலுத்திக்கொண்டு அவளைப்‌ பார்த்துக்‌ கேட்‌டார்‌. எல்லாம்‌ அசுத்தமாக இருப்பதைப்‌ பற்றியும்‌, வறுமையாகத்‌ தோன்றுவதைப்‌ பற்றியும்‌ மீண்டும்‌ அவள்‌ பேசத்‌ தொடங்கிவிட்டாள்‌. பிறகு அவள்‌ ஜஈுிடியின்‌ பக்கம்‌ திரும்பி ”உன்‌ தோழி லட்சுமி எங்கே? அவளுக்கும்‌ தண்ணீர்‌ கடுங்‌குளிராக இருக்கிறதா? -- ஹரிதாஸ்‌, ஓடிப்போய்‌ உடையை மாற்றிக்கொண்டு வா! -- அல்லது இப்பொழுது லட்சுமியும்‌ நீயும்‌ சி நேகம்‌ இல்லையா?” என்று கேட்டாள்‌.

”அவள்‌ சென்னையில்‌ இல்லை?” என்று ஜூடி கோபத்‌தோடு தெரிவித்தாள்‌.

”ஆமாம்‌. அவள்‌ தந்தையை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள்‌ இல்லையா?” ஜுடியின்‌ தந்தையின்‌ பக்கம்‌ அவள்‌ திரும்பினாள்‌. குளத்தில்‌ மூழ்கிக்‌ குளிப்பதற்கு நேரமாகிவிட்டது என்று அவசரமாக சொல்லிக்கொண்டே அவர்‌ ஜூடி திருப்பிப்‌ பதில்‌ பேசுவதற்கு முன்னால்‌ அவைத்‌ தள்ளிக்கொண்டு போய்விட்டார்‌.

கொஞ்ச நேரத்திற்குப்பிறகு அவள்‌ தாயும்‌, பெஞ்சமினும்‌ கிளப்பிற்கு வந்தனர்‌. ” நாம்‌ எதிர்பார்த்த கடிதம்‌ இதோ வந்துவிட்டது” என்று அவள்‌ தாய்‌ தெரிவித்தாள்‌. அவள்‌ தந்த கடிதத்தைப்‌ பார்த்து விட்டு பிறகு, “Ny, உன்னையும்‌ வந்து தங்கும்படி ராவ்‌ குடும்பத்தினர்‌ எழுதியிருக்கிறார்கள்‌. இங்கிலாந்திற்கு நாம்‌ சீக்கிரத்தில்‌ திரும்பிப்‌ போவதால்‌, பள்ளிக்குப்‌ போவதற்காக நீ இங்கேயே இருப்‌பதில்‌ பயனில்லை. ஆகையால்‌ அடுத்த வாரம்‌ நீயும்‌ நானும்‌ டெல்லிக்குப்‌ போகலாம்‌?” என்று அவர்‌ சொன்னார்‌.

”அப்பா” என்று கூவினாள்‌ ஜூடி. ஹரிதாஸின்‌ தாயிடம்‌ அவள்‌ சொல்லாத விஷயங்களெல்லாம்‌ திடீரென்று பொங்கிக்‌ கொண்டு வந்தன. ”டெல்லிக்குப்போக எனக்கு விருப்பமில்லை--மோசமான டெல்லி!”

அவள்‌ தந்தைக்கு விஷயம்‌ புரிந்தது. “முட்டாள்தனமாக நடக்கும்‌ அந்த மாதுக்காகவா அப்படிச்‌ சொல்லுகிறாய்‌? அவள்‌ சொல்லுகிற எந்த விஷயமும்‌ உன்னைப்‌ பாதிக்கும்படி விடப்போகிராயா?”

அவ்வாறு கேட்டவுடன்‌ அவள்‌ டெல்லிக்கு வர சம்மதித்‌தாள்‌. ”பாராளுமன்‌ றம்‌ இருக்கும்படியான தலை நகர்‌ அது. இந்தியாவின்‌ மற்றொரு பாகம்‌ அது; ஆனால்‌ அதைவிட மிக நல்லது என்பதில்லை. இருந்தாலும்‌ நீ கட்டாயம்‌ பார்க்க வேண்டும்‌” என்று அவள்‌ தந்தை மேலும்‌ தெரிவித்தார்‌. கம்பளி உடைகள்‌ உனக்கு வேண்டியிருக்கும்‌. அவை இங்கிலாந்திலும்‌ ஏப்ரல்‌ மாதத்தில்‌ பயன்படும்‌'” என்றாள்‌ அவள்‌ தாய்‌.

ஜுடிக்காகக்‌ கம்பளிப்‌ பின்னல்‌ சட்டை ஒன்றும்‌, மேலங்கியொன்‌ றும்‌ முன்னமேயே அவள்‌ தாய்‌ பின்னியிருந்தாள்‌, அவை எப்பொழுதாவது வேண்டியிருக்குமென் று ஜுூடிக்குத்‌ தோன்றவேயில்லை. தடிப்பான பாவாடை ஒன்றைத்‌ தையற்காரன்‌ தடார்‌ செய்தான்‌. கம்பளி மேஜோடுகளும்‌, மழைக்‌ கோட்டு ஒன்றும்‌ உனக்குத்‌ தேவைப்படும்‌......” என்று அவள்‌ தாய்‌ சொன்னாள்‌.

“ ஆனால்‌ இது இந்தியா!”” என்று ஜூடி மறுத்துக்‌ கூறினாள்‌. மலைப் பிரதேசங்களில்கூட மேஜோடு போட்டுக்‌ கொள்ளவேண்டுமென்று அவள்‌ கனவிலும்‌ நினைக்கவில்லை! இருந்தாலும்‌ எல்லாம்‌ ஆயத்தம்‌ செய்யப்பட்டது.

“வட இந்தியாவிலுள்ள மக்களோடு பேசுவதற்கு நீ படித்த ஹிந்தியைப்‌ பயன்படுத்தலாம்‌” என்று அவள்‌ தாய்‌ கூறினாள்‌. ஆனால்‌ ஜூடி முகத்தைச்‌ சுளித்தாள்‌.

புறப்படுவதற்கு முன்னால்‌ சென்னையின்‌ ஒரு பகுதியான மயிலாப்பூரில்‌ நடைபெற்ற தெப்ப விழாவிற்குச்‌ சென்‌றிருந்‌தார்கள்‌. கடவுளைச்‌ ஏற்றிச்‌ செல்ல அணிசெய்து ஒரு அழகான தெப்பத்தைத்‌ தயாரிப்பார்கள்‌. மாலைநேரத்தில்‌ கோயிலுக்கு முன்னால்‌ உள்ள குளத்தில்‌ அதை மிதக்க விட்டுச்‌ சுற்றி வரும்படி செய்வார்கள்‌. மாலை மாலையாக மின்சார விளக்குகள்‌ அதிலே ஒளி விட்டுக்கொண்டிருக்கும்‌. அந்த விளக்குகளுக்கு மின்சாரம்‌ கிடைப்பதற்காக மின்சாரக்‌ கம்பத்தோடு கம்பிகளை சவகு சாமர்த்தியமாக இணைத்திருப்பார்கள்‌. அவர்கள்‌ மோட்டார் காரில்‌ சென்றனர்‌. அதை நிறுத்துவதற்கு இடம்‌ கிடைப்பதே கொஞ்சம்‌ சிரமமாகயிருந்தது. குளத்தைச்‌ சுற்றிலும்‌ கடைகள்‌ வைக்கப்பட்டிருந்தன. திரளாகக்‌ கூடியிருந்த மக்கள்‌ இரைச்சலிட்டுக்‌ கொண்டிருந்தனர்‌. இராட்டினங்களும்‌ தூரிகளும்‌ இருந்தன; ஏராளமான விளையாட்டுச்‌ சாமான்‌களையும்‌, பாசிமணிகளையும்‌, பித்தளைப் பாத்திரங்களையும்‌, வளையல்களையும்‌ சற்று உயரமாக அமைந்த நடைபாதையிலே வைத்திருந்தனர்‌. நூற்றுக்‌ கணக்கிலே பிச்சைக்காரர்‌களும்‌ மக்களும்‌ குளத்தின்‌ படிக்கட்டுகளிலே நெருக்கமாக அமாடந்து பழங்களையும்‌, இனிப்புப்‌ பண்டங்களையும்‌ தின்று கொண்டே மெதுவாகத்‌ தங்களை நோக்கி வரும்‌ தெப்‌பத்தைக்‌ கவனித்துக்‌ கொண்டிருக்தார்கள்‌. இன்‌றிலிருந்து ஆறு வாரங்களில்‌ நான் இங்கிலாந்திலிருப்பேன்‌ என்று ஜுடி எண்ணமிட்டுக்‌ கொண்டிருந்தாள்‌.

இந்திய ரயில்கள்‌ தூரப்பிரபாணம்‌ செல்வதற்கு வசதியாகத்தான்‌ இருக்கின்‌றன; ஆனால்‌ அவை கொஞ்சம்‌ மெதுவாகச்‌ செல்கின்றன: எப்பொழுதும்‌ மிக சுத்தமாகவும்‌ இருப்பதில்லை. பல பேர்‌ ஆகாய விமானத்தின்‌ மூலம்‌ பிரயாணம்‌ செய்கின்றார்கள்‌. அவ்வாறுதான்‌ ஜூடியும்‌ அவள்‌ தந்தையும்‌ டெல்லிக்குச்‌ செல்லும்‌ இரவு விமானத்‌திலே சென்றனர்‌. இரவு விமானத்தில்‌ பகல்‌ விமானத்தை விடப்‌ பிரயாணச்‌ செலவு குறைவு அதிலே அமர்ந்து செல்ல வசதியான இருக்கைகள்‌ உண்டு. அவற்றைப்‌ பின்னால்‌ சாய்த்து விட்டுக்‌ கொண்டு உறங்கலாம்‌. ஜூடி கொஞ்சம்‌ தூங்கினாள்‌. பிறகு அவ்விமானத்தில்‌ விருந்துபசரணை செய்‌யும்‌ அழகிய மங்கை அவளை எழுப்பினாள்‌. விமானம்‌ நாகபுரியை அடைந்ததே அதற்குக்‌ காரணம்‌. அங்கே விமானம்‌ மாறவேண்டும்‌. “நாகபுரி என்றால்‌ பாம்புப்‌ பட்டணம்‌ என்று பொருள்‌? அங்கே விமான நிலையத்தில்‌ சினிமா உண்டு” என்று அவள்‌ தந்தை தெரிவித்தார்‌. அறிவைப்‌ பெருக்கு வதற்‌குற்ற நல்ல சினிமாப்படங்கள்‌ காண்பித்ததோடு உணவும்‌ வழங்கினார்கள்‌. அதைக்‌ காலையுணவு அல்லது இரவு உணவு என்று எப்படி வேண்டுமானாலும்‌ நமது விருப்பத்திற்குத்‌ தக்கவாறு எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

மீண்டும்‌ அவர்கள்‌ பிரயாணத்தைத்‌ தொடங்கிய சமயத்திலும்‌ இருட்டாகவேயிருந்தது; குளிராகவும்‌ இருந்தது. அதனால்‌ விமானத்தில்‌ தந்த கம்பளியை மகிழ்ச்சியோடு ஜூடி பயன்‌படுத்தினாள்‌. பிறகு கதிரவன்‌ உதயமாகும்‌ பொழுது தட்டையான பிரதேசமும்‌, சில இடங்களில்‌ மலைத்‌தொடர்களும்‌ பயிர்‌ செய்த பசுமையான நிலங்களும்‌, கிராமக்‌ கூட்டங்களும்‌ கீழே வெகு தூரத்தில்‌ தெரிந்தன. காலை நேரத்திலேயே பகட்டாகத்‌ தோன்றும்‌ கட்டடங்களையும்‌, விசாலமான வீதிகளையும்‌ கடந்து புதுடெல்லி விமான நிலையத்தை நோக்கி விமானம்‌ கீழே இறங்கத்தொடங்கிற்று. “குளிராக இருக்கிறதே!” என்றாள்‌ ஜுடி. நீண்ட காலத்‌திற்குப்‌ பிறகு அப்பொழுதுதான்‌ அவள்‌ முதல்‌ தடவயாகக்‌ கம்பளி மேஜோடுகளைப்‌ போட்டுக்கொண்டாள்‌.

”ராவ்‌ குடும்பத்தினர்‌ வந்திருக்கிறார்கள்‌!?” என்று அவள்‌ தந்தை கூறிக்கொண்டு கையை ஆட்டினார்‌. இன்‌னும்‌ உறக்க மயக்கத்திலேயே இருந்த அவர்களைக்‌ காரில்‌ ஏற்றிக்கொண்டு சாலைகளின்‌ வழியாகவும்‌, தோட்டங்களின்‌ வழியாகவும்‌ வேகமாக அழைத்துச்‌ சென்றனர்‌. உண்மையான மாரிக்காலம்‌ அல்லது வசந்த காலத்தின்‌ முதற்பகுதி போலக்‌ கால நிலை இருந்தது. மக்கள்‌ கோட்டும்‌ கால்‌ சட்டையும்‌ அணிந்து கொண்டோ அல்லது கம்பளங்களை ஒன்றின்‌ மேல்‌ ஒன்று போர்த்துக்கொண்டோ இருந்தனர்‌. வித்தை காட்டுகின்ற கரடியோடு ஒரு மனிதன்‌ தோன்றினான்‌. பாவம்‌, அழுக்குப்படிக்த கரடி அது. ஆனால்‌ அதற்கு உடம்பெல்லாம்‌ ரோமப் போர்வையாவது இருந்தது.

ஜூடியின்‌ தந்தை மாகாட்டில்‌ கலந்து கொண்டிருந்த சமயத்தில்‌, சுற்றிப்‌ பார்ப்பதற்காக ஜுடியை அழைத்துச்‌ சென்றனர்‌. ராவ்‌ குடும்பத்திலே பல குழந்தைகள்‌ இருந்தார்‌கள்‌; மூத்த குழந்தைகளெல்லாம்‌ பள்ளியிலே ஆங்கிலம்‌ கற்றுக்கொண்டிருந்தனர்‌. பிறருடன்‌ பழகுவதில்‌ முதலில்‌ தோன்றும்‌ நாணம்‌ விட்டுப்போனவுடன்‌ அவர்கள்‌ ஜூடியுடன்‌ வெகுவாகப்‌ பேசினர்‌; ஆனால்‌ அவர்கள்‌ எப்பொழுதும்‌ ஆங்கிலத்தில்‌ பேசினர்‌. ஹிந்தியில்‌ பேசவேயில்லை, தோற்றத்தில்‌ தத்தையைப்போலவே இருக்கும்‌ திலீப்‌ என்ற பையன்‌ ஒருவனும்‌, இந்திரா என்ற பெண்‌ ஒருத்தியும்‌ இருந்‌தனர். அவர்கள்‌ இருவரும்‌ டாக்டர்கள்‌ ஆகவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தனர்‌; ஆனால்‌ அதற்கு வேண்டிய தனிப்‌ பயிற்சியை அவர்கள்‌ இன்னும்‌ தொடங்கவில்லை. பெரும்பாலும்‌ கால்பந்து விளையாட்டிலேயே விருப்பம்‌ கொண்டிருந்த இளைய பையன்‌ ஒருவனும்‌ இருந்தான்‌. அவர்‌களுடைய வீட்டுத்‌ தோட்டத்திலே நல்ல புல்வெளி ஒன்றும்‌, பூப்பாத்திகளும்‌ இருந்தன. ஆங்கில நாட்டிலே வேனிற்‌ காலத்தில்‌ மலரும்‌ பலவகையான மலர்கள்‌ அங்கே தோன்றத்‌ தொடங்கியிருந்தன. டாலியா, பெட்டுனியா ஆகிய மலர்கள்‌ கொத்துக்கொத்தாக விரைவிலே அங்கு மலரும்‌. வனப்புமிக்க கொண்டலாத்திப்‌ பறவைகள்‌ தங்கள்‌ நீண்ட அலகுகளால்‌ புழுக்களைத்‌ தேடிக்‌ குழிதோண்டிக்‌ கொண்டு கவலையின்றித்‌ திரிந்தன; ஏராளமான வேறு பறவைகளும்‌ இருந்தன. ஆனால்‌ குரங்குகள்‌ வந்து பொருள்‌களைத்‌ திருடித்‌ தொல்லையளித்தன. பிரயாணத்திற்குப்பின்‌ முதல்‌ இரவிலே ஜூடி மரக்கட்டையைப்போல உறங்கினாள்‌; ஆனால்‌ இரண்டாம்‌ நாள்‌ இரவில்‌ அவள்‌ பயங்கரமாக ஊளையிடும்‌ ஒரு சத்தத்தைக்‌ கேட்டுத்‌ தூக்கம்‌ கலைந்து சற்று பயத்தோடு எழுந்தாள்‌. அவள்‌ இந்திரா என்ற பெரிய பெண்ணோடு ஒரே அறையில்‌ படுத்திருந்தாள்‌. நரிகள்தான்‌ அப்படி ஊளையிடுகின்றன என்று தூக்க மயக்கத்திலேயே இந்திரா சொன்னாள்‌. சிலவேளைகளில்‌ ஓகாய்கள்‌ கூட்டம்‌ கூட்டமாக வருவதாக அடுத்த காளன்று திலீப்‌ தெரிவித்தான்‌. ஆனால்‌ ஜூடி அதை நம்பத்‌ தகுந்ததாகக்‌ கருதவில்லை.

நடுப்பகலில்‌ கதிரவன்‌ வெப்பத்தோடு, ஒளிமிகுந்கும்‌ விளங்கினான்‌. எல்லாப்‌ பொருள்களும்‌ பிரகாசமாகத்‌ தோன்றின. வாயில்கள்‌ அமைந்த உயரமான கோட்டைச்‌ சுவர்களையும்‌, ஒரு காலத்தில்‌ நகரத்திற்குள்‌ நுழையும்‌ வழியை அடைத்த பெரிய வாயில்களையும்‌ கடந்து பழைய டெல்லிக்கு அவர்கள்‌ சென்று செங்கோட்டையைப்‌ பார்த்‌தனர்‌. அங்கே சக்கரவர்த்திகளுக்கும்‌ அரசிகளுக்கும்‌ வெண்மையான சலவைக்கல்லிலே செதுக்கு வேலைகள்‌ செய்தும்‌, வளைவுகள்‌ அமைத்தும்‌ அழகான அறைகள்‌ கட்டியிருந்தனர்‌. அணிகலன்களாலும்‌, பலவகையுள்ள ரத்னக்‌ கற்களாலும்‌, அலைந்தாடும்‌ செடிகொடிகளைப்‌ போல அவற்றில்‌ பதிப்பு வேலை செய்திருந்தனர்‌. அம்மணிப்‌ பாட்டி வைத்திருந்த ஓவியங்களைப்போன்‌ ற ஓவியங்களும்‌, ஒரு தட்டும்‌ அங்குள்ள பொருட்காட்சிசாலையில்‌ இருந்தன, அக்தக்‌ தட்டிலே விஷத்தை வைத்தால்‌ அதன்‌ நிறம்‌ மாறுமாம்‌- அப்படித்தான்‌ ராவ்‌ வீட்டுப்பையன்கள்‌ தெரிவித்‌தார்கள்‌.

குதுப்மினாரைப்‌ பார்க்க அவர்கள்‌ சென்றிருந்தனர்‌. அரபு எழுத்துக்களால்‌ அழகாகப்‌ பொறிப்பட்ட அந்தத்‌ தூபி மிகப்‌ பெரியதாகவும்‌, நீளவாட்டில்‌ பள்ளம்‌ பள்ளமாக இருக்குமாறும்‌ சிவப்பு நிறத்திலே அமைந்திருக்கிறது; விஷ்ணுவின்‌ த்வஜஸ்தம்பமான இரும்புத்தூண்‌ இங்குதான்‌ உள்ளது. யாருடைய வீர பராக்கிரமக்‌ காற்று வீசி இன்றும்‌ தென்‌ சமுத்திரத்தை நறுமணம்‌ கமழச்‌ செய்கின்‌றதோ அவர்‌.,,*? என்று இவ்வாறு பழங்காலப்‌ பெருமை யோடும்‌ அதிகாரத்தோடும்‌ அதிலே சொற்கள்‌ பொறிக்கப்‌ பட்டிருக்கின்‌ றன.

கட்டடத்தில்‌ உள்ள கற்கள்‌ தெய்வங்களின்‌ உருவங்‌களும்‌, அவற்றின்‌ கை கால்கள்‌ முதலியவைகளில்‌ யாதொரு அணியும்‌ இன்றிக்‌ கம்பீரமாக அமைந்திருந்தன. அவ்வாறு இருப்பது எப்படியோ அமைதி தருவதாக இருந்தது. அவர்கள்‌ குதுப்மினாரில்‌ ஏறத்‌ தொடங்கினர்‌, ராவ்‌ வீட்டுப்‌ பையன்கள்‌ முன்னால்‌ ஓடித்‌ தங்கள்‌ சாமர்த்தியத்தைக்‌ காட்டிக்கொண்டனர்‌, இக்திராவும்‌ ஜூடியும்‌ முதல்‌ இருபது படிகளை ஓடிக்‌ கடந்தனர்‌. ஆனால்‌ அதற்கு மேல்‌ அவர்களுக்குப்‌ பெருமூச்சு வாங்கவே தள்ளாடிக்‌ கொண்டு நடந்தனர்‌. இந்திரா சேலை கட்டிக்கொள்ளாமல்‌ வட இந்தியாவிலே பள்ளிப்‌ பெண்களுக்கென்று வழக்கமாக ஏற்பட்ட கமிஸூம்‌, ஷால்வரும்‌ அணிந்திருந்தாள்‌. தொள தொளவென்‌றிருக்கும்‌ வெள்ளைக்கால்‌ சட்டையும்‌, முழங்‌ கால்வரை நீண்டிருக்கும்‌ மேலங்கியுமான அந்த உடை வசதியானது. இந்திரா அன்று அணிந்திருந்த மேலங்கியில்‌ நீலப்‌ பூப்போட்டிருந்தது. அதற்குமேலே மாரிக் காலத்‌திற்கான ஒரு கம்பளி அரைச்சட்டையும்‌ அவள்‌ தரித்திருந்தாள்‌.

குதுப்மினாரில்‌ உள்ள மாடி முகப்புக்களிலே முதல்‌ முகப்பிற்கு அவர்கள்‌ வந்தார்கள்‌. கைப்பிடிச்‌ சுவரில்‌ சாய்ந்துகொண்டு பார்த்த போது ஜூடிக்குத்‌ தலை சுற்றிற்று. கைப்பிடிச்சுவர்‌ மிகக்‌ குட்டையாக இருப்பது போலவும்‌, கீழே தரை வெகு தூரத்தில்‌ இருப்பது போலவும்‌ தோன்றின. பூத்தோட்டங்கள்‌ மா நிறமான சிறு புள்ளிகளைப்போன்‌ ற முகங்களோடு அவற்றில்‌ நடந்து கொண்டும்‌ மேலே நோக்கிக்கொண்டும்‌ இருந்த மக்களோடு அவ்வாறே தொலைவில்‌ தோன்றின. உச்சியிலிருந்து திலீப்‌ கூவி யழைத்தான்‌. அதனால்‌ அவர்கள்‌ மேலும்‌ ஏறத்‌ தொடங்‌கினர்‌. மேலேயுள்ள மாடி முகப்புக்களிலே இன்னும்‌ தொல்லையாக இருந்தது. அங்கிருந்து பழைய மொகலாய கோரிகள்‌ அல்லது மசூதிகளின்‌ கும்மட்டங்களையும்‌ சுவர்‌களையும்‌ காணமுடியும்‌. சில அழிந்துபோயும்‌, சில உறுதியாகவும்‌ இருந்தன. அவற்றிற்கும்‌ அப்பால்‌ டெல்லி நகரம்‌ பரந்து கிடப்பதையும்‌ அங்கிருந்து காணலாம்‌,

புதுடெல்லி சுத்தமாக இருக்கிறது என்பதை ஒப்புக்‌ கொள்ள உண்மையில்‌ விருப்பமில்லா விட்டாலும்‌, ஜூடி அதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. எங்கு வேண்டுமானாலும்‌ நடந்து செல்லலாம்‌ அல்லது கடைகளுக்குச்‌ சென்று சாமான்‌ வாங்கலாம்‌- எத்தனை சுவையான இனிப்புப்‌ பட்சணங்கள்‌!- எங்குமே பிச்சைக்காரர்களோ, பட்டி மாடுகளோ, எருமைகளோ இல்லை. மெலிந்திருக்கும்‌ ஏழை மக்களால்‌ செலுத்தப்படும்‌ சைக்கிள்‌ ரிக்ஷாக்களையும்‌ பார்க்க முடியாது. அவற்றிற்குப்‌ பதிலாக நான்கு பேர்‌ ஏறக்கூடிய மூன்று சக்கர வாடகைக்கார்கள்‌ இருந்தன. அவற்றோடு சாதாரண வாடகைக்‌ கார்களும்‌, ஏராளமான மோட்டார்க்கார்களும்‌ இருந்தன. திருமதி ராவுடன்‌ அவள்‌ ஒரு சமயம்‌ வெளியே சென்‌றிருந்தபோது சாலைக்கு அடுத்த பக்கத்தில்‌ இருந்த தாழ்வான ஒரு பெரிய மாளிகைக்கு முன்னால்‌ ஒரு அரசாங்கக்‌ கார்‌ வந்து நின்றது. பழுப்பு நிறமான அங்கி அணிந்து அதிலே ஒரு சிவப்பு ரோஜாவைக்‌ குத்தியிருந்த ஒருவர்‌ அதிலிருந்து வெளியே வந்தார்‌. “அவர்தான்‌ பிரதம மந்திரி'; என்றாள்‌ திருமதி ராவ்‌. பிறகு அவள்‌, “கடவுள்‌ அவரைக்‌ காப்பாராக' என்று மெதுவாகத்‌ தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டாள்‌. யாரைப்‌ பற்றித்‌ தன்‌ தந்தை விரிவாகக்‌ கூறியிருக்கிறாரோ அந்த நேருதான்‌ இவர்‌ என்று ஜூடி எண்ணமிடத்‌ தொடங்கினாள்‌. அழகாகவும்‌, துயரம்‌ கலந்த பார்வையுடனும்‌ அவர்‌ தோன்‌றினார்‌. அளவற்ற அன்புடையவர்‌ என்று அவளுக்கு எப்படியோ உணர்ச்சி ஏற்பட்டது. வழியறியாது மயங்கிய காலத்தில்‌ அவரைப்‌ போன்‌றவர்களிடம்‌ தான்‌ வழி கேட்கலாம்‌. உடுப்பணிந்து கொண்டிருந்த ஒருவன்‌ அவருக்கு வணக்கம்‌ செலுத்தினான்‌. சிவப்பு ரோஜாவை அணிந்திருந்த அம்மனிதர்‌ மாளிகைக்குள்‌ நுழைந்தார்‌.

இச்சம்பவத்திற்குப்‌ பிறகு வந்த ஞாயிறன்று சுற்றிப்‌ பார்ப்பதற்காக ஜூடியையும்‌ அவள்‌ தந்தையையும்‌ டாக்டர்‌ ராவ்‌ தமது காரில்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அந்தச்‌ சமயத்தில்‌ அவள்‌ தந்தை, ”ஜூடி, லட்சுமியின்‌ தந்தையான குமாருக்கு ஏதாவது நன்மை ஏற்படலாமென்று தோன்றுகிறது. அவர்‌ விஷயத்தைப்பற்றி இங்கு தெரிந்திருக்கிறது?” என்று கூறினார்‌. ”எனக்கு நிச்சயமாகத்‌ தெரியாது; ஆனால்‌ மத்திய அரசாங்கத்திலே அந்த ஒரு சிலருக்கு அதே அளவு செல்வாக்கு இல்லையென்‌ று தோன்றுகிறது..,” என்று அவர்‌ மேலும்‌ கூறினார்‌,

ஜுடிக்கு முழுவதும்‌ புரியவில்லை; இருந்தாலும்‌ எல்‌லாம்‌ சரியாகி விடுமென்று அவளுக்குப்‌ பட்டது. “அப்படியானால்‌ நாம்‌ இங்கிலாந்து செல்வதற்கு முன்னால்‌ லட்சுமியை மறுபடியும்‌ பார்க்க முடியும்‌!?” என்றாள்‌ அவள்‌.

“நிச்சயமாக?” என்றார்‌ அவள்‌ தந்தை. பிறகு அவர்‌ டாக்டர்‌ ராவைப்‌ பார்த்து, “இந்தப்‌ பழைய கல்லூரிகளும்‌, நினைவுச் சின்னங்களும்‌, துறவிமடங்களும்‌, அவற்றின்‌ அமைதியும்‌, கம்பீரமும்‌, அங்கே பறந்து திரியும்‌ புறாக்களும்‌ எனக்குச்‌ சதா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை நினைவூட்டுகின்‌றன”? என்று கூறினார்‌.

டாக்டர்‌ ராவும்‌ ஆக்ஸ்போர்டில்‌ படித்தவர்‌. அவரும்‌ அதை ஆமோதித்தார்‌. அங்கு போலவே இந்தத்‌ தோட்டங்‌களுக்கும்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ புத்தகங்களுடன்‌ வந்து படிக்கிற செய்தியை அவர்‌ தெரிவித்தார்‌.

மாநாடு முடிவுற்றது. அவள்‌ தந்தையின்‌ மற்றொரு நண்பரான காட்டு அதிகாரியின்‌ இல்லத்திற்கு அவர்கள்‌ சென்று இரண்டு இரவுகள்‌ தங்கினார்கள்‌. ஆட்டங்‌ கொடுக்கிற பஸ்‌ ஒன்றில்‌ அவர்கள்‌ பிரயாணம்‌ செய்தனர்‌, இருந்தாலும்‌ அதில்‌ அன்புமிக்க மக்கள்‌ நிறைய இருந்ததால்‌ மகிழ்ச்சியாக இருந்தது. ஜுடி உட்பட அநேகமாக எல்லோரும்‌ வறுத்த பட்டாணிக்‌ கடலையையும்‌, ஆரஞ்சுப்‌ பழங்களையும்‌ சாப்பிட்டுக்கொண்டு சென்றனர்‌. இங்கே சாலையிலே ஒட்டகங்கள்‌ காட்சி தந்தன. எருமைகள்‌ நிரம்பத்‌ தென்பட்டன, ஏறிச்‌ சவாரி செய்யும்‌ மிக அழகான குதிரைகள்‌ சிலவும்‌ தென்பட்டன. ஒட்டகங்‌களில்‌ பல கரும்பு வண்டிகளைத்‌ தொழிற்சாலைகளுக்கு இழுத்துச்‌ சென்று கொண்டிருந்தன. எங்கு பார்த்‌தாலும்‌ பசுமையான கழனிகள்‌. இளங்கோதுமைப்‌ பயிர்‌ அப்பொழுதுதான்‌ கதிர்விடத்‌ தொடங்கியிருந்தது. துவரைச்செடிகள்‌ அல்லது பட்டாணிச் செடிகள்‌ பல ஏக்கர்‌ நிலத்திலே அடர்த்தியாக வளர்ந்திருந்தன. கிராமங்களிலே செங்கல்லால்‌ உறுதியாகக்‌ கட்டப்பட்ட வீடுகள்‌ காணப்‌ பட்டன. இங்கே குளிர்‌ அதிகமாகையால்‌ தென்னங்கீற்று பயன்படாது. எங்கும்‌ மரங்களும்‌ அதிகமாக இருந்தன. கிராமங்களிலே சில இடங்களில்‌ வெட்டி அடுக்கிய மரங்‌களும்‌ காணப்பட்டன.

பஸ்‌ நிற்கும்‌ ஓரிடத்திலே அவள்‌ தந்தையின்‌ நண்பரான காட்டு அதிகாரி காத்திருந்தார்‌. கறுத்தும்‌ மெலிந்தும்‌ இருந்த அவர்‌ அவர்களைக்‌ கண்டு மிகவும்‌ மகிழ்ச்சியடைந்தவராகத்‌ தோன்றினார்‌. அவரும்‌ தென்‌ நாட்டிலிருந்து வந்தவர்‌. சென்னையைப்‌ பற்றிய செய்திகளைத்‌ தெரிந்து கொள்ள அவர்‌ விரும்பினார்‌. மலையின்‌ அடிவாரத்திற்கு அவர்கள்‌ காரில்‌ சென்றனர்‌. அகன்‌ற இலைகளையுடைய அழகிய மரங்கள்‌ உள்ள ஒரு காட்டின்‌ வழியாகவும்‌ சென்‌றனர்‌. “சால மரங்கள்‌ எல்லாம்‌ இயல்பாக வளர்ந்திருக்‌கின்‌றன. ஆனால்‌ நாங்கள்‌ உண்டாக்கிய தேக்கு மரங்களை நீங்கள்‌ பார்க்க வேண்டும்‌”? என்று அந்தக்‌ காட்டு அதிகாரி மொழிந்தார்.

மரங்களும்‌ புதர்களும்‌ உள்ள பெரிய தோட்டத்தின்‌ மத்தியில்‌ அவருடைய மாளிகை இருந்தது. பெரும்பாலான மரங்கள்‌ இன்னும்‌ பூக்கவில்லை. ஆனால்‌ செக்கிறமாகவும்‌, தடிப்பாகவும்‌ உள்ள பெரிய மலர்களோடு ஒரு இலவ மரம்‌ காணப்பட்டது. அதிலிருந்து தொப்தொப்பென்று மலர்கள்‌ விழுந்துகொண்டிருந்தன. பறவைகள்‌ அவற்றை எப்‌பொழுதும்‌ கொத்திக்‌ கொண்டிருப்பதை ஜூடி பின்னால்‌ கவனித்தாள்‌; மாளிகைக்குள்‌ முக்கியமானதாக இருந்த அறையில்‌ செங்கல்லால்‌ கட்டிய கனப்பு அடுப்பிலே நல்ல வாசனையோடு விறகு எரிக்துகொண்டிருந்தாலும்‌ அதை விட்டுவிட்டு முதலில்‌ சுற்றி ஆராயந்து பார்க்கவேண்டு மென்று தான்‌ அவள்‌ விரும்பினாள்‌. மாளிகையைச்‌ சுற்தி அவள்‌ ஓடிவந்தாள்‌. பின்புறத்திலே இரண்டு யானைகள்‌ தங்கள்‌ காதுகளை மெதுவாக ஆட்டிக்கொண்டும்‌, முன்னால்‌ கிடக்கும்‌ பெரிய குவியலிலிருந்து கற்றை கற்றையாகப்‌ புல்லை எடுக்கத்‌ துதிக்கைகளை நீட்டிக்கொண்டும்‌ இருப்‌பதை திடீரென்று கண்டாள்‌. அவள்‌ இன்னும்‌ கொஞ்சம்‌ அருகிலே சென்று பார்த்தாள்‌. ஒவ்வொன்றின்‌ கால்கள்‌ இரண்டில் இலேசான கயிற்றைக்‌ கொண்டு கட்டியிருந்தார்‌கள்‌. அங்குமிங்கும்‌ நடமாடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு கட்டியிருந்தனர்‌. பரந்து வளரும்‌ பெரிய வேப்ப மரத்தின்‌ கீழ்‌ அவை மகிழ்ச்சியோடு நின்‌ றுகொண்டிருந்தன. அவற்றின்‌ முகத்திலே கோலம்‌ தீட்டியிருந்தனர்‌. கோயில்‌ யானைகளைப்போல அவ்வளவு அதிகமாக வர்ணம்‌ தீட்டப்படவில்லை. ஆனால்‌ இந்து மங்கையர்‌ திலரைப்‌ போல அவற்றின்‌ கண்களைச்‌ சுற்றிலும்‌ நிறைய மைபூசப்‌ பெற்றிருந்தது. அவற்றின்‌ நெற்றியிலே யானையின்‌ ஜாதியைக்‌ குறிப்பதுபோலச்‌ சிவப்பு நிறத்தில்‌ நட்சத்திரங்கள்‌ இருந்தன. அவற்றின்‌ தலையின்‌ குறுக்காகக்‌ கறுப்பு குல்‌லாய்‌ போல நன்றுகத்‌ தீட்டியிருந்தனர்‌. ஜூடி பெருமூச்சு விட்டாள்‌; பெரு முயற்சி செய்து ஹிந்திப்‌ பாடங்களையெல்‌லாம்‌ நினைவிற்குக்‌ கொண்டுவந்தாள்‌.

யானைகளைப்‌ பராமரிப்பவனுக்கு மிகுந்த உற்சாகம்‌ ஏற்பட்டிருப்பதாகத்‌ தோன்றியது. அவன்‌ பல தடவை சலாம்‌ செய்துவிட்டு வளைத்து வளைத்து ஏதோ நீளமாகப்‌ பேசினான்‌. அந்தப்‌ பேச்சிலே சில வார்த்தைகள்‌ மட்டும்‌ ஜூடிக்குப்‌ பொருள்‌ விளங்கிற்று. இருந்தாலும்‌ அவளுடைய ஹிந்திக்கும்‌ அவனுடைய ஆங்கிலத்துக்கும்‌ இடையே அவர்கள்‌ ஒருவரையொருவர்‌ நன்கு புரிந்துகொண்டார்கள்‌. ஒரு நொடியிலே அவன்‌ பெரிய யானையின்‌ மேல்‌ ஒருவகையான மெத்தையைப்‌ போட்டான்‌. அந்த மெத்தையின்‌ நான்கு மூலைகளிலும்‌ நான்கு சிறியகழிகளும்‌ கால்‌ வைக்க ஒருபடியும்‌ இருந்தன. வனவிலங்குப்‌ பாதுகாப்புப்‌ பகுதியிலே முன்பு வேறொரு யானையின்மேல்‌ ஏறியது போலவே ஜூடி இந்த யானையின்‌ பின்னங்கால்‌ ஒன்றின்‌ மேலும்‌ கொக்கி போல்‌ வளைந்த அதன்‌ வாலின்‌ மேலும்‌ கால்‌ வைத்து மேலே ஏறினாள்‌. அப்படி ஏறும்பொழுது அவள்‌ பானையைத்‌ தட்டிக்‌ கொடுத்தாள்‌; ஆனால்‌ அப்படி யானையைத்‌ தட்டிக்‌ கொடுப்பது பயனற்றது என்ற எண்ணமும்‌ அவளுக்கு உதயமாயிற்று. பிறகு படகு ஆடுவதை நினைவு றுத்தும்‌ வகையில்‌ ஆடிக்கொண்டு அது எழுந்தது. ஜூடி கழி ஒன்றைப்‌ பற்றிப்‌ பிடித்துக்கொண்டாள்‌. மரங்களுக்கும்‌ பறவைகளுக்கும்‌ அருகிலே உயர்ந்திருக்கும்படியான இன்ப உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது.

அவர்கள்‌ சுற்றி வந்து, முன்‌ பக்கத்தில்‌ அவள்‌ தந்தையும்‌ காட்டு அதிகாரியும்‌ கோப்பை கோப்பையாகத்‌ தேனீர்‌ அருந்திக்கொண்டிருக்கும்‌ தாழ்வாரத்திற்கு வந்தனர்‌. வட இந்தியாவில்‌ மக்கள்‌ இவ்வாறு ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கொரு தடவை தேனீர்‌ அருந்துவதாகத்‌ தோன்றியது. அவள்‌ தந்தை ஒரேடியடியாகச்‌ சிரித்தார்‌. காட்டு அதிகாரி முன்னால்‌ வந்து, வயது முதிர்ந்த பெண்யானை ஒன்றின்‌ மேல்‌ ஜூடி ஏறிக்கொண்டிருப்பதாக அவளிடம்‌ தெரிவித்தார்‌. அந்த யானைக்கு அநேகமாக நூறு வயது ஆகியிருந்தது. அது இளமையோடிருந்த காலத்தில்‌ ஒரு சிறந்த வேட்டை யானையாக விளங்கிற்று. புலியின்‌ நகங்‌களால்‌ அதன்‌ கழுத்தில்‌ ஏற்பட்டிருந்த வடுக்களை நோக்கும்படி அவர்‌ தெரிவித்தார்‌. அந்த யானை அவரை நோக்‌கித் துதிக்கையை ஆட்டியது. “அதற்கு என்ன வேண்மோ அதை எப்பொழுதும்‌ நான் செய்தாக வேண்டுமென்பது அதன்‌ கருத்து'? என்று அவர்‌ அன்போடு சொல்லிவிட்டு, தேங்காய்‌ ஒன்று கொண்டு வரும்படி ஒருவனை ஏவினார்‌, அத்தேங்காயை அந்த யானை அப்படியே வாயில்‌ போட்டு நொறுக்கித்‌ தின்றது. சவாரி முடிந்த பிறகு அவர்‌ ஜூடியிடம்‌ ஒரு இலையிலே பெரிய கட்டியாகச்‌ சிவப்பு சர்க்‌கரையை வைத்துக்‌ கொடுத்தார்‌. அந்த பானைக்கு அதிலும்‌ மிகுந்த விருப்பமுண்டு.

அந்த யானையின்‌ உண்மையான வேலை காட்டுக்குள்‌ளிருந்து மரக்கட்டைகளை இழுத்து வருவதாகும்‌. ஆனால்‌ ஜுடியைத்‌ தன்‌ முதுகின்மேல்‌ வைத்துக்கொண்டு சுற்றி வந்து, தனிப்பட்ட நல்ல உண்டி பெறுவதையும்‌ அது மிகவும்‌ விரும்பிற்று. காட்டில்‌ திரியும்‌ யானைகளைப்‌ போலவே இந்த யானையும்‌ மகிழ்ச்சியோடிருப்பதாக ஜூடிக்‌குத்‌ தோன்றியது. அங்கு தங்கியிருப்பதற்குள்‌ அந்த யானை தன்னை இன்னாரென்று தெரிந்துகொண்டதையும்‌ அவள்‌ தெளிவாகக்‌ கண்டாள்‌. மேலும்‌ யானைகளைப்‌ பற்றிய எத்தனையோ சுவையான ஹிந்திச்‌ சொற்களையும்‌ அவள்‌ கற்றுக்கொண்டாள்‌.
---------

14. சென்று வருகிறேன்‌

பொன்னேரியிலே நிலைமை எப்பொழுதாவது மாறும்‌ என்று தோன்‌றவில்லை. அம்மணிப் பாட்டியிடம்‌ சொல்லுவதில்லையென்று வாக்குறுதி தந்திருந்தாலும்‌, இங்குள்ள உண்மையான நிலைமையைப்‌ பற்றி ஜூடி அவளிடம்‌ சொல்லியிருப்பா-ளென்று சில வேளைகளில்‌ லட்சுமி நம்பினாள்‌. வகுப்புக்களை அவள்‌ தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தாள்‌. கொற்றனுடைய மகள்‌ வள்ளிக்குக்‌ கலியாணம்‌ என்று பேசிக்கொண்டார்கள்‌; அப்படியானால்‌ அவள்‌ கணவன்‌ அவளை அங்கேயே விட்டிருக்க மாட்டான்‌. வகுப்‌புக்கு வருகின்‌றவர்கள்‌ படிப்பதற்கான நல்ல புத்தகங்கள்‌ மட்டும்‌ அவளிடமிருந்தால்‌, சமூக சேவை செய்கின்ற இருவரையும்‌ அவள்‌ கேட்டுப்பார்த்தாள்‌. ஆனால்‌ அவர்‌கள்‌ தந்த புத்தகங்கள்‌ கடினமாக இருந்தன. அவளுடைய வகுப்பு மாணவிகளுக்கு ஏற்றதாக அவை எழுதப்படவில்லை. அவர்களுக்கு விருப்பமானவை எவையென்று இதற்குள்‌ அவளுக்கு மிக நன்றாகத்‌ தெரிந்திருந்தது. கல்வி சம்பந்தமான சினிமாப்படம்‌ ஒன்றை ஒரு சமயத்தில்‌ காட்டினார்கள்‌. எல்லோரும்‌ வந்து தரையில்‌ அமர்ந்து அதைப்‌ பார்த்து ஆர்வத்தோடும்‌, மகிழ்ச்சியோடும்‌ முணுமுணுத்துப்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌. வயது வந்த பெண்களுக்குக்‌ கவர்ச்சி உண்டாக்க அதுதான்‌ வழிபோலும்‌,

பொங்கல்‌ பண்டிகையின்‌ போது பசுக்களுக்கும்‌, எருதுகளுக்கும்‌ கொம்புகளிலே பூசிய சாயங்கள்‌ மெதுவாக மறைந்தன. அன்று வயிராற உண்டதையும்‌ மக்கள்‌ மறந்து விட்டனர்‌. சற்று பிற்பட்டு விளைந்த நெல்லையும்‌ அறுவடை செய்து தூற்றியாகி விட்டது; புல்‌ கிடைக்காத கோடை மாதங்களிலே தீனியாகப்‌ போடுவதற்காக வைக்‌கோலைப்‌ போராகப்‌ போட்டு வைத்திருந்தார்கள்‌. புதிய கால்வாயிலிருக்து பாசனத்திற்காகக்‌ கொஞ்சம்‌ தண்ணீர்‌ வந்தது; ஆனால்‌ எதிர்பார்த்த அளவு வரவில்லை. முன்‌ போலவே ஆண்கள்‌ கழனிகளிலே விடியற்‌ காலையிலிருந்து இருட்டும்வரை வேலை செய்தனர்‌; முன்போலவே பெண்கள்‌ மாட்டுச்‌ சாணியைக்‌ கூடைகளில்‌ சேகரித்துத்‌ தங்கள்‌ வலது கை அடையாளம்‌ பதியுமாறு வட்டமாக வரட்டி தட்டி உலருவதற்காக அவற்றைத்‌ தங்கள்‌ சுவர்களில்‌ தட்டி வைத்தார்கள்‌. சமையல்‌ செய்ய அவற்றைப்‌ பின்‌னால்‌ விறகுபோலப்‌ பயன்படுத்துவர்‌. குடிசைத்‌ தொழிலிலிருந்து கொஞ்சம்‌ அதிகமான வருமானம்‌ கிடைத்தது மெய்தான்‌; பஞ்சம்‌ வந்தால்‌ இப்பொழுது சீக்கிரத்திலே மக்களைக்‌ கொல்ல முடியாது. சில பெண்கள்‌ அதிகமாக வெள்ளி வளையல்கள்‌ அணிந்திருந்தனர்‌; சில்‌ குடும்பங்‌களிலே துணிமணிகளும்‌ ஒன்றிரண்டு பாத்திரங்களும்‌ அல்லது விளக்குகளும்‌ அதிகமாக இருந்தன. இரண்டாவது ஜந்தாண்டு திட்டத்தின்‌ முடிவில்‌ அவர்கள்‌ பணக்காரர்‌களாக இருக்காவிட்டாலும்‌, ஏழ்மை கொஞ்சம்‌ குறைந்தாவது இருப்பார்கள்‌ என்று எண்ண முடியுமா?

சரஸ்வதிக்கு நோய்‌ வந்தது. அவர்கள்‌ கொண்டு வந்திருந்த பலவிதமான மருந்துகளில்‌ மீதியிருப்பன வற்றையெல்லாம்‌ அவள்‌ தாய்‌ கொடுத்துப்‌ பார்த்தாள்‌. அது சாதாரணமான காய்ச்சல்‌ அல்ல, துணிகளைத்‌ துவைத்துக்‌ கொண்டும்‌, பாத்திரங்களைத்‌ துலக்கிக் கொண்டும்‌ மற்ற சிறுமிகளோடு சேர்ந்து அந்த மோசமான கால்வாய்‌ நீரில்‌ காலை வைத்து நடந்ததனால்‌தான்‌ அது வந்திருக்க வேண்டுமென்று அவள்‌ கூறினாள்‌. அவ்வாறு இருக்கலாமென்று லட்சுமி கவலையோடு தெரிவித்தாள்‌. ஆஸ்பத்திரிக்கு சரஸ்‌வதியை எடுத்துச்‌ சென்றனர்‌. அங்கு அவளைப்‌ பரீட்சை செய்து பார்த்துவிட்டுச்‌ சில மாத்திரைகளைக்‌ கொடுத்தனர்‌. அவற்றிற்காக அவள்‌ தாய்‌ பணம்‌ வாங்கிக்‌ கொள்ளும்படி வற்புறுத்தினாள்‌. இலவசமாகக்‌ கிடைக்கும்‌ மாத்திரைகளைவிடப்‌ பணம்‌ கொடுத்து வாங்கினால்‌ நல்ல மாத்திரைகள்‌ கிடைக்கும்‌! ஆனால்‌ சரஸ்வதி குணமடையவில்லை; அவள்‌ நிலைமை இன்னும்‌ மோசமாயிற்று. கடைசியில்‌ லட்சுமி தன்‌ தந்தையை நோக்கி, “இப்படி நாம்‌ கெளரவம்‌ பார்த்துக்‌ கொண்டிருக்க முடியாது. இப்படியிருந்தால்‌ என்‌ தங்கை சாகவேண்டியதுதான்‌. அம்மணிப்பாட்டிக்கு நீங்‌கள்‌ கடிதம்‌ எழுதுங்கள்‌. இல்லாவிட்டால்‌ நான் எழுதுவேன்‌. சரஸ்வதியைச்‌ சென்னைக்கு அழைத்துக்கொண்டு போய்‌ ஜூடியின்‌ தந்தை பணிசெய்யும்‌ ஆஸ்பத்திரியில்‌ காண்பிக்கவேண்டும்‌'” என்று சொன்னாள்‌. குமார்‌ தன்‌ மகளை உற்று நோக்கினார்‌. தன்மனைவியின்‌ சார்பாக அவள்‌ பேசுகிறாள்‌ என்பது அவருக்குத்‌ தெரியும்‌. நிலைமையைக்‌ கவனிக்கிற போது அவள்‌ சொல்லுவது சரியென்பதையும்‌, தாம்‌ தோல்வியடைந்ததையும்‌ அவர்‌ கண்டார்‌.

”நான்‌ கடிதம்‌ எழுதி அம்மணிப்பாட்டிக்கு இங்குள்ள நிலைமையைத்‌ தெரிவித்தால்‌ உடனே அவள்‌ உன்னை அங்கு வரும்படி சொல்லுவாள்‌- அது எனக்குத்‌ தெரியும்‌, உன்‌ தாயும்‌, நீங்கள்‌ எங்லோரும்‌ அங்கு போயாக வேண்டும்‌” என்றார்‌ அவர்‌,

”அப்பா, நீங்களும்‌ தானே?”

அவர்‌ வேறுபக்கம்‌ முகத்தைத்‌ திருப்பிக்கொண்டார்‌, ”நான்‌ இங்கிருந்தாக வேண்டும்‌, இந்த ஒரு வேலை எனக்கிருக்கிறது. எவ்வளவு பணம்‌ என்னால்‌ அனுப்ப முடியுமோ அதை அனுப்புகிறேன்‌. உன்‌ தாய்‌ இந்த இடத்தை எப்பொழுதும்‌ வெறுத்துக்‌ கொண்டிருக்கிறாள்‌. பார்ப்பதற்கு அவள்‌ வயதானவளைப்‌ போலத்‌ தோன்றுகிறாள்‌. இப்பொழுதெல்லாம்‌ அவள்‌ பாடுவதேயில்லை.”

“ நீங்கள்‌ துணையில்லாமல்‌ தனியாக இருப்பீர்கள்‌. யார்‌ உங்களுக்குச்‌ சமைத்துப்‌ போடுவார்கள்‌?” என்றாள்‌ லட்சுமி.

“நான்‌ சமாளித்துக்கொள்வேன்‌. யாரிடத்தில்‌ நமக்கு விசேஷமான அன்பு இருக்கிறதோ அவர்களையெல்லாம்‌ துன்பத்திற்கு ஆளாக்குவதைவிடத்‌ தனியாக இருப்பது நல்லது”? என்றார்‌ அவர்‌.

”அப்பா நீங்களொன்றும்‌ தவறு செய்துவிடவில்லை, நீங்கள்‌ இங்கேயே இருப்பதானால்‌ நானும்‌ உங்களுடன்‌ இருக்‌கிறேன்‌” என்றாள்‌ லட்சுமி,

“அம்மா இல்லாமல்‌ நீ மட்டும்‌ தனியாக இங்கிருக்க முடியாது-வேறு யாராவது பெண்களிருந்தாலும்‌......” அந்த இடத்திலே அவர்‌ தயங்கியதையும்‌ அவருடைய கண்களிலே ஒளிபிறந்ததையும்‌ லட்சுமி ஈன்றாகக்‌ கண்டாள்‌. வயதானவர்‌களைப்போல அவள்‌ தன்‌ சேலையை மடித்துவிட்டுக்‌ கொண்டாள்‌. “அப்பா, நான் நிச்சயமாக இங்குதானிப்பேன்‌. நான் அறிவு வாய்ந்த இந்தியாவின்‌ புதுமைப் பெண்களில்‌ ஒருத்தி: அப்படியிருக்க வேண்டும்மென்‌ றுதான்‌ நீங்கள்‌ விரும்பினீர்‌கள்‌. மேலும்‌ மற்றவர்களைப்போல அவ்வளவு சுலபமாக நான்‌ போய்விடமுடியாது. எனக்கும்‌ இங்கே என்‌ வேலை இருக்கிறது.”

“ நீ தைரியசாலி. தைரியம்‌ வாய்ந்த என்‌ மகள்‌ நீ, ஆனால்‌ யோசித்துப்பார்‌- நீ சென்னைக்குத்‌ திரும்பிப்போனால்‌ மீண்டும்‌ பள்ளிக்குச்‌ செல்லலாம்‌, நாட்டியப்‌ பயிற்சியையும்‌ தொடர்ந்து செய்யலாம்‌. ஜூடி முதலிய உன்‌ தோழிகளையும்‌ பார்க்கலாம்‌”” என்றார்‌ குமார்‌,

*அதைப்பற்றியெல்லாம்‌ நான் யோசித்துப்‌ பார்த்தாகி விட்டது?” என்று கூறிவிட்டு லட்சுமி தன்‌ தந்தையின்‌ கண்‌களுக்குள்ளே உற்றுப்‌ பார்த்தாள்‌. பிறகு அவள்‌ ஒரு பேனாவையம்‌ காகிதத்தையும்‌ கொண்டு வந்து அவர்‌ முன்னால்‌ வைத்தாள்‌.

அடிப்பதும்‌ திருப்பி எழுதுவதுமாக அவர்‌ நீண்ட நேரம்‌ எடுத்துக்கொண்டு மெதுவாகக்‌ கடிதம்‌ எழுதினார்‌. முடிவில்‌ அவர்‌ அந்தக்‌ கடிதத்தை லட்சுமியிடம்‌ தந்தார்‌. என்‌ கெளரவத்தை யெல்லாம்‌ போதுமான அளவு விட்டுக்‌ கொடுத்து விட்டேனா--பார்‌?”என்றார்‌ அவர்‌,

அவள்‌ கடிதத்தை முழுவதும்‌ படித்தாள்‌. பிறகு அவள்‌ சரஸ்வதி படுத்திருந்த அறையை நோக்கிப்‌ பார்த்தாள்‌. அப்பா, திருப்பித்‌ தந்தி அடிக்கும்படியாக எழுதுங்கள்‌, பிறகு நாம்‌ ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்தி ரயில்‌ ஜங்ஷனுக்கு இவர்களையெல்லாம்‌ அழைத்துக்கொண்டு போகலாம்‌. அம்மாவுக்குப்‌ பிரயாணம்‌ செய்து பழக்கமில்லை. ஆனால்‌ பெண்களுக்காக ஏற்பட்ட இரண்டாம்‌ வகுப்புப்‌ பெட்டியில்‌ எல்லோரையும்‌ அனுப்பலாம்‌. ரயிலிலே கார்டிடம்‌ நீங்கள்‌ தெரிவித்துவிட்டால்‌ எல்லாம்‌ சரியாக நடக்கும்‌, நானும்‌ கெளரவம்‌ பாராமல்‌ ஜுடிக்குக்‌ கடிதம்‌ எழுதி அவள்‌ தந்தை உடனடியாக சரஸ்வதியைக்‌ கவனிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்‌கிறேன்‌.”

அந்தக்‌ கடிதத்தைத்தான்‌ டெல்லியிலிருந்து திரும்பிய ஜூடி கண்டாள்‌. இரவு விமானத்தில்‌ திரும்பியபின்‌ நன்றாகக்‌ காலை உணவை உண்டு கொண்டிருக்கும்‌ பொழுது அவள்‌ அதைப்‌ படித்தாள்‌. பப்பாளிப்பழம்‌ எலுமிச்சம்பழம்‌, பொரித்த முட்டை, கொய்யாப்பழம்‌ எல்லாம்‌ இருந்தன. டெல்லிக்‌ கொய்யாப்பழத்தைப்‌ போல இது அவ்வளவு பெரிதாகவும்‌ சுவையாகவும்‌ இல்லை. டெல்லி மிகவும்‌ குளிராக இருந்ததைப்‌ பற்றியும்‌, யானையைப்‌ பற்றியும்‌, ஒட்டகத்தின்‌ வினோதமான முகத்தைப்‌ பற்றியும்‌ அவள்‌ தன்‌ தாயிடம்‌ விளக்கிச்‌ சொல்லிக்‌ கொண்டிருந்தாள்‌, அதனால்‌ கொஞ்ச நேரத்திற்கு லட்சுமியின்‌ கடிதம்‌ எவ்வளவு முக்கியமானது என்பதை அவள்‌ உணரவில்லை. லட்சுமி உற்சாகமான முறையில்‌ கடிதத்தைத்‌ தொடங்கி, சரஸ்வதியைப்‌ பற்றிய முக்கியமான பகுதியைப்‌ பின்னால்தான்‌ எழுதியிருந்தாள்‌. ஜூடி அக்கடிதத்தைத்‌ தன்‌ தந்தையிடம்‌ கொடுத்தாள்‌. அவர்‌ காப்பி அருந்துவதை நிருத்தி விட்டுப்‌ புருவத்தை நெரித்துக்கொண்டு இந்தியாவின்‌ சுகாதார ஏற்பாடுகளைப்பற்றி முணுமுணுக்கத்‌ தொடங்‌கினார்‌.

அந்தச்‌ சமயத்தில்‌ எதிர்பாராதவிதமாகத்‌ திடீரென்று அம்மணிப்பாட்டி அங்கு வந்து ஜுடியின்‌ தந்தைக்கும்‌, தாய்க்கும்‌ நமஸ்காரம்‌ செய்தாள்‌. ஜூடியின்‌ தாய்‌ அவளுக்கு ஒரு கோப்பையில்‌ காப்பி வழங்கி விட்டு, ஓரளவு திகைப்போடு கால நிலைமையைப் பற்றி பேசத்‌ தொடங்‌கினாள்‌. ஆனால்‌ ஜூடி, ”இப்பொழுதுதான்‌ கடிதம்‌ வந்தது -- அவர்கள்‌ வந்துவிட்டார்களா?” என்று கேட்டாள்‌,

“ஆமாம்‌ பாவம்‌, என்‌ பேத்தி சரஸ்வதிக்கு உடம்பு சுகமில்லை-” என்றாள்‌ அம்மணிப்பாட்டி.

”நான்‌ உடனே வந்து கவனிக்கிறேன்‌?” என்று ஜூடியின்‌ தந்தை மொழிந்தார்‌. பிறகு அவசரமாக எல்லாம்‌ நடைபெற்றது. சரஸ்வதியை ஆஸ்பத்திரிக்குக்‌ கொண்டு சென்றார்கள்‌. நோயின்‌ காரணம்‌ என்ன என்பதைச்‌ சில நாட்களில்‌ கண்டு பிடித்துவிட்டனர்‌. சரஸ்வதி சாப்பிடக்‌ கூடிய சாதாரண தின்‌பண்டங்களையும்‌, படங்கள்‌ நிறைந்த சில புத்தகங்களையும்‌ எடுத்துக்கொண்டு ஜூடி அவளை பார்க்கச்‌ சென்றாள்‌. சரஸ்வதி மெலிந்தும்‌ கூனிக்‌ குறுகியும்‌ தோன்‌றினாள்‌. மருத்துவத்‌ தாதிகள்‌ அவளிடத்திலே பிரியம்‌ கொண்டிருந்தனர்‌. எல்லாம்‌ சரியாகிவிடும்‌ என்று அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌. ஆனால்‌ ”லட்சுமி தன்‌ தந்தையோடு தனியாக இருக்கிறாள்‌! அது சரியல்ல......” என்று அம்மணிப்‌ பாட்டி கூறினாள்‌.

மற்றவாகளெல்லாரும்‌ சென்ற பிறகு அன்று மாலையில்‌ லட்சுமி கொஞ்சநேரம்‌ அழுது கொண்டிருந்தாள்‌. ரயில்‌ நிலையத்தில அவள்‌ தாய்‌ நெடுநேரம்‌ அழுத கொண்டிருந்ததும்‌, அவளைக்‌ கடைசி முறையாகப்‌ பார்த்தபோது ரயிலில்‌ திறந்த ஜன்னலுக்கெதிராக உட்கார்ந்திருந்த அவள்‌ முகத்திலே கண்ணீர்‌ வடிந்ததும்‌ அதற்குக்‌ காரணமாகும்‌. குமாரும்‌ லட்சுமியும்‌ ரயில்‌ நிலையத்திலே மகிழ்ச்சியோடு இருக்க முயன்றார்கள்‌. ஆனால்‌ பின்பு வண்டியில்‌ திரும்பிப்‌ போகும்பொழுது அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை, மேலும்‌ அவள்‌ தந்தை நினைத்தது உண்மை தான்‌. சென்னைக்குத்‌ திரும்பிப்போய்ப்‌ பழைய வாழ்க்‌கையை நடத்துவதற்கும்‌, தன்‌ தோழிகளைப்‌ பார்ப்பதற்கும்‌ ஒருவகையில்‌ அவள்‌ எவ்வளவோ விரும்பினாள்‌. நாட்டியப்‌ பயிற்சிக்கு வேண்டிய சம்பளத்தை அம்மணிப்பாட்டி தந்து விடுவாளென்று அவளுக்குத்‌ தெரியும்‌. இருந்தாலும்‌ அதை அவளிடமிருந்து வாங்கிக்கொள்வது சரியாகுமா? ”ஆறு மாதங்களுக்கு முன்பு பணத்தைப்பற்றி நான் நினைத்திருக்க முடியாது. ஆனல்‌ இப்பொழுது எனக்கு வயது வந்து விட்டது. எத்தனையோ விஷயங்கள்‌ எனக்குத்‌ தெளிவாகி விட்டன” என்று அவள்‌ தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்‌.

அதற்குப்‌ பிறகு அவள்‌ வேறு பல விஷயங்களைப்பற்றி நினைக்க வேண்டியிருப்பதை உணர்ந்தாள்‌. சமையல்‌ முழுவதையும்‌ அவளே செய்தாள்‌. அவள்‌ தாய்‌ அவளைச்‌ செய்‌வதற்கு விடாத பலஉணவு வகைகளையும்‌ செய்ய முயன்றாள்‌: அவள்‌ நினைத்தமாதிரி அவை அவ்வளவு சுவையாக அமைய வில்லை; இருந்தாலும்‌ எல்லாம்‌ நன்றாக இருக்கிறதென்று அவள்‌ தந்தை மொழிந்தார்‌. மாலை வேளைகளில்‌ இப்பொழுதெல்லாம்‌ அவர்‌ தமது வேலையைப்‌ பற்றியும்‌ அவளுடைய வகுப்புக்களைப்‌ பற்றியும்‌ மட்டுமே பேசாமல்‌, ஐரோப்பாவுக்‌குச்‌ சென்றிருந்தபொழுது தாம்‌ கற்றுக்கொண்ட விஷயங்‌களைப் பற்றிச்‌ சில சமயங்களிலும்‌, சரித்திரம்‌ அல்லது அரசியலைப்‌ பற்றிச்‌ சில சமயங்களிலும்‌ பேசினார்‌. சமூகநல ஊழியர்களில்‌ யாராவது ஒருவர்‌ தேனீர்‌ அருந்துவதற்காக ஒன்றிரண்டு தடவை வந்திருந்தார்கள்‌. கிராம சேவைக்கு வேண்டிய பயிற்சியைப்பற்றியும்‌, தேர்ச்சிபெற வேண்டிய பரீட்சைகளைப்‌ பற்றியும்‌ அவர்களிடம்‌ அவள்‌ கேட்டாள்‌.

சில சமயங்களில்‌ கல்வி வகுப்பிலே அவளுக்குத்‌ தொந்தரவு கொடுப்பதற்காகவே அங்கு ஒரு மாது வந்து கொண்டிருந்தாள்‌. இருந்தாலும்‌ சமூக ஊழியர்களிடம்‌ அவளைப்‌ பற்றிச்‌ சொல்ல லட்சுமி விரும்பவில்லை, அந்த நிலையில்‌ அடுத்த கிராமத்திலிருந்து சிறுமி மோகினியின்‌ தாயும்‌ அவள்‌ அத்தையும்‌ ஒருநாள்‌ வந்தனர்‌, அவர்கள்‌ இருவரும்‌ உற்சாகமும்‌ உள்ளத்‌ திடமும்‌ வாய்ந்தவர்கள்‌, அவர்கள்‌ அந்த மாதிடத்திலே பேசினார்கள்‌. அதன்‌ பிறகு அவள்‌ வகுப்பிற்கு வரவில்லை. வகுப்பிலுள்ள மற்றவர்களெல்‌லோரும்‌ பல நாட்களுக்கு மிக ஒழுங்காகவும்‌, கவனத்‌ தோடும்‌ இருந்தனர்‌. லட்சுமியின்‌ தலையில்‌ வைத்துக்‌ கொள்ள மோகினி அடிக்கடி பூக்கொண்டு வருவாள்‌. ஒரு தடவை இனிப்புப்‌ பட்சணங்கள்‌ சிலவற்றையும்‌ கொண்டு வந்தாள்‌.

பிறகு வெப்பமான ஒரு மாலை மேரத்திலே பொன்‌னேரிக்கு இரண்டு பேர்‌ காரில்‌ வந்தனர்‌. நல்ல வெண்மையான காலுடை அணிந்து கொண்டிருந்தார்கள்‌ அவர்கள்‌. அவர்களில்‌ ஒருவர்‌ தோல்‌ கைப்பை ஒன்றை வைத்துக்‌ கொண்டிருந்தார்‌. அவர்கள்‌ கால்வாய்க்குச்‌ சென்று, தம்‌ கையில்‌ அளவுகோலுடன்‌ நிற்கும்‌ குமாரைக்‌ கண்டார்கள்‌. மேற்பார்வையாளன்‌ ஒருவனிடம்‌ குமார்‌ கோபத்தோடு பேசிக்கொண்டிருந்தார்‌. அவர்‌ கரங்களிலும்‌ கால்களிலும்‌ கால்வாய்ச்‌ சேறு படிந்திருந்தது. வந்தவர்கள்‌ தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கைகுலுக்கிவிட்டு குமாரோடு அவருடைய காரியாலயத்திற்கு சென்றனர்‌. அவர்களில்‌ ஒருவர்‌ தலைமை எஞ்சினியரிடம்‌ ஏதோ சொன்னார்‌. தலைமை எஞ்சினியர்‌ மலைத்துப்‌ போய்விட்டார்‌. உடனே பிஸ்கோத்‌தும்‌ தேனீரும்‌ வாங்கி வரும்படி ஆனுப்பியதோடு, திட்டங்‌களையும்‌ பதிவுக்‌ காகிதக்‌ கட்டுக்களையும்‌ எடுத்துவரச்‌ சொன்னார்‌. அவர்‌ மிக வேகமாகப்‌ பேசவும்‌ தொடங்கினார்‌. பிறகு புதிதாக வந்தவர்கள்‌ குமாருடன்‌ அவருடைய வீட்டிற்குச்‌ சென்றனர்‌. லட்சுமிக்கு அவர்கள்‌ மரியாதையோடு வணக்கம்‌ செலுத்தினர்‌. ”சென்னைக்கு அவர்‌களோடு என்னை வரும்படி சொல்லுகிறார்கள்‌. உடனே புறப்படவேண்டுமாம்‌. ஆனால்‌ நீ ஏங்கே போவாய்‌? உன்னை நான்‌ தனியாக விட்டுப்போக முடியாது” என்று சொன்னார்‌ குமார்‌. லட்சுமி தன்‌ நெஞ்சுக்கு மேலே கையை வைத்தாள்‌. அவளுடைய இதயம்‌ நின்றுவிடும்‌ போலத்‌ தோன்றிற்று. “அப்பா, அப்படியா -- புலிகளோடு உங்கள்‌ போராட்டம்‌ முடிந்ததா?” என்றாள்‌ அவள்‌.

“நான் அல்லது என்‌ நண்பர்கள்‌-யாரானால்‌ என்ன? புலிகளின்‌ இதயத்திலே அம்புகள்‌ பாய்ந்து விட்டன என்று நினைக்கிறேன்‌. ஆனால்‌-ஒன்‌ றிரண்டு நாள்‌ நான் அங்கே”.
என்று தந்தை பேசத்‌ தொடங்கினார்‌.

லட்சுமி தன்‌ இதழைக்‌ கடித்தாள்‌. வீட்டிலே தனியாக முக்கியமாக இரவு நேரத்திலே இருக்க அவள்‌ விரும்ப வில்லை. மேலும்‌ அவள்‌ தந்தைக்குப்‌ பகைவர்கள்‌ ஏற்பட்டிருக்கிறார்கள்‌, அவர்களுக்குச்‌ சமயம்‌ கிடைத்தால்‌ பழி வாங்க நினைப்பார்கள்‌. தனக்குத்‌ தோழிகளெல்லாம்‌ இருக்‌கிறார்கள்‌ என்ற நினைப்புப்‌ பிறகு வந்தது. “நான்‌ வள்ளியின்‌ வீட்டிற்காவது, மோகினியின்‌ வீட்டிற்காவது போயிருக்கிறேன்‌. நான் போயிருக்க எனக்கு எத்தனையோ இடமிருக்கிறது!*?

தோல்‌ கைப்பையை வைத்துக்‌ கொண்டிருந்தவர்‌, ”தங்கல்‌ விடுதிக்குச்‌ செல்லலாம்‌?” என்று யோசனை கூறினார்‌. லட்சுமி அதை மறுத்துத்‌ தலையை ஆட்டினாள்‌. அது சரியல்ல - அவள்‌ அந்த கிராமத்தோடு இணைந்தவள்‌. அவள்‌ தந்த கைகால்களைச்‌ சுத்தம்‌ செய்து உடைகளை மாற்றிக்‌ கொண்டு அவருக்கு வேண்டிய கடிதக் கட்டுக்களை எடுத்துக்கொண்டிருக்கும்‌ சமயத்தில்‌ அவள்‌ தன்‌ வகுப்பை நாடிச்‌ சென்றாள்‌. அங்கிருந்தவர்களில்‌ பாதிப்‌பேர்‌ லட்சுமியைத்‌ தம்முடன்‌ வந்து தங்கும்படி கேட்டுக்கொண்டார்‌கள்‌. கடைசியில்‌ அவள்‌ மோகினியோடு அடுத்த கிராமத்திற்குச்‌ சென்று தங்குவதென முடிவு செய்தாள்‌. மோகினியின்‌ தாயுடனும்‌, அத்தையுடனும்‌ இருப்பது மிகவும்‌ பாதுகாப்பாக இருக்குமென்று அவள்‌ கருதினாள்‌. அவளும்‌ ஒரு சிறிய கைப்பெட்டியில்‌ தனக்கு வேண்டியவற்றையும்‌, விலை மதிப்புள்ள சாமான்களையும்‌ வைத்துக்கொண்டாள்‌. ஒரு சில நகைகளைக்‌ கழுத்திலும்‌, கைகளிலும்‌ அணிந்துக்‌ கொண்டாள்‌. அவர்கள்‌ வீட்டுக்‌ கதவைத்‌ தாழ்ப்‌ பாளிட்டு, பூட்டுப்‌ போட்டார்கள்‌. மோகினியின்‌ தந்தைக்‌குச்‌ சொந்தமான இரண்டே அறைகளுள்ள வீட்டிற்கு முன்‌னால்‌ காரை நிறுத்தி, அவளை இறக்கி விட்டுவிட்டு, அவள்‌ தந்தையை அழைத்துக்கொண்டு இருவரும்‌ சென்று விட்டார்கள்‌.

ஒரு நாள்‌ கழிந்தது. அடுத்த நாளும்‌ கழிந்தது. அன்று மாலையில்‌ தந்தி ஒன்றை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்தான்‌, புலிகள்‌ ஓடுகின்றன என்றுமட்டும்‌ அதில்‌ கண்டிருந்தது. லட்சுமிக்கு ஒரே குதூகலம்‌, அவள்‌ தந்தைக்கு நேர்ந்தவற்றைப்‌ பற்றியெல்லாம்‌ மோகினியின்‌ தந்தையும்‌, தாயும்‌ வெகுவாகத்‌ தெரிந்து கொண்டிருப்‌பது ஆச்சரியமாக இருந்தது. சென்னையிலிருக்கும்‌ அவள்‌ தந்தையின்‌ விரோதிகளின்‌ பெரையும்‌ அவர்கள்‌ தெரிந்து கொண்டிருந்தனர்‌.அந்தப்‌ பெயர்களை அவள்‌ கேட்டதுகூடக்‌ கிடையாது. தலைமை எஞ்சினியர்‌ அங்கு வந்து பட்டு ஜரிகைத்துணி ஒன்றையும்‌ சாக்லேட்‌ பெட்டி ஒன்றையும்‌ பரிசாகக்‌ கொடுக்க முயன்றார்‌. அவள்‌ நாணத்தோடு கீழே பார்த்துக்‌ கொண்டு தந்தை இல்லாத சமயத்தில்‌ எதையும்‌ பெற்றுக்‌ கொள்ள முடியாது என்று மெதுவாகக்‌ கூறிவிட்டாள்‌. அவர்‌ சென்ற பிறகு, அவள்‌ செய்தது சரியென்று கிராம மக்கள்‌ தெரிவித்தார்கள்‌. அவர்களே அவளுக்குப்‌ பூமாலைகள்‌ கொண்டு வந்தார்கள்‌.

ஆனால்‌ மோகினிக்குக்‌ கொஞ்சம்‌ வருத்தம்‌, இரவு நேரத்திலே அவர்கள்‌ ஒரே படுக்கையில்‌ படுத்திருந்தனர்‌. அமைதியான நேரத்திலே மோகினி, “நீங்கள்‌ சென்னைக்‌குத்‌ திரும்பிப்‌ போய்‌ விடுவீர்கள்‌. பிறகு உங்களை நான் பார்க்கவே முடியாது” என்றாள்‌.

”அப்படியில்லை, உங்களைவிட்டு நான்‌ எப்பொழுதும்‌ பிரிந்திருக்க மாட்டேன்‌”? என்று கூறினாள்‌ லட்சுமி, தன்‌ தந்தையின்‌ பெயராலும்‌, தாயின்‌ பெயராலும்‌ ஆணையிட்டு, தான்‌ நிச்சயமாகத்‌ திரும்பி வருவதாக அவள்‌ மோகினிக்‌குத்‌ தெரிவித்தாள்‌.

நான்காம்‌ நாளன்று மற்றொரு கார்‌ வந்தது. சிற்றப்‌பாவின்‌ மகனுடைய கார்‌ அது. ஆனால்‌ குமார்தான்‌ அதை ஓட்டிக்‌ கொண்டு வந்தார்‌. பின்னால்‌ அம்மணிப்‌பாட்டியும்‌, ஜுடியும்‌ அமர்ந்திருந்தனர்‌. ஜுடி சன்னல்‌ சட்டத்தைப்‌ பிடித்துக்‌ கொண்டிருந்தாள்‌. குதூகலத்தால் ‌அவள்‌ வாய்‌ திறந்தபடியே இருந்தது. அவர்களைச்‌ சந்திக்க லட்சுமி வெளியே ஒடி வந்தாள்‌. ”புலிகள்‌ ஒட்டம்‌ பிடித்துவிட்டன. ஒன்றிரண்டு புலிகள்‌ அடிபட்டு விழுந்துவிட்டன.வேறோன்று கொண்டிக்‌ கொண்டிருக்கிறது!” என்றார் ‌குமார்‌. அவர்‌ இன்னும்‌ மெலிந்துதான்‌ காணப்பட்டார்‌. அவர்‌ தலை பரட்டையாகக்‌ கிடந்தது. ஒரு புதிய ஷர்ட் ‌வாங்கிப்‌ போட்டுக்‌ கொள்ளவும்‌ அவருக்கு நேரம்‌ கிடைக்கவில்லை. இருந்தாலும்‌ அவர்‌ உள்ளத்திலே எப்படியோ ஒளி வீசவே அவர்‌ பள்ளியிலிருந்து வெளியே வந்த பையனைப்போலத்‌ தோன்றியது ஆச்சரியமாக இருந்தது “இப்போ என்ன செய்வது?” என்று கேட்டாள்‌ லட்சுமி.

”சாமான்களை மூட்டைக்‌ கட்டிக்கொண்டு புறப்படவேண்டியது தான்‌. இந்தக்‌ கால்வாயைச்‌ சரிவர வெட்டுவதையும்‌, கிராமங்களுக்குக்‌ குழாய்க்‌ கிணறுகள்‌ அமைப்‌பதையும்‌ பின்னால்‌ நான்‌ கவனித்துக்‌ கொள்கிறேன்‌.”

“உங்களுக்கு உதவி செய்ய நான் வந்திருக்கிறேன்‌ !”? என்றாள்‌ ஜுடி.

“ஜூடி ஒரு மணி நேரத்திற்கு நீ என்‌ தந்தைக்கு மகளாக என்னுடைய ஸ்தானத்திலே இருந்து சாமான்களைக்‌ கட்டுவதற்கு அவருக்கு உதவிசெய்‌; என்‌ வகுப்பு மாணவர்களை மறுபடியும்‌ திரட்டி அவர்களிடம்‌ நான் புறப்பட்டுப்‌ போவதாகச்‌ சொல்லவேண்டும்‌. நான்‌ திரும்பவும்‌ வருவேனென்றும்‌ அவர்களுக்குத்‌ தெரிவிப்பேன்‌” என மொழிந்தாள்‌ லட்சுமி.

”லட்சுமி, நீ சென்னைக்கு வந்து உனக்கு வழக்கமான வாழ்க்கையைத்‌ தொடங்கப்‌ போகிறாய்‌. முன்னாலேயே எனக்குத்‌ தெரிந்திருந்தால்‌ நான்‌ உன்னை இங்கே விட்டு வைத்திருக்கவே மாட்டேன்‌. என்‌ மகன்‌ என்னிடம்‌ கூடவிஷயத்தைச்‌ சொல்லவில்லை. அத்தனை கெளரவம்‌ அவனுக்கு. இப்பொழுது அதெல்லாம்‌ முடிந்துவிட்டது. நீதிரும்பி இங்கு வரவேண்டியதில்லை'” என்றாள்‌ அம்மணிப்‌பாட்டி,

லட்சுமி குறுக்கிட்டுப்‌ பேசவில்லை. ஆனால்‌ கடைசியிலே அவள்‌ அமைதியோடு பேசினாள்‌. “அம்மணிப்‌பாட்டி, நீங்கள்‌ நினைப்பதுபோல ஒன்றுமில்லை. காந்திஜி கூறியதுபோல கிராமங்களிலே நம்‌ படை சேவை தேவை என்பது எனக்கு இப்பொழுது தெரியும்‌. இந்த சேவைக்‌கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்‌ நானும்‌ ஒருத்திஎன்பது நல்லதுதான்‌. ஒருவேளை நான் பள்ளிப்‌ படிப்பை முடிக்கலாம்‌, கல்லூரிக்கும்‌ போகலாம்‌. ஆனால்‌ நிச்சயமாக நான்‌ இங்கு திரும்பி வருவேன்‌. நான் வாக்குக் கொடுத்‌தாகி விட்டது.”

அம்மணிப்பாட்டி அவளைப்‌ பார்த்துவிட்டுப்‌ பிறகு அவள தந்தையைப்‌ பார்த்தாள்‌. *குமார்‌, நீ என்ன சொல்லுகிறாய்‌?”?

அவர்‌ சொன்னார்‌: “அறியாமைதான்‌ இந்தியாவில்‌உள்ள மிக பயங்கரமான புலிகளில்‌ ஒன்று. லட்சுமிக்கும்‌ புலிகளைக்கொல்ல ஆசையிருக்கிறதென்று எனக்குத்‌ தோன்றுகிறது. வேண்டாமென்று என்னால்‌ சொல்லமுடியாது.”

“லட்சுமி திரும்பி வருவதாக நீ வாக்குக்‌ கொடுத்திருந்தால்‌ நீ வந்தாக வேண்டும்‌. ஆனால்‌ நான்‌ ஒரு நாளைக்கு இந்தியாவுக்குத்‌ திரும்பி வருவதாக வாக்குக்‌ கொடுத்தால்‌, நானும்‌ பெரியவளான பிறகு என்னுடைய சேவை இங்கு வேண்டியிருக்குமா? லட்சுமி, உன்னை மறுபடியும்‌ பார்க்கமுடியாதென்ற நிலையிலே இங்கிலாந்திற்குத்‌ திரும்பிப்‌போவதை என்னால்‌ சகிக்க முடியாது”? என்றாள்‌ ஜூடி.

“உன்னுடைய சேவை நிச்சயம்‌ தேவைப்படும்‌”என்றார்‌ குமார்‌. இப்பொழுது நீ என்‌ மகளைப்போல எனக்குஉதவி செய்ய வா. வீட்டுக்‌ கதவைத்‌ திறந்து எவற்றையெல்லாம்‌ கட்டிவைக்க வேண்டுமோ துவற்றை யெல்லாம் ‌கட்டிவைப்போம்‌. மற்றவற்றை யெல்லாம்‌ இங்குள்ள நண்பர்களுக்குக்‌ கொடுத்து விடலாம்‌.”

அம்மணிப்பாட்டி ஜூடியின்‌ கரத்தைப்‌ பற்றிக்கொண்டாள்‌. பூட்டியிருந்த வீட்டை நோக்கி இருவரும் நடந்தனர்‌. லட்சுமி தன்‌ கரத்தை ஆட்டிச்‌ சைகை செய்துகொண்டே சமூக நிலையத்தை நோக்கிச்‌ சாலை வழியாக விரைந்தாள்‌. அதன்‌ பிறகு கிராமத்துப்‌ பெண்களும்‌ சிறுமிகளும்‌ ஒவ்வொருவராக அவளை நாடி வந்து, சென்றுவருமாறு கூறி விடைகொடுத்‌ தனுப்பலாயினர்‌.
-------

This file was last updated on 15 Feb. 2020.
Feel free to report any corrections to the Webmaster.